க.பாலாசி: November 2009

Saturday, November 28, 2009

அதிகாரம்...


அதிகாரம் எனும் ஆளுமையை உட்செலுத்தி எந்த உயிரை இன்புறச்செய்யமுடியும்? இந்த ஆதங்கம் எப்போதும் என் மனதில் இருப்பதுண்டு.

நேற்றுவரை அடிமைத்தனத்தில் அடிபட்டு, இன்று அதை அறுத்தெறிந்த பிறகும், அதே அதிகாரமிட்டு அடிமைப்படுத்தும் எண்ணம் நமக்குள்ளும் எங்கிருந்தேனும் ஆட்கொண்டுவிடுகிறது (விட்டது). காரணமாய் சில காழ்ப்புணர்ச்சிகளும், புழுங்கல்களும் இருக்கலாம். இல்லையென்றால் இதுவரையடைந்த அவமானங்களும்...இன்னும் சில...களும்...

அதிகாரம், ஆணவம், அடிமைபடுத்துதல் இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த வீடாகத்தான் இருக்கவேண்டும். எதிரெதிர் வீடாக இருக்க வாய்ப்பில்லை. பூவுடன் சேர்ந்த நாரைப்போல ஒன்றைவிட்டு ஒன்றகன்றாலும், ஒன்றின் நாற்றம் மற்றொன்றையும் இயல்பாய் தொற்றிவிடுகிறது. எந்த ஓர் உயிரின் மீது தேவையற்ற அதிகாரம் செலுத்தப்பட்டாலும் அந்த உயிர் சிறிது சிறிதாக அடிமைப்படுத்தப்படுகிறதென்றே அர்த்தம். அதன் மூலம் அங்கே ஆணவம் தலைக்கேறுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

தன்னுடைய சுதந்திரத்தை அதிகாரத்தினூடே இழந்த மனிதன், வாழ்க்கையின் ஓட்டத்தில் நூறடியோ, அதற்குள்ளாகவோ தாண்டியவுடன் இன்னொருவனிடம் அதே சுதந்திரத்தினை அதிகாரத்தின் வழி பறிக்கிறான். எடுத்துக்காட்டாக இல்லம், இல்லத்தரசி, அலுவலகம், பணியாளர்கள், தொழிலாளர்கள், பிராணிகள் இன்னும்....எங்குவேண்டுமானாலும் மாற்றிப்போட்டுக்கொள்ளலாம்.

பெண்கள் இதில் கொஞ்சம் விதிவிலக்கு. காரணம்...அதிகாரம் அதிகம் மிகைப்பட்டிருக்கும் இடம் ஆண் எனும் ஆணாதிக்கம். பெண்ணாதிக்கம் எனும் வார்த்தையே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையெனலாம் அல்லது இதுவரை நான் அறியாமல் இருக்கலாம்.


எங்கேனும் இழந்த சுதந்திரத்தை சற்றிடவெளியில் வேறொரு இடத்தில் அதிகாரம் மூலமாக, ஒரு மாற்று வெற்றியாக பறித்துக்கொள்ள முயல்கிறவன் இந்த சமுதாயத்தின் சாபக்கேடு என்றே சொல்லலாம். யாம் பெற்ற இவ்வின்பம் பெறுக இவ்வையகம் என்று அதிகாரப் பேயை தேவையற்ற இடங்களில் பிரயோகிக்கும் போது அன்பெனும் அகராதியே அவ்விடத்தில் அழிந்துபோகிறது. இதன் மூலம் சாதித்தது என்னவென்று தேடலைதொடங்கினால் முடிவில் கிடைப்பது அல்லது கிடப்பது மாண்டுபோன மனிதநேயமே.


பறிகொடுத்தவன்

பறிக்கும்போது

பறிகொடுத்தது

பறிக்கப்படுகிறது

பரிவில்லாமல்.


இப்படியே அலையும் அதிகாரத்தின் எல்லை...முற்றடையும் புள்ளிதான் கண்காணும் தூரம்வரை காணவில்லை....


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...

Monday, November 23, 2009

இருமலர்கள்....

ஒன்று:


தூக்கம் வர..

படித்த சிந்தனையை

கனவுடன் கலைத்துவிட்டு

காலையெழுந்தேன்.


முக்கியும் முனகியும்

நடந்தும் ஓடியும்

பலனில்லை...

குனியாமலே

தெரிந்த தொந்தி


இரவினில் தின்ற

தோசைக்கு

தொட்டுக்கொண்ட

காரச்சட்னி...

கடுகடுத்த வயிறு...


பாழாய்ப்போன

பல் தினமும்

கேட்கும் பற்பசை


உழைப்பறியா

உடம்புக்கு...

அழுக்குகளை

களைந்தெடுக்க

ஐசுவர்யாராய்

படம் சுற்றப்பட்ட

சவக்காரம்


எல்லாம் முடித்து

பசியாற பார்த்திருந்த

நேரத்தில் பழைய

சோறை போட்ட

புதிய மனைவி.

சலித்துக்கொண்டது மனம்..


தயிரூற்றி உண்ட

களைப்பில்

அலுவலகத்தில் சிறிது

உறக்கம்.


இடையிலேதேனும்

சிந்தனையிடுகை

இடவேண்டும்....

கொட்டாவியுடன்

எழுதினேன் என் வலையில்


உலகத்தில் எல்லோரும்

சோம்பேறிகள்...


**************


இரண்டு:


பாதியிரவொன்றில்

திடுக்கிட்டெழுந்தேன்.

காரணம்

யாதுமில்லை.

மூடப்படாத

கதவாக இருக்கலாம்.


இரண்டு குவளை

நீரருந்தியும்

வரமறுத்தது தூக்கம்.


அரசி தொடரை

பார்க்கவிடாமல்

மின்கம்பியை

துண்டித்த........

அதே எலி...


அரிசிப்பானையை

உருட்டுகையில்...

பதுங்கியிருந்து

பழி தீர்த்ததும்

இலகுவாய்

மூடிக்கொண்டது

இமைகள்.


**************





Tuesday, November 17, 2009

ஆர்ப்பரிக்கும் செய்திகள்...


இன்றைய நாட்களில் செய்தித்தாள்களில் அறியப்படும் செய்திகளைவிட அதிகமாக பாமர மக்களையும் சென்றடைவது தொலைக்காட்சிகளில் வர்ணிக்கப்படும் (???!!!) செய்திகள் தான் என்பதில் மாற்று கருத்தேதும் இருக்க வாய்ப்பில்லை.


ஊரடங்கி, ஓய்வெடுக்கும் நேரமுன்னே கிளர்ந்தெழும் பேய்களைப்போல் மாலை ஏழுமணித்துளியில் ஆரம்பித்து ஒவ்வொரு அலைவரிசையாக என் வீட்டுக்காரனும் கச்சேரிக்கு செல்கிறான் என்பதுபோல் தொகுத்தளிக்கப்படும் செய்திகள் நமக்கு கற்றுக்கொடுத்த தமிழ் வார்த்தைகள்...வணஃக்கம் இன்ட்றைய முக்ஃகிய செய்ஃதிகள்.


நான்தான் அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் எனும் பதமாக தனது அச்சம், மடம், நாணம், பயிர்ப்ப்ப்ப்பு...இவைகளின் காரணமாக செய்திகளின் உட்கருத்துக்களை திரித்து கூறும் அரசியல் சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகள்தான் இதில் முன்நிற்கின்றன. ஒரு சாரார்தான் இப்படியென்றால் இன்னொரு தரப்பினர் நானும் அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரன்தான் எனும்விதமாக அதே செய்தியை அவர்களுக்கு சாதகமாக மணலை கயிறாக்கி நமது காதிலேயே சுற்றுகின்றனர்.


ஒரு செய்தியில்... பேரிடர் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று அறிவிக்கப்பட்டால் மற்றொன்றில் தமிழக அரசின் மெத்தனப்போக்கினால் மீட்புப்பணி மிக தாமதமாக நடந்து வருகிறது என்று வரும். ஆகமொத்தம் எந்த தனியார் தொலைக்காட்சி செய்தியும் உண்மையை சொல்வதில்லை.


இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தலைப்பு செய்தியில் அவ்வப்போது சில கொடுமைகள் அரங்கேறும். அதாவது தங்களின் படங்களுக்கு திரைப்படச்சாலையில் கூட்டம் அலைமோதுவதாக. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை அவிழ்த்துபோட்டு ஆடுகின்ற கதையாக திரையரங்கம் சென்றால்தான் தெரியும் இவர்களின் திரைப்படம் திரையிடப்படும்போது எத்தனை ஈக்கள் மொய்க்கின்றனவென்று. இவையெல்லாம் ‘முக்கிய செய்திகளாம்.


தன் வீட்டைச்சுற்றியுள்ள சாக்கடை நாற்றத்தையே சரிசெய்ய இயலாத நிலையில் அடுத்தவர் வீட்டு அடுப்பங்கரையை அவதூறாய்க் காட்டும் இதைப்போன்ற சுயநல சுண்ணாம்புகளை வெற்றிலைக்கு தடவினால் வெந்துபோவது நமது நாக்கேயன்றி வேறென்ன இருக்கமுடியும்?.



தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...


Thursday, November 12, 2009

ஒரு குழந்தையின் குமுறல்... (2)


வீடேறி வந்தவனுக்கு...

முதலாய் பணம்பெற்று

வட்டியென வாக்களித்தேன்...

இன்று....அவன்மாத்திரம்

ஊழல்வாதியாம்.



வீட்டிற்கொரு கண்ணகி

வீதிக்கொரு கோவலன்

மாதவியின்

பட்டம் மட்டும்

பரத்தையென்பர்.



பசியென்பவனுக்கு

பக்கத்துவீடு....

பஞ்சனையில் தூங்கும்

நாய்க்கு

பால்சோறு.



வறுமையை

சித்தரிக்கும் திரைப்படம்

திரையரங்கில்

நுழைவுக்கட்டணம்

ஐம்பதுக்கு குறைவில்லை.



கடன்சுமை

தற்கொலை

குழந்தையுடன் மனைவி

புகைப்படத்திலும்

புன்னகையுடன் கணவன்.



தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...





  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO