க.பாலாசி: February 2011

Friday, February 25, 2011

நடுநிசி நாய்கள், பயணம் அல்லது இரண்டுமில்லை

‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று அம்மா சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது.

•••••••••

வழக்கமாக 8 மணிக்கே எல்லாவேலையும் முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிடுவேன். இன்று கொஞ்சம் நேரமானது. அடுத்த பஸ் பத்தரை மணிக்குத்தான். ‘டி.எல்’லோ, ‘எம்.ஓ.எச்’சோதான் வரும். மஞ்ச வாய்க்கால் ஸ்டாப்பிங் கிடையாது. ஆக சாதாரணமாக எல்லா பஸ்ஸூம் அங்கே நிற்காது. ராத்திரி நேரமென்றால் அபரிதமாக கருணையடிப்படையில் நிப்பாட்டுவார்கள். எனது சைக்கிளை அங்கே பட்டாபி நைனா வீட்டில்தான் போட்டிருந்தேன். மஞ்ச வாய்க்கால் ஸ்டாப்பிங்கில் இறங்கி உள்ளே கீழ்மாத்தூருக்கு செல்ல ஆறேழு மைல். அங்கேதான் எனது வீடு. கொஞ்சம் பொழுது சாய்ந்தாலே இந்த இடைப்பட்ட தூரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துவிடும். மீறி இரவு நேரத்தில் செல்பவர்கள் பெரும்பாலும் செம்பனார்கோயில் கடைத்தெருக்கு சென்று மளிகைச்சாமானும், காய்கறிகளும் வாங்கிவிட்டு திரும்பச் செல்பவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் மண்டியில் நெல்லை போட்டுவிட்டு (மாட்டு)வண்டியில் திரும்புபவர்களாக இருப்பார்கள். தினமும் எனக்கு இப்படித்தான்  வழித்துணை கிடைக்கும். ஆனால்...

பஸ்ஸை விட்டு இறங்கியதும் பட்டாபி நைனா வீட்டு கதவை தட்டவேண்டியதாயிற்று. மணி பத்தே முக்கால், படுத்திருப்பார்கள். கரண்ட் வேறு இல்லை. டார்ச் லைட்டை அடித்துகொண்டே கேட்டார்.

“யாரு??”

“பாலாஜி”

கயத்துக்கட்டிலில் சமுக்காலத்தை விரித்து தலையணை வைத்துக்கொண்டு வராந்தா கேட் அருகே தூங்குவதுதான் நைனாவின் பழக்கம். இன்றும் அப்படித்தான். தட்டியவுடன் எழுந்துவிட்டார். “வாய்யா.. என்னா இவ்ளோ நேரம்??”

“கட பூட்ட லேட்டாயிடுச்சு நைனா” நைனா என்றால் அப்பா என்று பொருள்படும். இங்கே எங்கள் பகுதியில் நைனா என்றழைக்கப்படுபவர்கள் அப்பாவாகத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பிரியம் மற்றும் அன்போ, பாசமோ அல்லது பெரும்பாலானோர் அப்படி அழைத்தால்.... அதுபோதும்.

“சேரி.. இருட்டாவேற கெடக்கே, தனியாவாப்போற, இங்கயே படுத்திட்டு காலலேக்கி போயேன்.”

“இல்ல நாங்கிளம்பணும். காலைல மாமா கல்யாணமிருக்கு, நேரமா போனூம்”

“சேரி பாத்துப்போ.. சைக்கிள்ல லைட்டு இருக்குல்ல.”

“இல்ல”

“பின்ன.. பேட்ரி லைட்டுன்னா வேணுமா? ரொம்ப இருட்டால்லருக்கு”

“வாண்டா, நாங் போயிக்கிறேன்.”

“பாத்துப்போப்பா” என்று விடைகொடுத்த நைனாவிடம் என்மீதான அக்கரை கொஞ்சம் தெரிந்தது.

கிளம்பினேன். கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் நான் கடையைப்பூட்டும்போதே கரண்ட் இல்லை. இங்கிருந்து 20, 25 கி.மீ. சுற்றளவுக்கு பேச்சாவடி மின்சார சரகம்தான். அதனால் எங்குமே கரண்ட் இருக்காது. பாவம் தமிழகத்தை ஆள்பவர்கள், என்னதான் செய்வார்கள் லச்சத்து சொச்சம் கடனை வைத்துக்கொண்டு, கஷ்ட ஜீவனமல்லவா!! எனது முடிவு தப்போவென்று தோன்றியது. 11 மணி. ஆள் அரவமற்ற நேரம், ஒரு மினிபஸ் செல்லக்கூடிய அளவிற்கான சிகப்பு கப்பி சாலைதான். ஆனால் மினி பஸ் இந்த மார்க்கத்தில் செல்வதில்லை. வசூல் சரியாக இல்லையென்பது காரணமாக இருக்கலாம். பின்ன? ஒன்றிரண்டுவாட்டித் தவிர மற்ற நேரமெல்லாம் காத்துவாங்கினால் யார்தான் இந்த ஊருக்கு பஸ் விடுவார்கள். வழுக்கைத் தலையிலிருக்கும் ஒன்றிரண்டு முடிகளைப்போல ஆங்காங்கே தெரியும் தூங்குமூஞ்சி மரங்களும் பனைமரமும். கூடவே அந்த ஒற்றைப் பனைமரமும். ஒற்றைப்பனைமரம்.. கொஞ்சம் வியர்க்கும்போலிருந்தது. வேகமாக சைக்கிள் பெடலை அழுத்தத்தொடங்கினேன்.

ஆங்... இப்போதுதான் அம்மா சொல்லும் சிலக்கதைகள் எனது ஞாபகத்திற்கு வந்தது. அம்மாவுக்கு ஒருமாதிரியான பயங்காட்டும் கதைகள் அத்துப்படி. அதுவும் இந்த பேய் கதையென்றால் என் இரவுத்தூக்கத்தை விழிபிதுங்க வைக்குமளவுக்கு தத்ரூபமாகச் சொல்லுவாள், உண்மைப்போலவே. சொல்லமுடியாது, உண்மையாகவும் இருக்கலாம். “ஒத்தப்பன மரத்துக்கிட்ட எங்க சின்ன நைனா மாட்டு வண்டியில வரும்போது திடீர்னு மாடுல்லாம் மெரண்டுபோயி மூச்சுபோச்சில்லாம நிக்குமாம். மாட்டுவண்டிய வுட்டு ஆளு எறங்கினா அவ்ளோத்தான். ஆள அடிச்சிடும். அப்பறம் ஒருவாரத்துக்கு காய்ச்சல் வந்து படுத்தப் படுக்கையாப்போட்டிடும். கொஞ்சநேரம் அப்டியே வண்டியிலேயே உட்காந்து கொலதெய்வத்த வேண்டினாப்போதும், மெரண்ட மாடு சரியாயி கௌம்பிடும்” இதுதான் அம்மா சொல்லும் நான்கைந்து கதைகளின் அடிநாதமாக இருக்கும். பெரும்பாலும் இப்படித்தான் சொல்லுவாள். மேலும் “மஞ்ச வாய்க்காங்கரையோட ராத்திரில வரும்போது  மல்லிப்பூ வாசன அடிக்கும். கையில இரும்பு, கரித்துண்டோட வரணும், சாமிய வேண்டிட்டே வரணும்.. இல்லன்னா மோகினிப் புடிச்சிடும். போனவாரம் ரெங்கபாஷ்யத்து மொவங்கூட மாட்டி ஒருவாரம் எந்திரிக்க முடியாம கெடந்தான். அப்பறம் இன்னொன்று “அந்த பனைமரத்துப்பக்கம் வானொசர (வான் உயர) ஆம்பிளை வெள்ள வேட்டி சட்டையோட நெடுநெடுன்னு அரிவாள் வைச்சிகிட்டு நின்று பார்த்ததாகவும் ஒரு கதை அம்மாவிடம் இருந்தது. உசரமென்றால் அந்தப் பனைமரத்து அளவுக்காம். இதையெல்லாம் கேட்கும் முன்னர்கூட நான் தனியாக அந்த வழிகளில் போனதுமில்லை, வந்ததுல்லை.

சாதாரணமாகவே நானொரு பயந்தாங்கொள்ளி. ராத்திரியில் ஒண்ணுக்கு இருக்க போகணும் என்றாலே அம்மாவை எந்நேரமாகயிருந்தாலும் எழுப்பி அழைத்துச்செல்வேன். ஓரளவுக்கு மீசையரும்புகிற வயசு வந்தப்பிறகு இதைக் குறைத்துக்கொண்டேன். ஆனால் தெருவில் ஏதேனும் சாவு என்றால் அப்பாவை எழுப்பிக்கொண்டு போவேன். இப்போது ஒருவழியாக சட்ராஸை கடந்துவிட்டேன். இருள் சாலையை முழுதும் அடைத்திருந்தது. அமாவாசைக் கழித்த மூன்றாம்நாள். சிகப்பு கப்பி சாலையென்பதால் வழி அனுமானிக்ககூடிய அளவுக்கு தெரிந்தது. சைக்கிளை வேகமாக மிதித்தேன். ஒற்றைப்பனை மரமும் ஒரு திருப்பமும்தான் பாக்கி. அதை கடந்துவிட்டால் அடுத்தது ராமானுஜம் நைனா வீடு வந்துவிடும்.

திடீரென்று சைக்கிள் ஒரு குழியில் இறங்கி ஏறியது. கிட்டத்தட்ட ஃபோர்க் உடைந்துவிடக்கூடிய நிலைமை. நல்லவேளை அதுபோல் ஆகவில்லை. நாய்கள் அந்த அடர்ந்த வயல்வெளில் எங்கோ ஊலையிட்டது, நரிகள்போல். இதுபோல் நாய்கள் ஊலையிட்டால் அது கெட்டதுக்கான அறிகுறி என்பார்கள். மறுநாளே பலித்துவிடும். அய்யோ.. நான், என்.. ஆ... நான் பயந்த்துபோலவே......ம்... அரைபர்லாங் தூரம், அந்த ஒத்தைப்பனைமரத்து அருகில் அல்லது அந்த திருப்பத்தருகில், முன்பு அம்மா சொன்னாளே அதேபோன்றதொரு வானொசர உருவம். வெள்ளைவேட்டி சட்டை.. அதேதான்.. ஆனால் கையில் ஒன்றுமில்லை. விதுக்கென்று ஆகி உடலில் சட்டை ஒட்டிக்கொண்டது. சிலிப்பர் செப்பல் வியர்வையில் நனைந்துவிட்டது. அவ்வளவு வியர்வை. கைகாலெல்லாம் வெடவெடக்கத்தொடங்கியது. என் கையிலிருந்த ஒரே இரும்பு ஆயுதம் என் சைக்கிள் மட்டும்தான். “இரும்புச் சாமான் கைலருந்தா அது நம்மள நெருங்காது” என்று அம்மாதான் சொல்லியிருக்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை.

பாதி வந்தப்பிறகு திரும்பிப்போக முடியாது. செல்போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்தேன். நடக்கும் பாதைக்கு வெளிச்சம் காட்டியது. யாரையாச்சும் போன் பண்ணி கூப்பிடலாமென்றால் டவரும் இல்லை. கைகள் நடுங்கியதை நன்றாக உணர்ந்தேன். எது நடந்தாலும் நடக்கட்டுமென்ற வரட்டு தைரியமிருந்தது, கூடவே சைக்கிளும். விருவிருவென்று சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தே சென்றேன். ஆனால் ஒன்று உறுதியாகத்தெரிந்தது அந்த உருவத்தின் உயரம் 20, 25 அடியிருக்கலாம். அம்மா சொல்வதுபோல் பனைமர உயரமெல்லாம் கிடையாது. தலையில் முடியில்லாததுபோல்தான் தெரிந்தது. இரவு நேரமென்பதால் முகமும்கூட இருளாகத்தான் தெரிந்தது. மீசையும் தெரியவில்லை. வேட்டி காற்றில் ஆடுவதுபோலவும் தெரிந்தது.  என் வியர்வை அடங்வில்லை. தன்னிச்சையாகவே நடந்துகொண்டிருந்தேன். பெத்தாரண்ண காப்பாத்து, பெத்தாரண்ண காப்பாத்து.. என்று குலதெய்வத்தை வேண்டி முனுமுனுத்துக் கொண்டேயிருந்தது வாய். உள்ளங்கைகூட வியர்த்திருந்தது. இதோ நெருங்கிவிட்டேன்.

இன்னும் 30 அடித்தூரம், 20 அடித்தூ.....10 அடி.... அடக்கடவுளே... ச்ச்ச்சீ...தூ...தூ... செல்போன் டார்ச் லைட்டை அடித்து அது அதுதானா என்று உறுதிசெய்துகொண்டேன். நெஞ்சில் படபடப்பு மட்டும் அடங்கவில்லை. நாம் பார்த்தது உண்மையில் இதுதானா? ஆமாம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். அதன் காலடிக்கு கீழே இப்படித்தான் இருந்தது “இலவச தொலைக்காட்சி வழங்க வருகைத்தரும் எங்கள் ஏழைகளின் ஒளியே, வருக!! வருக!! இடம்: கீழ்மாத்தூர் பஞ்சாயத்து அலுவலகம்...” மின்துறை அமைச்சருக்கான வரவேற்பு பதாகை. நெஞ்சின் படபடப்பு கொஞ்சம்போல் ஓய்ந்தது. கால்தான் ஓய்ச்சலாக இருந்தது. சைக்கிளை மிதிக்கமுடியாமல் மிதித்துச்சென்றேன். இந்த அம்மாவேறு வந்ததும் வராததுமாக “ஏன் இவ்ளோ லேட்டு, போன் பண்ணி சொல்லவேண்டியதுதான..”.... ஆச்சா ஊச்சாவென்று கத்தினாள்....” எனக்கோ அடக்கமுடியாத கோபமும், படபடப்பும். எல்லாம்சேர்த்து அம்மாவைப் பொறிந்து தள்ளிவிட்டேன், நடந்ததையும் சொல்லி.

அதற்குதான் அம்மா “‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது.

.

Thursday, February 3, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்

அதிகாலை 7 மணி இருக்கலாம். தேநீர் அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு திருப்பம், அங்கே லாரி ஒன்று எனது திசையில் வலதுபுறம் நிறுத்தப்பட்டிருந்தது. காலைநேரப் பனி, குளிர். நாசியில் நுழைந்த தூசிக்காற்று குறுகுறுத்ததில் கண்களை மூடி ஒருகை வாய்பொத்த தும்மிவிட்டேன். அதேநேரம் எதிரே ஒரு வயதானவர் டி.வி.எஸ் வண்டியில் வந்துகொண்டிருந்தார். சற்றேறக்குறைய இருவரும் மோதிவிடும் நிலைமை. கொஞ்சம் அவரோ அல்லது நானோ சுதாரித்துக்கொண்டு மையிரிழையில் மோதிக்கொள்ளாமல் தப்பித்தோம்@தார். மோதியிருந்தால் அவர் லாரியின் ஓர பட்டைகளில் அடிபட வாய்ப்பிருந்தது. நான் வெறுமனே தரையை தடவியிருக்கக்கூடும். இருவரும் ஒருவரையொருவர் கடந்து பத்தடி இடைவெளியில் நின்றுவிட்டோம். அவர் என்னை திட்ட ஆரம்பித்தார். ‘ஏன்டா காத்தால வர்ரீங்க..என்ன நெனப்புல போறானுங்களோ தெரியல’ இன்னும் இன்னும்.. அப்படியே கொஞ்சம் ‘ஒத்தச் சொல்லால தனுஷாக என்னை அவர் நினைத்திருக்கக்கூடும். என்மீது தவறு, உணர்ந்துகொண்டேன். நின்று திரும்பி கை சின்னத்தைக்காட்டி ‘சாரிங்க’ என்றேன். அவர் வாக்காளனைப்போலவே கருவிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அவர் அருகில் சென்றேன். ஒருமாதிரி மருண்ட விழிகளுடன் பார்த்தார். பிறகு தமிழில் ‘மன்னிச்சிடுங்க தப்பு என்மேலத்தான், திடீர்னு தும்மல் வந்திடுச்சு...அதான், இனிமே நடக்காம பாத்துக்கிறேன்’ என்று அமைதியான குரலில் சொன்னேன். முன்பிருந்த கோபம் முற்றிலும் அவரிடம் இல்லாமல்போனது. போலவே சாந்தமான குரலில் ‘பாத்துப்போ கண்ணு’ என்றார். ஒரே சொல்தான், முன்பு சொன்னதற்கும் இதற்கும் பொருளும் ஒன்றுதான், சொற்களின் ஒலியளவுகளில் வேண்டுமானால் சற்று வித்யாசம் இருக்கக்கூடும், ஆனால் இங்கே இருவேறானது மொழிகள்தான். அந்தச்சொல் கொடுக்கிற அழுத்தம் மனதை புரட்டிப்போடுகிறது. அதுதான் தமிழ்.

•••••••

வாரமொருமுறை இரவு உணவுக்கு செல்லும் ஒரு சிற்றுண்டி கடை. ஒரு தாத்தன்தான் பிரதான பாத்திரம், ஒரு அம்மாக்காரியும், பெரியம்மாக்காரியும் துணை. ஒரு குழந்தை இங்கே நாயகி. எப்போதும் துருதுருவென ஓடுவாள் ஒடியாறுவாள், நாம் சிரித்தால் சிரிப்பாள், முறைத்தால் முறைக்காமல் அவளம்மாவின் கொசுவத்தை பிடித்துக்கொள்வாள். நேற்று அவள் அம்மாவும், பெரியம்மாவும் இல்லை, பிரதானச்சாலையில் அடுத்தசாரியில் கால் பர்லாங்கு தள்ளியிருக்கும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கக்கூடும். எப்போதும் பூச்சிகளைக் கண்ட பூனையைப்போல் இருப்பவள் கொஞ்சம் சுணங்கியிருந்தாள். கொஞ்சநேரத்திற்கெல்லாம் அழவும் தொடங்கிவிட்டாள். தாத்தனைத் தவிர வேறுயாரும் கடையிலில்லை. அவரே சமையல்காரர், பறிமாறுபவர், துடைப்பவர் இத்யாதி.... நை..நை யென்று அழத்தொடங்கியவள், தாத்தன் தண்ணீர் மொள்ளப்போனால் பின்னாடியே... கைலியைப்பிடித்துகொண்டே, இலையெடுக்கப்போனால்  ....பிடித்துக்கொண்டே, தோசை ஊற்றப்போனால்....கொண்டே, காசு வாங்கி கல்லாவில் போட்டால் ...ண்டே... இன்னும். இந்த சூழ்நிலையைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குகூட எரிச்சல் வந்து அவளை சமாதானப்படுத்த முயன்றேன், ம்கூம். அவளுக்கு இப்போது வீட்டிற்கு செல்லவேண்டும். அதற்குதான் அடம், அழிச்சாட்டியம். கடையில் என்னைப்போலவே சாப்பிடும்  மற்றவர்களும் சமாதானம் செய்ய முயன்றார்கள் முடியவில்லை. கூடவே தாத்தனும். சாப்பிடுபவர்களை அப்படியே விட்டுவிட்டு கூட்டிச்செல்ல அவராலும் முடியாதுதான். ‘இரும்மா, இரும்மா.. தோ அம்மா வந்திடுவா.. ஒனக்கு என்னவேணும் சொல்லு, வாங்கியாறேன்.. அழாத..’ ம்கூம்..... இதே நானாகயிருந்தால் ஓங்கி செவுள் செவுளென்று அறைந்திருப்பேன், ருக்கலாம். ப்ப்ப்ச்ச். என்னுடைய வியப்பு இப்போது அந்த முதியவரிடத்தில் திரும்பியது. எப்படியிவர் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார்!!!. கொஞ்சம்கூட அந்த குழந்தையை கடிந்துகொள்ளவில்லையே!!. ஆனால் அவரிடத்தில் ஒரு இயலாமை, தன்னையே நொந்துக்கொள்ளும் கடுமை. பிறகு மீண்டும் ‘அழாத என்னவேணுஞ்சொல்லு, தாத்தா வாங்கியாரேன், சரி வாப் போலாம்’ என தூக்கிக்கொண்டு எதிர்த்த மளிகைக்கடைக்கு சென்றார். ஒரு லேய்ஸ் மற்றும் வாட்டர் பாக்கெட் அழுதுவீங்கிய கன்னம் மலர தேவைப்பட்டிருக்கிறது. ‘மீண்டு’ம் வந்தார், முகத்தில் சாதனை. எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது. எல்லா பெற்றோர்களும்தான் ‘இங்கே’ பேதையாகிருப்பார்கள்.


••••••••

வழக்கம்போலவே ஒரு விடுமுறைநாள். எப்போதும் சிந்திப்பதைவிட அதிகம் முயன்றதில்  2 வருடங்களுக்கு முன்பு சென்ற  சென்னிமலை முருகன் ஞாபகம் வந்தார். நண்பனும் நானும் மயில்வாகனனுக்காக இருச்சக்கர வாகனத்தில் கிளம்பினோம். சரியாக மதியம் ஒன்றரை மணி. மலையேற ஆயிரத்து முன்னூத்திச்சொச்சம் படிகளும் கூடவே பசியும் துணை. முருகனுக்கு கோபம் வந்தால் பொசுக்கென்று மலையுச்சியில் ஆண்டியாக உட்கார்ந்துகொள்கிறார். எல்லோரும் பணத்தைப் பணத்தால் எடுக்க அவரை மலையில் தேடுகிறார்கள், இயல்பு அல்லது ஆசை மற்றும் நப்பாசை என்னைப்போலவே!!!. போனமுறை நண்பனும் நானும் மேலே சந்நதிக்குப் பின்புறம் மலைக்கற்களைப் பொறுக்கி ஆளுக்கொரு வீடு கட்டினோம், சும்மா, கூம்பாக, அடுக்கடுக்கி. உள்ளே ஒரு நெய்விளக்கும். இந்தவருடம் நண்பனின் ஆசை நிறைவேறியதற்காக ஒரு நன்றிகடன், நான்  இம்முறையும் கற்கள், கூம்பு, நெய்விளக்கு. இந்தமுறை மரங்களில்லாத இடத்தில் கட்டவேண்டும்...டினேன் (குறியீடு). மேலேறும் போது பிரித்துவைத்த புளிச்சோரு மூட்டையுடன் ஒரு குடும்பத்தை பார்க்க நேர்ந்தது. எவ்வளவு காலமாகிறது, இந்த கட்டுச்சோறு சாப்பிட்டு, குறைந்தது நான்கு, ஐந்து. உச்சி வெய்யிலில் ஈரப்பதமிக்க எல்லா இடுக்குகளிலும் மொய்க்கிற எறும்புக்கூட்டம்போலான மனதிது. அவரைக்குளத்து மாரியம்மனும், திருவிழாயிரவில் கட்டுச்சோற்றுடன் மேடையின் முன்னமர்ந்து பார்த்த அரிச்சந்திரனும் ஞாபகம் வந்தார்கள். குளத்திலிருந்து துள்ளிய மீனொன்று கட்டாந்தரையில் துடிப்பதுபோலிருந்தது. கீழே இறங்கிவந்தபோது நான்கு மணி. மலையடிவாரம், கொஞ்சம் ‘கொஞ்ச’ லாம்போல் தென்படுகிற சுடிதார் யுவதிகள். பசிக்கு தின்ற பத்துரூபாய் பொரியும், கலவைக்காரமும் அடிவயிற்றை ஐம்பதுபைசா பலூன் அளவுக்கு ஆக்கியது. தைப்பூச திருவிழாக்கடைகள் இன்னும் எடுக்கவில்லை. சுற்றும் ராட்டினம், சில குழந்தைகள். நாமும் ஏறலாமா? வேண்டாமா? கொஞ்சம் குழப்பமும் கூச்சநாச்சமும் வேண்டாமென்றது, காரணம் பனிக்கூழ் நக்கியவாறான அழகு பெண்கள் மற்றும் கடந்துவந்த என் வயது. அருகருகே தள்ளுவண்டிகளில் பலாச்சுளை, வேர்க்கடலை, கீத்துப்போட்ட அண்ணாச்சிப்பழம்... ம்கூம்.. முக்கினாலும் முடியாது, சோற்றுப்பொரியால் வந்தவினை,  நாங்கள் வண்டியை கிளப்பினோம், வயிறும் மனதும் புடைத்தேயிருந்தது. வஞ்சனை வாழ்க்கை. 



.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO