க.பாலாசி: May 2010

Wednesday, May 26, 2010

யாதுமற்ற....

மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட அம்மாவின் முந்தாணி என் தலையிலும் அப்பாவின் துண்டென் மாரிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் அம்மாவிற்கும் அப்பாவிற்குமான தூக்கம். அப்பொழுதெல்லாம் அரைநாண்கொடி இடுப்பில் தங்கிக்கொள்ள பழகிவிட்டிருந்தது, அதன் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்க பள்ளிக்கூடத்து காக்கி அரைக்கால் சட்டையும்தான். ஆயினும் அவர்களின் கூட்டுக்குள் நான் குளிர்காய்ந்த இரவுகள் பெரிதாய் மதிக்கப்படாமலே இருந்திருக்கிறது. இருந்திருக்கவேண்டும்... அறியாப்பருவமாதலின்....

[ஒருவேளை எங்கப்பாவிற்கு எழுதத்தெரிந்திருந்தால் இப்படித்தான் ஆரம்பித்திருப்பார்...


மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட என்மகனின் தலை என்வலக்கை முட்டியிலும், இடக்கால் அவனம்மாவின் இடுப்பிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் என் மனைவிக்கான தூக்கம்..........]


கூரைக்குள் பொழியும் மழைநீர்க்குட்டுகளை அலுமினிய ஏனங்கள் அசையாமல் நின்று வாங்கிக்கொள்வதைப்போல மழையில் விளையும் என் சில்வண்டுத்தனங்களை அவர்கள் ரசித்திருக்கலாம். ‘அப்பாடி இப்பயாச்சும் மானம் நல்லா பேயுதே’ என்று மச்சுவீட்டு மாமனும், ‘இந்தவாட்டியாவது மழைலேர்ந்து என்னோட பயிர காப்பாத்தும்மா தாயே’ என்று சின்னவண்டி முனுசாமியும், ‘அய்யோ அடிக்கிற காத்துல வாசல்ல உள்ள முருங்கமரம் வீட்ல சாஞ்சிடப்போவுது’ என்று உடையார் வீட்டு ஆச்சியும் புலம்பிக்கொண்டிருப்பது கரைந்து என்வீட்டு வாசல்வரையும் வந்திருக்கும். வழக்கம்போல அம்மா இருப்புச்சட்டியில் பச்சரிசி வறுக்க தாழ்வாரத்தில் கட்டிவைத்த சுப்பிகளை எடுத்துக்கொண்டிருப்பார். ‘பஞ்சாங்கத்துலதான் மழைன்னு போட்டிருக்கானே... எப்டிப்பெய்யாம போவும்’ என்று 222
ம் நம்பர் பீடிப்புகையில் வட்டம் விடாமல் ஊதிக்கொண்டே இயல்பாகச் சொல்லுவார் அப்பா.

மகனாய் நான் அம்மாவின் அருகில், அடுக்கலையில் வறுத்த பொரியரிசியை கொரித்துக்கொண்டிருப்பேன். வேறெந்த இயல்பையும் மீறி பள்ளிக்கூட குறிப்பேட்டில் கத்திக்கப்பல் செய்து தாழ்வாரத்தில் ஒழுகியோடும் மழைநீர்களுக்கு தாரைவார்த்ததாக என் வரலாறு பதியப்படவில்லை. மிதிவண்டிக்கான கனவு மிகைந்திருந்தமையால் கப்பல்விடும் கனவு அதில் மிதிபட்டிருக்கலாம். வாசலொட்டி குதூகலமாய் நீச்சல்பயிலும் மண்புழுக்களும், மிகைநீர் பெற்றதால் சுமக்கமுடியாமல் மிகமெதுவாய் ஊர்ந்திடும் நத்தைகளும், மழையில் பொந்துகளையிழந்து அலைந்து திரியும் நெருப்பெறும்பு கூட்டங்களும், கூட்டுக்குள் விழும் நீர்ச்சிதறல்களுக்கு மெளிதாய் கீய்ச்சலிடும் சிட்டுக்குருவிகளின் கூச்சல்களும், அடுத்த வீட்டு லலி அக்காவின் ஆட்டுக்குட்டிகள் தூற்றிவிட்டுப்போன நனைந்த புலுக்கைகள் வாசம் என அந்நேரத்து அவசரத்துக்கான குளிர்ச்சிகள் ஏராளம். மழைக்கு மகுடியூதும் தவளைகூட்டங்களின் இரைச்சல்கள் சிலருக்கு எரிச்சலாகவோ அல்லது வரமாகவோ இருக்கக்கூடும். இன்னும் எத்தனையோ...


பணியிடம்பொருட்டு யாதுமற்ற தனியறையில் பாதுகாப்பாக நாற்காலி போட்டமர்ந்து எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடையில் முறுக்கு ஒரு பொட்டலம், உருளைக்கிழங்கு வறுவல் ஒரு பொட்டலம் வாங்கி சுவைத்துக்கொண்டே மழையை ரசிக்க சன்னலைத்திறந்தால் மேற்சொன்னவைகளே சாரல்களாய்....





Friday, May 21, 2010

வெட்டிவேரு வாசம்....


.......வெட்டிவேரு வாசம்... இந்த வெடலப்புள்ள நேசம்.... பூவுக்கு வாசமுண்டு.... பூமிக்கும் வாசம் உண்டு...... வேருக்கு வாசம் வந்தது ஓஓ.. மானே....

“அடியே........ ஏங்கறன்ங் காலங்காத்தால பாட்டப்போட்டு உசுரெடுக்குறன்ங்..... ”

“ந்ந்ந்த ஏந்திரிய்யா.... மணி ஆறாச்சு...... ”

“ஏ.... என்னைக்குல்லாம இன்னைக்கு என்னாங்கறன்ங்.... ”

“யோ... இன்னைக்கு நம்ம கண்ணால நாளுயா.... ”

“அட....ரெண்டு பெத்தப்பறமுமா நாபவம் வச்சிருக்குறன்ங்..... ”

“ம்ம்க்க்கும்.... எவத்தாளத்துக்கு ஒண்ணு கொறச்சல்ல... ஏந்திரி மொதல்ல.. கொள்ளடுப்புல வெந்நீரு போட்ருக்கன்ங்... தோப்புக்கு போய்ட்டு வந்து குளி.. நாத்தத்தோடவ படுத்துகிட்டு.....”

“ஏங்... காலைல்ல குளிக்க சொல்றங்கறன்ங்... ஏன்ங் எங்கப்போணும்... ”

“வாய்யா.... திருக்கடவூருக்கு போயிட்டு வந்திடுவோம்..... ”

“அடியே...கோயிலுக்குபோறவ கேக்குற பாட்டாடி இது?? அதுவுல்லாம அறுவதாங் கண்ணாலத்துக்கதாங்கறன்ங் அங்கப்போவணும்...”

“ஆமா... இப்ப போனா அந்த சாமீ வேண்டான்னுடுமாக்கும்... ”

“சொல்லிக்கேக்குறவளா நீயி.... இரு..... ”

“யோ... அப்டியே... மஞ்சப்பொட்டியில வேட்டி சட்ட சலவப்போட்டு வச்சிருக்கன்ங்... கட்டிக்க...”

“அட... இதுவேறயா... நமக்கு ஏங்கறன்ங் இந்த சவடாலு.... ”

“....வாயடைக்காத நீ..... யோவ்... நல்லா யோசனப்பண்ணிப்பாரு.... என்னைக்காவது சாக்கட நாத்தமும் இந்த ஊர்க்காரப்பயலுவோ பீநாத்தமுல்லாம உன்ன பாக்க முடியுதா?”

“ம்ம்ங்ங்ங்.... கழுதைக்கு வாக்கப்பட்டா ஒதப்பட்டுதான ஆவ்ணும். புதுசா என்ன ஓசன....சரி... வர்ரப்ப மடப்பொறத்துல பெரியாச்சிய ஒரு எட்டு பாத்துட்டு, பசங்களையும் அனுப்பி ஒருவாரமாச்சி... அதுங்களையும் பாத்துட்டு வந்திடுவம்...கண்ணுலையே நிக்குதுங்க...”

“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்... மொதல்ல கோயிலுக்கு போயிட்டு நேரா வூட்டுக்குதான் வரணும். மதியானம் சமைச்சி சாப்புட்டு மொத ஆட்டம் சிம்லஸ்க்கு படம் பாக்க போவணும்... ”

“அடி... எழவெடுத்தவள... பெரிசா கனவோடத்தான் திரியிறயா நீ... வௌக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் தேவையா....... ம்ம்ம்ம்.........”

•••••••••••••••••••

“ஏ..சின்னாளு..?? .சின்னாளு....?? ”

“ஏக்கா... காலைல ஜோடிச்சிட்டு களம்பிட்ட...??”

“கோயிலுக்கு போயிட்டு... 12 மணிப்போல வந்திடுவன்ங்.. மொட்ட தெருவுக்கு மீனு கொண்டாரும்.... பாற கருவாடும், சதநண்டும் கொண்டார சொல்லிக்கன்ங்.. இந்தா 50 ரூவா இருக்கு... வாங்கி வைய்யி வந்திடுறேன்ங்..”

“எக்கா... கோயிலுக்கு போறங்கறன்.. கருவாடு, நண்டு வாங்கச்சொல்ற.. ”

“அதான் போயிட்டு வந்திடுவன்ல்ல... பிறவென்ன.. வாங்கி வைய்யிந்த...அப்டியே கொள்ளைக்குப்போயீ கொழம்புல போட ரெண்டு வாழக்காவும் பறிச்சி வைய்யி... ”

“ம்ம்ம்... ஒரு மாக்கமாத்த இருக்க... போயிட்டு வா....”

•••••••••••••••••

“நல்லா வேண்டிக்குய்யா..... மொதல்ல இந்த நாத்தம்புடிச்ச வேலய வுட்டுட்டு மேல போவணும்.. ”

“அடியே நானுங் பாக்குறன்ங்... .நாத்தம் நாத்தமுன்னே பேசிட்டு திரியிறன்ங்... போட்டன்னு வைய்யி...”

“நாத்தமுல்லாம பின்ன என்ன... சந்தனத்துலயா டெயிலி முழுவி கெடக்குற நீ.. ”

“ஆமா.. அய்யன்ங் போனப்பறம்... கருணப்பாத்து எனக்கு இந்த வேலய கொடுத்தானுவோ.. இல்லன்னா தெருத்தெருவா குப்பய கூட்டிட்டு எவன்டா எட்டனா ஒர்ரூவா குடுப்பான்னு கையேந்திகிட்டுதான் நிக்கணும் தெரிஞ்சிக்க.”

“இப்ப மட்டும் என்னவான்ங்... எவன் வூட்ல பீத்தக்கொழா அடச்சிக்கெடந்தாலும் உள்ள யெறங்கி நோண்டி வுட்டுட்டு அப்டித்தான செய்யிற... ஒங் மேல வர்ர நாத்தம் பத்தாதுன்னு சாராயமும், பீடியும் வேற...”

“ஏன்டி தெரியாமத்தாங் கேக்குறன்ங் ஒப்பன் உன்ன இந்த நாத்தத்தோடதானடி பெத்தான்ங்...”

“சரி... கோயில்ல நின்னு சத்தம்போடாத... போயிட்டு வந்து வச்சிக்கலாம்ங்....”

••••••••••••••••••••••

“ஏய்.. படமும் பாத்தாச்சு.. சந்தோஷந்தான...?? லைட்ட போடு மொதல்ல.. இருட்டாருக்கு...

“இந்தாய்யா அப்டியே போயி குளிச்சிட்டு வா...”

“ம்ம்ம்........ம்ம்ம்.......என்னா வேக்காலம்....மானம் வேற மூடிக்கெடக்கு.. சரி அந்த துண்ட எடு... ”

••••••••••••••••••••••

“இந்தா இத போட்டுக்க.. ”

“என்னாடியிது... சவ்வாது பவுடறாட்டம்.... ”

“அதான்..”

“இந்நேரத்துல என்னாத்துக்கு?? ”

“யோ... நல்லா நெனச்சிப்பாரு... எப்பவாவது உம்பக்கத்துல மூக்க மூடாம படுக்க முடியுதா? நானும் பொம்பளதான... ஊருல உள்ள மனுஷப்பயலுவோல்லாம் என்னமா சம்முன்னு இருக்கானுங்க. உன்னயும் அந்த மாதிரி பாக்கணும்னு எனக்கும் ஆச இருக்கும்ல.. நீ வந்தப்பறமும் குளிக்கவுமாட்ட.. சாராயப்பாக்கட்ட ஒடச்சி ஊத்திகிட்டு...கொஞ்சமாச்சும் நெனச்ச்....”

“ஏ... வாயமூடு.. எனக்கும் ஆசபாசமுல்லாமயா கெடக்குறன்ங்.... இப்ப என்னங்கற.... ”

“இந்தா இத போட்டுக்க... உம்மாருல கொஞ்சநேரமாச்சும் இந்த வாசத்தோட சாஞ்சிகெடக்கணும்யா...எனக்காவ....”

“ச்ச்சீ... ஏன்டி கண்ணக்கசக்குறன்ங்... ஒனக்காவ்வும், புள்ளைங்களுக்காவுந்தானடி இந்த நாத்தப்பொழப்பு...என்ன பண்ணச்சொல்ற...சரி...வா........”





•••••••••••



Friday, May 14, 2010

இலைமறை கனி...


அம்மன் படத்துடன்
பிச்சைக்கேட்டு வரும் ஒருத்திக்கு
குடிசைக்குள்ளிருந்தவள்
‘இல்லை’யென்ற பதிலையே
வைத்திருந்திருந்தாள்...

பிறகு
மாதா படத்துடன் வந்தாள்...
அதே பதில்தான்....

யாசித்து வந்தவளும்
தடவைக்குத்தடவை வெவ்வேறான
காரணங்களை அவிழ்த்துவிட்டாள்...

ஒருமுறை அப்பா, அம்மா
அடுத்து ஊனமுற்ற தம்பி
அடுத்தடுத்து வேறொன்று....

இந்தமுறை ‘என் கல்யாணத்திற்கு’ என்றவளுக்கு...
அதேபதிலை சொல்லமுடியவில்லை...

உள்ளே சென்று
சில்லரையுடன் வந்தாள்...
தன் கருகமணியை மறைத்துக்கொண்டு...


.

Tuesday, May 11, 2010

இதாங்க நடந்துச்சு....



‘ஏன்டி புள்ளையப்போட்டு அடிக்கிறவ.?’

‘ம்க்கும்... புள்ளைக்கொண்ணுன்னா வந்திடுவீங்களே... துண்ட முறுக்கி தோள்ல போட்டுகிட்டு’

‘நீ..இங்க வாராசா.. ஏங் அம்மா அடிக்கிறா?’

‘ஆமா... அப்டியே கேட்டாளும் சொல்லவாப்போவுது. எங்கிட்டன்னா வாயடிக்கிறதப்பாரு...’

‘சரிடி... என்னாப்ப....??’

‘ங்ங்ங்.... காலு மொலைச்சிடுச்சுல்ல தொரைக்கு... கீழத்தெருலேர்ந்து மேலத்தெருவுக்கு வெள்ளாட களம்பிட்டாரு.’

‘அதுக்கேன்டி அலுத்துக்கிறவ. புள்ளைங்கன்னா வீட்டுக்குள்ளறயே பொத்திப்பொத்தியா வச்சிக்கமுடியும். அங்கணஇங்கண போயீ வெள்ளாடத்தானடி செய்யுங்க... அதுக்குப்போயி பெரிய இவளாட்டம்... ’

‘நீங்க இப்டியே சப்போட்டு பண்ணி பேசுங்க.. இப்ப இருக்குற மேலத்தெரு பசங்கள்லாம் சரியில்ல... அதுங்கள்ட பேசிப்பேசி... இப்ப இதுவும் எதுத்துப்பேச ஆரம்பிச்சிடுச்சி... ’

‘சரி வுடு... எல்லாம் சரியாப்போயிடும்...’

‘க்க்கும்... இப்டிச்சொல்லுற வாயித்தான்... நாளைக்கு கண்ணுகுட்டி வளத்த கழுசடயப்பாருன்னு சொல்லும். அப்ப வச்சிக்கிறேன் உங்கள... ’

‘அடிப்போடீ... மொட்டத்தலைக்கும் மொழங்காலுக்கும் இப்ப முடிச்சிப்போடுறவ. வளப்புங்கறது இதுயில்ல தெரிஞ்சிக்க...’

‘ஆமா... நாவொன்னும் தெரியாம கெடக்கேங்... நீங்க வாங்க சொல்லிக்கொடுக்க... ’

‘அடியே என்னாடி... நானும் பாக்கிறவ சத்தம் ஓவராப்போவுது...பாத்துக்க..’

‘அப்டியே உம்மகிட்ட சத்தம்போட்டுட்டாலும் அடங்கிப்போயிடுவீரு... பேச வந்துட்டாரு.. பேச்சு.. போய்யா சும்மா... ’

‘ஏய்... வாய மூடிட்டு..மொதல்ல.. சும்மாயிருடி...’



‘எதுச்சொன்னாலும் அப்டியே அடக்கிடுங்க... குடும்பத்துக்கே இதே பொழப்பாப்போச்சு..’

‘ஏய்..என்னய எதுனாச்சும் சொல்லு எங்குடும்பத்த சொல்லாத...ஆமா... ’

‘யோ..போயா.. உங்குடும்பத்தப்பத்தி எனக்கு தெரியாதா... எங்கப்பன் பேச்ச கேட்காம நான் உன்னத்தான் கட்டுவன்னு அடம்புடுச்சி கட்டுனனுல்ல.. எனக்கு இதும்வேணும், இன்னமும் வேணும்..’

‘அதுமாதிரிதான்டி நானும், ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா... எந்தலையெழுத்து உன்ன கட்டிகிட்டு மாரடிக்க வேண்டிகெடக்கு...’

‘ஆமா சும்மா கூட்டிட்டு வந்தமாதிரி பேசுற.. 15 பவுனு நகய எப்பன்ட விடாப்புடியா வாங்குணப்ப இந்த மாரு அடிச்சுக்கலையா... ’

‘அடியே எதுத்து எதுத்து பேசுறவ... அப்பறம் போட்டேன்னு வய்யி... தாங்க மாட்ட..’

‘ஆமாய்யா.. என்னய எப்பன் அதுக்குத்தான் பெத்து உட்ருக்கான்... அடிப்ப நீயி...??!!!’

(ப்ப்ப்ளார்.............)

‘ஆத்தாடி.....யோவ்... அடிச்சிட்டில்ல... இத்தன நாளு இல்லாம கைய நீட்ரளவுக்கு ஆயிட்டீல்ல.. இனிமே உங்கூட வாழமுடியாதுய்யா... நான் எப்பன் வீட்டுக்கு களம்புறேன்.’

‘போடீ...போடீ.... இவ இல்லன்னா வாழமுடியாது பாரு... பெரிய இவ... ’

‘ஆமாய்யா... இப்ப ஒனக்கு தெரியாது. நாளைக்கு எவடா கொஞ்சம் தண்ணி காச்சி ஊத்துவான்னு தெருவுல நிப்ப பாரு... அப்பதான் தெரியும்... ’

‘அடிப்போடீ.. ஆனா அந்த மடம்... ஆவாட்டிப்போனா சந்தமடம்.... ’

‘நாங்களம்புறன்ய்யா... நாளபின்ன எப்பன் வீட்டுக்கு வருவீல்ல .. சமாதானம் பேசிட்டு...அப்ப வச்சிக்கிறேன் உன்னய... ’

‘பூன கண்ண மூடுனா பூலோவம் இருண்டுடாதிடீ.. தெரிஞ்சிக்க... நாங் ஒருக்காலும் வரமாட்டேன்... ’

‘அதையும்தான் பாப்போம்...அப்பனும் புள்ளயுமா கெடங்க... ’

•••••••••

‘அம்மே..... அம்மே.......... எனக்கு அம்மா வேணும்...ம்ம்ம்....ம்ம்ம்..........’

‘என்ன நொம்மே... அதான் போயிட்டாள்ல.... எல்லாம் உன்னால... இனிமே மேலத்தெருவுக்கு வெள்ளாட போவ நீயி.... எங்க அந்த குச்சி.....

‘(போடு... 1.......2...........3...........)’

‘அவ்வ்வ்வ்வ்வ்வ்........................................... ’




Friday, May 7, 2010

பிறழ்நிலை...



தினசரி


(பேருந்து நிலையம்)

அண்ணா....அண்ணா...???

ம்ம்ம்....??

காசுண்ணா... சாப்டு ரெண்டு நாளாவதுண்ணா....

ம்கூம்... சில்லர இல்ல பாப்பா...

(ச்ச... பஸ்டான்டு, ரயில்வே ஸ்டேசன் எங்கணப்போனாலும் வந்திடுதுவோ.. இதுங்கள பெத்ததுக என்னப்பண்ணுதுங்கன்னு தெரியல??)

********************

அவ்வப்பொழுது

(பேருந்து நிலையத்திலிருந்து எனது வீதிக்கு வரும் வழி)

‘ஏங்கண்ணு இன்னைக்கு வேலைக்கு போவலையா?’

‘இல்லீங்க... இன்னைக்கு ஞாயித்துக்கெழம லீவு. (சுமார் 40 வயது பெண்மணி...யாரு இவங்க...!!!? எங்கணயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா தெரியலையே..??)’

‘ஓ.. ஏங்கண்ணு சோப்புல்லாம் வாங்கிட்டு போற?’

‘ம்ம்.. தீந்துடுச்சு.. அதான்.’

‘ஆமா இப்ப எங்க வேலப்பாக்குற???’

‘அதே ......... கம்பனிதான்.’ (அட தெரிஞ்சவங்க மாதிரி பேசுனாங்க... இப்ப இப்டி கேட்குறாங்களே?!! நாம ஆரம்பத்லேர்ந்து அங்கணதான இருக்கோம்)

‘ஒரு 2 ரூவா இருந்தா கொடேன்... டீக்குடிக்க....’

(ஆகா... இது நல்ல டெக்னிக்கா இருக்கே.... ) சில்லர இல்லைங்களே...

சரி.... போ.....

********************

உள்ளுரையாடல்

மனசாட்சி: – ச்ச்ச... எத்தனப்பேரு இந்த மாதிரி.. கைகாலெல்லாம் நல்லாத்தானிருக்கு... பெறவு என்னாத்துக்கு இந்தமாதிரி அடுத்தவேள சோத்துக்குக்கூட வழியில்லாம சோம்பேறியா இருக்காங்க.? இவங்களோட காலம்லாம் எப்டி ஓடுதுன்னே தெரியல.?

புத்தி: – சரி... இப்ப அதுக்கு என்னாங்கற?

மனசாட்சி: – ஏதாவது செய்யணும். இந்த மாதிரி உள்ளவங்களுக்கு.. அட்லீஸ்ட் எங்கணயாவது வேல வாங்கிக்கொடுத்தாக்கூட பொழச்சிப்பாங்க.

புத்தி:– அப்டி செஞ்சா பொழச்சிப்பாங்கன்னு நினைக்கிறீயா?

மனசாட்சி: – ம்ம்...இல்லன்னா போறாங்க... கடமையா நெனச்சி செய்யலாம்ல...

புத்தி: – சரி... யாருட்ட போயீ இவங்களுக்கு வேல கேட்ப? உன்னோட முதலாளிகிட்ட கேட்க முடியுமா உன்னால?

மனசாட்சி: – அய்ய.. எங்காளுங்க காம்ப்ளக்ஸ் உள்ளாரயே உடமாட்டாங்க....

புத்தி: – பெறவென்ன? மூடிகிட்டு போவ வேண்டியதுதான.... என்னாத்துக்கு இந்த ஃபீலிங்கு...

மனசாட்சி:– ஒரு தவிப்பு, அக்கரை.... அதான்...

புத்தி: – சரி... அடுத்ததா நீ எங்கப்போவனும்?

மனசாட்சி: – ம்ம்... சாப்பிட்டு இன்னைக்கு மதியானமாவது நல்லா தூங்கணும்...கண்ணெல்லாம் ஒரே எரிச்சலா இருக்கு.

புத்தி: – ம்ம்.. மொதல்ல அதச்செய்யி....

மனசாட்சி: – ம்ம்...

********************

நடைமுறை

டிங்..டிங்...டிங்......டிங்..டிங்..டிங்.....டிங்..டிங்..டிங்...............

‘ஹலோ..’

‘டேய் நாங் குமார் பேசுறன்டா... திருப்பூர்லேர்ந்து இன்னும் கொஞ்சநேரத்துல களம்பிடுவேன்’

‘எத்தன மணிக்கு வருவ?’

‘ரெண்டர மணிக்குள்ள வந்திடுவேண்டா... நீ சாப்பிட்டியா?’

‘இல்ல, நீ வந்தொடன சாப்பிட்டுக்கலாம் வா...’

‘ஏய் நான் இப்ப கொக்கரக்கோ ரெஸ்டாரண்ட்ல இருக்கேன். உனக்கும் சேத்து பிரியாணி பார்சல் வாங்கிட்டு வந்திடுறேன்.’

‘அப்டியா.. சரி..சரி... ம்ம்ம்... கொக்கரக்கோ பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு. சரி.. அப்டியே ‘தந்துரி சிக்கன் வித் ஆனியன், லெமனோட வாங்கியாந்திடு..’

‘சரிடா...’

‘ஏய்... சீக்கிரம் வந்திடுடா...’

‘சரி..சரி.. வைக்கட்டுமா.??’

‘ம்ம்ம்.........’

********************

Tuesday, May 4, 2010

நல்லவேளை...




முந்தைய வெள்ளி...

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி கோவில்,

சென்றவாரம் திருப்பத்தூர் அணேரி,

அமாவாசைதோரும் திருமணஞ்சேரி,

வழக்கம்போல்....

இடையன்குள பிள்ளையாரும், அரசமரமும்....


வாரயிதழில் கண்ணுற்றபடி

மாதமொருமுறை ஒரு மருத்துவச்சி...

ஆறுதலுக்காக...

சித்த வைத்தியமும், சில லேகியமும்கூட...

பிள்ளை வேண்டி

அவள் தினசரியில் கலந்துவிட்டது...


நல்லவேளை...

எனக்கு மாமனார் மட்டுமே.....




  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO