க.பாலாசி: March 2010

Thursday, March 25, 2010

திராட்சை என்றும் இனிப்புதான்....

திராட்சை என்றும் இனிப்புதான் அதன் நற்பலன்களையும் சேர்த்து. அதிலும் குறிப்பாய் பச்சை திராட்சை. இந்த வெய்யிலின் வெம்மைக்கு உகந்ததாய்கூட, உடற்சூட்டினை கொஞ்சமே தணிப்பதாகக்கூட இருக்கலாம். இவைத்தவிர அதன் ருசியில் சப்புக்கொட்ட நாவென்றும் தயங்கியதில்லை. முதலியார் மளிகைக்கடையில் சப்பாத்திக்கு மாவு வாங்கியபோது அங்கே ஓரமாய் பல்லிளித்துக்கொண்டிருந்த அதன் மீதான ஈர்ப்பு இன்னும்கொஞ்சம் என்னுடன் சேர்ந்திருக்கவேண்டும். வாங்கி சுவைத்துப்பார்க்க ஆசை. இருபதுரூபாய்க்குள் அதனையும் மஞ்சள் பைக்குள் அடைக்கமுடியாதென்பது தெரியும். சட்டைப்பைக்குள் முன்பிருந்த இருபது ரூபாயுடன் நான்காய் மடிக்கப்பட்ட ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும், இருபது ரூபாய்நோட்டும் சொன்னது போன்ற உணர்வு, அதையும் ‘என்’னறைக்கு அழைத்துச்செல்ல.

வாங்கிவந்து இரண்டைப்பறித்து வாய்க்குள் செருகி சுவைத்துண்கையில் நினைத்ததைவிட இருமடங்கினும் அதிகமாகவே அந்த பரவசத்தில் லயித்துப்போகவேண்டியிருந்தது. ஆனால் நினைவலைகளின் அசைவு 70 ரூபாயின் பின்னணியில்.

நான்காய் மடிக்கப்பட்டு மண்ணின் வாசத்துடன் என் மேல்சட்டைப் பைக்குள் அமிழ்ந்துகிடந்த அது, இரவு உணவருந்திவிட்டு சாப்பாட்டுக்கடையிலிருந்து திரும்பும்போது ஒரு சிறிய மருத்துவமனையின் வாசலொட்டிய சாலையில் கிடந்தது. நற்பண்பிற்கும், நடைமுறை வாழ்விற்குமுள்ள வித்யாச மனப்பான்மையில் கட்டப்பட்டிருந்த என்கைகள் கொஞ்சமும் கூச்சமில்லாமல், எவர்கண்ணும் கொத்திக்கொள்ளும்முன் பறித்து சட்டைக்குள் திணித்தது. பின்னணி இதுதான்.

அந்த பணம்....

ஓருடலின் உழைப்பில், ஒருகுடும்பத்தின் இரவுநேர உலைக்காக காத்திருந்திருக்கலாம். அல்லது ஒருவயிற்றின் பசியாற்ற பதுக்கப்பட்டு... வழிதவறியிருக்கலாம்.

குடும்பச்சண்டைக்குள் தலையிட்டு ஒரு உழைக்கும் கணவானின் ஆளுமையை அரங்கேற்ற பயணப்பட்டிருக்கவும் வாய்ப்பதிகம்.

இல்லையேல் ஏதோவொரு சுமைதூக்கியின் உடல்வலியை, மதுவாடையில் ஓரிரவு மறைத்துவைக்க உதவியிருக்கும்.

ஒரு ஏழையன் மனைவிக்கு உடற்பிணிவிரட்ட ஊசியாகவோ, அல்லது மாத்திரைக்கட்டிகளாகவோ மாறியிருக்கலாமென்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும், எடுத்தவிடம் மருத்துவமனை வாசல்.

வேறெந்த காரணத்தினையும், கால் கிலோவில் 100 கிராம் உட்செல்வதற்குள் என் சிறுமூளை உண்டாக்கவில்லை. அந்த 100 கிராமில் கடைசியொன்றை மென்றுகொண்டிருந்தபோது புளிப்பா, கசப்பா, உவற்பா என்றறியமுடியவில்லை. சுவை மாறிவிட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை.

••••••••••

பக்கத்துவீட்டு அக்காவிடம் அவசரமாக 20ரூபாய் கடன் வாங்கி (20ரூபாய் திராட்சை போக ரூ.50 என்னிடம்), மிதிவண்டியுடன் மீண்டும் அவ்விடம் சென்று அதை தூக்கியெறிய நினைத்தபொழுது பறிகொடுத்தவரின் கண்கள் அதற்காக காத்திருந்தது.

‘அய்யா... என்ன தேடுறீங்க..???’

‘ஒண்ணுமில்ல கண்ணு.. பணம் ஒரு 70ரூவா வச்சிருந்தேன். மளிகக்கடயாண்ட போயிப்பாத்தா காணல. அதான் வாங்குன எடத்துலயே பாக்குறேன். இங்கத்தான் வாங்கி, மடிச்சு வேட்டிக்குள்ள சொருவுனேன்.’

‘அப்டியா... இங்க வாங்க... என்கிட்டதான் இருக்கு.’

‘ஏ... அப்டியா கண்ணு. எங்கிருந்துகண்ணு எடுத்த?’

‘இங்கதாங்க... சாப்டு முடிச்சிட்டு ரூமுக்கு போயிட்ருந்தேன். கண்ணுல அம்புட்டுது. அதான்.... ம்ம்... இந்தாங்க...’

‘ரொம்ப நல்லதுப்பா.. கடஞ்சொல்லி வாங்க மனசில்ல...வாங்குன அரிசிய கடைலேயே வச்சிட்டு வந்திட்டேன்.’

‘பாத்து வைச்சிக்குங்க...மறுபடியும் தொலைஞ்சிடப்போவுது...’.

••••••••••

நினைத்த காரணங்களில் முதல் ஒன்று பலித்திருந்தது.

பெருமிதமாய் அறைக்கு வந்தேன். கடங்காரனாய் திராட்சையை எடுத்தேன், சுவைத்தேன்....

திராட்சை என்றும் இனிப்புதான்..........






Thursday, March 18, 2010

தூரம்...

கொல்லப்பக்கமா பாய்ப்போட்டு

ஒலக்க ஒருபக்கம், வௌக்கமாறு ஒருபக்கம்

தலமாட்டுல டம்ளரும் சொம்புமா தண்ணிவேற...

சாப்புடுற தட்டு தனியா இருக்கும்...


படுத்திருந்த எடத்த

சாணிப்போட்டு மொழுவுனாங்க...


சாமிப்படத்த

சேலையால மூடிவைச்சாங்க...


அவ்வளவு சுத்தம்...


மாசம் மூணுநாளு இப்டித்தான்...அக்காவுக்கு...


பொண்டாட்டி வந்தபெறவுதான் தெரிஞ்சிது

அக்கா அனுபவிச்ச வயித்து வலியும்....




Tuesday, March 9, 2010

ஒன்று சேர்ந்த....

சின்ன வயசு பசங்க பக்கத்துலையோ இல்லன்னா அடுத்த தெருவிலயோ எதாவது நண்டு சிண்டுகளபாத்து டாவடிச்சி கொஞ்சம் முத்துனவொடனே, கிளிக்கு றக்க மொளச்சிடுத்து ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்துங்கற கதையா பொசுக்குன்னு காணாப்போயிடுவாங்க. அப்பப்ப நம்மவீட்டுகிட்டயோ இல்ல அக்கம்பக்கத்துலயோ நடக்குறதுதான், புதுசில்ல.

ஓடிப்போறதுங்க சும்மாப்போனா பரவாயில்ல, ஆத்தாக்காரி தாலியத்தவற பாக்கி எல்லாத்தையும் சுருட்டிகிட்டு போயிடுங்க. வழக்கம்போல பெத்ததுங்க, தென்னய பெத்தா எளநீரு புள்ளைய பெத்தாகண்ணீருன்னு கானம் பாடிகிட்டு காலத்த ஓட்டிகிட்டு கெடக்கும். செலபேரு இதுங்க ஓடிப்போனவொடனே நமக்கு இப்டி ஒண்ணு பொறக்கவேயில்லன்னு நெனச்சிகிட்டு தலைய முழுகி தண்ணி தெளிச்சிடுவாங்க. இன்னும் செலபேரு அவமானத்துல தூக்குலையே தொங்கிடுவாங்க. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடுன்னு ஜோடிங்க போனது போனதுதான். அப்பன் ஆத்தா என்னானாங்கன்னே திரும்பி பாக்கறதில்ல. அதான எவன்குடி எக்கேடு கெட்டாயென்ன.

அப்டிப்போறதுங்கள்ல செலது என்ன பண்ணும்னு நெனக்கிறீங்க, ஒரு யெழவும் இருக்காது. ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்துன்னு...... எல்லாங் கொஞ்ச நாளைக்கு நல்லாதான் போயிட்டிருக்கும். அதுக்கப்பறம் மடியில ஒண்ணு மசக்கையா ஒண்ணுன்னு நிக்குறப்பதான தெரியும், எப்டிடா குடும்பத்த ஓட்டுறதுன்னு. வீட்டக்கட்டிப்பாரு கல்யாணத்தப் பண்ணிப்பாருன்னு சொல்லுவாங்க. இது ரெண்டும் கூட பரவாயில்ல. குடும்பத்த நடத்திப்பாருன்னு, நடத்திப்பாக்குறப்பத்தான் தெரியும் அங்கண சோத்துக்கே ஜிங்கி அடிக்கிறது. சுருட்டிகிட்டு போனதெல்லாம் வித்து திண்ணதுக்கப்புறம்தான் ரெண்டுக்கும் ஞானம் பொறக்கும். சொந்தக்காரங்க மூலமா பெத்தவங்களுக்கு தூதுவுட்டு பாக்குங்க. பெத்ததுங்களும் என்ன பண்ணும்?. எல்லாத்தையும் மறந்து அதுங்களுக்கு எதோவொரு வூட்டையோ இல்ல சொந்த வூட்லையோ குடித்தனம் பண்ணவெச்சிடுவாங்க.

நெத்துன காயும், முத்துன வெதையும் வெடிக்காமலா இருக்குங்கறமாதிரி மாமியாக்காரி வாயி சும்மாவா இருக்கும். எம்மொவன மானமுள்ள பையனுன்னு மதுரையில கேட்டாக...அந்தமாயவரத்துல கேட்டாகன்னு ராகம்பாடிகிட்டே அவன் 40 பவுனு போடுறன்னு சொன்னான், என்தம்பிபய 50 பவுனோட பெரிய வண்டியும் வாங்கித்தர்ரன்னு சொன்னான், இப்ப ஒண்ணுத்துக்கும் ஆவாத இந்த ஒதவாக்கரைய கூட்டியாந்து என்னோட எல்லாக்கனவுலையும் மண்ணள்ளி போட்டுட்டானேன்னு பொலம்பிகிட்டேயிருக்கும். சோத்து கறியில ஆரம்பிக்கிற சண்ட எங்கல்லாமோ நீண்டு சந்தேகத்துல போயி முடியும். ஆரம்பத்துல லேசுலேசா ஆரம்பிச்சி கடைசியா பாப்பாத்தியம்மா மாடு வந்துடுச்சி, கட்டுனா கட்டு கட்டாட்டினா போங்கற நெலமயாயிடும். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா எல்லாத்துக்கும் கட் அண்ட் ரைட்டா ரெண்டுபேருக்கும் எதுவுமே ஒத்துக்காம போயிடும். கூத்தாடி கெழக்கப்பாத்தான், கூலிக்காரன் மேற்க பாத்தாங்கற கதையா வீட்டுக்காரனும் ஒண்ணுங் கண்டுக்கமாட்டான்.


கொஞ்சநாளு அந்த பொண்ணு மூக்க சிந்திக்கிட்டு பொருத்துப்பாப்பா. முடியலைன்னா கொழம்புச்சட்டிய தூக்கி புருஷங்காரன் தலையில ஒடைச்சிட்டு, போக்கத்தவனுக்கு பொண்டாட்டியா இருக்கறதவிட பொறம்போக்கு மரத்துல நாண்டுகிட்டு சாவலாம்னுட்டு அப்பங் கையிலயோ, கால்லையோ விழுந்து வீட்டோட வாழாவெட்டியா போயிடுவா.

அப்பறமென்ன ஒட்டட ஒட்டட கம்பத்துல என்னய உட்டுட்டு போனானே அந்தத்துலன்னு ஒரே அழுவாச்சி காவியந்தான். இது அப்டியே தலைகீழா செல எடத்துல நடக்கிறதும் உண்டு. சும்மாவாச் சொன்னாங்க, இட்ட ஒறவு எட்டுநாளைக்கு, நட்ட ஒறவு நாலு நாளைக்குன்னு.



  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO