க.பாலாசி

Friday, January 3, 2014

ஒரு கூடும் சில குளவிகளும்..

.

முன்புபோலில்லை. கொஞ்சம் வயதாகிவிட்டதென எண்ணுகிறேன். ரெண்டுவரி தட்டுவதற்குள் நாக்கு தள்ளுகிறது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. கைவிரல்கள் ‘ஏன்டா உனக்கிந்த வேலை என்பதாக..’.. ‘சும்மா உக்காந்தா துருப்பிடிச்சாப்போவப்போற‘ என்கிறது மனது. செவனேன்னு உட்காந்திருப்பதில் ஒரு அலாதிப்பிரியமும் மிகுந்த சௌகர்யமும் கிடைக்கிறது. என்னவாச்சும் படிப்பமாவென்றால் ச்சீ... போ..போ.. வேலையப்பாரு என்ற நினைப்புவேறு. வேலைநேரம் போக தொலைக்காட்சி கொஞ்சம் விடுதலை, அதோடு இணையம் கொஞ்சம். எதுவும் எழுதாமலிருப்பதில் கிட்டும் நிம்மதியனைத்தும் என் கோடானுகோடி வாசகர்களுக்கு(!!!)தானேயொழிய எமக்கொன்றுமில்லை யேசப்பா... ஆமேன். ஆயினும் சீர்கேடுகளடர்ந்த இச்சமூகத்தை என்‘னெழுத்தால் காத்தருள வேண்டுமென்ற மனவேட்கை இருக்கத்தான் செய்கிறது. ரசிகர்களின் வேண்டுகோளை நிராகரிக்க மனமில்லாமல் எதையாவது செய்தே ஆகவேண்டிய சூழல். ஆகவே செழித்தோங்கியிருக்கும் இந்நாட்டின் வளங்களையும், பரிபாலங்களையும் நான் கட்டிக்காப்பாத்தாம விடமாட்டேனென்ற உறுதிமொழியில்...

••

‘ராஜா இருக்கவரையும்தான் ராஜாவீட்டு நாய்க்கு கூட மதிப்பு, தெரிஞ்சிக்க‘ சண்டை சமயங்களின் அப்பாவின் வாய்மொழி. அவர் போனபிறகு அதை நிஜத்தில் உணர்கிறேன். அவர் இருந்தவரை குணநலன்களுக்கு அப்பாற்பட்டு பெருந்தலை என்ற மரியாதை உறவுகளினிடத்து உண்டு. இப்போது ‘தலையே போயிடுச்சி இனிமே என்னகெடக்கு‘ போன்ற மனநிலை அவர்களினிடத்தும். போலவே அவருக்குப் பின்னான அம்மாவின் நிலை. துணையிழந்த தனிமை. ‘என்ன யாருப்பா மதிக்கறா, என்னக்கேட்டா எல்லாஞ்செய்றீங்க? நாவொரு கருவேப்பில கொத்துமேரி, வேணுன்னாதான்...  ம்ம்ம்’ ஒரு பெருமூச்சுடன் எதையும் எதிர்பார்க்காத நிலை. கூடம், மோட்டுவலை, நீர்நிறைக் கண், படுக்கை, சோறு, எனது சௌகர்யமும், அவ்வப்போதைய அழைப்பும் போதுமானதாயிருக்கிறது. அப்பாவிற்குப்பின் அம்மாவுக்குத் தேவையான கௌரவத்தை என்னளவில் கொடுத்தாலும், குடும்பச்சூழலில், உறவுகளிடத்தே தோல்வியே மிஞ்சுகிறது. என்னதான் பாடுபட்டாலும், உயர்த்திப்பிடித்தாலும் யதார்த்தத்தில், இச்சமூக கட்டமைப்பில் அப்பாக்கள் மட்டுமே ராஜாவாக வாழ்ந்தும் மறைந்தும் போகிறார்கள். ஏனையோர்* மேற்சொன்ன...

••

அப்பா இறந்த இரண்டொரு வாரங்கள் தவிர்த்து அம்மா பெரிதாக அலட்டிக்கொள்ளாததுபோல் தோன்றியது. நானும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அல்லும் பகலும் அவர் நினைவுதான். ம்ம்ம்முடியல.. அவர் கடைசி மூச்சை நானே சுவாசித்ததனால் இருக்கலாம். அந்தக் கடைசிப்பார்வை... கொடுமை... நான்கு மாதங்கள் கடந்தது, எங்களுக்கு ஆண் குழந்தை. பேரன் என்றவுடன் அம்மாவுக்கு அளப்பறியா ஆனந்தம், ஒரு பெரும் சிரிப்பு, மகமாயி...மகமாயி என்று நன்றிக்கடன். கிட்டத்தட்ட கேள்விப்பட்ட எல்லோருமே சொல்லிவிட்டார்கள் ‘அப்பா இருந்திருந்தால் பூரித்திருப்பார்‘. மருத்துவமனை.. அம்மாவை அழைத்துவந்து அவள் மடியில் மகனை கிடத்தினேன். ‘அப்பா மேரியே இருக்கான்ல... அப்பாவேதான் தம்பி பொறந்திருக்காரு, என் தங்கம் பெத்த தங்கமே... மாருடன் அனைத்து கொஞ்சினாள்.. இருவரும் அழுதோம்.. மகனும் அந்நேரம்...

••

மனது அம்மா உணவக இட்லி போல, ஒருநாள் கல்லாகவும் (இறுக்கமாகவும்) மறுநாள் பஞ்சுபோல லேசாகவும் இருக்கிறது. சூழ்நிலைகள், தேவைகள், வேலைகள்.. இன்னும் சில‘கள்... அப்ரஸன், டிப்ரஸன், கப்ரஸன்... என்ற ஆங்கில பண்புத்தொகைக்கொப்ப.. எல்லாவற்றிலுமே எடைக்குறைச்சல்தான் நமக்கு சரிவரும்போலிருக்கிறது. இந்த செருப்பு வெயிட்டா இருக்கு வேண்டாம். லைட் வெய்ட் வீ.கே.சி. கொடுங்க, ஆடைகள் கூட உடம்பில் இருப்பது தெரியாமலிருந்தால்தான் சௌகர்யம். 30 நாளைக்கு ஒருதடவை தலைமுடி கழிக்காவிட்டால் அதுவும் பெரிய பாரம். கூடவே பொண்டாட்டியாக இருந்தாலும் நாப்பத்தஞ்சு டூ அம்பது கிலோ இருந்தால் கச்சிதம். போலவேதான் மனதும். ஒருநிலைக்குமேல் அழுத்தங்கள் கூடக்கூட எல்லாத்தையும் தூக்கித் தூரப்போட்டுவிட்டு பாரம் குறைத்தால் தேவலை. எப்படியாவது மகிழ்ச்சியும், நிறைவும் தேவையாகிவிடுகிறது. எழுத்தும் இலக்கியமும் எள்ளளவும் மனதை லேசாக்குமென்று தோன்றவில்லை. அதைவிட்டு விட்டு விலகி நிற்பதே என்னளவிற்கொண்ட அனுபவம்.

••

இட்லி என்றவுடன் ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல இட்லி தின்பதற்காக நாய்படா பாடு பட்டிருக்கிறேன். 1 முதல் 18ரூபாய் வரையிலான இட்லிகளை க(உ)ண்டாயிற்று. ஆனாலும் திருப்தி? ம்கூம். ஈரோடு முழுக்கவே விதவிதமான இட்டேலி, இட்டிலி, இட்ட்லி மற்றும் இட்லிக்கடைகள். பொண்டாட்டி வந்த புதிதில் ஒருகல்லு மாவாட்ட நாலு மணிநேரம் எடுத்துக்கொள்வார். பிறகு படிப்படியாக குறைந்து அல்லது தேர்ந்து மூனேமுக்காலுக்குள் முடித்து சாதனையும் செய்தார் (மனைவிகளுக்கு இ‘ர்’ விகுதி அவ்வளவு பொருத்தமில்லை) கடைசிவரைக்கும் இட்டேலி பச்சரிசிக் கொழுக்கட்டைப் பதத்தில் மட்டுமே கிடைத்தது. இன்னும், இன்றும்.. உடல்நிலை சரியில்லாத அம்மாவுக்கு ஒரு நல்ல இட்லி வாங்கிக் கொடுப்பமேயென்று பிரயத்தனப்பட்டதில் கண்டது நளன் என்றொரு உணவகம். எதோ சித்தாவோ, ஆயுர்வேதாவோ அந்த முறையில் உணவுகளை தயாரித்துப் பரிமாறுகிறார்கள். நல்ல முயற்சி. ஒரு இட்டேலி எட்டு ரூபாய். மேலே ரெண்டு மூணு கேரட் துருவல். என்போன்ற நோஞ்சான்கள் மீதெரிந்தால் அவ்விடத்தே காலி. கொலை வழக்குதான். ஆனால் மற்ற உணவுகள் நல்ல முறையில் நன்றாகவே செய்கிறார்கள். ப்ப்ரமாதம். ஒரு நாலு தப்படியில்தான் ஈரோடு கதிர் அவர்களின் அலுவலகம். அவர் காசுலேயே சாப்பிட்டால் இன்னும் ப்ப்ரமாதமாக இருக்கும்.

••

கற்பனைகளும், கற்பிதமுமென் முதல் எதிரியென்பேன். கொல்லுகிறது. எ.கா.‘வாக மிதியுண்ட எறும்பின் வலி எனக்கு கற்பிதமாகிறது, அல்லது அப்படியாவதுபோல் கற்பனை தொடங்குகிறது. எதோவொருநாள் கும்பகோணம் பஸ்டாண்டில் 1000 ரூவாயை தொலைத்த கருவாட்டுக் கிழவியின் அழுகுரல், அவளின் வேதனைக்கூடிய முகம், மனம் இப்போதும் நிழலாடுகிறது, கனவுகள் வரை அதன் நீட்சி. இதுபோல் எல்லாமும், எல்லாரும், சந்தோஷத்தருணங்களற்ற வேதனைகள், வலிகள், உயிர்வலிகள். எல்லோருக்கும் இருக்கும் வெறும் பரிவும் பட்சாதாபமும்தானென்றாலும் இது கொஞ்சம் அதிகம். வலியின் கற்பிதங்கள் கொடுக்கும் மனவலி வேறுவிதமான இம்சை. வார்த்தைகளில்லை.. மீளவேண்டும்.

••

Tuesday, January 29, 2013

மீசை மகாத்மியம்...



ரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு!! இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு  கொடுக்கவில்லை.

“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க?” எனக்கு முந்திக்கொண்டான்.

அவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு!!!. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.?”

“ம்ம்ம் நல்லாருக்கன்டா” என்றான்.

சிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க? பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்?”

“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன?”

“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா? கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது.

“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச..? மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா? அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான். 

மாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன். 

“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது.? அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார்.

ஆமாம் எனக்கு என்ன குறைச்சல்! என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குக்கூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தன்‘தான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வெய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சிகோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன். 

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!!!  அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது.

இங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகடிலிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார்.  கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார்.

எப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார்.

ரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந்த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன்.

இப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.

இப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன்.

“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.

“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன்.

“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா? நீய் செய்யி” என்றான்.

“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் குமட்டிலேயே குத்தினான், அந்த முக்கா மீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.


••
 
குறிப்பு: - மீள் இடுகை

Friday, August 24, 2012

சுக்குமி ளகுதி ப்பிலி..

.

கொல்லப்பக்கம் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரங்கள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்குடுக்கிற அம்மா இப்பவும் அதேமேரிதான் இருக்கு. நானிங்க ராநேரத்துல ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு, ஆர் ஆர் லாட்ஜ் பங்க் கடையில ‘அண்ணா ஒரு பழம்ணா’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாரு. அடி என்னப்பெத்தவளே நீ ரூவாய்க்கு மூணு குடுப்பியே இங்க பாத்தியான்னு மனசுலயே நெனச்சிக்க வேண்டிதான்.  பொழப்பத்த அம்மாக்கு பொழைக்கத் தெரிலியா, இல்ல எனக்கான்னு தெரில. பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.

••••••••••••

ரெண்டு ரூவாய தெருமொனைல ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்ரூவாய்க்கு எப்பாருக்கு 222 பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல (ரெண்டா கிழிச்ச லாட்டரி சீட்டு நடுவுல சுண்ணாம்போட) அதோட கா(ல்)ர்ரூவா கொட்டப்பாக்கு, கா(ல்)ர்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச மீர்ற கா(ல்)ர்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய சோடி போட்டுப்பமா சோடின்னு நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மேரி.

•••••••••••••

அந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், சேகரு டீக்கடைக்கு இந்தாண்ட காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி வெச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரத்தான் கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுக் கடையில வாங்கினா ஒரு கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகாப்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடை‘யும் சேர்த்து வித்துட்டு, புள்ளைங்க சம்பாத்தனையே போதும்னு வூட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அரிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.

••••••••••••

ஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள் எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பிச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட. அதுக்கப்பறம் கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திரா. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கும் தாராளமா போதும். இந்தவூட்டு மாடு கறவ நின்னுட்டா அடுத்து அந்த வூடு, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம், பருத்திக்கொட்டன்னு வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி, தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட இல்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.

•••••••••••

இந்த மம்புட்டி (மண்வெட்டி), அருவா இல்லைன்னா கோடாளி எது கால்ல வுழுந்தாலுஞ்செரி எப்டிக்காயம்பட்டாலுஞ்செரி எலந்த (இலந்தை) இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும். எப்பேர்பட்ட வெட்டுக்காயும் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் அப்பாக்கும், தாத்தனுக்கும் இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன ஒடம்புக்குகூட டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும் போலருக்கு.

•••••••••••••

அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.


மீள் இடுகை..

.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO