க.பாலாசி: மீசை

Tuesday, May 31, 2011

மீசை


ரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன்கோவில் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு!! இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு  கொடுக்கவில்லை.

“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க?” எனக்கு முந்திக்கொண்டான்.

அவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு!!!. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.?”

“ம்ம்ம் நல்லாருக்கன்டா” என்றான்.

சிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க? பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்?”

“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன?”

“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா? கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது.

“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச..? மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா? அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான். 

மாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன். 

“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது.? அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார்.

ஆமாம் எனக்கு என்ன குறைச்சல்! என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குகூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தாதான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சிகோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன். 

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!!!  அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது.

இங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகடிலிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார்.  கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார்.

எப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார்.

ரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந்த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன்.

இப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.

இப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன்.

“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.

“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன்.

“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா? நீய் செய்யி” என்றான்.

“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் கொமட்டிலேயே குத்தினான், அந்த முக்காமீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.


••

19 comments:

vasu balaji said...

இல்லாத மீசைக்கு இம்புட்டு பில்டப்பா. ராசா ராசா, அந்த நண்பேண்டாவ கேட்டு சொல்லுப்பு. சின்ன வெங்காயம் தேச்சா மேயருக்கு எனக்கு எல்லாம் மண்டைல மீசை சை முடி முளைக்குமா?

அகல்விளக்கு said...

மச்சான் மீச வீச்சரிவாள்-னு பாடுறதுக்கு ஆள் ரெடி ஆயிடுச்சு போல இருக்கே....

ரைட்....

sakthi said...

சீக்கிரம் கிடா மீசையுடன் வலம் வர வாழ்த்துக்கள் பாலாசி

க.பாலாசி said...

@ வானம்பாடிகள்:-

ம்க்கும்.. நாலு முடி முளைக்க வைக்கவே இந்தப்பாடு படவேண்டிருக்கு.. பாலைவனத்துக்கு தண்ணி பாய்ச்சி என்ன புண்ணியம்!! அதும் நீங்கரெண்டுபேரும் இதப்பத்தி யோசிக்கவே கூடாது.. :-))

சிநேகிதன் அக்பர் said...

நல்ல புனைவு பாலாசி :)

அப்புறம் சின்ன வெங்காயத்தை தேய்ச்சிங்களா சாரி சாரி அந்த பாலாஜி தேய்ச்சாரா? :)

சிநேகிதன் அக்பர் said...

அடிக்கடி எழுதுங்க.

Unknown said...

பரசுராமன் என்ற பெயரைப் பார்த்ததும் எனக்கு தஞ்சை ஒரத்தநாட்டில் நானும் என் நண்பன் பரசுவும் ஒன்றாக வாழ்ந்த காலங்கள் நினைவில் நிழலாடியது. நாங்கள் இளமையில் தஞ்சை மண்ணுக்கே உரிய பெரிய கிருதாவும் கிடா மீசையும் வளர்க்க எவ்வளவு கஷ்ட்டப்பட்டோமென்று. ஆனாலும் இன்று பரசு மீசையை ஒட்ட வலித்து விட்டான். நரைத்தாலும் மீசையை விட எனக்குத்தான் மனமில்லை. உன்னுடன் ஒரு நாள் தஞ்சையில் கழிக்க வேண்டும் என்று ஆசை நண்பா. கூப்பிடுவாயா?

"உழவன்" "Uzhavan" said...

எழுதிய விதம் மிக அருமை பாலாஜி

அன்பேசிவம் said...

//இவ்வளவுயேன் என் பாட்டிக்குகூட என்னளவுக்கு மீசையிருந்தது. ///
இது டாப்பு, சுய எள்ளல்.

நண்பா, இதை கதையா முயற்சி பண்ணியிருக்கிங்களா என்ன? நான் என்கிற இடத்திலெல்லாம் அவன் என்றிருந்தால் நல்ல சிறுகதையை வாசித்த அனுபவம் இருக்கும்.

மீசைக்காக ஒரு காலத்தில் எல்லாரும் செய்யதவைதான் இது. நானெல்லாம் ரேஸரை தலகீழா போட்டு இழுத்திருக்கேன்... :-))

r.v.saravanan said...

எழுதிய விதம் அருமை பாலாசி

பத்மா said...

dhool balaci

மதுரை சரவணன் said...

அசத்திட்டீங்க... வாழ்த்துக்கள்

காமராஜ் said...

அடடா இந்த எழுத்துத்தான் எவ்வலவு வசீகரிக்கிறது சும்மாகடைத்தெருவிலிருந்து இழுத்துக்கொண்டே போகிறது.எங்கும் தயங்கி நிற்கவிடாத எழுத்து.

க.பாலாசி said...

நன்றி வானம்பாடிகள்
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றிங்க சக்தியக்கா
நன்றி அக்பர்
(எழுதறேனுங்க)
நன்றிங்க ராமலஷ்மி
நன்றி தாமோதர் சந்துரு
(எப்பவேணும்னாலும் போகலாம்ணே)
நன்றி உழவன்
நன்றி முரளி
(வெறும் புனைவா மாத்திட்டேன் நண்பா)
நன்றி ஆர்.வி.சரவணன்
நன்றிங்க பத்மா
நன்றி மதுரை சரவணன்
நன்றி காமராஜ்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லா இருக்குங்க

ஷர்புதீன் said...

ஆக ., அடுத்த போஸ்ட் அடுத்த மாசமா?

'பரிவை' சே.குமார் said...

ரைட்....

ஆடுமாடு said...

பாலாசி, நல்லாருக்கு.

நானும் இந்த கேரக்டராதான் இருந்தேன்.
காலேஜ் பர்ஸ்ட் இயர் வரை எனக்கும் பூனை முடிதான்.
லேசரை வாங்கி தினமும் மேலயும் கீழயும் இழுத்து, மீசையை வரவச்சுட்டேன்.
ஆனா, செகண்ட் இயர்ல இருந்துதான் சுமாரா வளர ஆரம்பிச்சுது.

க.பாலாசி said...

நன்றிங்க அப்பாவி தங்கமணி
நன்றி ஷர்புதின்
(ஆமங்க..)
நன்றி சே.குமார்
நன்றி ஏக்நாத்
(உங்களுக்கு பரவால்லைங்க..எனகெல்லாம் இன்னும் அந்த பாக்யம் கெடைக்கல)

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO