க.பாலாசி: August 2010

Friday, August 27, 2010

வெவ்வேறானவை...

..


சீப்பிலிருந்த தலைமுடியை
கைவிரலில் சுருட்டிக்கொண்டிருந்தாள்

எப்ப வந்த? என்று கேட்பதற்குமுன்...

வாந்த...ஊர்ல இருக்கியா? என்றாள்..

இல்ல இன்னைக்குத்தான்...
ஆமா நீ? சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டேன்

நேத்து வந்தேன்..

உம்பொண்ணா இது?

ம்ம்...

தூக்கியணைத்து.. முத்தமிட்டேன்
குழந்தையாய் பார்த்தாள்...

நல்லவேளை
சின்னபொண்ணும், ராசுபொண்டாட்டியும்
ஊரிலில்லை.


**********************

காரம் கூடின குழம்புக்கு
அவ்வப்போது பாட்டியும் திட்டுவாள்

த்தூ.. என்னாக் கொழம்புடியிது
புளிப்பு வாயில வய்க்கமுல்ல
இது அப்பா

‘ஒண்ணும் வாங்கியாரதில்ல..
வரட்டும் வச்சிக்கிறேன் இந்த மனுஷனை’

வைதுகொண்டிருப்பாள் அம்மா...
அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி.


*********************

சோப்பு சீப்பெல்லாம்
தனியா வச்சிக்கணும்யா..

இந்தா இதுல
பவுடரும் எண்ணையும் இருக்கு

பாய்த் தலையாணில்லாம்
நீ மட்டுந்தான வச்சிக்கிற...

என்று சொன்ன அப்பாவின்முன்

நண்பனின் சட்டையை அணிந்திருந்தேன்...
அவர் சட்டைசெய்யவில்லை.


...

Friday, August 20, 2010

ஒளிகளின் நீட்சி...

பட்டிக்குள் அடைபட்ட செம்மறியாட்டுக் கூட்டமென ஆசாபாசங்களை துறக்க பழகிவிட்டது இந்த காலும், கையும். விஞ்ஞான துணுக்கினை வீட்டிற்குள் அமர்த்திவிட்டு அடைகாக்கத்துணிந்த உடலும், மேலிமையை புருவங்கள் கட்டிவைக்க விடியல் வீழ்வதறியாமல் வெறித்திருக்கும் கண்களும் எதையெதையோ தின்றுகொண்டிருக்கின்றன.

நிற்க...

ராஜன் ஜவுளிக்கடைக்காரர் வீட்டுக்கு வந்தபொழுதான் தெரிந்ததெனக்கு தொலைக்காட்சிப்பெட்டியின் மகிமை. நக்கீரர் தெருவுக்குள் இந்த வி.வளர்ச்சியை இழுத்துக்காட்டிய பெருமை ராஜனுக்கு. வாசல் சன்னலில் தொங்கும் திரைச்சீலையை விலக்கி ஒட்டிஒட்டி பத்துப்பதினைந்து கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாக நின்று பருவமடைந்தவளை பதுங்கியிருந்து பார்த்தார்போல் படங்கள் பார்த்த பொழுதுங்கள் இப்போதுமந்த வீட்டின் வாசலில் நிழலாய் நிற்கிறது. பிறகு குருசாமி வீட்டில், அடுத்து ஹரி வீட்டில் இப்படியாக நீமுந்தி, நான் முந்தியென அவரவர் கௌரவம் வீட்டுக்கூடாரத்தை கருப்பு வெள்ளையாக்கியது. யார் வீட்டில் படம் பார்க்கலாமென ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்திருக்கிறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படியில்லை. இந்த ஹை.ஃபி வானொலிப்பெட்டியும், அதில ஒலிக்கும் காரைக்கால் பண்பலையும் அவர்களின் அதிகபட்ச விஞ்ஞானமாக எண்ணியிருந்தனர். வேறெந்த பற்றும் அவர்களை ஆட்கொள்ளவில்லை. அப்பாவுக்கு இதுவரையும்கூட.

அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் வள்ளித்திருமணத்தையும், மயான காண்டத்தையும் கொன்றுவிட்டு சாஸ்த்தா கடையிலிருந்து வாடகைக்கு அந்த தொ.கா. பெட்டியும், ஒரு ஒளிநாடா இயக்கு கருவியும் எடுத்து வைத்தனர். திருவிளையாடலில் ஆரம்பித்து வருஷம் 16 ஓடிக்கொண்டிருக்கும்பொழுது விடிந்தேவிடும். ‘பாரு,பாரு.... எந்த காமுட்டி கோயில்லடா தீவெட்டி புடிச்சே?‘ன்னு வாத்தியார் தலையில் தட்டும்பொழுதான் பள்ளியிலிருப்பதாய் கண்களுக்கு சுரணைவரும்.

‘ஏம்பாலாஜி சவுளிக்கடக்காரு வூட்ல படம் போடுற மெஷினு வந்திருச்சாம்ல. பாத்தியா நீயி’ ன்னு அப்போது கேட்ட அலமேலு அவ்வாவும்(பாட்டி) குத்துக்காலிட்டு திண்ணையிலமர்ந்து ‘இந்த ராசாயா கெழவிக்கும் அது மொவனுக்கு காலைலேந்து எதோ சண்டையாம்லடி நவநி, ஒனக்கு தெரியுமா?’ என்று ஊர் வம்புகளை உலையுடன் சேர்த்து கொதிக்கவைத்த அஞ்சுகம்அம்மாலும், குஞ்சம்மாளும் இப்போது உரலுக்குள் குத்துண்ட நெல்லாக வாசலை எட்டிப்பார்ப்பதில்லை. உறவுகளை வளர்த்ததும், ஊர்வம்புகளை வெற்றிலைப்பாக்குடன் கதைத்ததுமாகயிருந்த பாட்டிகளின் வெறித்தனமான ஆட்சி இப்போது தொ.கா.பெட்டி இயக்குகருவிப் பொத்தான்களுடன்.

ரூபாய் 400 ஓ 600 ஓ மாதாமாதம் உதவித்தொகையாக வாங்கும் ஆதரவற்றோர்கள், கம்பிவழி அலைவரிசை இணைப்புக்கு ரூபாய் 100 யை இழக்கத்தயாராகிவிட்டனர். காரணம் அரசு அளித்த இலவச தொ.கா.பெட்டி. பொங்கித்தின்ன ஒரு ரூபாய் அரிசி கிடைப்பதும் அவர்களின் பலம். ஊன்றமுடியா காலுடன் வாழ்நாளின் உச்சியிலேறி உச்சிப்பிள்ளையாரைப்பார்த்த மகிழ்ச்சி அவர்களின் கண்களில் தொலைக்காட்சித் தொடர்களை காண்கையில் தெரிகிறது. தொடர்களைக்காண வீடுகள் தேடியலைந்த ஏக்கமும், தாகமும் தணிந்துவிட்டதெண்ணி ஒரு பெருமிதமும்கூட. நல்லதோ கெட்டதோ அவர்களின் வாழ்நாள் உறக்கம் முழுவதும் ஏதோவொரு தொ.காட்சித்தொடரின் நாயகியின் கண்ணீரில் கனவுகளாக கடந்துபோகுமென்பது மட்டும் திண்ணமாகத்தெரிகிறது.

எப்படியாயினும் ‘ந்த, ஏன் மாத்தர? 8 மணிக்கெல்லாம் போட்டுடுவான். வய்யி‘ என இப்போது அம்மாவும் அதட்டும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற காணம் தொடங்கும்முன் அலமேலுவை, சவுந்தர்ராசு நயினா வீட்டில்போய் அமர்த்திவிட்ட ஒளிகளின் நீட்சியை இப்போதுதான் உணர்கிறேன்.






Wednesday, August 18, 2010

எதோ வீ.ஏ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல...

‘எய்யா எதோ வீ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல நீ ஃபாம் அனுப்பிட்டியா’ன்னு எப்பாரு கேட்கும்போது ‘இல்ல’ன்னு சொல்லித்தொலைச்சிட்டேன். ஃபோன்லயே விட்டாரு பாருங்க டோஸு ‘அந்தப்பய மொவனே, இந்தப்பய மொவனே’ன்னு பாதி அவரையே திட்டிட்டு என்னையும் கொஞ்சமா கொதறி வச்சாரு. பெத்த மனுஷன் கத்தினா நல்லதுக்காதான இருக்கும். ஏழு கழுத வயசாயும் இன்னும் நமக்கிந்த புத்தி வரமாட்டுதேன்னு போஸ்டாபிஸ்க்கு போனாத்தான் தெரியுது, தலையில ஒட்டு முடிகூட இல்லாத கெழங்கட்டைகள்லாம் அவத்தால குத்தவச்சிருக்கறது.

வந்துதே எனக்கு வீரம், அப்பிளிகேஷன் வாங்கலாம்னு போனா ஸ்டாக் இல்லயாம். ஒருபக்கத்தால ‘அவைலபில்‘ன்னு நோட்டீஸூ, இன்னொரு பக்கத்தால அவுட் ஆஃப் ஸ்டாக்குன்னு.





ஒரு வழியா நண்பருகிட்ட வாங்கி ஃபில் பண்ணி போஸ்ட் பண்ணப்போனா ‘கொல்’லுன்னு ஒரே கூட்டம். உள்ளப்போனொன்னே ஒரு செம ஃபிகர்தான் கண்ணுல பட்டுது. ரொம்ப நேரமா அந்த க்யூவுலேயே நின்னுகிட்டிருந்தேன். போஸ்ட் மாஸ்டர் கிட்டத்தால போனப்பதான் தெரிஞ்சிது நான் நிக்கவேண்டியது அடுத்த க்யூன்னு. கொஞ்சநேரத்துக்கெல்லாம் ‘அம்மே’ன்னு ஒருப்பயபுள்ள வந்து அந்த ஃபிகர் கால கட்டிப்புடிச்சிது. அடக்கருமமே...நேத்து புள்ளபெத்தது, நாளைக்கு பெக்கப்போறதுலேர்ந்து நிக்குதுங்க. அதுங்களுக்கு அடுத்தால க்யூல புருஷனுங்களும் ஒரு கேரி பேக்கோட நிக்கிறாங்க. இந்த புள்ளையாண்டானுங்களுக்கு என்னா நம்பிக்க பாருங்க. எதோ காசு குடுத்தாதான் இந்த வேலையெல்லாம் கெடைக்கும்னு பேச்சுப்போக்குல சொல்லிக்கிட்டு திரிஞ்சதெல்லாம் சந்தடிச்சாக்குல அப்ளை பண்ணிட்டு வெளியில வருதுக. அதுசரி நம்பிக்கத்தான வாழ்க்கையே.

அந்த குண்டம்மா ஃபிரியட்ல கடைசிகாலத்துலதான் TNPSC-ய ஓப்பன் பண்ணுச்சு. எதோவொரு நம்பிக்கையில நானும் கடக்கு கழுதன்னு எக்ஸாம் எழுதுனேன். அதோட அந்தம்மா ஆட்டம் காலி. இப்பயும் அதே நம்பிக்கையிலத்தான் எழுதப்போறேன்.. பாப்போம்..



போஸ்ட் ஆபிஸ் வாசல்தாங்க


ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஃபில் பண்ணவேண்டியத, ஒருநாளைக்கு முன்னாடிதான் பண்ணணும்னு விதி போல..


தோ பாருங்க இவரும்தான்


கடைசியா கண்ணாமுழி தெரியற மாதிரி ஒருத்தன் நிக்ரானே, அவன எவத்தையோ பாத்த மாதிரி தெரியுது...


ம்க்கும்... எந்த புள்ளைய பெத்ததுக்காக இந்த நெலமயோ தெரியல



வெய்யலுதான். என்னா பண்றது. வயிறு காயுதுல்ல. இந்த சீஸன்ல விய்க்கலன்னா எப்ப விய்க்க முடியும்.




உள்ளபோன அம்மாக்காக வெயிட்டிங்...



எதோ சீரியஸான டிஸ்கஸன் போலருக்கு




பேரெல்லாம் நல்லாத்தான் வச்சிருக்காங்க.. ஒரு நல்ல மனுஷங்க பேர விடுறதில்ல..


இதுக்கு ஒண்ணும் சொல்ல தெரியல


என்னதான் காமடி பண்ணினாலும் அரசாங்க வேலைக்கு எளசுங்கள்ட கிராக்கி அதிகம்தான். நாரப்பயலுக அதையும் காச வாங்கிட்டு யாராருக்கோ பட்டாப்போட்டு குடுத்திர்ரானுங்க. என்னதான் அரசாங்கத்தோட தகுடுதித்தம் தெரிஞ்சாலும் எதோவொரு நம்பிக்கைதான் இவ்ளோ அலமலப்புக்கும் காரணம்.

சும்மாவாச்சொன்னாங்க ‘எலிக்கு திண்டாட்டம், பூனைக்கு கொண்டாட்டம்’னு..







Thursday, August 5, 2010

கனவுகள் மேயும் காடு...


மௌனத்து சீற்றங்கள் உறையத்தொடங்குகிறது இரவெங்கும். அலைகள் கொணரும் நுரையும், நுரையைக்கொள்ளும் கடலும் சொல்லும் சங்கதிகள், கனவுகளின் வழியொழுக அடைத்துக்கொள்கின்றன சிந்தைகள் யாவும். பெருவெளிப் புன்னைமரம் உச்சியில் கொண்ட முற்கூட்டுடன் தனிமையில் அமர காத்திருக்கிறது காக்கையைப்போலவே மனமும். அரவங்களோ, அசைவுகளோ தெரிந்திடின் சீறிட்டு கரையத்தான் செய்கிறது அதற்கும். ஏனிந்த இரவு, வெறுமை, தனிமை, தாகம், மனதுடனான தர்க்கம், சிந்தையற்ற நிலை, உழைப்பதற்ற ஓய்வு? இவைகொண்டு எதோவொன்றை கருகிய இருளோ, மூடிய இமைக்குள் இருட்டினில் தவிக்கும் விழிகளோ சொல்லிக்கொண்டே விழுங்கிப்பார்க்கிறது. சீரனமின்றி தவித்தும், சிரமேற்று தொங்கியும் உதிராத தணல் உடலெங்கும்.

சாளரமற்ற அறையில் புழுக்கத்துடன் சேர்த்து ஆயிரம், லட்சம், கோடியென கொடிகொடியாய் பரந்துபரந்து விரிந்துகொண்டேயிருக்கின்றன புள்ளிகளனைத்தும். சாம்பலான வார்த்தைகளை சேர்த்து குழைத்து குழைந்து நாவினடி ஊறும் கோழை எச்சில்கள்யாவும் படுத்தப்படியே உமிழ்ந்து உடலெங்கும் எச்சங்களாய் எச்சில்கள். அனிச்சைக் கட்டளைகள் பிறந்து கரங்களிரண்டும் துடைத்து துவைத்து மேலெங்கும் ஈரக்கீரல்கள். சற்றைக்கொருதரம் சுவர்க்கோழிகளின் கீச்சிடும் குரல் குத்திக்குத்தி கிழிக்கிறது செவியின் உட்சுவற்றை. எதோவொரு நாதம் கிணற்றிற்க்குள்ளிருந்து அம்மா அம்மாயென்பதைப்போல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இரண்டுமுறை திடுக்கிடுகிறது கண்கள். கால்களின் ஆடுசதைகளில் படிந்த கோரைப்பாயின் வரிகளைத் தடவத்தடவ சுகமேற்கிறது. அனூடே மயிர்கால்களும் சிலிர்த்துக்கொள்கிறது.

உடைந்த மதிற்சுவரினடி மடிந்த எறுப்புச்சாரிகளில் ஒவ்வொன்று கைகால்களிழந்து முக்கி முனகி தப்பிக்கப் பார்ப்பதாய் மனமும் நினைவுகளும் இந்த கனவினை உதறிவிட்டு எங்கோ ஓடத்தான் விழைகிறது. முடிகிறதா? இல்லையே. தாயிடம் அருந்திய பாலின்று பூர்வீக மணத்துடன் நாசியை மூடிக்கொண்டே பயணிக்கிறது. காய்ச்சலில் சுருண்டிருக்கும் நாவிற்கு அவளின் சுக்குக் கசாயம் இனிக்கிற மாதிரியும் தெரிகிறது. கசக்கிற மாதிரியும் தெரிகிறது. ருத்ராச்சையை மென்றபடி நாத்திகம் பேசும் கடவுள், பார்வதியை ஏன் பக்கமிருந்து ஒதுக்கினான். பாம்புகள் எங்கே? மணிமுடியெங்கே? அதன் வழிச்சிதறும் கங்கையெங்கே? அவனின் தாண்டவம் ஏன் அதிராமல் அசைகிறது? என்ன நினைவில் திளைத்திருக்கிறோம். யானறியாமல் எல்லாமே பச்சரிசிக் கஞ்சிக்குள்ளும், நெத்திலிக் கருவாட்டுக்குள்ளுமே நடக்கிறதே. என்ன விந்தையிது!!.
உடல் சுடுகிறதா? அணல் உடலாயிருக்கிறதா? எதைச்சொல்கிறது இந்த தனிக்கனவு?

இதோ இந்த இரவின் அஸ்தமனம் தொடங்கிவிட்டாற்போல் தெரிகிறது. கீழ்வானமும், கீழிமையும் செந்நிறத்தை விரட்டத்தொடங்கிவிட்டன. உடற்படிந்த உப்பு படிமங்கள் போர்வையுடன் சேர்ந்து கொட்டுகிறது. உள்மனமும், உத்திரத்து விசிறியும் தன்னகத்தேகொண்ட அகந்தையை அழித்துக்கொள்கிறது. எங்கோ மச்சிவீட்டின் மதிலை மூடின மல்லிகைக்கொடி, மலர்களை பிரசவிக்கிறதுபோலும். காற்றெங்கும் வாசம், காற்றெங்கும் கானம், காற்றெங்கும் அகமும் புறமும் மிதக்கிறது. பகலவனின் வெண்மை உடலை இதமாக பிடித்துக்கொள்கிறது. அடடா
! என்ன சுகம் இந்த உடலில்! காய்ச்சல் நின்றபின் கிடைத்த இந்த உடலில்தான் எத்தனை மினுமினுப்பு!, எத்தனை அழகு!, எத்தனைக்குளிர்ச்சி!. வரும் இரவும் இந்த தனிமையைக் குத்திக்காட்டும் கனவுகளுடன்தான் வருமோ?!! சூன்யமான அந்த கருமை வராமலிருந்தால்தான் என்ன? அப்பப்பா, இந்த விடியல் இப்படியே தொடர்ந்தாலே நலம்...நலம்...நலம்...




  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO