க.பாலாசி: January 2011

Thursday, January 13, 2011

ஒரு விமர்சனம்



‘கள்ளிக்காட்டில் பெறந்த தாயே’ என்று தொடங்கும்போதே இந்த ஒத்தையடிப்பாதை எந்த மையத்தில் செல்லப்போகிறது என்று தெரிந்துவிடுகிறது. பெயர்கள் ஓடும்போது வருகிற செஃபியா டோன் புகைப்படங்கள் அத்தனை கிராமத்து முகங்களையும் ஒத்தியெடுத்திருக்கிறது. கூடவே எனக்கு அண்ணன் கருவாயனின் புகைப்படங்கள்தான் ஞாபகத்திற்கு வந்தது.  படம் தென்மேற்கு பருவக்காற்று, இயக்கம் சீனு ராமசாமி அவர்கள்.

நசநசத்த மண்ணும் தூரிக்கொண்டிருக்கும் மழையுமாக பட்டிகளுக்குள் அடைந்துகிடக்கும் செம்மறியாட்டு கூட்டங்களை காட்டும்போது கூடவே படத்துடன் அடைந்துபோவதைத்தவிற வேறுவழியில்லையெனக்கும். எல்லா நகர மனிதனுக்குள்ளும் பிதுங்கிவழியும் அந்த கிராமத்துமண் ஏக்கம் காரணமாக இருக்கலாம். வாயில்லாப்பூச்சிகளை வசைக்குள்ளாக்கும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் வீதிகளில் செல்லும் டயர்வண்டி மாடுகளை பார்க்கும்போது அதன் முதுகில் உள்ள தார்க்குச்சி புள்ளிகளில், மாட்டுக்குச் சொந்தக்காரனின் ‘வீரம்’ தான் முதலில் தெரிகிறது. இதில் பசுமாடுகளும், ஆடுகளும் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு, இறுதியில் பலியானாலும்கூட. ஆடுகளை கொஞ்சி வளர்ப்பதும், அவைகளுக்கு சீக்குவந்து கழிந்தால்கூட கண்ணீர் சிந்துமளவுக்கு பாசங்காட்டும் பொம்பளைகள் இன்னும் கிராமத்தில் இருக்கிறார்கள்.

போக... ஆடு மேய்க்கும் தொழிலு‘முடைய குடும்பத்திற்கும், அவைகளை களவாடி இறைச்சியாக்கி பிழைப்பு நடத்தும் ஒரு குடும்பத்திற்கும் கொஞ்சம் காதலுடன் கட்டப்பட்ட கதை. படத்தின் நாயகன் நாயகி என்று காட்டப்படும் இரண்டு முகங்களைத்தாண்டி ஓடியாடி உழைத்திருப்பது ‘நாயகனின்’ நாயகி  சரண்யாவும்,  ஒளிப்பதிவாளர் செழியனும், இயக்கிய சீனுராமசாமியுந்தான் என்பதே சரி. சிற்றுந்துகள் தூரத்திலிருந்து வரும்பொழுது பின்னாலொலிக்கும் இசையில்,  இளையராஜாவின் இசைச்சுவற்றில் கொஞ்சம் சுண்ணாம்பைச்சுரண்டி  எடுத்ததுபோல் தெரிகிறது. மேலும் ஆரம்ப இறுதி மற்றும் இடையில்வரும் ‘கள்ளி கள்ளிச்செடி’ பாடல்களைத்தவிர மற்றெதுவும் பெரிய தாக்கத்ததை தரவில்லை.

கதை, திரைக்கதை, செம்மண் வசனங்கள் இதர பாத்திரங்கள் மற்றும் மற்ற இத்யாதிகளை ஓரங்கட்டிவிட்டு இங்கே பார்க்கவேண்டியது பொன்வண்ணனின் பொண்டாட்டி முகத்தையும் நடிப்பையும். மேலுதட்டுக்கு மேலே ஓட்டைகள்தெரிய புடைத்த அந்த மூக்கே போதும். பார்ப்பவர்கள் ராட்சஸி பட்டம்தர ஏற்ற இந்த பொம்பளையை,  ‘ச்ச்சே என்ன பொம்பளடா’ என்று நவநாகரீகத்தார் நினைத்துக்கொள்ளலாம். ஆயினும் கிராமத்து புழுதியை எண்ணெய்த்தலையில் சுமந்தலைந்தவர்களுக்கு அவள் ஒரு பழக்கப்பட்ட முகமாகவே தெரிவாள். எனக்கு அப்படித்தான். இந்த ராங்கி ரப்பு இல்லாத பொம்பளைகளை எங்கள் தெருவில் பார்ப்பதரிது. மயிலாம்பாள், சரசு, முருகனோட அம்மா, வைத்தி பொண்டாட்டி, பக்கத்து தெரு ராசாவோட அக்கா என்று பட்டிவாய்ப் பொம்பளைகளுடன் புழங்கியப்பொழுதுகள் படம் முடிந்தபொழுதும், கனவிலும்கூட வந்து தொலைத்தது.

‘இந்த ரத்தம்லாம் அப்பனாத்தா இல்லாத புள்ளைங்களுக்கு குடுப்பாங்களா!!?’ என்று கேட்டுவிட்டு ரத்தம் கொடுக்க போகுமிடத்தே தொடங்குகிறது அவளின் அலப்பறை. ‘தோ பாரு, நா வாக்கு குடுத்திட்டேன், மீறி நடக்கணும்னு நெனச்ச சங்கருத்துடுவேன்’ என்று மகனை மிரட்டும் காட்சியாகட்டும், கடைசியில் தாலியை திருப்பிக்கொடுக்க வந்த நாயகியை மனம்மாறி ஏற்றுக்கொண்டபிறகு அவள் அண்ணனை எதிர்க்க ஊர் முனையில் தடியோடு நிற்பதாகட்டும், கத்தியால் குத்துப்பட்டபின்பு ‘களவாணிப் பய குத்திட்டான்னு தெரிஞ்சா மானம்போயிடும் யார்டையும் சொல்லாத’ என்று சொல்லிவிட்டு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வீராப்பாகட்டும், அதற்கு முன்பு ‘இந்தா வெத்தலப்பாக்கு வச்சிருக்காயாடா?’ என்று கேட்டுவாங்கி அப்பவே 101 யை வைத்து நிச்சயம் செய்யுமிடமும்...., ‘முண்டச்சி வீட்ல சம்பந்தம் பண்ணக்கூடாதுன்னு அப்பவே எல்லாம் சொன்னானுக.. நாங்கேட்டனா?... நீ நல்லாவே இருக்கமாட்ட...நல்லாவே இருக்கமாட்ட’ என்று அந்த தம்பிமுறையான் மண்ணை தூற்றிவிட்டு செல்லுமிடத்தில், அவமானத்திலும் ஆங்காரத்திலும் விழிபிதுங்கும் இடமும்............இந்த பொம்பளை வாழ்ந்திருக்கிறாள். எனக்கென்னமோ எல்லாரையும் தாண்டி அப்படியே என் சரசு அத்தையை ஞாபகப்படுத்தினா‘ள் அல்லது ‘ர்’.

இன்னொரு கருவாச்சி பெண்ணும் வருகிறாள். ‘நீங்க எனக்கு தூரத்து சொந்தந்தான்’ என்று தொங்கட்டான் குலுங்க தலையாட்டிப்பேசும் பேச்சே போதும்..செமத்தியான சிறுக்கி.

படத்தில் ஆங்காங்கே இழுத்து இழுத்து பேசும் நண்பனின் வசனமும், மூடியக்கையில் நொழுந்திய வெங்காயப்பக்கோடா போன்ற ஒரு கிளைமாக்ஸ் காட்சியும் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் இவையெல்லாம் அந்த தாயின் கலப்பையில் அரைந்துபோன மண்புழுப்போலதான்.

இப்படத்தின் நாயகியைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக என்று யாராவது கேட்கக்கூடும். 

ஒரு அலக்குக்குச்சிக்கு பாவாடைத்தாவணி போட்டதுபோல்தான் நாயகி. முனை அருவாளை கண்ணில் வைத்திருக்கிறாள். கள்ளிப்பழத்தை சாப்பிடும்போது மோவாயில் குத்துகிற பூமுற்களைப்போல நெஞ்சில் குத்துகிறாள். அந்த உதட்டெச்சிலைத் தொட்டு வெறுமனே கன்னத்தில் வைத்துக்கொள்ளலாம்போல. என் முகத்தில் பருக்கள் வந்து காலமாகிவிட்டது. மீண்டும் இக்காலத்தே வரலாம். (கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட?)  வேறொன்றுமில்லை. கண்களால் நடிக்கத்தெரிந்தவளுக்கு வளையவளைய வந்தாலும் பெரிதாய் சொல்’லமுடியாத ‘வாய்’ப்பூ.

ஒரு நல்ல படைப்பையும், சரண்யாவின் முழு நடிப்புத்திறனையும் திரையுலகிற்கொணர்ந்த இயக்குநர் சீனுராமசாமிக்கு எக்காலமும் நன்றி.


நல்லாயிரு தாயீ






.

Wednesday, January 12, 2011

வேறென்ன வேண்டும்

.

கல்யாணிக்கு
ஒருகால் இல்லை

அக்கம்பக்க பிள்ளைகளுக்கு
அவள் அத்தையாகியிருந்தாள்

சிலர் பெரியம்மா பெரியம்மா என்பார்கள்
நானும்தான்...

செல்லையன் மட்டும்
அம்மா என்றுதான் கூப்பிடுவான்

எனக்குத்தெரிந்து
கல்யாணிதான் பலருக்கு

நேற்றுப்பிறந்த பொண்டு பொடிசுகளால்
ஆத்தாவும் ஆகிவிட்டாள்

வேறென்ன வேண்டும்
கல்யாணிக்கு கல்யாணம்தான் ஆகவில்லை.


.

Friday, January 7, 2011

அசோகமித்திரனுக்கு சாரல் விருது



அன்பிற்குரிய நண்பருக்கு,
வணக்கம்.
நலம் தானே.
நானும், நண்பர் தேனுகாவும், திரு மா.அரங்கநாதன் அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும் சாரல் இலக்கிய விருதின் நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த ஆண்டின் சாரல் இலக்கிய விருது முதுபெரும் எழுத்தாளர் 
திரு அசோகமித்திரன்அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

 
உங்கள் வருகையால் விழா மேலும் சிறக்கும். அவசியம் வருக!
நன்றி!


      சாரல் விருது வழங்கும் விழாவும்
ஜேடி ஜெர்ரியின் கலம்காரி நூல் வெளியீட்டு விழாவும்

பங்கேற்போர்:
பிரபஞ்சன்
| ஆர். பி. பாஸ்கரன் | எம்பெருமாள் | ச தமிழ்செல்வன் | பாரதிமணி | இயக்குனர் லிங்குசாமி



அன்று இரவு 8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம் திரையிடப்படும்.

இடம்: பிலிம் சேம்பர் அரங்கம், சென்னை,
நாள்:9.01.2011 நேரம் மாலை 6 மணி.

நன்றி கலாப்ரியா

••••••••••••

ஆங்கிலத்திலும் படைப்பிலக்கியங்களை எழுதியவர். கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், பதினெட்டாவது அட்சக்கோடு உள்ளிட்ட நாவல்களும் காலமும் ஐந்து குழந்தைகளும், இன்னும் சில நாட்கள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதிய இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். 2009-ம் ஆண்டில் எழுத்தாளர் திலிப்குமாருக்கும் 2010 ஆம் ஆண்டில் கவிஞர் ஞானக்கூத்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

விருதுக்குழு நடுவர்களாக எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், ரவிசுப்ரமணியன் கலைவிமர்சகர் தேனுகா செயல்பட்டனர். வரும் ஞாயிற்றுக்கிழமை (9.1.11) அன்று பிலிம்சேம்பரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எம்.பெருமாள், ச. தமிழ்ச்செல்வன், பாரதிமணி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.

 விளம்பரப் படஉலகில் முன்னணியில் இருக்கும் இயக்குநர்கள் ஜேடி, ஜெர்ரி இருவரும் இந்த இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். விழாவில் ஜெர்ரி இயக்கிய கலம்காரி என்ற ஆவணப்படம் திரையிடப்படும்.

நன்றி தினமணி


••••••••••



Wednesday, January 5, 2011

அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்

ஒரு இறுக்கம் தளர்ந்த இரவுப்பொழுது என்றுதான் வாய்க்குமோ தெரியவில்லை. ஒவ்வொரு நாள் அடர்த்தியும், அழுத்தி கொடுக்கிற முத்தத்தால் விளையும் கன்னத்து எச்சில்களாய் கொஞ்சம் சில்லிடலும் கொஞ்சம் அருவருப்புமாய் தொலைகிறது. கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.


தினமும் விடிகிற காலையைப்போல்தான் அன்றும் விடியப்போகிறது. வேறெந்த எழவும் நடக்கபோவதில்லை. ஒரு திருவிழாவிற்குண்டான பரபரப்பினை பள்ளிக்கூடங்களைச் சூழ்ந்த கடைகண்ணிகள் கொண்டிருக்கும். கலர் கலர் தோரணங்களும் பதாகைகளும் தார்ச்சாலையில் அம்மா வாங்க அய்யா வாங்க என்றழைக்கும் சுண்ணாம்புக்கோடுகள் தோரணையில் திருவோடுகளும், ஓரங்களில் வாடகைக்கடையோ அல்லது டெண்ட்டோ போட்டு ‘டேய் அண்ணன் வந்திட்டாருடா, 3 வது வார்டு, கரைட்டா நோட் பண்ணிக்கொடு, அண்ண மறந்திடாதண்ண மேலேர்ந்து மூணாவது பட்டன் நம்மளோடது, அழுத்தினா சவுண்ட் வரும் பாத்துக்க’ இயல்பாய் பாடத்துடன் ஒலிக்கும் குரல்களும் கேட்டுகொண்டேதானிருக்கும்.

நடக்கமுடியாத இராசாயாக்கிழவியும், நவநீயும் ஜகஜ்ஜோராக வண்டியில் பொக்கைப்பல் தெரிய ‘நானெல்லாம் ஓட்டுப்போட்டு என்ன ஆவப்போது‘என்று சிரித்துகொண்டே போவார்கள். டவுசரை மறந்து லுங்கியைச் சுற்றியதுகளனைத்தும் பக்கோடா பொட்டணத்திற்கும், ‘டீ’க்குமாக பூத் ஏஜண்டாகவோ, வெளியில் வார்டு எண் குறித்துதரும் பொம்மைகளாகவோத்தான் வீற்றிருக்கப்போகின்றன. கன்னக்கோல் வைத்து திருடும் கூட்டத்திற்கு வெள்ளைவேட்டியும் சட்டைகளும்வேறு. நேற்றைய மழையில் முளைத்த இன்னொரு காளானாக ஆகப்போகும் புதிதாய் வாய்க்கப்பெற்றவன் இந்த நாட்டின் முதல்குடிமகனான பிரம்மையில்  வேகாத வெய்யலில் நின்று கையில் வைத்த மையை திரும்பத்திரும்ப பார்த்து பிரமித்துபோகப்போகிறான் அரும்பிய மீசையை தடவித்தடவி இன்புறுவதுபோல். இன்னொரு ஏப்ரல், மே, இன்னொரு சனி ஞாயிறு, இன்னொரு விடுமுறை, இன்னொரு 2ஜியோ புண்ணாக்கோ என்ன புடலங்காயோ.....

‘ஆணவம் தலைக்கேரிய மன்னா, உன் ஆணவம் அழியப்போகிறது..... லொக்..லொக்..’

‘அழிவாம் அழிவு, என்னை அழிக்க எவனடா வருவான்...ஹா..ஹா..ஹா.. ’

கட் கட்..கட்..

ங்ஙஞீஞீங்ங்ஞேஞே.. குதிரையும் அதன் கணைப்பும், பேக்ரவுண்டில் டண்டண்டய்ங்ங் இசையும் சூழ ஒரு உக்கிரபுத்திரன் வருவான் இவ்வுலகைக்காக்க...

ஆஹா.. அஹ்ஹஹ்ஹா... தட்டுடா கைய....என திரைச்சித்திரத்தின் நீட்சியைக்கண்டு மெய்சிலிர்த்துப்போவதோடு இம்மண்ணின் மனிதகுலம் மாட்சியுறும்.

எந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன? வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.



.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO