இளமை விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு
எனது சமீபத்திய சாதனைகளில்(?!!!) ஒன்றாக பாண்டிச்சேரி என்றழைக்கப்படுகின்ற புதுச்சேரிக்கு சென்று வந்த நிகழ்வினை குறிப்பிடலாம். எனது நண்பரின் பகுத்தறிவு திருமணத்திற்காக அங்கே செல்ல நேரிட்டது.
மாலையில் திருமணம் என்பதால் முதல்நாள் இரவு புறப்பட்டோம் (அலுவலக தோழர்கள் உட்பட) மறுநாள் காலை புதுவையின் மண்ணில் எங்கள் காலடி பதித்தக் காலம், கீழ் விழுந்த கதிரவன் ஒளியதில் கால் படும் நேரமாக அமைந்தது என்றால் மிகையாகாது. கொஞ்ச நேரம் ஓய்வுறக்கம். பின்னர் 12 மணிவாக்கில் கிழக்கு கடற்கரையின் வாசம் நுகர சென்றோம்.
பெருகிவரும் அலைகளின் வீரியத்தினை குறைக்க பெருங்கற்கள் போடப்பட்ட கரையுடைய கடலின் அழகு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் கரை நுழையும் அன்பர்களை தடியோடு வரவேற்கும் காந்தியடிகளின் மணிமண்டபமே கூறும் புதுவையின் சொச்ச அழகினை.
இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இந்த அருங்காட்சியகம் பாரதி பூங்காவிற்கு வடக்கில், ரோமன் ரோலண்டு நூலகத்திற்குப் பின்புறம் அமைந்துள்ளதாக அதன் வரைபடத்தில் உள்ளது. அருங்காட்சியகத்தை வெளியே வருகையில் முன்புறம் இருந்த அறிவிப்பு பலகையில், இந்த பழம்பெரும் (அதாவது பிரஞ்சுக்காரர்கள் பயன்படுத்திய) மாளிகையை 1999-ல் கருணைக்கொலை செய்யவிருந்ததாகவும், அப்போதைய சமூக ஆர்வலர்கள் சிலரின் முயற்சியால் தப்பித்து இப்போது அருங்காட்சியகமாக செயல்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. திங்கள் கிழமை விடுமுறை நாள். எங்களால் அன்றைய நாள் பார்க்கமுடிந்தது அவ்வளவுதான்.
ரோமன் ரோலண்டு நூலகம்
காந்தியடிகளின் நண்பராக விளங்கிய பிரெஞ்சு அறிஞர் ரோமன் ரோலண்டு என்பவரின் பெயரால் இந்நூலகம் செயல்பட்டு வருவதாக செய்தி. 1827 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் துவங்கபட்டபோது, முதன்முதலில் புதுவை ரயில் நிலையம் அருகில் இருந்தது என்றும் 1974 ஆம் ஆண்டு முதல் ராஜ்பவனுக்கு அருகில் செயல்பட்டு வருகிறது என்றும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
அரவிந்தர் ஆசிரமம்
உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் இங்கு வந்து ஆசிரமவாசிகளாக உள்ளனராம். ரோமிலுள்ள வாடிகன் போல, புதுச்சேரி அரசுக்குள்ளே ஒரு தனி ராஜ்யம், தனி உலகில் இயங்கிவருவதாக இவ்வூரின் அடுத்த புத்தகத்தில் உள்ளது.
இவைகள் தவிர பாரதியார் அருங்காட்சியகம், பாரதிதாசன் அருங்காட்சியகம் மற்றும் இன்னம் சில முக்கிய இடங்கள் உள்ளதாக அறியப்பெற்றேன். வாய்ப்பு நேரும்போது அந்த கடலிலும் நீச்சலடிக்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது.
நாங்கள் திரும்பி வருகையில் (அதாவது திருமணம் முடிந்து மறுநாள் காலை) தற்பெருமை கொள்ளத்தக்க வகையில் பேருந்தின் சாளரம் அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது (!!). புதுச்சேரியின் புறநகர் என்று சொல்லமுடியாத ஓர் இடத்தின் சாலையோரம்... மதுவின் மயக்கத்தில் ஒரு மாதுவே அச்சாலையின் நீள அகலங்களை துல்லியமாக தன் கால்களாலேயே அளந்துகொண்டிருக்க....உணர்ந்துகொண்டேன்.....பாண்டிச்சேரி பாருக்குள் மட்டுமில்லை...BAR-ருக்குள்ளும் இருக்கிறதென்பதை...
தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்....நன்றி...


