இருமலர்கள்....

Monday, November 23, 2009

ஒன்று:


தூக்கம் வர..

படித்த சிந்தனையை

கனவுடன் கலைத்துவிட்டு

காலையெழுந்தேன்.


முக்கியும் முனகியும்

நடந்தும் ஓடியும்

பலனில்லை...

குனியாமலே

தெரிந்த தொந்தி


இரவினில் தின்ற

தோசைக்கு

தொட்டுக்கொண்ட

காரச்சட்னி...

கடுகடுத்த வயிறு...


பாழாய்ப்போன

பல் தினமும்

கேட்கும் பற்பசை


உழைப்பறியா

உடம்புக்கு...

அழுக்குகளை

களைந்தெடுக்க

ஐசுவர்யாராய்

படம் சுற்றப்பட்ட

சவக்காரம்


எல்லாம் முடித்து

பசியாற பார்த்திருந்த

நேரத்தில் பழைய

சோறை போட்ட

புதிய மனைவி.

சலித்துக்கொண்டது மனம்..


தயிரூற்றி உண்ட

களைப்பில்

அலுவலகத்தில் சிறிது

உறக்கம்.


இடையிலேதேனும்

சிந்தனையிடுகை

இடவேண்டும்....

கொட்டாவியுடன்

எழுதினேன் என் வலையில்


உலகத்தில் எல்லோரும்

சோம்பேறிகள்...


**************


இரண்டு:


பாதியிரவொன்றில்

திடுக்கிட்டெழுந்தேன்.

காரணம்

யாதுமில்லை.

மூடப்படாத

கதவாக இருக்கலாம்.


இரண்டு குவளை

நீரருந்தியும்

வரமறுத்தது தூக்கம்.


அரசி தொடரை

பார்க்கவிடாமல்

மின்கம்பியை

துண்டித்த........

அதே எலி...


அரிசிப்பானையை

உருட்டுகையில்...

பதுங்கியிருந்து

பழி தீர்த்ததும்

இலகுவாய்

மூடிக்கொண்டது

இமைகள்.


**************





ஆர்ப்பரிக்கும் செய்திகள்...

Tuesday, November 17, 2009


இன்றைய நாட்களில் செய்தித்தாள்களில் அறியப்படும் செய்திகளைவிட அதிகமாக பாமர மக்களையும் சென்றடைவது தொலைக்காட்சிகளில் வர்ணிக்கப்படும் (???!!!) செய்திகள் தான் என்பதில் மாற்று கருத்தேதும் இருக்க வாய்ப்பில்லை.


ஊரடங்கி, ஓய்வெடுக்கும் நேரமுன்னே கிளர்ந்தெழும் பேய்களைப்போல் மாலை ஏழுமணித்துளியில் ஆரம்பித்து ஒவ்வொரு அலைவரிசையாக என் வீட்டுக்காரனும் கச்சேரிக்கு செல்கிறான் என்பதுபோல் தொகுத்தளிக்கப்படும் செய்திகள் நமக்கு கற்றுக்கொடுத்த தமிழ் வார்த்தைகள்...வணஃக்கம் இன்ட்றைய முக்ஃகிய செய்ஃதிகள்.


நான்தான் அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் எனும் பதமாக தனது அச்சம், மடம், நாணம், பயிர்ப்ப்ப்ப்பு...இவைகளின் காரணமாக செய்திகளின் உட்கருத்துக்களை திரித்து கூறும் அரசியல் சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகள்தான் இதில் முன்நிற்கின்றன. ஒரு சாரார்தான் இப்படியென்றால் இன்னொரு தரப்பினர் நானும் அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரன்தான் எனும்விதமாக அதே செய்தியை அவர்களுக்கு சாதகமாக மணலை கயிறாக்கி நமது காதிலேயே சுற்றுகின்றனர்.


ஒரு செய்தியில்... பேரிடர் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று அறிவிக்கப்பட்டால் மற்றொன்றில் தமிழக அரசின் மெத்தனப்போக்கினால் மீட்புப்பணி மிக தாமதமாக நடந்து வருகிறது என்று வரும். ஆகமொத்தம் எந்த தனியார் தொலைக்காட்சி செய்தியும் உண்மையை சொல்வதில்லை.


இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தலைப்பு செய்தியில் அவ்வப்போது சில கொடுமைகள் அரங்கேறும். அதாவது தங்களின் படங்களுக்கு திரைப்படச்சாலையில் கூட்டம் அலைமோதுவதாக. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை அவிழ்த்துபோட்டு ஆடுகின்ற கதையாக திரையரங்கம் சென்றால்தான் தெரியும் இவர்களின் திரைப்படம் திரையிடப்படும்போது எத்தனை ஈக்கள் மொய்க்கின்றனவென்று. இவையெல்லாம் ‘முக்கிய செய்திகளாம்.


தன் வீட்டைச்சுற்றியுள்ள சாக்கடை நாற்றத்தையே சரிசெய்ய இயலாத நிலையில் அடுத்தவர் வீட்டு அடுப்பங்கரையை அவதூறாய்க் காட்டும் இதைப்போன்ற சுயநல சுண்ணாம்புகளை வெற்றிலைக்கு தடவினால் வெந்துபோவது நமது நாக்கேயன்றி வேறென்ன இருக்கமுடியும்?.



தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...


ஒரு குழந்தையின் குமுறல்... (2)

Thursday, November 12, 2009


வீடேறி வந்தவனுக்கு...

முதலாய் பணம்பெற்று

வட்டியென வாக்களித்தேன்...

இன்று....அவன்மாத்திரம்

ஊழல்வாதியாம்.



வீட்டிற்கொரு கண்ணகி

வீதிக்கொரு கோவலன்

மாதவியின்

பட்டம் மட்டும்

பரத்தையென்பர்.



பசியென்பவனுக்கு

பக்கத்துவீடு....

பஞ்சனையில் தூங்கும்

நாய்க்கு

பால்சோறு.



வறுமையை

சித்தரிக்கும் திரைப்படம்

திரையரங்கில்

நுழைவுக்கட்டணம்

ஐம்பதுக்கு குறைவில்லை.



கடன்சுமை

தற்கொலை

குழந்தையுடன் மனைவி

புகைப்படத்திலும்

புன்னகையுடன் கணவன்.



தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...