க.பாலாசி: July 2011

Friday, July 29, 2011

காத்திருத்தல்


பெரும்பாலும் பெரிய விசயங்களைவிட சிறுசிறு விசயங்களில்தான் காத்திருத்தலென்பது ஒரு சுமையெனப் படுகிறதெனக்கு, என் புத்திக்கு. நான் காத்திருந்த நேரங்களைவிட காக்கவைத்த நேரங்கள்தான் அதிகமிருக்குமென்பது இதையெழுத நினைக்கும்போதுதான் ஞாபகம் வந்துதொலை(க்)கிறது. விவசாயி மழைக்கு, மாணவன் பரிட்சை முடிவுக்கு, இளைஞன் காதலுக்கு, பெண் திருமணத்திற்கு, ஒரு குடும்பத் தலைவன் கணக்குப் போட்டு கடன் வாங்கி பின் வரும்படிக்கு என இப்படி ஒவ்வொரு காலத்திற்குமான ஒவ்வொரு வகை  பெரிய காத்திருப்புகள் கட்டாயம். ஒரு காத்திருத்தலும் அதற்குள் மனதிற்குள் உண்டாகும் எண்ணங்களும் மொத்த வாழ்வின் வலி, போராட்டம், தவிப்பு, இன்பம், துன்பம், அனைத்திற்கும் மேலான ஒருவித சுகச்சுமை போன்ற அத்துணைப் பண்புகளையும் காலத்திற்கேற்றாற்போல் ஒருங்கே கொடுத்துவிடுகிறது. நான் இத்தனைப் பிசகில்லாமல் எளிமையாகக் கடந்திருக்கிறேனோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இது வரமா, சாபமா தெரியவில்லை.



தெருவே அல்லோகலப்பட்டுக் கிடந்தது. அனைத்து வீட்டு வாசல்களிலும் என்னொத்தச் சிறுவர்கள் வெடிகளை காயப்போட்டிருந்தனர். பார்க்கப்பார்க்க பொங்கிப் பொங்கி வந்தது. மாலை மணி ஆறாகிவிட்டது. அப்பா வந்தபாடில்லை. மாயவரம் மரவாடிக்கு சென்றிருந்தார். துணிமணிகளை எடுத்து ஒரு மாதமாகியிருந்தது. ஆனால் வெடி? ‘தோ செத்தயிரு வந்திடும்பா’ இரும்புச் சாரணியில் முறுக்குப் பிழிந்தபடியே அம்மாவின் ஆறுதல். பாவி மனசு கேட்கணுமே. ஏக்கமும், தவிப்பும் நிரம்பி உதடுகள்வழி பிதுங்கி பொங்கிவிட்டது. ஏழு, எட்டு... கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி பொங்கலும் அடங்கியது. எனக்கு அப்போது புஸ்வானம் விட ரொம்பப் பிடிக்கும். ஒரு புள்ளியிலிருந்து விரிகின்ற மலர்போல அழகு.   எல்லோர்வீட்டு பிள்ளைகளும் புஸ்வானம் விட்டுக்கொண்டிருந்தனர். நான் ‘புஸ்’ஸானேன். உண்டேனா இல்லையாவென்று தெரியவில்லை ஆனால் உறங்கிவிட்டேன். பதினொன்றரை மணியிருக்கலாம் அப்பா வந்தார், ஐம்பது ரூபாய் வெடிகளுடன். அம்மா எழுப்பி காட்டினாள். செய்தித்தாளில் சுற்றி சணல் போட்டுக் கட்டியிருந்தார்கள். காத்திருந்த மனதிலிருந்து அத்தனை அடைசல்களும் நீங்கி ஆற்றாமையும், தவிப்பும், பொய்க் கோபங்களும் பெருமூச்சின் வழி காற்றுடன் கலந்தது. ஐப்பசி குளிரில் புஸ்வானங்கள் ஜில்லென்றிருந்தது. ‘இந்தா இந்தா கொளுத்து’ என்று அப்பாவும் துணைக்கு வந்தார். மழையும் வந்தது.



கல்லூரிக் காலம். பவானியின் அண்ணனைப் பார்க்க தனியாக ஆக்கூர் பஸ்டாண்ட் பேக்கரி கடையில் உட்கார்ந்திருந்தேன், இடுப்பில் பைப் கத்தி சகிதம். பவானியை காதலித்தேனென்பது உலகறிந்தது. அந்த ‘ஒரே’ குற்றத்திற்காக என்னை ஆள்வைத்து மிரட்டினான், கிராதகன். வந்ததே கோபம், வச்சனா தகடியா ஒன்று நான், இல்லை அவன். அதற்குதான் அந்தக் காத்திருத்தல். என்னை மிரட்டியவன் பார்த்து விட்டான். ஆனால் கண்டு கொள்ளவில்லை. 2வது சந்திலிருக்கும் பவானி வீட்டிற்கு அவன் சென்றிருக்க வேண்டும். அந்த சந்து முகனையில்தான் பஞ்சாயத்து அலுவலகம். அதுவரை எந்த வம்பு தும்புகளுக்கும் போனவனில்லை. அரசமரம், கோயில்கள் தவிர்த்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பஞ்சாயத்து நடக்குமென்பது என் அறிவீனம். கொஞ்சம் மனதுக்குள் வியர்க்கத் தொடங்கியது. போன பேருந்தைக் காணோம். ஒண்டிக்கட்டை. எவ்வளவு தைரியம்?  இவ்வளவு தூரமென்று உணர்வதற்கும் நேரமில்லை. பொதுவாகவே நான், இணையாகவிழும் இரு மழைத்துளிகளுக்கிடையேப் பிசகாமல் நுழைந்துவரும் புஷ்டியான உடலமைப்பைப் பெற்றவன். சற்றைக்கெல்லாம் அவள் அண்ணன் வந்துவிட்டான். நல்லவேளை வேறு யாரும் வரவில்லை. ‘டேய் வேணான்டா விட்டுடு, அதான் புடிக்கலன்னு சொல்லுதுல்ல, அப்பறம் ஏன்டா?, எப்பாவுக்கு (வாத்தியார்) தெரிஞ்சா பிரச்சன ஆயிடும்.. அவ்ளோதான்’ சொல்லி முடித்தான்.. ப்ப்ப்ரு... இவ்ளோத்தானா? அட சொங்கிப்பயலே.. (மனதிற்குள்) முகத்தை விரைப்பாக வைத்திருந்தேன், கையும் காலும் கடகட, மனது பக்பக். அடுத்த பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினேன். அரைமணி நேரமானது... அந்தக்(கால) காத்திருத்தலொரு இளப் போராட்டம்.



அதே காலம். நண்பனையும் அவன் காதலியையும் பேருந்தில் ஏற்றிவிட்டோம், இன்னொரு நண்பனும் நானும். சம்போ சிவசம்போ பாடல் அப்போதில்லை. இரண்டுநாள் கழித்து நானும் அவனும் காவல் நிலையத்தில், ஆய்வாளர் வருகைக்காக ‘அமர’ வைக்கப்பட்டிருந்தோம். காவல் நிலையமென்பது சிகப்புக் கலர் பெயிண்ட் அடிக்கப்பட்ட கட்டிடமென்பது என் பரம்பரைக்கே அத்துப்படி. அதில் ‘உள்ளாழ்ந்து’ நடப்பவற்றை முதலில் ‘புல’னாய்வு செய்தவன் நான்தான். பெண்ணைப் பெற்றவர் ‘உங்க ரெண்டுபேரையும் என்னப்பண்றேன் பாருங்கடா’  என்று காவல்நிலைய வாசலில் சவால்விட்டுக் கொண்டிருந்தார். (என்) அப்பா கொஞ்சதூரம் தள்ளி மரநிழலில் குருசாமியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் காவலர், தெருக்காரர், மேலும் எங்களிருவருக்கும் வக்காலத்து. வரப்போகும் காவல்துறை ஆய்வாளர் மிகவும் கண்டிப்பானவரென்று அறிந்திருந்தேன். உள்ளே மரப்பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பனும் நானும் உச்சா போகாதக் குறைதான். ‘ஒழுங்கா உண்மையச் சொல்லிடுங்கடா, விட்டுர்றோம், அய்யா வந்தாருன்னா பின்னிருவாரு’ என்னமோ சடைப் பின்னுவதுபோல் அந்த எழுத்தர் சொன்னார். அடிவயிறு முட்டியது. எப்பாடுபட்டாலும் உண்மையைச் சொல்லக்கூடாது என்பது எங்கள் திண்ணம். ஆனால் லத்தியைப் பார்க்கும்போது அது இளகிக்கொண்டிருந்தது. அதுவரைக்கும் அப்பாவின் விளக்கமாத்து அடிகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட எனக்கு லத்திகளை பார்த்தபோதே வலிக்க தொடங்கிவிட்டது. நண்பனுக்காவது கொஞ்சம் என்புசதை போர்த்திய உடம்பு, இங்கே என்புதோல்தான்.. ஒரு மணிநேரம் ஆகும். உதைவாங்க காத்திருந்தோம். அம்மா, அப்பா, அக்கா எல்லா உறவுகளும் கண்முன் நிழலாடியது. வாங்கப்போகும் அடியின் அச்சாரம் எப்படியிருக்குமென்பதை பக்கத்திலிருந்தவன் கன்னம் சொல்லியது. வந்தார். சில கட்டளைகள், சில வசவுகள், எச்சரிக்கைகள்...அவ்வளவுதான். சோம்பல் முறித்துக்கொண்டு வெளியே வந்தேன். காத்திருந்த அப்பா அழுதிருந்தார், பெத்தமனம்...


அழைத்த அண்ணன் மாதவராஜ் அவர்களுக்கும் நன்றி.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO