க.பாலாசி: June 2010

Wednesday, June 30, 2010

கனவுகள் பலவிதம்...

நிலவைக்காட்டி
அம்மாவும்

மிட்டாய் ஆசைகள் கூறி
அப்பாவும்

பூச்சாண்டிக்கதைகள் சொல்லி
பாட்டியும்

ஊட்டிஊட்டிவிடும்
எத்தனை ஆசாபாசங்கள்
நிறைத்தாலும்.......

கையேந்திபவனை கடக்கையில்
கலைந்துபோகிறது...

கைகளற்றவனின் கனவு.



•••••••••••••••••



கால்களால் வரைந்த பட்டத்தை

பார்த்தபடியே

துயிலடைந்தாள் அச்சிறுமி


அவளின் இரவுகள் முழுமையும்

வியாபித்திருக்கின்றன

ஆயிரமாயிரம் பட்டங்கள்


இமைகளுக்குள் கண்கள்

அங்கும் இங்கும் அலைந்தபடியே...


தன் பட்டம்

உயரப்பறப்பதில் ஆனந்த கண்ணீர்...


(தூக்கத்தினூடே)

அனிச்சையாகவும் துடைத்துகொள்கிறாள்

தோள்பட்டைகளால்...




Tuesday, June 22, 2010

சில புழுக்கள்


சிலநேரங்களில் காணுகின்ற நிகழ்வுகள் மனதின் மையத்தைப்பிடித்துக்கொண்டு அகலாமல் அரித்துக்கொண்டிருக்கும். அதுபோலவே இதுவும்...

அலுவலக நண்பருடன் சமீபத்தில் அம்மன் கோவில் கும்ப அபிடேகத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை உருவானது. பளபளக்கும் வெளிர்நிற ஆடைகளில் அவ்வூரே திரண்டு ஒற்றுமையாக அவ்விழாவினை நடத்தியது கண்டு வியந்தேன். விசேடங்கள் முடிவடைந்தவுடன் இருசக்கர வாகனத்தை எடுக்க திரும்பி வரும்பொழுதுதான் கவனித்தேன் ஒரு வீதி மக்கள் அவ்வீதி முகனையில் நின்றுகொண்டு அக்காலை உடையுடன் கோவிலைப் பார்த்துக்கொண்டிருப்பதை. அவ்வோடையின் அந்தப்பக்கம் கோவில். இந்தப்பக்கம் அவ்வீதி. நண்பரிடம் விசாரித்தபொழுதுதான் அத்தொண்டைக்குழியடைக்கும் நிலை ஏற்பட்டது. அம்மக்கள் அந்த கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களென்று. ஏனென்று வினவியபொழுது அவர்களின் சாதிதான் காரணமாய் சொல்லப்பட்டது. மீறி சென்றால் அடிதடி, வெட்டுக்குத்து போன்றன நிகழுமாம்.

அந்த சிறுவாய்க்காலின் படித்துறையில் பல்துலக்கியபடியும், துணிகளை தெருக்குழாய்களில் அலசியபடியும் அத்தனை நன்மக்களும் வேடிக்கை மட்டுமே பார்த்தது நெஞ்சில் அடைத்துக்கொள்ளத்தான் செய்தது. அவர்களுக்குக்கூட தோன்றவில்லை, அந்த அம்பாளை வணங்கவேண்டுமென்று. ஒரு ஊரில் மிகைவாழும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் திமிருடனான ஆதிக்க மனப்பான்மை இதுபோன்ற கீழ்ச்செயல்களுக்கு அடித்தளமாகிறது என்பது கண்கூடு. அந்தப்பக்கம் நின்று வெளுத்த சட்டைவேட்டியுடனும், பட்டுப்புடவைகளுடனும் அம்பாளை தரிசனம் செய்யும் அத்தனைப்பேரின் மனதிலும் எத்தனை அழுக்குகள் நிறைந்திருக்கின்றன. நாகரீக வளர்ச்சி எத்தனையோ படிகளை எட்டிவிட்டநிலையிலும் இன்னும் சில உட்கிராமங்களின் நிலை இப்படியேத்தான் உள்ளது.

எனது தாய் தந்தையருக்கு சாதியின் சாயம் ஒட்டியிருந்த சமயங்களில், அப்படியான மாயை எதுவுமில்லை, எல்லோரும் மனிதர்கள்தான், நம்முடலில் உள்ள யாவனவும் எல்லா மனித உடல்களிலும் இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு பகுத்தறிவிக்க என் கல்வியறிவும், அனுபவமும் உதவியது. இங்கு ஒரு ஊரே சேர்ந்து ஒரு குறிப்பிட்ட மக்களை சாதி அடையாளங்களால் ஒதுக்கிவைப்பது எத்துணை கொடுமையானது. அங்கு கல்வி பயின்ற மக்களே இல்லையோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

ஏட்டுக்கல்வி மதிப்பெண்களுக்காக என்றுமட்டும் ஆகிவிட்ட இந்நேரத்தில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்றன மனப்பாடம் செய்து மதிப்பெண்கள்பெற மட்டுமே பயன்படுகின்றனவே தவிர வேறெந்த புரிந்துணர்விற்கும், வாழ்வியலின் நற்பண்புகளுக்கும் பயன்படுவதில்லை என்றே நினைக்கிறேன். வயதில் மட்டும் முதிர்ந்த கல்வியறிவற்ற சில பெரிய புழுக்கள்தான் இப்படியென்றால் அதற்கு கொடிபிடித்துக்கொண்டிருக்கும் என்னொத்த இளையக்கூட்டமும் அதற்கு அடிக்‘காலாக’ முளைத்துக்கொண்டிருக்கிறதே. இச்சமுதாயத்தில் அகற்றப்படவேண்டிய அழுக்குகள்தான் எத்தனைவிதமாய் முளைத்துக்கிடக்கிறது !!!!


Tuesday, June 15, 2010

கிளிமொழி...

தான் வளர்க்கும் கிளியுடன்
விளையாடிக் கொண்டிருந்தாள் அச்சிறுமி.

இவள் பங்கு முடிந்ததும்
கிளியின் முறை தொடங்கியது...

பென்சில், ரப்பர், பேனா
இப்படி ஒவ்வொன்றாய்
ஓரிடத்தில் வைத்து
துணியை இழுத்து மூடிவைத்தது கிளி.

கடைசியாக
அவள் தோட்டையும் கழற்ற
கவ்விகொண்டிருந்தபோது சொல்லியேவிட்டாள்........

‘அப்பா இஞ்சப்பாரேன்......
இது அம்மா மா(த்)ரியே பண்ணுது.....’


Wednesday, June 9, 2010

தண்டவாளங்களும் இன்னபிறவும்...

காட்டுக்கருவையையும், காட்டாமணக்கையும் கடந்துபோகையில் மெல்லியதொரு வாசம் அந்த ஒத்தயடிப்பாதையெங்கும் நிரம்பி நெலிந்துகிடக்கும். அநேகமாய் காட்டுமல்லியின் துயிலுடையும் தருணங்களில் இதுபோன்றதொரு மகத்துவம் வாய்க்கப்பெரும். இங்கே ஒத்தையடிப்பாதையென்பது தண்டவாளங்களருகே அமையப்பெற்றது என்பதை நினைவிற்கொள்க. அவ்வழியில் எருக்கம்பூக்கள் எத்தனையெத்தனை ‘மொட்’டென ஒலியுடன் மலர்ந்தாலும் அதன் மணத்தை நாசியுணர நுண்மதி வேண்டும். காட்டு மல்லிகைக்கு அப்படியில்லை. எந்த நரவை நாற்றத்தில் பூத்திருந்தாலும் எல்லாம் மறைத்து மணம்தரும். சில சமயங்களில் மிக நுட்பமாய் சுவாசித்தால் (சப்பாத்தி)கள்ளி பூக்கூட மிகுந்த மணம் பெற்றிருக்கும். நானும் அவ்வப்பொழுது முயன்றிருக்கிறேன், முடியவில்லை.

தண்டவாளங்களொட்டிய வழிதான் எத்தனை மலர்களை அனுதினமும் பெற்றுக்கொள்(ல்)கிறது. கவனித்திருக்கிறீர்களா? விரைந்து ஓடும் தொடர் (அ) புகை வண்டியின் சக்கரங்களுக்கு பழிப்பான் காட்டி தண்டவாள இடுக்குளில் தினம்தினம் மலர்ந்து மடியும் எத்தனையோ பூக்களிருப்பதை. யார் கண்களுக்கு அந்த ருசிதெரியும்? அதை ரசிக்கும் ஒரு இனிமைப்பொழுது எவருக்கேனும் வாய்த்திருக்கிறதா? முடிந்தால் ஒருபொழுதைக் கொடுத்து அதுகளை மகிழ்வுறச்செய்யுங்கள், முயன்றுபாருங்கள்.

நீங்கள் அவ்வாறு கழிக்கும் பொழுதுகளில் அவ்வழியே ஒரு ஓலைப்பாம்போ, கருந்தேளோ, கருவண்டோ, சாரைசாரையாய் கட்டெறும்பொத்த கூட்டங்களோ.....ஏதோவொன்று கடந்துபோகக்கூடும். பயம்வேண்டாம். இருமருங்கிலும் தண்டவாள கட்டைகளுக்கு இடையே நன்றாய் கூர்ந்து கவனியுங்கள். சூரியகாந்திப்பூவின் குழந்தைப்பருவத்தை நினைவுப்படுத்தும் அதேபோன்றேயொரு மலர் தெரியும். அதன் அழகை, மணத்தை அப்படியே உள்ளிழுத்து ஒருமுறை சுவாசியுங்கள் பார்ப்போம். அடடா இதுவல்லவோ வாழ்க்கை. பக்கத்தில் நீண்ட கழுத்துடைய அதேபோன்ற மலரும் இருக்கும். அது பனிரெண்டாம் வகுப்பில் ஹெர்பேரியம் சமர்ப்பிக்க பயன்படும். இது அதுவல்ல.

இதோ இன்னொன்றை பாருங்கள், கொத்தவரங்காய் போன்ற காய்களுடன் ஒரு செடி. அதிலும் மஞ்சள் நிறப்பூ, அதன் நடுவில் மகரந்தம் தாங்கிய நீட்சிகள். அதன் ஒவ்வொரு சிறுகிளை கனுவிலும் உற்றுப்பார்த்தால், எறும்பின் பின்புட்டம் போன்ற முடிச்சிகள்
தெரியும். இங்கேயே போன்சாய் மல்லிகைப்போன்ற மணமட்டுமில்லாமல் மலரும் வெளிர்நிறப்பூவும் இருக்கிறது. அதனுள்ளும் பாருங்களேன் எத்தனையெத்தனை சிறுசிறு பூச்சிகள். இதுகளுக்குகூட பசியென்பது இருக்கும்போல. அட அதென்ன பச்சை நிறத்தில் இந்த வடிவத்தில் ஒரு புழு அந்த புல்லின்மேல் ‘பின்னதை‘ முன்வைத்து ‘முன்னதை’ பின்வைத்து தவழும் குழந்தையாய் நகர்கிறது. அட..அட....

கொஞ்சம் இரண்டு அடிகள் நகர்ந்து வருவீர்களென்றால் எடுத்துக்காட்டுகளுக்கு எப்போதும் பெயர்பெற்ற தும்பைப்பூவை பார்க்கமுடியும். இந்த பூக்களுக்கு யார் சொட்டுநீலம் போட்டிருப்பார்கள் என்ற சந்தேகப்பார்வை உங்களைப்போலவே எனக்கும். அடுத்ததாய் அதோ தெரியும் பூண்டுச் செடிதான். சிறுவயதில் அடிபடும் காயங்களுக்கு அந்த கிளையை ஒடித்து அதிலொழுகும் பாலை தடவியதாய் ஞாபகம். சுர்ரென்று கொஞ்சம் எரிச்சல்லூட்டும், இரெண்டொருநாளில் காயம் பட்டுப்போகும். அதிலும் சின்னஞ்சிறு பூக்களிருப்பதை நீங்களும் கண்கூடாக பார்க்கமுடியும். இந்த பாதையைவிட்டு விலகிப்போகாதீர்கள் ஓரங்களில் சிலஇடங்கில் விளாமரங்களும், இலந்தை மரங்களும்கூட முற்களுடன் இருக்கும்.

கீழே சிந்திக்கிடக்கும் இந்த பூக்களைப்பார்த்துமா தெரியவில்லை இது மகிழம்பூவென்று. அதேதான் இந்த வாசனை முன்னமே உங்களிடம் சொல்லியிருக்குமே. சரிவிடுங்கள். அந்தப்பக்கம் போகவேண்டாம் அங்கேயிருப்பவை தாழம்பூக்கள். அந்தக்காட்டுக்குள் நல்லப்பாம்புகள் இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வெறுமனே காற்றுடன் கலந்துவரும் அந்த வாசத்தைமட்டும் சுவாசத்திற்காக விருந்தளியுங்கள். அதுவேபோதும். இப்படியேப்போனால் நிறைய காணக்கிடைக்கும், க்க்கும் அதற்குள் அந்த பயணியர் தொடர்வண்டி வந்துவிட்டது. போகலாம். ஒருநிமிடம், போகும்போது கொஞ்சம்
பூக்களுடன்கூடிய புஷ்படச்செடிகளை பறித்துச்செல்லுங்கள். அம்மியில் அரைத்து தலையில் தேய்த்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

அந்த கைகாட்டி மரத்தருகே மறைந்துநின்று பார்ப்பது யார்.? உங்களின் குழந்தைகளா!!!, அழைத்துவாருங்கள் அவர்களுக்கும் ஆசையிருக்கத்தானே செய்யும்...


  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO