க.பாலாசி: July 2010

Wednesday, July 21, 2010

ஒட்டுவாரொட்டி...

முருகேசனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் முருகேசனுக்கு பத்திகொண்டுதான் வரும்.

‘ஒருநாளைக்கு பதினஞ்சாயரத்து சொச்சம் பேராவது பொழங்குற எடத்துல க... பயலுங்க ஒரு பக்கத்தால மட்டும்தான் ஒண்ணுக்க இருக்க கட்டிவிட்டுருக்கானுங்க. அந்தப்பக்கத்தால ஒண்ணு கட்டினா இவனுவ வீட்டுக்காசு கொறஞ்சமாதிரி நெனப்பு. இந்த செவத்துல பொழுதுக்கும் நின்னு ஒண்ணுக்கடிச்சு நாறடிக்கிறத பயலுங்கல என்னத்த சொல்றது. பாழப்போனவனுங்களுக்கு புத்தியிருக்குமா என்னான்னே தெரியல. எல்லாம் முழுக்காலு சட்டையும் சவடாலுமாத்தான் திரியிரானுங்க, ஒரு பயலுக்காச்சும் இப்டி பொதுவால நின்னு இருக்கோமே இதுனால வர கெடுதல நெனச்சுப்பாத்தானுங்களா? நாத்தம் நாத்தம் அண்டசயிக்கல’
இது முருகேசனின் அன்றாட புலம்பல்.

‘ஏப்பா கொஞ்சம் தள்ளிதான் போங்களாம்பா.. அங்கணத்தான் கட்டிவுட்டுருக்காங்கல்ல’
இப்டியும் சிலநேரம் கத்திப்பார்ப்பான். ‘நல்லது சொன்னா எவங்கேக்குறான்.. நாசமாப்போச்சு..நமக்கென்ன’ என்று நினைப்பதுதான். ஆனாலும் அவனால் முடிவதில்லை. ‘பங்காளி ஆத்தர அவசரத்துக்கு போறதுதான். இதெல்லாமா பாத்துகிட்டுருப்பாங்க, அழிஞ்ச கொல்லையில ஆடு மேஞ்சான்ன? மாடு மேஞ்சான்ன??’ன்னு பக்கத்துக்கடை பங்காளி சொல்வதுண்டு. ‘சும்மாகெட பங்காளி. எனக்கு கெட்டக்கோவம் வந்திடும்’ என்பான்.

அன்றைக்கு ஆறுமணிக்கு கடைதிறக்கவேண்டியவன் ஏழு மணி ஆகிவிட்டது. அவசரஅவசரமாக வந்தவன் ‘இந்த கொண்டாங்கொடுத்தான் ஒறவே வேண்டான்னு நெனைக்கறதுதான். என்னப்பண்ணி தொலையறது. வந்ததுங்களுக்கு எதாவது செஞ்சித்தொலைய வேண்டிக்கடக்கு’ மனதிற்குள் புலம்பியவாறே ‘கிரிச்’ யென்ற உருமலோடு இயங்கும் சட்டரை மேலே தூக்கினான். கொல்லைப்பக்கமுள்ள ஒரு கழிவரையையும் சொந்தங்கள் அடைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. ‘எல்லாத்தையும் அடக்கலாம் போலருக்கு, இத அடக்க முடியறதில்ல. கடையத்தெறந்திட்டு போலாம்னா இப்டி அடிவயித்தால படுத்துதே. நேத்தைக்கு நைட்டு இந்த அரிசி கணக்கா உள்ள மாத்தரைய (Cetirizine) சாப்டது தப்பாப்போச்சு. நிமிசத்து ஒருவாட்டியா வரும். கருமம் புடுச்சவனுங்க. சலி அலர்ஜின்னாலும் சரி, அரிப்பு, புண்ணுன்னாலும் சரி இதததான் தர்ரானுங்க.’ அதற்குள் யாரோ கடைக்கு வந்துவிட்டார்கள்.

‘வாங்கம்மா என்ன வேணும்?’.
‘ஆப்பில் என்னவெல’.
‘கிலோ 140’
‘அரகிலோ போடுங்க’
‘ம்ம்ம்’
‘பை வச்சிருக்கீங்களா?’
‘இருக்கு’
‘இந்தாங்க.... காலைலேயே நூறுவாய தர்ரீங்களே. சில்லர இல்லைங்களா?’
‘இல்லப்பா’
‘பங்காளி இந்த நூறுவாய ஒடச்சி கொடேன்.’
‘காலைல ஏது பங்காளி. இல்ல...’
‘இரும்மா, எதுத்தால பூக்கடயில வாங்கியாரேன்.’

‘ச்ச..ச்ச.. அடிவயத்தவேற லேசா வலிக்கற மாரி இருக்கே. இனிமேலும் முடியாது. யாவாரத்தையும் உடமுடியல. நல்லவேள சில்லர வாங்க இங்கவந்தோம். அப்டியே போயிட்டு வந்திடவேண்டியதுதான்’ கீழண்டப்பக்கமாய் உள்ள இடுப்பளவு சிமெண்ட் கிராதிப்போட்டு அடைத்திருந்த அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்திற்குள் நுழைந்தான். உள்ளபோனதுதான் தாமதம்...‘அடக்கருமம் புடிச்சவங்களா இங்கயா வந்து பேண்டு வப்பானுங்க, நாறப்பயலுக. காலங்காத்தால, ஹ்கூம், கொல்லுன்னு மொய்க்கிற ஈக்கூட்டத்த பாத்தாலே பயமாயிருக்கு. வாயில நல்லா வருது. என்னாத்த சொல்லி திட்டறது. இப்ப எங்கப்போறது?. ம்கூம்....... அவசரத்துக்கு பாவமில்ல. இன்னைக்கு இந்த செவத்தாலையே போவவேண்டியதுதான். இங்க கூட பரவாயில்ல போலருக்கு. மூக்க பொத்திகிட்டே இருந்துக்கலாம்’ குற்றவுணர்ச்சியும் தானாக பொத்திக்கொண்டது.

•••••••••••••••

ராமநாதனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ராமநாதனுக்கு பத்திகொண்டுதான் வரும்.........................................


Monday, July 19, 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?

நண்பர் புலவன் புலிகேசி என்னையிந்த தொடரிடுகைக்கு அழைத்திருந்தார். அவருக்கு எனது நன்றிகள்.



1)வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சி@பாலாசி

2)அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. க.பாலாசி என்பதுதான் எனது முழுமையான பெயர். முதலில் என்பெயரின் கடைசியெழுத்தான ‘சி’ என்பதை தலைப்பாக வைத்திருந்தேன். பிறகு மாற்றம்வேண்டி சி@பாலாசி என்பதாக மாற்றிக்கொண்டேன்.

3)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

முதலில் கேபிள் சங்கரின் திரைவிமர்சனங்கள் படிக்க ஆரம்பித்து அப்படியே படிப்படியாக வலைப்பூவென்றால் என்னவென்பதை அறிந்து பிறகு ஏதோவொரு நப்பாசையில் எனக்கான வலைப்பூ ஒன்றை உருவாக்கிக்கொண்டேன். அனுபவங்கள், மனதில் உருவாகும் ஆக்கங்கள், சிலசமயம் சரி, தவறெனப்படுவதையும் பதிந்துகொண்டிருக்கிறேன். அவை கட்டுரையாகவோ கவிதையாகவோ இருக்கலாம்.

4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

தடியெடுத்தவர்கள் யாவரும் தண்டல்காரர்களில்லை. பிரபலம் என்ற அடைமொழி வலைப்பதிவாளர்களுக்கு பொருந்துமா என்றும் தெரியவில்லை. பாதையெங்கும் வியாபித்திருக்கும் பூக்களின் வாசம் சிலநேரம் ரம்மியமான மழையை மனதிற்குள் தூவிவிடும். சிலநேரம் அமர்ந்து அலவலாவ செய்துவிடும். அதுபோல் விரும்பியவர்களை மற்றும் விரும்பின இடுகைகளை வாசிக்கிறேன், பின்னூட்டமிடுகிறேன் அவ்வளவே.

5)வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு. பகிர்வுக்காக சில அனுபவங்களை எழுதியிருக்கிறேன். அது நல்லதோ, கெட்டதோ யானறியேன். படிப்பவர்களின் ரசிப்பு மற்றும் பின்னூட்டங்களை தவிர்த்த விளைவுகள் என்று சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை.

6)நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சயம் பொழுதுபோக்கவும், போக்கிற்காகவும் அல்ல. சம்பாதிப்பதற்காகவும் அல்ல.

7)நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


ஒன்றுக்கு மட்டும்தான்.

8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

மற்ற பதிவர்கள் மீது கோபம் என்று இதுவரை வந்ததில்லை. மண்வாசனையும், மனிதத்தன்மையும், சூழ்நிலைச்சார்ந்த அக்கரையையும் வார்த்தைகளில் எடுத்தியம்பும் அனைவரும் பொறாமைகள் தவிர்த்த விருப்பத்திற்குரியவர்கள். அதையும் மீறின பொறாமை அவ்வப்பொழுது எழுவதுண்டு. இன்னாரென்று எளிய அடைப்புக்குள் புகுத்திவிடயியலாது.

9)உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..

முதலில் பின்னூட்டமிட்டவர் கோவி.கண்ணன் என்று ஞாபகம். தொடர்புகொண்டு பாராட்டியவரெனில் அது ஈரோடு கதிர் அவர்களாகத்தான் இருக்கவேண்டும். எதோவொரு கவிதைக்கோ, கட்டுரைக்கோ கிடைத்த அவரின் பாராட்டும் ஊக்கமும் மென்மேலும் எழுதத்தூண்டியது. தவறெனில் சுட்டிக்காட்டவும் அவர் தயங்கியதாக தெரியவில்லை. அதுவே இன்றென் கூழாங்கல் நிலைக்கு காரணமும்கூட. பின்காலத்தில் வந்தமர்ந்த வானம்பாடிகள் அய்யாவின் தோள்தட்டலும் ஒருவித உற்சாக மனப்பான்மைக்கு பெரிதும் காரணம். இவர்கள் தவிர்த்த அனைத்து வாசிப்பாளர்கள் மற்றும் என்னுடன் பயணித்து படித்து பின்னூட்டமிடும் அனைவரும் என்னை தோள்நிறுத்தி பாராட்டும் வகையைச்சாருவர்.

10)கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. மனம்போன வாழ்வென்றில்லாமல் முயன்று வாழ்கிறேன். மற்றபடி என் வாழ்காலம் இவ்வலைதள தலைப்பின் விரிவில் கூறினதுபோல அமையவேண்டுமென்றே விழைகிறேன்.


இந்த இடுகையைத்தொடர நண்பர் முரளிக்குமார் பத்பநாபனை அழைக்கிறேன்.




Monday, July 5, 2010

கொஞ்சம் நடப்போம்...


‘ஐயோவெனின் யான் புலி அஞ்சுவலே;
அணைத்தனன் கொளினே, அகன்மார்பு - எடுக்கல்லேன்!
என்போற் பெருவிதிர்ப் புறுக. நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி -
வரைநிழற் சேர்க- நடந்திற் சிறிதே’

(புறநானூற்றில் 255வது பாடல்; பாடியவர் வண்பரணர்)

பாடல் விளக்கம்
ஐயோவென்று கூக்குரலிடின், புலி வந்துவிடுமோவென்று அஞ்சுகிறேன்.உன்னைச் சுமந்து செல்லலாம் என்றால் ரொம்ப கனமாக இருக்கிறாய். உன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய நியாயமற்ற கூற்றுவன் என்னைப்போலவே பெரிதாக வருத்தப்படட்டும். தூரத்தில், மலையடிவாரத்தில் நிழல் உள்ளது. என் வளைக்கையைப் பற்றிக்கொள், கொஞ்சம் நடப்போம். (போர் நிலத்தில் காயமுற்று மரணமெய்ய காத்திருக்கும் தலைவனைக் கண்ட தலைவி, தன்னிலையெண்ணி புலம்புவதாக அமையப்பெற்றது)

இங்கே என்மொழிக்காக என்னுள் அன்றாடம் ஒலித்திடும் வரிகள். இச்சூழ்நிலை வழியில் நம் கரங்களும், குரல்களும் இடையறாமல் இம்சிக்கும் என் தமிழை, நான் சுமந்தோடும் வழியில் கால்களையேனும் இடறாமல் இருக்கவேண்டுகிறேன்.





இருமனச்சரம் கோர்க்கும் திருமண நிகழ்வில் ஓர் ஆண்மகன் விரும்புது ஒரு பதிவிரதையாகத்தான் இருக்கவேண்டும். அவளுக்கும் அப்படியே. இருபாலிலும் யாரோவொருவர் முன்னமே புணர்ச்சியடைந்திருப்பின் முகச்சுளிப்பிற்கு ஆளாக நேரிடும். அதை இச்சமூகம், என்சமூகம் விரும்புவதுமில்லை. பிறகெப்படியிங்கே வன்புணர்ச்சிகளொத்து என்மொழி மட்டும் இடையறாது கற்பிழக்கிறது என்றுதான் தெரியவில்லை. பிறன்மொழிக் கொண்டு என்மொழியில் பாலினக்கலப்பை புகுத்துவது எவ்வகையில் சிறப்பினையெய்த வழிக்கொணரும்.

நம் வீட்டு தோட்டம் எழிலடைய நாமே விரும்பபாவிடின், அதன் தொண்மையை எத்துணை தலைமுறைவரை நம்மால் கொண்டுச் செல்லமுடியும்? பெற்றவளை புறந்தள்ளி, என் பூவனத்தைப் பயிர்மேயும் வேலியாக ஆட்கொண்ட கள்ளிச்செடியின் முலைகளில் வழிந்ததை, இதுவரையும் தாய்ப்பாலாக அருந்துவது சரிதானோ?

பள்ளியில் I am suffering from fever ல் தொடங்கிவைத்த இக்காய்ச்சலை எம்மருத்திட்டு குணப்படுத்த? என்பின் வரும் தலைமுறைக்கு எந்த மொழியை இதுவென் செம்மொழியாக சுட்டிவிட்டு போகப்போகிறேன். என்வீட்டில் நான் அடைகாத்த குஞ்சுகளுக்கு நிழல்தர கூரைகளுக்குப்பதில் சிலந்திப் பூச்சிகளின் எச்சங்களான ஒட்டடைகளையா விட்டுச்செல்லமுடியும்? கொட்டிக்கிடக்கும் இத்தனையெழுத்துக்களைவிடுத்து வேறெந்த மொழியுருவில் நான் என் மனதை, என் உணர்ச்சிகளை, என் மகிழ்ச்சி மற்றும் கண்ணீரை அடையாளப்படுத்திவிட முடியும். நிச்சயம் முடியாது.

இன்றையநாளில் தமிழ்நாட்டு பள்ளிகளில் 5ம் வகுப்பில் ஆங்கிலமொழி படிப்புத்திறன் 81 சதம் மாணாக்கர்களுக்கு இல்லையென்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதே ஆய்வோர் எத்துணை மாணாக்கர்களிடம் தமிழ் மொழியின் படிப்புத்திறனை சோதித்தார்கள் என்று தெரியவில்லை. அப்படியாயின் 90 சதத்திற்குமேல் என்தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழினை இலக்கணப்பிழையின்றி எழுதப்படிக்க தெரியாது என்பதை உணரலாம். இது என்சமுதாயத்தின் அடித்தளமிழந்த நிலை. அவரவற்கு வாழ்நிலை ஏற்றங்களின்பால் கொண்ட ஈர்ப்பும், நாகரீகத்தின்மிகை கொண்ட நாட்டமும் மற்றுமின்னபிற பொருளாதாரமெனும் ஆடையிழந்த கவர்ச்சியும் என்மொழியை துச்சமென மதிக்கச்செய்துவிட்டது..விடுகிறது...விடும். இப்படியாயின் என்வாழ்காலத்திற்குள் என்மொழியினை நானே எரித்துவிட்டு சாம்பலாவேன்.

பார்ப்போம் எவ்வளவுதூரம் ஊன்றுகோலினை காலெனயெண்ணி ஊனமாய் வாழ்வோமென்று...


**************

குறிப்பு:
1. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 23வதுஆண்டு விழா மலரில் வெளியான என் கட்டுரை.

2. தேர்ந்தெடுத்த விழாமலர் குழுவினருக்கும், ஊக்குவித்த பதிவர் வானம்பாடிகள் அய்யா அவர்களுக்கும் நன்றி.

3. அன்பு பதிவர்கள் பழமைப்பேசி, ஈரோடு கதிர், வானம்பாடிகள் ஆகியோரின் கட்டுரையும் இம்மலரில் வெளியாகியுள்ளது. அதுசமயம் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.




Friday, July 2, 2010

யானை சவாரி...



அந்திப்பொழுதில் தொடங்குகிறது

அம்மாவுடனான

யானை சவாரி விளையாட்டு


அம்மாவே யானை

மகன்தான் இப்பொழுதும் பாகன்


ஏய் போ, அங்ப்போவாத, ம்ம் படு, எந்திரி......

எண்ணற்ற கட்டளைகளை

அவளிடம் மட்டுமே பிரயோகிக்கிறான்

சிலநேரங்களில் (மெல்ல) அடிப்பதும்கூட...


அப்பாவுடன் விளையாட

இத்தனை சிரமங்களை கொடுப்பதில்லை.


அவ்வப்பொழுது முனகிக்கொள்வாள்

‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’



••••••••••••••••••



அந்திப்பொழுதில் தொடங்குகிறது

அம்மாவுடனான

யானை சவாரி விளையாட்டு


அம்மாவை யானையாக்குவதில்

சில சவுகர்யங்கள்...


தாய்மையான மேனி

அலுங்காத நடை

பிடிமானத்திற்கு நிறைய அவளுடன்


இன்னும் சொன்னால்

சொல்வெதெல்லாம் அப்படியே செய்வாள்


இறங்கியப்பின்னும்

'எஞ்செல்லமே' என்று

வாரியணைக்கத்தான் கைநீட்டுவாள்


அப்பாவின் முதுகு அப்படியில்லை....








  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO