க.பாலாசி

Friday, May 7, 2010

பிறழ்நிலை...



தினசரி


(பேருந்து நிலையம்)

அண்ணா....அண்ணா...???

ம்ம்ம்....??

காசுண்ணா... சாப்டு ரெண்டு நாளாவதுண்ணா....

ம்கூம்... சில்லர இல்ல பாப்பா...

(ச்ச... பஸ்டான்டு, ரயில்வே ஸ்டேசன் எங்கணப்போனாலும் வந்திடுதுவோ.. இதுங்கள பெத்ததுக என்னப்பண்ணுதுங்கன்னு தெரியல??)

********************

அவ்வப்பொழுது

(பேருந்து நிலையத்திலிருந்து எனது வீதிக்கு வரும் வழி)

‘ஏங்கண்ணு இன்னைக்கு வேலைக்கு போவலையா?’

‘இல்லீங்க... இன்னைக்கு ஞாயித்துக்கெழம லீவு. (சுமார் 40 வயது பெண்மணி...யாரு இவங்க...!!!? எங்கணயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா தெரியலையே..??)’

‘ஓ.. ஏங்கண்ணு சோப்புல்லாம் வாங்கிட்டு போற?’

‘ம்ம்.. தீந்துடுச்சு.. அதான்.’

‘ஆமா இப்ப எங்க வேலப்பாக்குற???’

‘அதே ......... கம்பனிதான்.’ (அட தெரிஞ்சவங்க மாதிரி பேசுனாங்க... இப்ப இப்டி கேட்குறாங்களே?!! நாம ஆரம்பத்லேர்ந்து அங்கணதான இருக்கோம்)

‘ஒரு 2 ரூவா இருந்தா கொடேன்... டீக்குடிக்க....’

(ஆகா... இது நல்ல டெக்னிக்கா இருக்கே.... ) சில்லர இல்லைங்களே...

சரி.... போ.....

********************

உள்ளுரையாடல்

மனசாட்சி: – ச்ச்ச... எத்தனப்பேரு இந்த மாதிரி.. கைகாலெல்லாம் நல்லாத்தானிருக்கு... பெறவு என்னாத்துக்கு இந்தமாதிரி அடுத்தவேள சோத்துக்குக்கூட வழியில்லாம சோம்பேறியா இருக்காங்க.? இவங்களோட காலம்லாம் எப்டி ஓடுதுன்னே தெரியல.?

புத்தி: – சரி... இப்ப அதுக்கு என்னாங்கற?

மனசாட்சி: – ஏதாவது செய்யணும். இந்த மாதிரி உள்ளவங்களுக்கு.. அட்லீஸ்ட் எங்கணயாவது வேல வாங்கிக்கொடுத்தாக்கூட பொழச்சிப்பாங்க.

புத்தி:– அப்டி செஞ்சா பொழச்சிப்பாங்கன்னு நினைக்கிறீயா?

மனசாட்சி: – ம்ம்...இல்லன்னா போறாங்க... கடமையா நெனச்சி செய்யலாம்ல...

புத்தி: – சரி... யாருட்ட போயீ இவங்களுக்கு வேல கேட்ப? உன்னோட முதலாளிகிட்ட கேட்க முடியுமா உன்னால?

மனசாட்சி: – அய்ய.. எங்காளுங்க காம்ப்ளக்ஸ் உள்ளாரயே உடமாட்டாங்க....

புத்தி: – பெறவென்ன? மூடிகிட்டு போவ வேண்டியதுதான.... என்னாத்துக்கு இந்த ஃபீலிங்கு...

மனசாட்சி:– ஒரு தவிப்பு, அக்கரை.... அதான்...

புத்தி: – சரி... அடுத்ததா நீ எங்கப்போவனும்?

மனசாட்சி: – ம்ம்... சாப்பிட்டு இன்னைக்கு மதியானமாவது நல்லா தூங்கணும்...கண்ணெல்லாம் ஒரே எரிச்சலா இருக்கு.

புத்தி: – ம்ம்.. மொதல்ல அதச்செய்யி....

மனசாட்சி: – ம்ம்...

********************

நடைமுறை

டிங்..டிங்...டிங்......டிங்..டிங்..டிங்.....டிங்..டிங்..டிங்...............

‘ஹலோ..’

‘டேய் நாங் குமார் பேசுறன்டா... திருப்பூர்லேர்ந்து இன்னும் கொஞ்சநேரத்துல களம்பிடுவேன்’

‘எத்தன மணிக்கு வருவ?’

‘ரெண்டர மணிக்குள்ள வந்திடுவேண்டா... நீ சாப்பிட்டியா?’

‘இல்ல, நீ வந்தொடன சாப்பிட்டுக்கலாம் வா...’

‘ஏய் நான் இப்ப கொக்கரக்கோ ரெஸ்டாரண்ட்ல இருக்கேன். உனக்கும் சேத்து பிரியாணி பார்சல் வாங்கிட்டு வந்திடுறேன்.’

‘அப்டியா.. சரி..சரி... ம்ம்ம்... கொக்கரக்கோ பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு. சரி.. அப்டியே ‘தந்துரி சிக்கன் வித் ஆனியன், லெமனோட வாங்கியாந்திடு..’

‘சரிடா...’

‘ஏய்... சீக்கிரம் வந்திடுடா...’

‘சரி..சரி.. வைக்கட்டுமா.??’

‘ம்ம்ம்.........’

********************

Tuesday, May 4, 2010

நல்லவேளை...




முந்தைய வெள்ளி...

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி கோவில்,

சென்றவாரம் திருப்பத்தூர் அணேரி,

அமாவாசைதோரும் திருமணஞ்சேரி,

வழக்கம்போல்....

இடையன்குள பிள்ளையாரும், அரசமரமும்....


வாரயிதழில் கண்ணுற்றபடி

மாதமொருமுறை ஒரு மருத்துவச்சி...

ஆறுதலுக்காக...

சித்த வைத்தியமும், சில லேகியமும்கூட...

பிள்ளை வேண்டி

அவள் தினசரியில் கலந்துவிட்டது...


நல்லவேளை...

எனக்கு மாமனார் மட்டுமே.....




Monday, April 26, 2010

பட்டணத்தி....


2005 மாசி மாதம்


‘ம்ம்ம்மா.... சாந்தி வருதும்மா

‘எந்த சாந்தி??


‘அதாம்மா தெருவுக்கு மீனு கொண்டாருமே.. அந்த பட்ணத்தி சாந்திதான்ங்....

‘ஏ.... அப்டியா... அவ பொழச்சிட்டாளா.!!!’

‘ம்ம்... எனக்கும் பாத்தொன்ன ஒண்ணுஞ் சொல்லமுடியலம்மா...

••••••••



‘ஏ.. சாந்தி நல்லாயிருக்கியாடி... ?

‘நல்லாருக்கங்கா... நீ எப்டி இருக்க...

‘ம்ம்... நல்லாயிருக்கன்டி... எப்டிடி பொழச்ச...??

‘ம்ம்.. எப்டியோ பொழச்சிட்டேன்கா... என்னத்த பொழச்சி என்ன பண்றது... ஏன்டா இந்த உசிருன்னு தோணுது...

‘ஏண்டி சலுத்துகிறவ.. எத்தனயோ மக்க கடலோட போச்சு.. நீயாச்சும் உசிரோட வந்திருக்கியேன்னு சந்தோஷப்படுறேன்.. .நீயென்னடான்னா இப்டி சொல்றவ.

‘என்னக்கா பண்றது பெத்த பொண்ணு போச்சு, கட்டுன புருஷன் வலையோட போயிட்டான்ங்... நான் மட்டுமிருந்து.....................

‘ஏ... அழுவாதடி... அழுது என்னாத்த ஆவப்போவுது விடு... எல்லாந் தலவிதின்னு நெனச்சிக்கவேண்டியதுதான்...

‘யாருட்டக்கா சொல்லியழுவுறது. உன்னாட்டமாதிரி யாராச்சும் விசாரிக்கமாட்டாங்களான்னுதான் மனசு கடந்து அடிச்சுக்கிது. எங்கணயாவது இந்த சொமைய எறக்கிவைக்கணும்ல.

‘ஏங்க…. பொண்ணுன்னா... ஒரு சின்ன பொண்ணு இருந்துச்சே அதுவா.?? ஒருநாளு பஸ்ல காரைக்காலுக்கு போறதுக்கு அழச்சிட்டு வந்தீங்களே.... ?? (நான்)

‘ஆமந்தம்பி... அதான்... 3ம்ப்பு படிச்சிகிட்டிருந்துச்சு.. லீவுதான வௌயாண்டுட்டு போவுட்டும்ட்டு வீட்லயே உட்டுட்டு நான் இங்க மீனு கொண்டாந்துட்டேன். கடைசியில.....

‘ஏ... சாந்தி அழாத.... என்ன.... விடு..விடு... சரி... சாப்பிட்டியாடி.... ?

‘ம்ம்... சாப்டங்க்கா... என்னத்தக்கா விடுறது... ஆழாக்கு அரிசியாருந்தாலும் அடுப்புகட்டி வேணுமேக்கா... வடிச்சி வச்ச சோத்த அள்ளிதின்னக்கூட மனசு வல்லியேக்கா...

‘ம்ம்... சரி... உடுடி... ஆமா...இப்ப உங்கூட யாரு இருக்கா.?

‘என்ங் மாமியாக் கெழவிதாங்கா இருக்கு.. இங்கண தெருவுக்கு கருவாடு கொண்டாருமே அதான்..

‘ஓ அதுவா...

‘ம்ம்ம்....

‘நீ கொடுக்குற பப்பாளி பழம்னா உசிரா சாப்டுவாக்கா என்ங் பொண்ணு. இன்னைக்கு பாத்தியா....

‘ம்ம்... என்னத்தடி சொல்றது.. அந்த கடவுள் ஏந்தான் இப்டி எங்மக்கள சோதிக்கரான்னு தெரியல... கூம்...ஆமா இந்த குண்டா ஒருத்தி பெரிய கூடையில மீனு கொண்டாருவாளே அவ இருக்காளா?

‘அது தெரியலக்கா.... அது தரங்கம்பாடில்ல.. எனக்கு தெரியாது.

‘சரி... இப்பல்லாம் வீடுல்லாம் கட்டிக்கொடுக்கறானுவோலே.. ஒனக்கு எதுனாவ்து கொடுத்தாங்களா?

‘கிழிச்சானுவோ. சாவப்பொழச்சி கெடந்தப்ப, அள்ளிப்போட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோவ ஒருத்தனும் வரல. வந்தவனுங்கல்லாம் செத்ததுங்க காதுலு கழுத்துல கடந்ததெல்லாம் களவாண்டிட்டுதான் போனானுவோலே தவர வேறொன்னும் செய்யல. என்ங் பொண்ணு காதுல கடந்த தொங்கட்டானக்கூட உடலக்கா. அது செத்துகெடந்த பனமுட்டுல போயி பாத்தப்ப காதுல இருந்த சதயக்கூட வுட்டுவைக்கல நாசமாப்போறபயலுங்க. வயிறெல்லாம் எறியுதுக்கா.


‘அடிப்பாவி... இப்டில்லாமா சனங்க இருக்குதுங்க....


‘எல்லாரும் இல்ல. சும்மாச்சொல்லக்கூடாது அதுலையும் செலபேரு நல்லா உதவுனாங்க. சோறு தண்ணியில்லாமக்கூட ராத்திரி பவலுன்னு பாக்காம எங்ககூடயே நெறையபேரு கடந்தாங்க... பெறகு வந்தவனுங்கல்லாம் அத செய்யுற இத செய்யுறன்னு செஞ்சிட்டு காசு பாக்குறானுங்க. யாருக்கும் சொந்தம்ல பந்தம்ல நடுத்தெருவுல நின்னுகெடக்கோம். எங்களுக்கு கட்டிகொடுக்குற வீட்லக்கூட அதையும் இதையும் அள்ளிப்போட்டு பூசிட்டு மிச்ச காச சுருட்டிட்டானுவோ சண்டாளப்பயலுங்க...




‘ஆமாடி... இந்த கட்சிக்காரனுவோ பண்ற அழிச்சாட்டியம் தெரிஞ்சதுதானே.. விடு.....

‘ம்ம்... சேரிக்கா மீனு வேணுமா?


‘இல்லடிம்மா இன்னைக்கு வெள்ளிக்கெழம எனக்கு வேண்டாம்...ஞாயித்துக்கெழம நல்லா பெரிய மீனா கொண்டா, வறக்குறமாதிரி... இரு எதுத்தால ரேவதி கேட்டா.. கூப்புடுறேன்.


‘தம்பி ரேவதிய கூப்டு சாந்தி மீனு கொண்டாந்திருக்கான்னு சொல்லு.


•••••••••


‘இல்லம்மா அவங்களுக்கு வேண்டாமா.

‘சரி சாந்தி... நீ நேரமா களம்பு... வெய்ய வந்திடும்...


‘ம்ம்ம்... வர்ரங்கா...


••••••••••




  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO