வேதாரண்யத்தில் நடந்த பள்ளி வாகன விபத்திற்கும் (இதுவரை) 9 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் வழக்கம்போல் நமது முதல்வர், முரசொலியில் ஒரு கவிதையும், திரைத்துறைக்கு ஒரு காவியமுமாக எழுதி மௌன கண்ணீரஞ்சலி செலுத்திவிடுவார். உடனிருப்புக்கள் (பிறப்பு) யாரும் கவலைக்கொள்ள தேவையில்லை. அதேபோல் ரத்தத்தின் ரத்தங்களுக்காக கொடநாடு நிலத்திலிருந்தபடி 200 பக்க ஆறுதல் அறிக்கையை எதிர்கட்சித்தலைவர் தயார் செய்துவருவதாக உளவுத்துறை, கோபாலபுரத்தை உசுப்பியுள்ளதாகவும் தகவல். விரைவில் அனைத்து அரசியல்வாதிகளும் நாகப்பட்டிணத்திற்கு அஞ்சலி செலுத்தவும், ஆறுதல் கூறவும் இழப்பீடு வழங்கவும் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள்.
இந்த விபத்திற்கு காரணம் ஓட்டுனர் உரிமம் பெறாத ஓட்டுனரே என்று, மக்களும் போக்குவரத்துதுறை அதிகாரிகளும் கண்டுபிடித்திருக்கின்றனர்(!?). இன்னொரு சாரார் அந்த வாகனத்தில் 15 குழந்தைகளே பயணம் செய்யமுடியுமென்றும், மொத்தம் 22 குழந்தைகள் அவ்வாகனத்தில் இருந்ததாகவும் வருத்தப்படுகிறார்கள் மற்றும் பள்ளிவாகனம் சரியாக பராமறிக்கப்படாததும் காரணமாம். பள்ளிக்கல்வித்துறையும், போக்குவரத்துதுறையும் ஒருவரையொருவர் அயோக்கியன் என்று உண்மைகளை உளரிவருகின்றனர். எனது எண்ணம் 16லிருந்து 22வது குழந்தை வரை அந்த வாகனத்தில் ஏற்றிய பெற்றோர்களுக்கு ஏன் இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் போனது?
எத்தனையோ மூன்று சக்கர வாகனங்கள் எல்லைக்குமீறிய அளவில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு போவதை பார்த்திருக்கிறோம். இத்தனைக் குழந்தைகளை ஏற்றிய ஒரு வாகனத்தில் கடைசி குழந்தையாக தன்னுடையதையும் கடமையே கண்ணாக கடைசியில் ஏற்றிவிடும் பெற்றோர்கள் கொஞ்சமாவது சிந்தித்து பார்க்கவேண்டும். இத்தனை நெரிசலில் நம் பிள்ளையையும் ஏற்றிவிடுகிறோமே, இவ்வாகனம் விபத்துக்குள்ளானால் என்ன ஆகும் என்ற எண்ணம் சிறிதேனும் அவர்களுக்கு இருக்கவேண்டும். எத்தனை பண, மன துயர்களுக்கிடையே படிக்க வைத்தாலும் ஒரு குழந்தையின் உயிர் எவ்வளவு விலைமதிப்பில்லாதது. என்ன சொல்லி என்ன பயன். கந்தனுக்கு புத்தி கவட்டியில் என்பார்கள். இதேபோல அடுத்த விபத்து நடந்தாலும் எவரும் கண்டுகொள்ளப்போவதில்லை.
புளியங்காய்க்கு புளிப்பை ஏற்றிவிடவா முடியும்?




