க.பாலாசி: August 2009

Monday, August 31, 2009

கதம்பம்...

இளமைவிகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...



பள்ளியில் படித்த வரலாற்று பாடங்கள்...
பாதி பாதி ஞாபகம்...
சென்று பார்க்கையில் சிதிலமடைந்த செங்கற்கள்,
பாதுகாப்பு பணியில் சில வௌவால்கள் மட்டும்...

*******

பாக்கெட் பால் விலைவுயர்வு....
கலங்கும் கணவான்கள்...
தாய்ப்பாலின்
முக்கியத்துவம் உணரும் தாய்மார்கள்...

*******

அலைந்து திரிந்து கடன்வாங்கி,
வரதட்சணை கொடுத்த
கணவனைப் பற்றி கவலையில்லை...
பெண்ணின் பிரசவம் எண்ணி துயருரும் மனைவிக்கு...

*******

நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...
எதுவும் உணர்த்தவில்லை...
முதலிரவில் மனைவியின்
தாலி மட்டும் குத்துகிறது...

******

4 லட்சம் பட்டதாரிகள்
4000 ரூபாய் சம்பளத்திற்கு காத்திருக்கும் வேளை...

போராட்டத்தில் பொழுதை போக்குபவர்களுக்கு...
15 ஆயிரம் +++ போதவில்லையாம்...

*******

மழைவேண்டி ஊரே வேண்டுகிறது...
வருண பகவான் கண் திறந்தார்...மழை, வெள்ளம்...
காக்காய், குருவி கூட உயிருடன் இல்லை...
மறுபடியும் பள்ளிகொண்டார் பகவான்...

*******

தலைவரின் பிறந்தநாளில்
ன்னதான திட்டமாம்...அதற்கு
அயராது உழைக்கும் தொண்டன்...
பட்டினியில் பிள்ளை குட்டிகள்...

*******

பத்து சதவீத வட்டிக்கு வாங்கிய கடன்
தினமும் துரத்தும் தவணைக்காரன்...
நான் சொல்லும் பதில்...
‘அடுத்த எலக்ஸன் வரட்டும்...’

**********



தமிழ்மணத்திலும், தமிலிஸ்லிலும் உங்கள் ஓட்டினை பதிவிடவும்...

Saturday, August 29, 2009

துடைக்கப்படா துயரங்கள்....

செத்துப்போன குருவிகளின் மீதமிருக்கும் சிறகுகளையும் ஒடிப்பதுபோல்,
ஈசலாய் கிளம்பிய இலங்கை ராணுவம்,
நம் தமிழர்களின் ஒன்றிரண்டு மீந்து போன உயிர்களையும் ஒடித்துகொண்டிருக்கிறது...
ஈழத்தமிழனின் வலியையும், உணர்ச்சிகளையும் மட்டுமே புரிந்துகொள்ளும் நம்மால்
எதிர்த்து போராட இன்று முடியாவிட்டாலும்,
நம் போராடும் குணத்தில் ஒரு முயற்சியாக

நம் குரலாவது ஓங்கி ஒலிக்கட்டும்...
ஒரு பதிவின் வழியாக...

கீழே உள்ள படம் அவர்களின் ஈவு இரக்கமற்ற செயலை உலகிற்கு உணர்த்த அவர்களே எடுத்து காட்டியது...




இந்த ஒளியிடல் ஒரு மிகச்சிறிய உதாரணம் மட்டுமே...
இதைவிட எண்ணிலடங்கா கொடுமைகள்,
துயரங்கள், வேதனைகள்...

உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் பகிரும் நம் நெஞ்சங்கள்
உரக்க கத்தட்டும் ஓர் நாள்...

இன்னும் சிலரது குரல்கள்....
தங்கமணிபிரபு
சடகோபன் முரளிதரன்
கதிர் (ஈரோடு)
நர்சிம்
காமராஜ்



Friday, August 28, 2009

நகையும் சுவையும்....


இவரோட படத்துக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....

வாய்விட்டு சிரிச்சா பன்றிக்காய்ச்சல் ஈசியா பரவிடும்ங்ற கொள்கையின் படி இங்கே சில சுவைகள்...

ஒரு சமயம் டீக்கடைக்கு போனப்ப, இரவுவேளைங்கறதுனால ‘அண்ணே ஒரு ஷகிலா டீ போடுங்கண்ணே’ அப்டின்னேன்...

அந்த ஆளு என்ன நெனைச்சாரோ தெரியல கொஞ்சம் முழிச்சாரு...

சரின்னு நானே... ‘ஆடை’யில்லாம டீப்போடுங்கன்னு சொன்னேன், அப்பதான் அவருக்கு புரிஞ்சி ...சிரிச்சிகிட்டே போட்டுகுடுத்துட்டு, ‘பாத்து தம்பி பொறுமையா குடிங்க, சூடாயிருக்கும்னு’ சொல்லிட்டு அவரு வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டார்..

உனக்கு தேவைதாண்டான்னு வந்துட்டேன்...

ஒரு தடவ ஹோட்டலுக்கு சாப்பிடப்போனேன். நான் எப்போது அந்த ஹோட்டலுக்கு எதிர்த்த ஹோட்டல்ல சாப்பிடுறது வழக்கம். இது இந்த ஹோட்டல்காரனுக்கு தெரிஞ்சிருக்கும்போல... பில்லு போடுறவரு கேட்டாரு ‘ஏம்பா எப்போதும் எதிர்த்த ஹோட்டலுக்குதான போவ.. இன்னைக்கு என்ன இந்தபக்கம்னு?’. நான் சொன்னேன் அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க.. அதனால தான் இங்கவந்தேன்னு... அவரும் எதோ புரிஞ்சமாதிரியே தலைய ஆட்டிட்டு விட்டுட்டார்...

கல்யாண மண்டபத்துல ஒரு பையன் அவங்க அம்மாவப்பாத்து ‘ஏன்மா கழுத்துல மாலை போட்டிருக்குற அக்கா அழறாங்க’ன்னு கேட்க, அவங்க அம்மா ‘அந்த பொண்ணு அவங்க அப்பா, அம்மாவ பிரியப்போறதால அழறா’ன்னு சொன்னாங்க...

மறுபடி பையன் ‘ஏன்மா அந்த மாலை போட்டிருக்குற அங்கிள் மட்டும் சிரிச்சிகிட்டே நிக்கிறார்?’ அப்டின்னான். அதுக்கு அவங்க அம்மா ‘அவன் உங்க அப்பா மாதிரிடா, நாளைலேர்ந்து அழ அரம்பிச்சுடுவான்னு...


ஒரு அன்பர் வீட்டுக்கு சாப்பிட போயிருந்தேன். சாப்பிட்டுகிட்டு இருக்கிறப்ப தன்னோட பொண்டாட்டியப்பாத்து ‘ஏன்டி இவ்வளவு காரமாவா கொழம்பு வைக்கிறதுன்’னு கேட்டார். அந்தம்மா வெறித்தனமா ஒரு பார்வ பார்த்துட்டு போயிட்டாங்க...அப்பறம் அவர்ட சொன்னேன்...‘சமைச்சு போட்டு உதவாங்கும் கணவன்களும் இருக்காங்க... உங்களமாதிரி சமைச்சத சாப்பிட்டு உதவாங்கும் கணவன்களும் இருக்காங்க’ன்னு. அதுக்கு அவரு ஹா..ஹா..ன்னு சிரிச்சார்...‘சிரிக்காதீர்...இதில் நீர் எந்த ரகம் என்று உங்களுக்கு தெரியும்’ அப்டின்னேன்.

அப்பறம் நீங்க வேணும்னா டிராஃபிக் போலீஸ்கிட்ட இப்படி பேசிப்பாருங்க...உங்களுக்கும் நகைச்சுவை தானா வரும்....மாமியார் வீட்டில்....

டி.போ: நீர்தான் இந்த வண்டிக்கு சொந்தக்காரரோ?

நீங்க: ஆம். நீர்தான் யூனிபார்ம் போட்டு வழிப்பறி செய்பவரோ?...

(லைசென்ஸ் மற்றும் எதுவும் இல்லாத உங்களிடம்)

டி.போ: ஏது... லைசன்ஸ் இல்லாமலே இவ்வளவு தூரம்...

நீங்க: நட்பு நாடியது...அதனால் டாஸ்மாக் வரையில்...

டி.போ: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

நீங்க: என்னவென்று?

டி.போ: லைசென்ஸ் இல்லை, சரக்கடித்து விட்டு வண்டிஓட்டியது, வண்டிக்கு ஆர்.சி. இல்லை, இன்சூரன்ஸ் இல்லை, ஓவர் ஸ்பீடு, ஹெட் லைட்டில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை...இப்படி....எடுத்துரைத்தால் கணக்கிலடங்காதது....

நீங்க: சரி இப்ப என்னான்ற?

டி.போ: ஃபெயின் கட்டணும், கோர்டுக்கு போகணும்...இதெல்லாம் வேண்டான்னா எடு 500 ரூபாய்...

நீங்க (கோபமாக): யாரைக்கேட்கிறாய் பணம்? எதற்கு போடுகிறாய் ஃபெயின்? எங்களுடன் வண்டியில் வந்தாயா? அங்கே ஸ்கூட்டியில் போகும் ஃபிகரை ஓவர்டேக் செய்து கீழே விழுந்தாயா? சிக்னலில் மாட்டி சிறைபட்டு நின்றாயா? பூட்டிய டாஸ்மாக்கில் பிளாக்கில் ஒரு க்வாட்டர் வாங்கித்தந்தாயா? சைடிஸ் வாங்க காசு இல்லாமல் அடுத்தவர் பிளேட்டில் உள்ள வெள்ளரியை திருடித்தந்தாயா? நான் கால் தடுமாறும் நேரத்தில் பைக்கின் கிக்கரை உதைத்து உதவினாயா? மாமனா? மசசானா? ................னே...

குறிப்பு: நகைச்சுவைங்கிறது....நாம வாக்கிங் போகும் போது கட்டி இழுத்துகிட்டு போற நாய்க்குட்டி மாதிரி இருக்கணும்... கொஞ்சம் அவுத்துவுட்டாலும் அடுத்தவங்களை கடிச்சு குதறிடும்...

மேலே உள்ள இடுகை எவர் மனதையேனும் புண்படுத்துமாயின் மன்னிக்க...

பிடித்திருந்தால் தமிழ்மணம் மற்றும் தமிலிஸ்-யில் தங்களின் வாக்குகளை பதிவிடவும்...



**********

Wednesday, August 26, 2009

மாணவ மாணவிகள்தான் பிச்சைப்பாத்திரமா?....


1996 ம் வருடம் என்பது என்சிந்தையிலிருந்து எப்போதும் நீங்காத வருடம்...

ஏனென்றால் எனது எட்டாம் வகுப்பு ஆரம்பம்தொட்டே எனது கலையார்வம் சற்று மிகுதியான காலம்.நான் பள்ளியின் மாணவத்தலைவனாக இருந்த சமயம் அது. அப்போதைய எனது தொகுதியின் (பூம்புகார்) சட்டமன்ற உறுப்பினர் (பூராசாமி) எங்களது ஊருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகைதந்திருந்தார். அவர் வரும்பொருட்டு ஒரு மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஆடல், பாடல், பேச்சுப்போட்டி போன்றன அடங்கும்.

பேச்சுப்போட்டிக்கு என்னையும் சேர்த்து மூவர் தேர்வு செய்யப்பட்டோம். என்னைவிட திறமைவாய்ந்தவர்கள் மற்ற இருவரும். மூவருக்கும் மூன்று தலைப்பு. எனக்கு அறிஞர் அண்ணா, மற்றொருவனுக்கு காந்தி, இன்னொரு பெண்ணுக்கு காமராஜர். பலமான போட்டி என்றே நினைத்தேன். அதற்காக நிறைய செய்திகளை தொகுத்து 2 பக்க அளவில் மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். எனக்கு போட்டியாக மற்ற இருவரும் இன்னும் அதிகமாக பேச செய்திகளை தொகுத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு மண்டபத்தில் இதற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. நான், நண்பன் மற்றும் அந்த பெண் உட்பட மூவரும் அந்த மண்பத்தின் ஒரு மையப்பகுதியில், சில அரசியல் தலைவர்கள் அருகே அமரவேண்டியிருந்தது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்திருந்தது. அதன்பிறகு மூவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அமர்ந்திருந்தோம். என்ன நிகழ்ச்சி என்றுகூட தெரியவில்லை. எங்களை விட்டுவிட்டு ஆசிரியர்கள் முன்னமே சென்றுவிட்டனர். எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்தது. நானும் மற்ற இருவரும் சிறப்புடன் பேச வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் மனப்பாடம் செய்துகொண்டிருந்தோம். ஆனாலும் கடைசிவரையில் எங்களை யாரும் பேச அழைக்கவில்லை. இறுதியாக சட்டமன்ற உறுப்பினர் கிளம்பும் முன் யாரோ ஒருவர் நாங்கள் வந்திருப்பதை சொல்ல அப்படியா என்று கேட்டுவிட்டு... கடைசியாக... முதலில் என்னுடன் வந்த பையனை (என் வகுப்பு நண்பன்தான்) அழைத்து முதல் பரிசென்று சொல்லி ஒரு பெரிய பாத்திரத்தைக் கொடுத்தார்கள். பிறகு என்னை அழைத்து இரண்டாம் பரிசென்று சொல்லி, முன்னதை விட சற்றே சிறிதான பாத்திரத்தை கொடுத்தார்கள். மூன்றாவதாக அந்த பெண்ணிற்கு இன்னும் சிறிய அளவிலான பாத்திரத்தை கொடுத்தார்கள்.

பாத்திரம் வாங்கும் போது ஒவ்வொரு பரிசுக்கும் ஒவ்வொரு புகைப்படம்வேறு எடுத்துக்கொண்டார்கள்.

அதன்பிறகு எந்த பேச்சுப்போட்டியிலும் நான் பங்கேற்கவில்லை. எனக்கு அரசியல் வெறுப்பு உண்டானதும் இந்த காலகட்டங்களிலிருந்துதான்.

1. அன்றிலிருந்து இன்றுவரை என்னுடன் ஒட்டிக்கொண்டுள்ள ஆதங்கம் என்னவென்றால் நான் பேசியிருந்தால் ஒருவேளை மூன்றாவது பரிசு வாங்கியிருந்திருக்கலாம். அதேப்போல அந்தப்பெண் பேசியிருந்தால் இரண்டாம் பரிசோ அல்லது முதல் பரிசோ வாங்கியிருந்திருக்கலாம். அந்த நேரத்தில் அவள் ஒரு பெண்ணாக பிறந்ததினால் மட்டுமே மூன்றாம் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டாள் என்றே நினைக்கிறேன். இது அவர்களுக்கே வெளிச்சம்.

2. ஒரு மாணவனுடைய அல்லது மாணவியினுடைய பேச்சுத்திறமையோ அல்லது இன்னபிற திறமைகளோ இவ்வாறான அரசியல் நிகழ்ச்சிகளுக்கு செலவிடப்படுவதில் எவ்வித உபயோகமும் இல்லை, இருக்கப்போவதுமில்லை. அதை ரசிக்கும் நிலைமையிலோ, அல்லது நாம் சொல்லும் கருத்தினை ஏற்றுக்கொள்ளும் பக்குவமோ அவர்களிடம் எப்போதும் இருக்கப்போவதுமில்லை. பிறகு ஏன் இவ்வாறான அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பள்ளி பயிலும், மாணவ சமூதாயத்தை அழைக்கவேண்டும். சாக்கடையில் ஊறும் தவளைகளுக்கு பன்னீர் எதற்கு? பிச்சைக்காரன் பிரியாணிக்கு ஆசைப்படுவதுபோல, தெருபொறுக்கி நாய்களின் ஓட்டாசைக்கு பள்ளி மாணவ மாணவிகள்தான் பிச்சைப்பாத்திரமா?

3. இதைப்போன்ற அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தமது பள்ளியில் பயிலும், மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் எதன்பொருட்டு அனுப்புகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. கட்சி ஊர்வலம்,போராட்டம்,தலைவர்கள் வரவேற்பு...அப்படி இப்படி என்று அரசியல் அரக்கன்களின் பாசாங்கு வேலைகளுக்கு பள்ளிமாணவமாணவிகள் தான் பணமுடிப்பா?. எனது ஊரின் தலைமை ஆசிரியர் ஒருவர் இதைப்போன்ற அரசியல்வாதிகளின் அடிபொடியாகவே இன்றும் இருக்கிறார். அவர் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை மாணவ சமுதாயமும் பின்பற்றவேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கமுடியும். இன்றும் சில இடங்களில், ஒரு அரசியல் தலைவரின் வருகைக்காக சுட்டு பொசுக்கும் வெயிலில் கால்கடுக்க காத்திருக்கும் மாணவமாணவிகளை பார்க்க நேரிடுகிறது. கொழுப்பெடுத்த அரசியல்வாதியின் கூட்டுப்புழுவா என்ன.. பள்ளிபயிலும் செல்வங்கள்....

ஆசிரியர்கள் இவ்வாறு செய்வதற்கு காரணங்கள் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதில் பொதுநலன் இருக்க வாய்ப்பில்லை என்பதே என் எண்ணம்...

சக்கரவர்த்தி திருமகன் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது....

சீர்காழி கோ.: பரதேசியாய் திரிவது எதனாலே....

என்.எஸ்.கே. : அவன்..... பத்துவீட்டு சோறு ருசி கண்டதாலே.....

குறிப்பு: பத்து வீட்டிலும் பிச்சை போடுபவர்களை உதைத்தால் எல்லாம் சரியாகிவிடும். பூனைக்கு மணிகட்டப்போகும் புண்ணியவான் யார் என்றுதான் தெரியவில்லை.




*******

Monday, August 24, 2009

கீர்த்தனாவும் அவளது தங்கையும்.....


வேலையே செய்யாமல் பொழுதை போக்கும் ‘வெள்ளி’ முளைத்து
9 மணியாகியும் அலுவலகத்தை பூட்டாத, முதலாளித்துவம் எனும் ‘சனி’ தொலைந்தால்தான்
சரக்குடன் உறவாடும் ‘ஞாயிறு’ பிறக்கும் (அடடே ஆச்சர்ய குறி...)

- எனும் தொ.மு.க. (தொழிலாளர் முன்னேற்றக் கழகம்) தலைவரின் வாக்கிற்கிணங்க சனியன்று இரவு அடித்த சரக்கு மறுநாள் காலை 10 மணிவரை மயக்கத்தை தந்தது.

எழுந்தவுடன் லேசாக தலையை வலிக்க, வண்டியை எடுத்துக்கொண்டு MSM BAKKERY செனறேன். அங்கே எனக்கொரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால் என்காதலி அங்கே முன்னமே வந்து அமர்ந்திருந்தாள். இன்னொன்றை காண்கையில் பேரதிர்ச்சியாய் இருந்தது. ஏனென்றால் அவளின் தந்தையும் கூடவே இருந்தார். உள்ளே நுழைந்தவுடன் அவள் என்னை பார்த்துவிட்டாள். நானும் கண்களாலேயே அவளிடம் பேசிவிட்டு அவளின் பின்னாலிருந்த இருக்கையில் அமர்ந்தேன். முதல்நாள் அடித்த சரக்கின் வாடை கொஞ்சம் எனக்கே ‘இன்பமாய்’ இருக்க, அது அடுத்தவர்களையும் பாதித்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், ஒரு மிட்டாயை வாங்கி சுவைத்துக்கொண்டே, இன்றைக்கு இவள் இங்குவர காரணம் என்ன? ஏன் அவளது தந்தையும் கூட வந்துள்ளார்? என்பன போன்ற கேள்விகளுடன் ஸ்ட்ராங்கா ஒரு டீ சொன்னேன். அதற்குள் இருவரும் எழுந்து சென்றார்கள். அவளது தந்தை டீக்கான பணத்தை cash counter ல் கொடுக்க அவள் என்னை பார்த்தாள். நானும் முளைவிடாத தலைமுடியை தடவியபடியே கொஞ்சம் வழிந்தேன். பின்னர் இருவரும் பைக்கில் கிளம்பினர்.

சொன்ன டீ இன்னும் வரவில்லையே என்ன ஆதங்கத்தில் மறுபடியும் திரும்பி டீ போடுபவரைப்பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது அவளின் HANDBAG-யை அங்கேயே விட்டு சென்றுவிட்டாள் என்று...சரி இப்பதானே செல்கிறார்கள், நாம் டீயைக் குடித்துவிட்டு பிறகு செல்லலாம் என்றிருந்தேன். ஏனென்றால் அவளது தந்தைதையின் அதிகப்பட்ச வேகமே நாற்பது கிலோ மீட்டர்தான் என்று எனக்கு தெரியும். எத்தனை இளைஞர்கள் பின்தொடர்ந்தாலும் அவரின் வேகம் அதுதான், அப்படி ஒரு பொதுசேவைப் புரியும் புண்ணியவான்.

டீயை குடித்துவிட்டு எனது பைக்கை எடுக்க முற்பட்ட போது அந்த பகுதியில் காவல்துறையின் நடமாட்டம் சற்று அதிகமாய் இருந்தது. என்னவென்று தெரியவில்லை. என்னிடமோ ஓட்டுனர் உரிமம் இல்லை. இன்னும் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அவள் வீட்டினை அடைய முக்கிய சாலைகளின் வழியேதான் செல்ல வெண்டும் என்பது நிபந்தனைக்குட்பட்ட விதி. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடந்துதான் செல்லவேண்டும்.
அப்போதே எனக்குள் கொஞ்சம் ஐயம் உண்டானது. எங்காவது மாட்டி, வாயை ஊதச்சொன்னால்... அவ்வளவுதான்...மானம் என்பது மலையேறிவிடுமே என்ற பயம்வேறு.

வேறு வழியில்லாமல் பைக்கை எடுத்துகொண்டு புதிதாய் திருடும் திருடனைப்போல விழித்துக்கொண்டே சென்றேன். சரியாக G.H. SIGNAL வரை சென்றிருந்தேன். பின்னால் போக்குவரத்து காவல்துறையினர் இருவர் வேகமாக தங்களது பைக்கில் வந்துகொண்டிருந்தனர். எனக்கு இன்னும் வியர்க்க தொடங்கிவிட்டது. என்ன செய்வது என்றறியாமல் மிகவும் வேகமாய் ஆட்சியர் அலுவலகத்தை கடந்துவிட்டேன். இன்னும் சற்று தொலைவில்தான் அவளின் வீடு இருக்கும் பகுதி. பயம் சற்றே தொலைந்தது.
நான் சற்று வேகமாக வந்த நேரத்தில் என்காதலியும் அவளது தந்தையும் பின்தங்கிவிட்டனர். இடையிடையே சிக்னலில் வேறு மாட்டியிருக்க வேண்டும்.

அப்போதுதான் எனக்கு அந்த ஞானம் பிறந்தது. என்னவென்றால் அவளுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று அவள் முன்னமே கூறியிருக்கிறாள். இந்த முறையாவது அவளது தங்கையை பார்த்துவிடவேண்டும் என்று வேகமாக அவளது வீட்டினை அடைந்து, அழைப்பு மணியை அழுத்தினேன். கதவு திறந்தது, நான் நினைத்தபடியே அவளது தங்கைதான் கதவைத்திறந்தாள். நைட்டியில் இருந்தாலும், அவளை விட அழகு. ‘உங்க கீர்த்தனா அக்கா இந்த HANDBAG-யை டீக்கடையில் விட்டுட்டு வந்திட்டாங்க’ன்னு சொன்னேன். அதற்கு அவள் ‘போங்க தம்பி எனக்கு வெட்கமா இருக்கு, கீர்த்தனா என் பொண்ணு’ அப்படி என்றார்.


அடப்பாவி இந்த ஆன்டிய பார்த்தா இவ்வளவு வழிந்தோம் என்று கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, சரிங்க இந்தாங்க உங்க பொண்ணு BAG என்று நீட்ட, ‘இது என் பொண்ணொடது இல்லையெ’ என்றார்கள்.
ம்கூம்ம்... மொத்தமும் சொதப்பலா? என நினைத்துக்கொண்டே, அப்ப ‘இந்த BAG யாரோடது?’ என்று எண்ணத் தொடங்கினேன்.



அப்போதுதான் புரிந்தது, முதல் நாள் அடித்த மதுவின் போதை இன்னும் குறையவில்லை என்று....


*********
படித்துவிட்டீர்களா உங்களது வாக்கினை தமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் பதிவிடவும்.



***

Saturday, August 22, 2009

கதம்பம்....

ஒரு கவிதை....


ஆதரவாய் உன் தோள் சாய
ஆயிரம் தலைகள் இருந்தாலும்,
நான் விம்மிய பொழுதுகளில்...
ஓய்ந்துகொள்ள உன் மார்பினைத் தந்தாய்...
வீழ்ந்தே கிடந்தேன் உன் விழிதனில்...
தெள்ளிய நீரோடையில்
அடிபடிந்த கசடுகள் போல்....


********
ஒரு விளக்கம்....


இந்த இடுகையினூடே எனது முந்தைய இடுகையின் தலைப்புதனை சற்று விரிவுப்படுத்த விரும்புகிறேன்.

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்த நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா.... என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளிலிலிருந்து நான் உருவகப்படுத்துவது யாதெனில்....

அதுபோல அன்பே வடிவான பெண்களின்* (மாறுதலுக்குட்பட்டது) வாழ்வினில் வரதட்சனை எனும் அகந்தை கொண்ட குரங்கு தாவும், அதனால் பெண்ணின்* வாழ்வு குலைந்து போகி இறுதியில் அந்த குரங்கும் இறந்து போகும்.....இப்படியாக....உருவகப்படுத்தியே இந்த தலைப்பினை எடுத்தேன்...

இதை சொல்ல வேண்டிய தேவை இல்லையென்றாலும் கடமை உள்ளதென்பதால் சொல்கிறேன்.

*********

ஒரு சிந்தனை...

1. நல்ல செய்தி:

பெரியக்கடை வீதியில் ஒரு கிலோ அரிசி வாங்கினால் ஒரு NOKIA N2020 இலவசம்...

2. கெட்ட செய்தி:

அப்படி நீங்கள் வாங்கும் அரிசியின் விலை, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 39,990 மட்டுமே... (in future)

**********

ஒரு குறுநகை...

சர்தார்: 5 white paper கொடுங்க...

கடைக்காரர்: 1 paper தான் இருக்கு சார்...

சர்தார்: பரவாயில்ல குடுங்க, நான் XEROX எடுத்துக்கிறேன்.


********

இந்த இடுகை பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிலிஸ்லும் தங்களது வாக்குகளை செலுத்தவும்.



********

Thursday, August 20, 2009

அன்பு படர்ந்த கொம்பினிலே....


சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்த போது மூன்று பால்ய நண்பர்களை சந்தித்தேன்.

1. முதல் நண்பனுக்கு கல்யாணம் பண்றதுக்கு பொண்ணு அமையலையேன்னு வருத்தம்.
2. இரண்ணடாமவனுக்கு தன்னோட அக்காவுக்கு சரியான மாப்ள அமையிலையேன்னு வருத்தம்.

3. மூன்றாமவனுக்கு காதலிக்கற பொண்ண கட்டிக்க, பொண்ணோட அப்பன் ஒத்துக்கமாட்டுங்கிறானேன்னு வருத்தம்.


1. முதல் நண்பன்ட பேசுறப்ப ‘சரிடா மாப்ல நீங்க என்ன எதிர்பாக்குறீங்க’ அப்டின்னு கேட்டேன். அவன் சொன்னான், முப்பது பவுனும், ஒரு டூ வீலரும்’னான். நான் கேட்டேன் நக்கலா ஏன்டா முப்பது பவுனு கூட ஓ.கே. டூ வீலர் எதுக்குடா, டூவீலர்லேயே வெளிநாட்டுக்கு போவப்போரியா, அதுக்கு பதிலா ஒரு ஏரோப்ளேன் கேக்க வேண்டியதுதானே. அதுவாவது போயிட்டு வரதுக்கு யூஸாவுமேன்னு. வெறித்தனமா ஒரு பார்வ பாத்துட்டு ‘புத்தி சொல்றாராமா’ அப்டின்னு சொல்லிட்டு போயிட்டான். இவனுங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆவ கூடாதுப்பா அப்டின்னு வேண்டிகிட்டு நானும் கௌம்பிட்டேன்.

2. இரண்டாது நண்பன்ட, ‘ஏன்டா, இன்னுமா உங்க அக்காவுக்கு மாப்ள அமையல அப்டி’ன்னு கேட்டேன். அவன் சொன்னான் ‘எங்கடா, வரவனுவோல்லாம் 30, 40 பவுனு கேட்குரானுவோ, நீங்க டூவீலர் வாங்கி குடுத்தாதான் எங்களால பத்திரிக்கையே வைக்க முடியும்ங்கரானுக. எங்கடா போயி அழுவறது. எங்கப்பா இத கல்யாணம் பண்ணி கொடுக்கறதுக்காகவே இருந்த கெவர்ன்மேன்ட் வேலையை விட்டு, வீ.ஆர்.எஸ் வாங்கி, அதுல வந்த கொஞ்சம் பணத்துல எதோ முடிஞ்சளவு நகையை வாங்கி வச்சிருக்காரு. ஆனா வரவனுக இப்டில்லாம் ஆசப்படுரானுவோ. ஏன்டா பொட்ட புள்ளைகள படிக்க வச்சோம்னு ஆவுது’ அப்டின்னான். மனசுல ஒருவித பாரத்தோட வந்துட்டேன்.

3. மூனாவது நண்பன்ட என்னடா பிரச்சனைன்னு கேட்டா, அவன் சொன்னான் ‘அவ அப்பன் சாதிய பாக்குறான்டா. யாரோ அவளோட மாமங்காரன் ஒருத்தன் துபாய்ல இருக்கானாம், அவனுக்குதான் இவள கட்டிக்குடுக்க போறானாம்’னான். சரிடா பொண்ணு என்னடா சொல்லுதுன்னு கேட்டேன் அவள இப்ப கூப்டா கூட என்னோட வந்திடுவா. ஆனா அவ அப்பன்தான் அப்படி எதாவது நடந்தா தற்கொல பண்ணிப்பன்னு சொல்லி மெரட்டுரானாம். ஒரு பிச்சக்காரனுக்கு வேணும்னாலும் கட்டிக்கொடுப்பானாம், எனக்கு மட்டும் கட்டிக்கொடுக்க மாட்டானாம்’னான். சரி பிச்சக்காரனுக்கு கட்டிகொடுக்கனும்னா கூட 30 பவுனும், டூ வீலரும் கேட்பானேடா’ன்னேன். டூவீலர் எதுக்குடா’ன்னான். ‘வேறெதுக்கு பிச்ச எடுக்கதான்’னேன். கொஞ்சம் சிரிப்புடன் கலைந்து சென்றோம்.

இப்போ நண்பர்களை பற்றின கவலையில்லை எனக்கு, ஏனென்றால் முதல் நண்பனுக்கு எப்படியாவது ஒரு ‘இ’னா. ‘வா’னா மாட்டிடுவாங்க. முப்பது இல்லன்னாலும் ஒரு 20,25 இப்படி கிடைத்துவிடும். இரண்டாவது நண்பனோட அக்காவுக்கு அவங்க அப்பா எப்பாடுபட்டாவது ஒரு வாத்தியார் மாப்பிள்ளையை பாத்து கட்டிவச்சிடுவாரு. மூன்றாவது நண்பன் கொஞ்சம் முயற்சி பண்ணி பார்ப்பான், முடியலைன்னா ‘போடா நீயும் உன் பொண்ணும்’னுட்டு போயிடுவான்.

ஆனால்
இந்த மூன்று நிலைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களை நினைத்து பார்த்தேன், எவ்வளவோ கனவுகளோடும் ஆசைகளோடும் வாழ்கிற இந்த வயதினையொத்த பெண்களின் வாழ்க்கை திருமண வயதையடைந்த ஆண்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறதே என்று. என்ன செய்வது என்ற ஆதங்கத்துடன் உறங்கிப்போனேன். இடையிடையே பட்டுக்கோட்டையின் இந்த பாடல் தான் ஞாபகம் வந்தது.

செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னேஅத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு? நீ
துணிவிருந்தா கூறு!
ரொம்ப -
எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு!

பொம்பள எத்தன?, ஆம்பள எத்தன?
பொறந்த தெத்தன?, எறந்த தெத்தன?,
வம்பில மாட்டி போன தெத்தன?,
மானக்கேடாய் ஆன தெத்தன?

மூச்சு நின்னா....மூச்சு நின்னா முடிஞ்சுதடி
சொந்தம்...
அடியே முத்துக்கனி இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்!

காலையில் எழுந்து பார்க்கையில் நாள்காட்டியில் ஆகஸ்ட்15 ‘சுதந்திர தினம்’ என்றிருந்தது, யாருக்கு என்றுதான் புரியவில்லை.


**********

Monday, August 17, 2009

என்னவள் கொண்ட என் சிந்தைதனில்...



மைகொண்டு அவள் பெயரெழுத...

நான் முயற்சிக்கும் நேரங்களில்...
நாணம் கொண்ட என் எழுதுகோல் சொல்கிறது...

உன்னவளை ‘வரைய’ என்னால் இயலாதென்று...

சரிதான் என்றெண்ணி கவிதை எழுத...
முட்டிக்கொண்ட வார்த்தைகள்...
ஒன்றன் பின் ஒன்றாக நெருக்க அணிவகுக்கின்றன...

தேனிக்களுக்கு இடம்கொடாமல்...

அகமும், புறமும் கொண்ட என் வார்த்தைதனில்...
சொக்கிய, சுய நலம் கொண்ட காகிதம்...
தானே அவளை அடைய எத்தனித்து ஏமாந்துபோகிறது...

இல்லாத அவள் இருக்கிறாள் என்றெண்ணி...


***********


புகைவண்டி பயணங்களில்...
அரிதாய் கிடைக்கும் சன்னலோரம்...
எதிரில் எப்போதாவது வந்தமரும் இளம் பெண்...
இடம் கொடாத ஆண்களை வெறித்து பார்க்கும் நடுவயது பெண்கள்...
கிடைத்த இடத்தில் ஒட்டிகொண்டமரும் முதியவர்...
படிகளில் காலமர்த்தி பயணம் கொள்ளும் நண்பர்கள்...
மடியே போதுமென சுகமாய் சுவாசிக்கும் குழந்தை...

இப்படி எதைப்பற்றியும் கவலையில்லை,
என்னவள் கொண்ட என் சிந்தைதனில்...

என்ன கொடுமையிதென்றெண்ணி கண்மூடும் வேலைதனில்...
மெல்ல நனையும் என் தோள்...

எட்டிப்பார்க்கையில் எழிலாய் தூவும் மழை,
கசிந்தது என் காதில் ‘வழிந்தவாறே’...

‘உன்னவள் வந்துவிட்டாளென்று’...

துடைத்துக்கொள் ‘உன் வழியலை’ என்று,
கைகுட்டை கொடுத்தேன்...துவட்டிக்கொண்டது...

திரைவிலகி தெரிந்தது நிலவு.



*********

Wednesday, August 12, 2009

சீக்கிரமா ஒரு பொண்டாட்டி வேணும்...


இயல்பாக நான் ஊருக்கு செல்லும் போதெல்லாம், அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் அடிமனதில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும். அப்படித்தான் சென்ற முறை சென்ற போதும் இருந்தது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக எப்படியாவது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிடவேண்டும் என்றிருந்தேன். சாதாரணமாக ஒரு காதலன், காதலியிடம் கொடுக்க நினைக்கும் கடன் போல பெருகி கிடந்தன என் ஆசைப் பணங்கள்.

பேருந்தில் பயணிக்கும் போதே இதற்கான சில கற்பனைகளுடன் அளவலாவி, வாயில் வழியும் எச்சிலை அவ்வப்போது துடைத்துக்கொண்டே சென்றேன். எனது ஊரினை நெருங்க நெருங்க இன்னும் கொஞ்சம் நெஞ்சில் படபடப்பு துரத்திக்கொண்டே வந்தது. ஒருவழியாக மயிலாடுதுறையில் இறங்கி எனது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

சரியாக இருபது நிமிட அளவில் பேருந்து எனது கிராமத்தினை எட்டியது. மண்ணில் கால் பதிக்கும் ‘மண்ணின் மைந்தன்’ என்ற எண்ணங்கள் எல்லாம் சற்றே ஒதுங்கி என்னை வரவேற்றது. பேருந்திற்கு நிற்கும் சில பள்ளிக்கூட பெண்கள் எல்லாம் என் வரவினை ஆவலுடன் பார்ப்பது போல் தெரிந்தது. இறங்கிய உடன் எல்லோரின் பார்வையும் என்னை மேய்ந்து போக, சற்று நிலைகுலைந்த நான், இன்றும் நாம் அழகோடுதான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ஒரு வழியாக எல்லோரது கண்களிலும் ஒரு கையொப்பமிட்டு வீட்டிற்கு நடைகட்டினேன்.

பெற்றவர்களின் வழக்கமான உபசரிப்புகளுடன், கொஞ்சம் தூக்கம், கனவு இப்படியே பனிரெண்டு மணியை தாண்டியது. மீண்டும் அவளின் சுவாசம் என்னை எழுப்ப திடுக்கிட்ட நான் திக்கு தெரியாமல் வெளியில் வந்து பார்த்தேன். யாருமில்லை. எல்லாம் கனவென்று உரை(த)பட்டவனாய், முகம் கழுவி, அம்மா தயார் செய்த உணவினை அருந்தினேன்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு வெளியில் வந்து அவளின் வீட்டினை பார்த்தேன். அவளின் வீடு என் வீடு இருக்கும் எதிர்சாரியில் பத்து வீடுகள் தள்ளியிருந்ததினால் என் வீட்டின் வெளியே வந்தாலே அவள் வீடு தெரியும். இன்று காணும் போதும் அதே வெறுமை அந்த வீட்டின் வாசற்படியில். எப்போதும் என்னைக்கான அவள் அமரும் இடம் அந்த படிகள்தான். சரியென்று மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அவள் வீட்டருகே இரண்டு, மூன்று தடவைகள் சுத்தினேன். அப்படியும் அவளை காணவில்லை. அவள் வீட்டிற்கு போன் செய்யவும் தைரியம் இல்லை. ஏனென்றால் அவளின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி. அண்ணன் ஒரு உதவாக்கறை, தம்பி ஒரு தண்டச்சோறு... இப்படியே பல பட்டங்களை பெற்றவர்கள் அவள் வீட்டில்.

அப்படி அவள் வீட்டருகே செல்லும்போதெல்லாம், இரண்டு வருடங்களுக்கு முன்னால்....எங்களுடைய விஷயம் அவங்க வீட்டுக்கு தெரிந்து, எங்க வீட்டுக்கும் தெரிந்துபோய், கலகமானதை சற்றே நினைத்துப்பார்த்தேன். அதனால் மூன்றாம் முறையோடு நிறுத்திக்கொண்டு அவள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அவளின் தோழியை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போதுதான் அந்த தோழி சொன்னாள்... துபாயிலிருந்து அவள் கணவன் வந்துவிட்டான் என்று....

இப்ப சொல்லுங்க எனக்கு சீக்கிரமா ஒரு பொண்டாட்டி வேணுமா, வேணாமா...?


குறிப்பு: இவ்வளவு தூரம் மெனக்கட்டு டைப் பண்ணி..., தமிழ்மணத்துல இணைக்கலாம்னு ‘அனுப்பு’ ங்ற பட்டன அழுத்துனா ரெண்டு லைனுக்கு கீழ ‘சன்னலை மூடு’ன்னு சொல்லுது. அதப்பாத்தவுடனே எனக்கு ‘மூடிகிட்டு போடா’ங்ற மாதிரி இருக்கு.. இந்த கொடுமைய எங்க சொல்றது. நீங்க வேணும்னா மேல உள்ள தலைப்ப கிளிக் பண்ணி ஓட்டு போட்டு பாருங்க உங்களுக்கே தெரியும்.


••••••••••

Tuesday, August 11, 2009

குறுநகை...

மகன்:
அப்பா, எங்க ஸ்கூலுக்கு புதுசா வந்திருக்கிற டீச்சர் செம பிகருப்பா.

அப்பா:
டேய், டீச்சரயெல்லாம் உன் அம்மா மாதிரி நினைக்கனும்டா.

மகன்:
சைக்கிள் கேப்ல நீ பிட் போடாத நைனா...

அப்பா: ??

*********

நான் அகல் விளக்காக இருந்தாலும்
நீ இல்லாமல் என்னால் பிரகாசிக்க முடியாது.

ஆக, உன்னைபோல் ஒரு விளக்கெண்ணை
கிடைத்தது என் பாக்யம்.

*********

கணித ஆசிரியை:
நான் இவ்வளவு நேரம் கிளாஸ் எடுத்ததுல இருந்து என்ன தெரியுது?

மாணவன்:
சாயந்திரம் டியூசன் போறது நல்லதுன்னு தெரியுது.

*********

அவன் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த எனக்கு
அவன் பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை, காரணம்

அவன் பேசியது ஆங்கிலம்.

**********

மனைவி:
இனிமே குடிச்சிட்டு வீட்டுக்கு வராத, உன்ன பாக்க சகிக்கல.

கணவன்:
என்னடி பண்றது, குடிக்காம வந்தா உன்ன பாக்க சகிக்கலயே.

மனைவி: ???

********

பிரிந்த காதல் சேரும் போது
கண்ணீர் மட்டும் பேசும்,

ஆனால் பிரிந்த நட்பு சேரும் போது
க்வாட்டர், கோழிப்பிரியாணி, கோல்டு பில்டர் எல்லாம் பேசும்.

*********

L.K.G. BOY1:
டேய் மச்சான், எங்க அப்பா ரொம்ப பயந்தாகொலியா இருக்காருடா.

L.K.G. BOY2:
எப்டிடா சொல்ற?

L.K.G. BOY1:
எப்ப ரோட கிராஸ் பண்னாலும், என் கைய இருக்கமா புடிச்சிகிறார்டா.


என் செல்லிடப்பேசியில் வந்த சில நகைச்சுவை துணுக்குகளை மட்டுமே இங்கே பகிர்ந்துள்ளேன். சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.


••••••••

Saturday, August 8, 2009

வளர்ந்த கலை.....

தமிழ்மணத்தில் தங்களின் வாக்கினை செலுத்த மேலுள்ள தலைப்பினை அழுத்தவும்.

வளர்ந்த கலை மறந்துவிட்டாள் ஏனடா கண்ணா,
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.
குடும்ப கலை போதும் என்று கூறடா கண்ணா-அதில்
கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா?


இப்படி சொன்னா எப்புடி. வாங்க தெரிஞ்சிக்கலாம்.

1682 ல் ஜெர்மனி நாட்ல பொறந்து 1706 ல் கடல்வழி மார்க்கமா தரங்கம்பாடி மண்ணில் கால வச்ச பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு-ன்ற புண்ணியவான் பின்னாடி 1710 ல் ஜெர்மனிலேர்ந்து அச்சு எந்திரத்தை கொண்டுவர ஏற்பாடு செஞ்சு, கொண்டுவரப்பட்ட அச்சு எந்திரம் தான் மேலே உள்ள படம். அவரோட படம் தான் கீழ இருக்கு.

என்னோட கண்ணுக்கு என்னமோ, ஜாலியன் வாலாபாக்ல நடந்த படுகொலைக்கு காரணமான ஜென்ரல் டயர் மாதிரி தெரியுராரு. ஆனா ரொம்ப நல்ல மனுஷனுங்க. இவரு வந்த புதுசுல தரங்கம்பாடிய (ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்) ஆன்டுகிட்டு இருந்த மன்னனால கொஞ்சம் துன்புருத்தப்பட்டிருக்கார். அப்பறம் எல்லாம் சரியாகி அந்த பகுதியில இருந்த நம்ம மக்களின் அறியாமையை போக்கி கிருத்தவ இயக்கத்தை வளர்த்திருக்கார். (இவர் அடிப்படையில ஒரு மத போதகர்). இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம் வந்த 11ம் வது நாள்லேர்ந்து இவர் தமிழ் கத்துக்க ஆரம்பிச்சாராம். எத்தனை நாள்ல கத்துகிட்டார்னு தெரியல.

அச்சு எந்திரம் கொண்டாந்தது மட்டுமில்லாம, பொறையாரு (நான் கல்லூரி பயின்ற இடம் ,தரங்கம்பாடிக்கு ஒரு கிலோமீட்டர் முன்னதாக உள்ள ஊர்) பேப்பர் பேக்டரிய (காகித பட்டறை) உண்டாக்கி, மரக்கூழ் மூலமா காகிதம் தயாரிக்க வழிசெஞ்சிருக்கார். இதுவும் அதே காலகட்டத்துல நடந்ததுதான். அந்த எடத்துக்கு இன்னமும் கடுதாசிப்பட்டறைங்கற பேர்தான் இருக்கு. அப்பறம் 1715 ல் தமிழ்மொழியில புதிய ஏற்பாட்டை (பைபிள்) வெளியிட்டிருக்கிறார். இவரோட முயற்சியால தான் இந்தியாவிலேயே முதல் முறையா தமிழ் அச்சுக்கள் உருவாயிருக்கு. ஆனா நம்மல்ல பலபேருக்கு தெரியல. இன்னைக்கு பிரிண்டிங்றது எவ்வளவோ வளர்ச்சியடைஞ்சிடுச்சு. எத்தனயோ விதமான பிரிண்டிங் முறைகள் இருக்கு. ஆனா இதுக்கெல்லாம் ஆணிவேரு இந்த தரங்கம்பாடியில தான் உருவாயிருக்கு. ஒருவேல அவரு கொண்டு வரலேன்னா, வேற யாராவது கொண்டாந்திருப்பாங்க. ஆனா முதல்ல (இந்தியாவுல) அச்சில் ஏறுன பெருமை தமிழுக்கு கெடைச்சுருக்காது.

இவரு அதேநேரத்துல தரங்கம்பாடியில ஒரு தேவாலயத்த 1718 ம் வருஷம் கட்டிவச்சிருக்காரு. அடுத்த வருஷமே செத்து போயிட்டார். இவருடைய ஆயுளை கடவுள் 37 ஓட நிறுத்திட்டார். அவரோட சேவை அவங்களுக்கும் தேவையா இருந்திருக்கும் போலருக்கு. ஆனா 80, 90 வயசுலையும் அரசியல் பண்ற ஆளுகள மட்டும் விட்டுவச்சிடுறார். ஏன்னுதான் தெரியல.

நான் காலேஜ் படிக்கறச்சே கட் அடிச்சிட்டு இந்த கடற்கரையில தான் காத்து வாங்குவேன். அப்போதைக்கு இந்த தேவாலயத்தப் பாத்து பிரமிச்சிருக்கேன். கிட்டத்தட்ட 291 வருஷம் ஆகுது அந்த சர்ச்சை கட்டி. எவ்வளவு மலைப்பான விஷயம். இன்னமும் அதே பொலிவோட இந்த சர்ச் இருக்கறதா சொல்றாங்க. எனக்கு தெரியல. நான் பாத்தது 2000-2003 கால இடைவெளியில.(அதுக்கப்பறம் இந்த இடத்த விட்டு பிரிய மனமில்லாம இன்னும் ரெண்டு வருஷம் படிசேன்ங்கறு வேற விஷயம்)

(வேற நல்ல படம் வலையில மாட்டல)

சரி நான் சொல்ல வந்தத மறந்துட்டேனே. இப்படி உருவான அச்சு கலை வரலாறு, பிரஸ் வச்சிருக்குற, பிளக்ஸ் பிரிண்ட் போடுற, பிளக்ஸ் பிரிண்டுல கைய ஆட்டிகிட்டே நடந்து வர்ர.... நம்மாளுக எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல. ஆனா குறைந்தபட்சம் தெரிஞ்சி வச்சிருக்கனும்ங்கறத்துகாக இந்த பதிவு.

வரலாறுகளைப் படிக்கும் போதும், அதை தெரிந்து கொள்ளும் போதும் எனக்கு ஒரு விதமான பிரமிப்பு ஏற்படும். அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இங்கே குறிப்பிட்டுள்ள தரங்கம்பாடி எனும் ஊர் நாகை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை ஓரம் அமைந்துள்ளது, மற்றும் எனது சொந்த ஊரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. சிலப்பதிகாரம் கண்ட பூம்புகாரின் சிறப்பு இன்னும் இந்த ஊருக்கு கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. பார்க்கப்போனால் பூம்புகாரும், தரங்கம்பாடியும் சுமார் 15 கி.மீ. (கடல் வழி மார்க்கமாக) தொலைவில் அருகருகே அமைந்துள்ள ஊர்கள், இரண்டுமே பூம்புகார் சட்ட மன்ற தொகுதியில் அமைந்த ஊர்கள். இரண்டுமே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள். பூம்புகாருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இன்னும் தரங்கம்பாடிக்கு கிடைக்கவில்லை, ஏனென்றுதான் தெரியவில்லை.

இங்கே இன்னொரு சிறப்பும் உள்ளது. அது டேனிஷ் கோட்டை. அதைப்பற்றி வரும் பதிவில் முடிந்தவரை சொல்கிறேன்.


•••••••••

Wednesday, August 5, 2009

திருப்பதி - விமர்சனம்

திருப்பதி விமர்சனம்னு மேல போட்டுட்டு கீழ லட்டு படம் போட்டா எப்படின்னு கேட்குறவங்களுக்கு, என்னோட பதில் இது அந்த திருப்பதி இல்ல, இந்த திருப்பதி.

புது பொண்டாட்டி வந்தா இப்படில்லாம் வாழனும், அப்படில்லாம் வாழனும்னு பேராசைப்பட்டு, கடைசியா.. ச்ச..ச்ச.. முதல்லையே ஏமாந்து போகும் கணவான்கள் போல... திருப்பதி போகப்போற பஸ் சும்மா ஜம்முன்னு புஸ்பேக் சீட்டு, இல்லன்னா செமி சிலிப்பர், சைடுல பேன் இந்த மாதிரில்லாம் இருக்கும்னு ஈரோடு பஸ் ஸ்டான்டுல சாயங்காலம் 6.3௦ மணியிலெர்ந்து காத்திருந்து 7.3௦க்கு வந்த பஸ்ஸ பாத்தவுடனே எல்லாக்கனவும் கலைஞ்சிடுச்சு.


பின்ன மேல உள்ள பஸ் கணக்கா ஒன்னு வந்தா எப்படி இருக்கும். அப்பதான் தெரிஞ்சது உரலுக்கு ஏத்த உலக்கதான்னு. ஏன்னா குடுத்த காசு 173 . இதுக்கு என்ன பிளைட்டா வரும்.

சரி எல்லாம் போகட்டும்னு ஏறி பஸ்ல உட்காந்தா நமக்கு குடுத்த சீட்டு பின்னாடி டயருக்கு மேல. என்ன கொடும சார் இது. ஏழே முக்காலுக்கு எடுத்த பஸ்சு காலைல ஆறு மணிக்கு போய் சேந்துடுச்சி. ஒரே ஆச்சரியம் எனக்கு. பாக்க பழசா இருந்தாலும் பில்டிங்தான் கொஞ்சம் வீக். ஆனா பேஸ் மட்டம் ஸ்ட்ராங்கு. நாம குடுத்த காசுக்கு இவ்வளவு தூரம் கொண்டாந்து விட்டாங்களேன்னு, திருப்பதி அழகை ரசிக்கலாம்னு பஸ்ஸ விட்டு இறங்குன இடமே சேறுசகதியுமா இருந்துச்சு. அடப்பாவிகளா இங்கயும் நம்ம அரசியல்வாதிகள் மாதிரிதானோன்னு நினைச்சுக்கிட்டே ஆட்டோ பிடிச்சு மலைஅடிவாரத்துக்கு போயி பல்லு வௌக்க எங்கடா இடம்னு பாத்தா, அங்க உள்ள நுழைவாயில்ட பைப்பு, லெட்டின் பாத்ரூம்லாம் கட்டி நீட்டா வைச்சிருந்தாங்க. இந்த இடம்லாம் மட்டும் இவ்வளவு நீட்டா இருக்கே எப்படின்னு விசாரிச்சா பக்கத்துல ஒரு போர்டு. அதுல திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்களை வரவேற்கிறது என்று. ஒருவேள அவங்களோட பராமரிப்பால நல்லா இருக்குதுன்னு நினைக்கிறேன். நல்லவேல திருப்பதி நம்ம ஆளுக கையில கிடைக்காம போனது. ஏன்னா கூறுபோட்டு வித்துருப்பாய்ங்க. ஏழு மலையையும் ஆளுக்கு ஒன்னுன்னு ஒவ்வொரு பொண்டாட்டி புள்ளைகளுக்கும் பிரிச்சி குடுத்துருப்பாய்க. எம கிராதகனுங்க.

பதினஞ்சு பேருல யூத்துங்க எல்லாரும் பல்லு வௌக்க பிரஸ் எடுத்துகிட்டு போனோமே ஒழிய யாரும் பேஸ்ட் எடுத்துகிட்டு போகல. அப்பறம் என்ன இருக்கவே இருக்காங்க நம்ம ஆபிஸ் பெருசுங்க. அவங்க எல்லாரும் பெர்பெக்ட்டா வந்திருந்தாங்க. நமக்கு என்ன ஓசியில பிளிச்சிங் பவுடர் கெடைச்சா கூட பிரஸ்ல வைச்சு பீலா வுட்டுகிட்டே தேய்ப்போம்ல.

அதுக்கப்பறம் ஏற்கனவே பண்ன பிளான் படி கீழ்திருப்பதிலேர்து படியேறி மேல் திருப்பதிக்கு போக புறப்பட்டோம். மொத்த படிகளோட எண்ணிக்கை என்னவோ முவாயிரத்து ஐநூறு. மொவனே ஏறிப்பாத்தா தான தெரியும்.

முதல் படிய தொட்டு கும்பிட்டு ஏற ஆரம்பிச்சோம். கொஞ்ச தூரம் நல்லாதான் போனுது. அப்பறம் என்னமோ கொஞ்சம் கால்ல லேசா வலி. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு வேகமா நடந்து வந்ததுனால வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஏதோ இடையில சில பச்சை, மஞ்ச, நீலம்னு பாத்துகிட்டே போனதால கொஞ்சம்.. கொஞ்சம் கால்வலி தெரியல. ஆத்தாடி எத்தன கூட்டம் நடந்தே போவுது. எத்தனையோ மனுஷனுங்க, வயசானவங்க, வயசுக்கு வந்தவங்க, இளம் ஜோடிக இப்படி சொல்லிகிட்டே போவலாம். எல்லோருக்கும் ஏழுமலையான் மேல உள்ள பக்தியா, இல்ல வேறவொன்னான்னு தெரியல. ஆனா நடந்து போவனும்ங்கற ஆர்வம் மட்டூம் தெரிஞ்சுது. பரவால்ல பல பேர் கோவிந்தா, கோவிந்தான்னு கோஷம் போட்டுகிட்டே நடந்து போனாங்க. நானும் அப்பப்ப அவங்கல்லாம் சொல்றப்ப சேந்து சொல்லிகிட்டே போனேன்.

கொஞ்ச தூரம் படிகள் செங்குத்தா இருக்கும், கொஞ்ச தூரம் சமதளமான படிகளா இருக்கும். சுமாரா பஸ்ல மேல போனா ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஆகும். ஆனா நடந்து போனா போரவங்களோட உடல் ஆரோக்கியம், வயசு, நடை வேகம் இதைப்பொறுத்து கொஞ்சம் மாறுபடும். குறைந்தது ஐந்து மணிநேரம் ஆகும். அதிகபட்சம் எட்டு மணிநேரம் எடுத்துக்கலாம். அதுக்கு மேல ஆகும்னு நெனைக்குறவங்க நடந்து போகக்கூடாது. இடையிடையே ஐந்நூறு படிகளுக்கு ஒரு இடத்துல, கடைகள் இருக்கும். நமக்கு தேவையான உணவுப்பண்டங்கள், நொறுக்குத் தீனி, டீ, காபி, சில இடங்கள்ல டிபன் கூட கிடைக்கும். இதெல்லாம் சாப்பிட்டு வயித்துல சில மாற்றங்கள் வந்துச்சுன்னா அதற்கான வசதியும் (கழிப்பிடம்) இருக்கு. நமக்கு கலைப்பு தெரியாம இருக்க இதுபோல இடங்கள்ல (அதாவது கடைகள்ல) உட்காந்து போகலாம்.


அப்படி நடந்து போகும்போது 2ஆயிரத்து100 படிகளைக் கடந்தவுடன் குருவமண்படத்தை அடுத்து "காலி கோபுரம்' உள்ளது. இந்த இடத்துல தான் பாதசாரிகளுக்கான டோக்கன் ஒன்னு கொடுக்குறாங்க. அந்த டோக்கன் வாங்க கொஞ்சம் க்யூல நிக்கனும் கூட்டம் அதிகமா இருந்தா. அப்படி வாங்குறப்ப அவங்க நம்மளோட ஆட்காட்டி விரல்ரேகையை கம்யூட்டர்ல பதிவு பண்ணிப்பாங்க. அந்த டோக்கன் இருந்தா நமக்கு சில சலுகை கிடைக்கும். என்னன்னா மொட்டை போட எல்லோரோட போய் நிக்கனும் அவசியம் இல்ல. இப்படி பாதசாரிகளா வரவங்க மொட்ட போட்டுக்க தனி இடம் இருக்கு. அவங்களுக்குன்னே தனி லாக்கர் வசதி, சாப்பாடு வசதி எல்லாம் செஞ்சு குடுத்திருக்காங்க.

அதுக்கப்புறம் சாமி தரிசனம் செய்ய பொது தரிசன வழியில நிக்கனும்னு அவசியம் இல்ல. ஏன்னா பாதசாரிகளுக்குன்னு தனியா ஒரு வழி. அந்த வழியில போகும் போது கூட்டம் அதிகமா இருந்தா கொஞ்சநேரம் ஒரு பெரிய கூண்டுல அடைச்சு போட்டுருவாங்க. அப்பறம் தெரந்து விட்டுடுவாங்க. அதுக்கப்புறம்தான் நமக்கு லட்டு டோக்கன் கொடுப்பாங்க. நடந்து போறவங்களுக்க ஒரு லட்டு டோக்கன் சேத்து கொடுப்பாங்க. அதாவது தானா கிடைக்கிறது ஒன்று. நடந்துபோனா ஒன்னு. மொத்தம் ரெண்டு.

குறிப்பா சாமி தரிசனம் செய்ய போற எல்லாரும் செல்போன் கொண்டுகிட்டு போகக்கூடாதுன்னு ரொம்ப கண்டிப்பா சொல்லிடுறாங்க. அப்படி கொண்டுபோறவங்க செல்போன இடையிலேயே வாங்கி வச்சிப்பாங்க. சாமி கும்பிட்டு திரும்பி வந்துதான் வாங்கிக்கனும். எனக்கு தெரிஞ்சு பத்து வருசத்துக்கு முன்னாடி இவ்வளவு கட்டுபாடுகள் இல்லன்னு நினைக்குறேன். ஏன்னா அப்ப செல்போனே நம்மகிட்ட இல்ல.

அதையும் வாங்கிகிட்டு க்யூல நிக்க ஆரம்பிச்சம்னா சரியா ஒருமணிநேரத்துல சாமி பாத்துடலாம். கோயில் உள்ளர போனதுக்கு அப்பறம் கூட்டம் இருந்தாலும் சரி, இல்லன்னாலும் சரி கொஞ்சம் நெரிசல் அதிகமா இருக்கும்.



ஆனா ஏழுமலையானை ஒரு ௨0 செகன்ட் நல்லா பாக்கலாம். நான் இன்னும் கொஞ்சம் கூடுதலாவே பாத்தேன். இவ்வளவு கஷ்டங்களையும் மீறி ஏழுமலையானை பாக்கும்போது நமக்கு கிடைக்கிற பரவசமே தனிதான். அந்த நேரத்துல நம்ம மனசுக்கு கிடைக்கிற ஆனந்தத்துக்கு அளவே இல்லன்னுதான் சொல்லனும். இன்னும் கொஞ்ச நேரம் பாக்க முடியாதான்னு மனசுல ஒரு ஏக்கம் உண்டாயிடும்.

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே



•••••••••••••

Saturday, August 1, 2009

சில முரண்கள்...ஒரு பார்வையில்...

.

பூரண மதுவிலக்கே

நமது லட்சியம்

அதற்காக எந்த போராட்டத்துக்கும்

நாம் தயாராக இருக்கவேண்டும்

உரையை முடித்தார் தலைவர்.

உறுதிமொழி ஏற்றான் தொண்டன், அரை போதையில்.


*****


மகனை தந்தையுடன்

தாயை மகனுடன்

தம்பியை அண்ணனுடன்

மனைவியை கணவனுடன்

இளைஞியை இளைஞனுடன்

உரசவிட்டு முகம் மலரும் வேகத்தடைகள்.

அதை கண்டவுடன் முகம் சுலிக்கும் வாகன ஓட்டிகள்.


*****


பெண்களின் சுதந்திரத்திற்காக

போராடும் கட்சியின்

தொண்டர் அவர்.

பெண்களின் இடவொதுக்கீடு

சம்பந்தமான போராட்டத்தில்

தீக்குளிக்கவும் தயங்காதவர்.

அவர் செல்லும் பேருந்தில்

ஜன்னலோரத்தில் மட்டுமே அமர்வார்.

அந்த இருக்கையின் மேலே

‘மகளிர் மட்டும் என்றிருக்கும்.


*****

அய்யா...

தருமம் பண்னுங்கைய்யா...என்று

தட்டை நீட்டும் முதியவரிடம்

இருந்து தப்பித்து

கோயிலுக்குள் செல்லும்

செல்வந்தர்,

தீபாராதணை முடிவில்

ஐயரின் தட்டில் 5 ருபாயை

கேட்காமலேயே போடுகிறார்.


****


முதல் தேதியிலேயே

ஊதியம் வழங்கும்

பெரிய நிறுவனம் அது.

அலுவலக வாசலில் மட்டும்

‘சம்பள ஆள் இல்லை

என்ற வாசகம் இருக்கும்.




*****

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO