க.பாலாசி: September 2011

Friday, September 16, 2011

வதம்

துண்டான சிலந்தியின் கால் துடிப்பதைபோல அவளின் இடதுகை மட்டும் பாயில் பிறாண்டிக் கொண்டிருந்தது. இரண்டு கண்முழிகளும் பிதுங்கி மேற்நோக்கி நிலைகுத்திவிட்டது. இந்நேரம் அவள் நாடி அடங்கியிருக்கும். இத்தனை ரண வேதனையும் நெஞ்செரிச்சலையும் தாண்டி என்மனதில் பூரண நிம்மதி, சந்தோஷம். இரண்டுவாரமாக இருந்த என் வயிற்றெரிச்சல் இன்று அடங்கிவிட்டது. ஆனாலும் வாய்விட்டு சிரிப்பதற்கு என்னிடம் திராணியில்லை. ஒரே இறுக்கமாக இருக்கிறது. இந்த மரமட்டைகள் அசைந்து தொலைத்தால் தேவலை. வாசற்கதவுக்கூட திறந்துதான் கிடக்கிறது.  இவள் போட்ட இந்தக்கூச்சலை யாராவது கேட்டிருப்பார்களா? இருக்காது... இருக்காது. எனக்கே லேசாகத்தான் கேட்டது.  பாஷாணம் எனக்கும் வேலை செய்கிறது. மெல்ல மெல்ல பார்வை மறைவதை நன்றாக உணரமுடிகிறது. கூரையின் மோட்டுவலைக் குச்சிகள் கோடுகோடாய்த்தான் தெரிகிறது.


காலையில் செய்தி தெரிந்தபின் என்னாகுமோ!? கலைந்த கோலமும் அதனை மொய்க்கும் எறும்புகளுமாய் ஊர் சனமே கூடி நிற்கும். ஆளாளுக்கு வாயில் வந்ததை மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். “சும்மாவாடி சொன்னாங்க… புத்திக்கெட்டதுங்க பூமிக்கிப்பாரம்னு” , “இந்த ரெண்டுங்கெட்டானோட வாழறதுக்கு அவ இப்டி சாவலாங்கறேன்” “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு வளத்தத தாரவாத்துட்டுதுங்க, இனி இருந்தென்ன? இல்லன்னாயென்ன? பேரன்பேத்தி பாத்துட்டு போயிருக்கலாம், என்ன கஷ்டமோ என்னமோ?” இப்படி. எப்படியும் எவனாவது ஓடிப்போய் பபிதாவுக்கு தந்தி அடித்துவிடுவான். அவளிடமிருந்து வந்த கடிதங்கள் குதிருக்கு பக்கத்தில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதிலேயே அவளின் முகவரியும் இருக்கிறது. MOTHER AND FATHER DEAD அல்லது VAITHYANATHAN AND ANNAM DEAD இப்படித்தான் கொடுக்கப்போகிறார்கள். இப்படித்தான் நாலைந்து எழவு வீடுகளுக்கு நானும் கொடுத்திருக்கிறேன்.


செய்தி தெரிந்தால் பபிதா துடித்துதான் போவாள். சிறா உடைக்கும் கோடரியை நடுமாரில் போட்டதுபோல்தான் இருக்கும், வயிறிலும் வாயிலும் அடித்துக்கொள்வாள். அந்த நேரத்தில் பஸ் கிடைக்குமோ என்னமோ?. அவளுக்கு எங்களைவிட்டால் நாதியில்லைதான், அதுவும் என்மேல் அவளுக்கு ரொம்பவே ப்ரியம். ஒரே பெண், சொல்லவா வேண்டும்.. எத்தனை ஊட்டி வளர்த்திருக்கிறேன். இவள் வயிற்றில் பிறந்ததுதான். கல்யாணம் முடிந்து இரண்டுவாரம்தான் ஆகிறது. நேற்று ஊருக்குப் போகும்போது கலங்கிய விழிகளுடன் என்னையேன் அப்படிப் பார்த்தாளென்று தெரியவில்லை. தீர்க்கதரிசனம் என்பார்களே! அதுபோல் எதாவது இருந்திருக்குமோ? இருக்கும் இருக்கும்.. நான் வளர்த்தவளாயிற்றே. பெண் வீட்டாரின் மூன்று அழைப்புகளும் முடிந்து ரெண்டுபேரையும் நேற்றுதான் அனுப்பிவைத்தோம். நானும் அவள் நல்லபடியாக போகட்டுமென்றுதான் காத்துக்கிடந்தேன். பபிதாவை நினைத்தால் கொஞ்சம் சங்கடமாகயிருந்தாலும் இது சரியான முடிவுதான். என்ன செய்வது?.


பலநாள் திருடன் ஒருநாளில் மாட்டுவான் என்பார்கள். ஒருவேளை அந்தச் செய்தி பப்பிக்குத் தெரிந்தால்... அவ்வளவுதான், நாண்டுகொள்வாள், இதைவிட பெரிய அவமானம் அவளுக்கு கிடையாது. குடியே முழுகிவிடும். அய்யோ, வேண்டாம்..வேண்டாம், நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அந்த மாதிரி நடப்பதற்குதான் இனி வழியில்லையே. அன்னம் வாய் திறந்தால்தான் உண்டு. அவள் வாய்தான் பிளந்துகிடக்கிறதே. ஹ..ஹ... என்னமோ சொல்வார்களே கரவம் கட்டி பழிதீர்ப்பதென்று. இந்த ரெண்டு வாரமும் என் மனம் கிடந்து எப்படித் துடித்தது, யாருக்காவது தெரியுமா?.. எத்தனை சாணக்கியக்காரி, கைகாரி இந்த அன்னம். நாக்கில் எத்தனை கொடுக்குகள். சாகும்போதுக்கூட என்ன துடுக்கான பேச்சு பேசுகிறாள்.


எனக்கும் அன்னத்துக்குமான இந்த 24, 25 ஆண்டுகால வாழ்க்கை மேம்போக்காக அப்பா, அம்மா ஸ்தானத்தில் பப்பிக்கு தெரிந்தாலும் இலைமறை காய்மறையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்த விசயம் வெளியுலகத்திற்கு தெரிந்தால் என்னாவது? வெளியுலகம் கிடக்கு, முதலில் பபிதாவிற்கு தெரியாமலே போய்விடவேண்டும். இனித்தெரியவும் வாய்ப்பில்லை. சுப்பிணி ஒருத்தனை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது.  அவனும் சொல்லக் கூடியவனில்லை. மானஸ்தன்தான். என்ன பெரிய மானஸ்தன்? பொல்லாத மானஸ்தன், நயவஞ்சகன்... காரியசாலி.. அவனைவிட்டால் இது வெளியில் ரெண்டாம்பேருக்கு தெரியாது, சொல்லமாட்டான் அவன்...


தெரிந்தால்தான் என்ன? நான் இனி எதைப் பார்க்கப்போகிறேன். தோ, இந்த பூரணம் அற்பமாகப்போகிறது. பிராணன் போனப்பிறகு என்ன நடந்தால் என்ன..? இந்த சுப்பிணி இல்லையென்றால் எனக்கும் அன்னத்துக்குமான வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்!! இருந்திருக்குமா? அவன் முன்னமே செத்திருந்தால் இது சாத்தியம். நிச்சயம் இருந்திருக்கலாம், ஆனால் இவள்.. நெஞ்செல்லாம் வஞ்சம், சண்டாளி... செத்தாள் சனியன், சாகட்டும், சாகட்டும்.


அப்போது எங்களுக்கு கல்யாணம் ஆகி 6 மாதமாகியிருந்தது. தனிக்குடித்தனம். அதற்குள் எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது, மாயை. வேண்டா வெறுப்பான வாழ்க்கையாக தெரிந்தது. கொல்லன் பட்டறையில் பதம் பார்த்தடித்த அரிவாள் முனையில் சம்மட்டியை போட்டு மழுங்கடித்தாற் போலாகிவிட்டது. வேறென்ன சொல்வது? அன்னம் அன்று காலரா வந்துகிடந்தாள். பக்கத்தில் பார்த்துக்கொள்ள ஆளில்லை. இருவர் வீட்டிற்குமே நான் சொல்லவுமில்லை. பார்த்துக்கொள்ளலாமென்ற அசட்டை. நான் பட்டறையில் கிடந்தேன். முதல்நாளே வயிற்றைப் பிடித்துக் கிடந்தவளை நான்தான் அலட்சியப்படுத்திவிட்டேன். அவளும் தன் தீவிரத்தைக் காட்டவில்லை. இந்த சுப்பிணி பக்கத்து வீட்டுக்காரன். துணிமணியெல்லாம் கழிந்து கிடந்தவளை தூக்கிக்கொண்டு அவன்தான் ஆஸ்பத்திரிக்கு ஓடியிருக்கிறான். பிறகு சேதிவந்துதான் அரக்கபறக்க நானும் ஓடினேன். காய்ந்த மாவிலைப்போல படுக்கையில் கிடந்தாள். எனக்கும் உச்சிமண்டையில் அப்போதுதான் உரைத்தது. ஒரு உயிரை உதாசீனப்படுத்துமளவுக்கு எத்தனை வன்மம், வக்கிரப்புத்தி எனக்கு. படித்து என்ன பிரையோஜனம். ஒன்றுமில்லை. ஒரு நல்ல வேலைக்குக்கூட போகமுடியவில்லை, நல்ல புத்தியும் இல்லை, இந்த உடல், நடை, உடை, பாவனை எதுவும் ம்கூம்....


அப்போதெல்லாம் நான் சுப்பிணியை தினமும் வணங்காத குறைதான். அவ்வளவு மதிப்பு அவன் மீதிருந்தது. நண்பர்களைப்போல நல்ல பழக்கம்தான் சுப்புணிக்கும் எனக்கும். அவனுக்கு நல்ல தலதல உடல்வாகு, மண்வெட்டி இலைபோல ஏந்தலான மார்புகள், தலை, கை, கால், மூக்கு முழி எதுவும் குறையில்லை. என்னைப்போலில்லைதான். எனக்கென்ன குறைச்சல் நானும் அவனைப்போல ஆண்பிள்ளைதான், ஆமாம் ஆண்பிள்ளைதான். அன்னத்தை தவிர எல்லாருக்கும் நானொரு ஆண்மகன்தான். தாம்பத்தியத்தை அன்னம் ரொம்பவும் விரும்பியிருப்பாள் போலிருக்கிறது. ஆனால் வெறும் தாம்பத்தியம்தான் இந்த வாழ்க்கையா? ச்ச்ச.. நானும் அவ்வாறு நினைக்கவில்லைதானே. அதிலும் குறையாக எனக்கு தெரியவில்லையே...


ஆனால் அன்னம்.. இந்த அன்னம்.......? இதோ கோசா..கோசா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கத்தியே செத்துப்போனாளே இந்த அன்னம்.. இவளைத்தவிர நான் எல்லோருக்கும் ஆண்பிள்ளைதான். என்னைப்பற்றி யாரிடமாவது சொல்லியிருப்பாளா? இருக்காது, சொல்லியிருந்தால் அக்கம் பக்கத்துக்கு சிறுக்கிகள்
என்னை ஏளனமாக பார்த்திருக்கவேண்டும். யாரும் அப்படி பார்த்ததே கிடையாது. ஆங்... ஆனாலும் சகுந்தலா சிறுக்கி மட்டும் ஒருமாதிரி வெடைப்பாக பார்ப்பாள், அப்பப்பா அதில்தான் எத்தனை எள்ளல்...!! த்தூ...


எப்போதோ பள்ளிவயதில் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு சிங்கானோடை ஜோசியக்காரன் சொன்னான், அந்த கருநாக்கன்தான் சொன்னான்..  இன்னும் ஞாபகமிருக்கிறது. ‘இது, பொம்மனாட்டி ஜாதகம்ல, இது தப்பிப்பொறந்தது, கேந்திரஸ்தானம், லக்னத்துல புதனும், சுக்கிரனும் சேந்துக்கெடக்கான், சந்திரன்  உச்சம்... புதன் அலி, சுக்கிரனும், சந்திரனும் பொம்பளச் சாதி.... ம்ம்ம்... ஜாதக அம்சமே அதாஞ்சொல்லுது, ஆளு பாத்தாலே தெர்லயா... ‘ஆனாலும்?’ இரண்டு மூன்று விரல்களை எண்ணிவிட்டு பிறகு சொன்னான் ‘....... காலத்துல சரியாயிடும், பாருங்க. கெட்டிக்காரனாயிடுவான்’.


உண்மைதான், என் பேச்செல்லாம்கூட ரெண்டுங்கெட்டான் நிலைதான், இப்போதெல்லாம் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன், மாற்றிகொண்டேனென்றால் அதிகம் எவரிடமும் பேசுவது கிடையாது. வாயைக் குதப்ப வெற்றிலைப் பாக்கு, இருக்கவேயிருக்கு. வேறென்ன.. அப்போதெல்லாம் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ள ரொம்ப பிரியப்படுவேன். ஏனென்றும் தெரியாது. அந்த பருவத்தில் ஆண்கள் மீதான விருப்பம்தான் மிதமிஞ்சியிருந்தது. பள்ளியில் என்கூட படித்த பயல்கள் எல்லாமே முதுகுக்குப்பின்னாடி ‘கோசா, ஒம்போது’ என்றுதான் பேசிக்கொள்வார்கள். எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் எனக்கு அது பொருட்டில்லை, பழகிப்போய்விட்டது.


ஒரு மாட்டின் கன்றுக்குட்டியை தினமும் தூக்கிப்பழகினால், அது மாடானப்பிறகும் நம்மாள் தூக்க முடியும். அதுபோல்தான் எல்லாமே எனக்கு பழகியிருந்தது. புளித்துப்போன வார்த்தைகள். ஒரு உச்ச வெறுப்பான நாளில் அன்னத்துக்கும் எனக்கும் சண்டை. பப்பிக்கு அப்போது மூன்றரை வயதிருக்கும். அன்னம் என்னை ‘வாடா, போடா’ போட்டு திட்டினாள். ஓங்கி அறைந்தேன், ‘டேய் கோசாப்பயலே என்னையாடா அடிக்கிற? சாண்டக்குடிக்கார, உங்கூட எவளாச்சும் குடும்பம் நடத்துவாளாடா, இம்மாந் தண்ணிக்கு உன்னய தெருவுல கையேந்த விடறேன்டா’ என்று பிடித்து தள்ளினாள், பிறகு அப்பன் வீட்டுக்கு போய்விட்டாள். பிறகு மாமனார் சமரசம், இத்யாதிகள். ஆனாலும் அவள்மனதில் என் மீதான இளக்காரப் பார்வை தொடர்ந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. நிஜமாகவே குமட்டுகிறது... உவ்வ்வ்... பாஷாணம் வேலை...


இத்தனை நாள் இல்லாத அல்லது தெரியாத அந்த இடி இரண்டு வாரங்களுக்கு முன்னால்தான் என்தலையில் விழுந்தது. அது எனக்கு தெரியாமலே இருந்திருக்கக்கூடாதா?... பப்பி என் மகளே இல்லையாம்.


‘மகமாயி.. மகமாயி.. நித்தம் உன்னக் கும்பிடுறனே... என்னடி சோதனையிது..’ கொல்லைக்கட்டில் இந்த சிறிக்கியும், அந்தப்பயலும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, எவ்வளவு அன்யோன்யமாக பேச்சு அவர்களுக்குள், குசுகுசுன்னு. ‘தாயே... மகமாயி...மகமாயி... நீயாச்சும் அப்பவே இவள காட்டிகொடுக்கக்கூடாதா?...’ ஆமாம் தெரிந்துதான் என்ன? ஒன்றும் கிடையாது. என் வாழ்க்கையே பப்பிக்காகதானே... அதெப்படி? இத்தனைக்காலம் எனக்குத் தெரியாமல்.... இவர்களின் உறவு புடம்போட்டதுபோல் மறைந்திருக்க முடியும்?.. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திருக்கும், எத்தனை நாள், ராப்பகல் பாராத பட்டறை வாழ்க்கை.. தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டது பிறகென்ன... பப்பிக்குப்போட்ட அந்த நாலு பவுன் நகையும், அவன்தான் கொடுத்திருப்பானோ? அவனேதான்.. நான் கேட்டதுக்கு இவள்தான் பதிலே சொல்லவில்லையே.. அப்படித்தானிருக்கும். அய்யோ பப்பி.. பப்பி..  ‘ச்ச்ச்ச்ச... இதென்ன புதிசா.. ஞாபகம் கொடுக்கும் பப்பியின் முகம் அவன் மூகமாட்டம்... அந்த உள்ளி மூக்கு அவனுடையதுதானோ? அவனுடையதுதான்.. அவனுடையதுதான்.. அப்படியே அவனைத்தான் உரித்துவைத்திருக்கிறாள். இத்தனைநாள் எனக்கு தோன்றவில்லையே.. இதென்ன.. ச்சை..ச்சை..


இந்த பாஷாணம் என்ன இப்படி உடம்பை முருக்குகிறது. யப்பா.. நெஞ்சிக்குள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதுபோல் எரிகிறது.... அன்னம் இன்று பரங்கிப்பழம் போட்டு பூண்டுக் குழம்புதான் வைத்திருந்தாள். அதில்தான் இதை ஊற்றினேன். பூண்டு வாடை எல்லாவற்றையும் மறைத்தேவிட்டது. நல்லதுதான். ஒன்றரை தட்டு சாதமாவது சாப்பிட்டிருப்பாள். தெரிந்ததாலோ என்னமோ அரைதட்டுக்குமேல் என்னால் முழுங்க முடியவில்லை. ரெண்டு மொனரு தண்ணீரும் குடித்தேன்.


அன்னம் போய்ச்சேர்ந்து இவ்வளவு நேரமாகியும் நான்மட்டும் இழுத்துக்கொண்டு கிடக்க அதுதான் காரணம். ஆனாலும் பூண்டுக்குழம்பில் பரங்கிப்பழம் போட்டால் எவ்வளவு ருசி!! நன்றாக வெந்த சேமியாபோல அதன் சதைகள், ஹும்.. ரசித்து ருசித்துச் சாப்பிடவேண்டும். ‘நாடகம் விடும் வேலைதான் உச்ச காட்சி நடக்குதம்மா....’ பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது. ‘கண்ணெல்லாம் சொருகுதுடி, நெஞ்செரிச்சல் தாங்கமுடியலடி ப்ப்பி...தாயீ.. நீ என் பொண்ணேயில்லையாமே?.. அய்யோ..அய்யோ..அய்யோ.. இது அடுக்குமா? தலையிலகூட அடிச்சிக்க முடியலடி.. சண்டாளி... செத்தா... இப்டி ஒரு வாழ்க்கை தேவையாடி ஒனக்கு அன்னம்..?? தேவயா......’ பூலோகம் இருண்டது.

நன்றி அதீதம்

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO