க.பாலாசி: நடுநிசி நாய்கள், பயணம் அல்லது இரண்டுமில்லை

Friday, February 25, 2011

நடுநிசி நாய்கள், பயணம் அல்லது இரண்டுமில்லை

‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று அம்மா சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது.

•••••••••

வழக்கமாக 8 மணிக்கே எல்லாவேலையும் முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிடுவேன். இன்று கொஞ்சம் நேரமானது. அடுத்த பஸ் பத்தரை மணிக்குத்தான். ‘டி.எல்’லோ, ‘எம்.ஓ.எச்’சோதான் வரும். மஞ்ச வாய்க்கால் ஸ்டாப்பிங் கிடையாது. ஆக சாதாரணமாக எல்லா பஸ்ஸூம் அங்கே நிற்காது. ராத்திரி நேரமென்றால் அபரிதமாக கருணையடிப்படையில் நிப்பாட்டுவார்கள். எனது சைக்கிளை அங்கே பட்டாபி நைனா வீட்டில்தான் போட்டிருந்தேன். மஞ்ச வாய்க்கால் ஸ்டாப்பிங்கில் இறங்கி உள்ளே கீழ்மாத்தூருக்கு செல்ல ஆறேழு மைல். அங்கேதான் எனது வீடு. கொஞ்சம் பொழுது சாய்ந்தாலே இந்த இடைப்பட்ட தூரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துவிடும். மீறி இரவு நேரத்தில் செல்பவர்கள் பெரும்பாலும் செம்பனார்கோயில் கடைத்தெருக்கு சென்று மளிகைச்சாமானும், காய்கறிகளும் வாங்கிவிட்டு திரும்பச் செல்பவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் மண்டியில் நெல்லை போட்டுவிட்டு (மாட்டு)வண்டியில் திரும்புபவர்களாக இருப்பார்கள். தினமும் எனக்கு இப்படித்தான்  வழித்துணை கிடைக்கும். ஆனால்...

பஸ்ஸை விட்டு இறங்கியதும் பட்டாபி நைனா வீட்டு கதவை தட்டவேண்டியதாயிற்று. மணி பத்தே முக்கால், படுத்திருப்பார்கள். கரண்ட் வேறு இல்லை. டார்ச் லைட்டை அடித்துகொண்டே கேட்டார்.

“யாரு??”

“பாலாஜி”

கயத்துக்கட்டிலில் சமுக்காலத்தை விரித்து தலையணை வைத்துக்கொண்டு வராந்தா கேட் அருகே தூங்குவதுதான் நைனாவின் பழக்கம். இன்றும் அப்படித்தான். தட்டியவுடன் எழுந்துவிட்டார். “வாய்யா.. என்னா இவ்ளோ நேரம்??”

“கட பூட்ட லேட்டாயிடுச்சு நைனா” நைனா என்றால் அப்பா என்று பொருள்படும். இங்கே எங்கள் பகுதியில் நைனா என்றழைக்கப்படுபவர்கள் அப்பாவாகத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பிரியம் மற்றும் அன்போ, பாசமோ அல்லது பெரும்பாலானோர் அப்படி அழைத்தால்.... அதுபோதும்.

“சேரி.. இருட்டாவேற கெடக்கே, தனியாவாப்போற, இங்கயே படுத்திட்டு காலலேக்கி போயேன்.”

“இல்ல நாங்கிளம்பணும். காலைல மாமா கல்யாணமிருக்கு, நேரமா போனூம்”

“சேரி பாத்துப்போ.. சைக்கிள்ல லைட்டு இருக்குல்ல.”

“இல்ல”

“பின்ன.. பேட்ரி லைட்டுன்னா வேணுமா? ரொம்ப இருட்டால்லருக்கு”

“வாண்டா, நாங் போயிக்கிறேன்.”

“பாத்துப்போப்பா” என்று விடைகொடுத்த நைனாவிடம் என்மீதான அக்கரை கொஞ்சம் தெரிந்தது.

கிளம்பினேன். கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் நான் கடையைப்பூட்டும்போதே கரண்ட் இல்லை. இங்கிருந்து 20, 25 கி.மீ. சுற்றளவுக்கு பேச்சாவடி மின்சார சரகம்தான். அதனால் எங்குமே கரண்ட் இருக்காது. பாவம் தமிழகத்தை ஆள்பவர்கள், என்னதான் செய்வார்கள் லச்சத்து சொச்சம் கடனை வைத்துக்கொண்டு, கஷ்ட ஜீவனமல்லவா!! எனது முடிவு தப்போவென்று தோன்றியது. 11 மணி. ஆள் அரவமற்ற நேரம், ஒரு மினிபஸ் செல்லக்கூடிய அளவிற்கான சிகப்பு கப்பி சாலைதான். ஆனால் மினி பஸ் இந்த மார்க்கத்தில் செல்வதில்லை. வசூல் சரியாக இல்லையென்பது காரணமாக இருக்கலாம். பின்ன? ஒன்றிரண்டுவாட்டித் தவிர மற்ற நேரமெல்லாம் காத்துவாங்கினால் யார்தான் இந்த ஊருக்கு பஸ் விடுவார்கள். வழுக்கைத் தலையிலிருக்கும் ஒன்றிரண்டு முடிகளைப்போல ஆங்காங்கே தெரியும் தூங்குமூஞ்சி மரங்களும் பனைமரமும். கூடவே அந்த ஒற்றைப் பனைமரமும். ஒற்றைப்பனைமரம்.. கொஞ்சம் வியர்க்கும்போலிருந்தது. வேகமாக சைக்கிள் பெடலை அழுத்தத்தொடங்கினேன்.

ஆங்... இப்போதுதான் அம்மா சொல்லும் சிலக்கதைகள் எனது ஞாபகத்திற்கு வந்தது. அம்மாவுக்கு ஒருமாதிரியான பயங்காட்டும் கதைகள் அத்துப்படி. அதுவும் இந்த பேய் கதையென்றால் என் இரவுத்தூக்கத்தை விழிபிதுங்க வைக்குமளவுக்கு தத்ரூபமாகச் சொல்லுவாள், உண்மைப்போலவே. சொல்லமுடியாது, உண்மையாகவும் இருக்கலாம். “ஒத்தப்பன மரத்துக்கிட்ட எங்க சின்ன நைனா மாட்டு வண்டியில வரும்போது திடீர்னு மாடுல்லாம் மெரண்டுபோயி மூச்சுபோச்சில்லாம நிக்குமாம். மாட்டுவண்டிய வுட்டு ஆளு எறங்கினா அவ்ளோத்தான். ஆள அடிச்சிடும். அப்பறம் ஒருவாரத்துக்கு காய்ச்சல் வந்து படுத்தப் படுக்கையாப்போட்டிடும். கொஞ்சநேரம் அப்டியே வண்டியிலேயே உட்காந்து கொலதெய்வத்த வேண்டினாப்போதும், மெரண்ட மாடு சரியாயி கௌம்பிடும்” இதுதான் அம்மா சொல்லும் நான்கைந்து கதைகளின் அடிநாதமாக இருக்கும். பெரும்பாலும் இப்படித்தான் சொல்லுவாள். மேலும் “மஞ்ச வாய்க்காங்கரையோட ராத்திரில வரும்போது  மல்லிப்பூ வாசன அடிக்கும். கையில இரும்பு, கரித்துண்டோட வரணும், சாமிய வேண்டிட்டே வரணும்.. இல்லன்னா மோகினிப் புடிச்சிடும். போனவாரம் ரெங்கபாஷ்யத்து மொவங்கூட மாட்டி ஒருவாரம் எந்திரிக்க முடியாம கெடந்தான். அப்பறம் இன்னொன்று “அந்த பனைமரத்துப்பக்கம் வானொசர (வான் உயர) ஆம்பிளை வெள்ள வேட்டி சட்டையோட நெடுநெடுன்னு அரிவாள் வைச்சிகிட்டு நின்று பார்த்ததாகவும் ஒரு கதை அம்மாவிடம் இருந்தது. உசரமென்றால் அந்தப் பனைமரத்து அளவுக்காம். இதையெல்லாம் கேட்கும் முன்னர்கூட நான் தனியாக அந்த வழிகளில் போனதுமில்லை, வந்ததுல்லை.

சாதாரணமாகவே நானொரு பயந்தாங்கொள்ளி. ராத்திரியில் ஒண்ணுக்கு இருக்க போகணும் என்றாலே அம்மாவை எந்நேரமாகயிருந்தாலும் எழுப்பி அழைத்துச்செல்வேன். ஓரளவுக்கு மீசையரும்புகிற வயசு வந்தப்பிறகு இதைக் குறைத்துக்கொண்டேன். ஆனால் தெருவில் ஏதேனும் சாவு என்றால் அப்பாவை எழுப்பிக்கொண்டு போவேன். இப்போது ஒருவழியாக சட்ராஸை கடந்துவிட்டேன். இருள் சாலையை முழுதும் அடைத்திருந்தது. அமாவாசைக் கழித்த மூன்றாம்நாள். சிகப்பு கப்பி சாலையென்பதால் வழி அனுமானிக்ககூடிய அளவுக்கு தெரிந்தது. சைக்கிளை வேகமாக மிதித்தேன். ஒற்றைப்பனை மரமும் ஒரு திருப்பமும்தான் பாக்கி. அதை கடந்துவிட்டால் அடுத்தது ராமானுஜம் நைனா வீடு வந்துவிடும்.

திடீரென்று சைக்கிள் ஒரு குழியில் இறங்கி ஏறியது. கிட்டத்தட்ட ஃபோர்க் உடைந்துவிடக்கூடிய நிலைமை. நல்லவேளை அதுபோல் ஆகவில்லை. நாய்கள் அந்த அடர்ந்த வயல்வெளில் எங்கோ ஊலையிட்டது, நரிகள்போல். இதுபோல் நாய்கள் ஊலையிட்டால் அது கெட்டதுக்கான அறிகுறி என்பார்கள். மறுநாளே பலித்துவிடும். அய்யோ.. நான், என்.. ஆ... நான் பயந்த்துபோலவே......ம்... அரைபர்லாங் தூரம், அந்த ஒத்தைப்பனைமரத்து அருகில் அல்லது அந்த திருப்பத்தருகில், முன்பு அம்மா சொன்னாளே அதேபோன்றதொரு வானொசர உருவம். வெள்ளைவேட்டி சட்டை.. அதேதான்.. ஆனால் கையில் ஒன்றுமில்லை. விதுக்கென்று ஆகி உடலில் சட்டை ஒட்டிக்கொண்டது. சிலிப்பர் செப்பல் வியர்வையில் நனைந்துவிட்டது. அவ்வளவு வியர்வை. கைகாலெல்லாம் வெடவெடக்கத்தொடங்கியது. என் கையிலிருந்த ஒரே இரும்பு ஆயுதம் என் சைக்கிள் மட்டும்தான். “இரும்புச் சாமான் கைலருந்தா அது நம்மள நெருங்காது” என்று அம்மாதான் சொல்லியிருக்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை.

பாதி வந்தப்பிறகு திரும்பிப்போக முடியாது. செல்போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்தேன். நடக்கும் பாதைக்கு வெளிச்சம் காட்டியது. யாரையாச்சும் போன் பண்ணி கூப்பிடலாமென்றால் டவரும் இல்லை. கைகள் நடுங்கியதை நன்றாக உணர்ந்தேன். எது நடந்தாலும் நடக்கட்டுமென்ற வரட்டு தைரியமிருந்தது, கூடவே சைக்கிளும். விருவிருவென்று சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தே சென்றேன். ஆனால் ஒன்று உறுதியாகத்தெரிந்தது அந்த உருவத்தின் உயரம் 20, 25 அடியிருக்கலாம். அம்மா சொல்வதுபோல் பனைமர உயரமெல்லாம் கிடையாது. தலையில் முடியில்லாததுபோல்தான் தெரிந்தது. இரவு நேரமென்பதால் முகமும்கூட இருளாகத்தான் தெரிந்தது. மீசையும் தெரியவில்லை. வேட்டி காற்றில் ஆடுவதுபோலவும் தெரிந்தது.  என் வியர்வை அடங்வில்லை. தன்னிச்சையாகவே நடந்துகொண்டிருந்தேன். பெத்தாரண்ண காப்பாத்து, பெத்தாரண்ண காப்பாத்து.. என்று குலதெய்வத்தை வேண்டி முனுமுனுத்துக் கொண்டேயிருந்தது வாய். உள்ளங்கைகூட வியர்த்திருந்தது. இதோ நெருங்கிவிட்டேன்.

இன்னும் 30 அடித்தூரம், 20 அடித்தூ.....10 அடி.... அடக்கடவுளே... ச்ச்ச்சீ...தூ...தூ... செல்போன் டார்ச் லைட்டை அடித்து அது அதுதானா என்று உறுதிசெய்துகொண்டேன். நெஞ்சில் படபடப்பு மட்டும் அடங்கவில்லை. நாம் பார்த்தது உண்மையில் இதுதானா? ஆமாம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். அதன் காலடிக்கு கீழே இப்படித்தான் இருந்தது “இலவச தொலைக்காட்சி வழங்க வருகைத்தரும் எங்கள் ஏழைகளின் ஒளியே, வருக!! வருக!! இடம்: கீழ்மாத்தூர் பஞ்சாயத்து அலுவலகம்...” மின்துறை அமைச்சருக்கான வரவேற்பு பதாகை. நெஞ்சின் படபடப்பு கொஞ்சம்போல் ஓய்ந்தது. கால்தான் ஓய்ச்சலாக இருந்தது. சைக்கிளை மிதிக்கமுடியாமல் மிதித்துச்சென்றேன். இந்த அம்மாவேறு வந்ததும் வராததுமாக “ஏன் இவ்ளோ லேட்டு, போன் பண்ணி சொல்லவேண்டியதுதான..”.... ஆச்சா ஊச்சாவென்று கத்தினாள்....” எனக்கோ அடக்கமுடியாத கோபமும், படபடப்பும். எல்லாம்சேர்த்து அம்மாவைப் பொறிந்து தள்ளிவிட்டேன், நடந்ததையும் சொல்லி.

அதற்குதான் அம்மா “‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது.

.

29 comments:

vasu balaji said...

ஆக்கா! ஆத்தா புடவைய மவ சூடிதாரா தைச்சுக்கறா மாதிரி என்னா மேக்கப்பு! செதுக்கி இழைச்சிருக்க.:)

இளங்கோ said...

இது படம் பற்றிய விமர்சனமா... இல்லை உங்கள் பயணத்தில், நடுநிசியில் பயமுறுத்திய நாய்களைப் பற்றியதா ? :)

vasu balaji said...

அட குசும்பா. தலைப்பப் பார்க்கலையே இப்பதான் பார்க்கிறேன்:))

க.பாலாசி said...

@ இளங்கோ - வகை: சிறுகதை..., புனைவு

நன்றிங்க..

arasan said...

சரியான முறையில் எங்களையும் உங்களோடு
பயணிக்க வைத்து விட்டிர்கள் ....
மிக ரசித்தேன்

ஈரோடு கதிர் said...

பாவி மனுசன் இத்தன வருசமாகியும் கரெண்ட வுடலதானே!!!

மீள் - செதுக்கலில் ஜொளிக்கிறது!

r.v.saravanan said...

ரசித்தேன்

Chitra said...

அதற்குதான் அம்மா “‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது.


......இப்படி ஒரு பரிகாரத்தை நான் கேள்விப்பட்டதே இல்லையே, மக்கா! ஹா,ஹா,ஹா,ஹா....
ரொம்ப ரசிச்சு வாசித்தேன். ஊரில சொந்தக்கார பாட்டி ஒருத்தங்க கிட்ட கதை கேட்டாப்புல இருந்துச்சு.

க ரா said...

sema nakkal balaji..

Ahamed irshad said...

“யாரு??”

“பாலாஜி'//


பாலாசி தானே?


க‌ட்டுரை டாப்புங்க‌ பாலாசி..

பா.ராஜாராம் said...

மாப்ள,

செம, செம்ம.. :-))

ஓலை said...

Super. Sema. Nadaththunga.

Anisha Yunus said...

ஹெ ஹெ.. ரசிக்க வைத்தது (பயப்படவும்..ஹி ஹி)

Mahi_Granny said...

எப்படியெல்லாம் தலைப்பு கண்டுபிடிக்கிறாங்கப்பா . ஆனாலும் பாலாசி பயந்தது நல்லா இருக்கு

பிரதீபா said...

செம செம போங்க.. பேச்சு வழக்கு தான் கதைக்கே ரொம்ப சுவாரஸ்யம் குடுத்திருக்கு.

அகல்விளக்கு said...

ஹிஹி...

டாப்பு...

Unknown said...

ஒஹொ....

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல எழுத்து பாலாசி.

சத்ரியன் said...

உங்க ஊருலயுமா ஒத்த பனை மரத்துல பேய் இருக்குது?

ஆனாலும்,

சந்தடி சாக்குல “லச்ச சொச்ச கடனை” பத்தி அரசுக்கு ஒரு ஆப்பு வெச்ச பாரு. அது ரொம்ப டாப்பு.

அன்பேசிவம் said...

ஹா ஹா.. என்னமோ எதோ இல்லைன்னா எதுவுமில்லை...

காமராஜ் said...

ஆஹா...
பாலாசி...

சந்தான சங்கர் said...

அரண்டவன் கண்ணுக்கு
இருண்டது எல்லாம் பேய்"

பாலாசி பயந்தாப்புல
தெரிஞ்சாலும்,
தலைப்புல எல்லாத்தையும்
பயக்க வக்கிராப்புல..


பலே பாலாசி..

Ashok D said...

நல்லா எய்திகிற நைனா... கரண்டு இல்லாத ஊருக்கு டீவி கொடுக்கறாங்கபோல :)

Thenammai Lakshmanan said...

எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது.
/// நெசமாவே வர்ற கோவத்துல அப்பிடித்தான் இருக்கும்.. செம திகில் விவரிப்பு..:) சின்னப் புள்ளையில கேட்ட பேய்க்கதை எல்லாம் ஞாபகம் வந்துருச்சு..:)

அன்புடன் நான் said...

உங்களுக்கு இருந்த அதே உணர்வோடு எங்க பயணமும் இருந்தது...

தலைப்பு உங்களை குறை சொல்ல முடியல ஆனா ஏமாந்துட்டேன்!

தரமா இருந்தது பாலாசி.

அரசூரான் said...

டி.எல்-லு, எம்.ஓ.ஹச், மஞ்சவாய்க்கா, கீழ்மாத்தூர்... எனக்கு ஒரே மலரும் நினைவுகள். கீழ்மாத்தூர்ன்னு படிச்ச உடனே நம்ம பி.ஈ.டி உத்ராபதி சாரின் நினைவு.

தாராபுரத்தான் said...

வடிவேலு கதை சொன்ன மாதிரியல்ல இருக்குதுஙக..தம்பி

Pranavam Ravikumar said...

வாழ்த்துகள்!

Valentin said...

O Sazka Hry casino hovoří upřímné ohlasy hráčů. Jak vybírat peníze. Stojí za to hrát Sazka Hry na oficiálních stránkách? - Sazka Hry Casino

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO