க.பாலாசி: 2012

Friday, August 24, 2012

சுக்குமி ளகுதி ப்பிலி..

.

கொல்லப்பக்கம் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரங்கள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்குடுக்கிற அம்மா இப்பவும் அதேமேரிதான் இருக்கு. நானிங்க ராநேரத்துல ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு, ஆர் ஆர் லாட்ஜ் பங்க் கடையில ‘அண்ணா ஒரு பழம்ணா’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாரு. அடி என்னப்பெத்தவளே நீ ரூவாய்க்கு மூணு குடுப்பியே இங்க பாத்தியான்னு மனசுலயே நெனச்சிக்க வேண்டிதான்.  பொழப்பத்த அம்மாக்கு பொழைக்கத் தெரிலியா, இல்ல எனக்கான்னு தெரில. பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.

••••••••••••

ரெண்டு ரூவாய தெருமொனைல ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்ரூவாய்க்கு எப்பாருக்கு 222 பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல (ரெண்டா கிழிச்ச லாட்டரி சீட்டு நடுவுல சுண்ணாம்போட) அதோட கா(ல்)ர்ரூவா கொட்டப்பாக்கு, கா(ல்)ர்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச மீர்ற கா(ல்)ர்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய சோடி போட்டுப்பமா சோடின்னு நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மேரி.

•••••••••••••

அந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், சேகரு டீக்கடைக்கு இந்தாண்ட காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி வெச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரத்தான் கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுக் கடையில வாங்கினா ஒரு கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகாப்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடை‘யும் சேர்த்து வித்துட்டு, புள்ளைங்க சம்பாத்தனையே போதும்னு வூட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அரிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.

••••••••••••

ஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள் எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பிச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட. அதுக்கப்பறம் கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திரா. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கும் தாராளமா போதும். இந்தவூட்டு மாடு கறவ நின்னுட்டா அடுத்து அந்த வூடு, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம், பருத்திக்கொட்டன்னு வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி, தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட இல்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.

•••••••••••

இந்த மம்புட்டி (மண்வெட்டி), அருவா இல்லைன்னா கோடாளி எது கால்ல வுழுந்தாலுஞ்செரி எப்டிக்காயம்பட்டாலுஞ்செரி எலந்த (இலந்தை) இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும். எப்பேர்பட்ட வெட்டுக்காயும் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் அப்பாக்கும், தாத்தனுக்கும் இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன ஒடம்புக்குகூட டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும் போலருக்கு.

•••••••••••••

அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.


மீள் இடுகை..

.

Monday, April 23, 2012

வரவேற்கிறேன்! வாழ்த்த வாருங்கள்!!

அன்பு நண்பர்களே,

நிகழும் மங்களகரமான நந்தன வருடம் சித்திரை மாதம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை (04-05-2012) காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தாராசுரம், கும்பகோணம் எம். ஆர். எஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் எனது திருமணத்துக்கு வந்திருந்து வாழ்த்துமாறு வேண்டுகிறேன். இதனுடன் உள்ள எனது திருமண அழைப்பிதழை நேரில் அழைத்ததாகக் கருதி வந்திருந்து சிறப்புற நடத்தித் தருமாறு விரும்பி அழைக்கும்

...பாலாசி.



Monday, April 2, 2012

ஒரு கூடும் சில குளவிகளும்..

*
கடந்த இருநாட்களில் 36 மணிநேரம் தூங்காமலிருந்திருக்கிறேன். இதிலொரு கொடுமை அலுவலக நேரத்திலும் கொட்டகொட்ட விழித்திருந்ததுதான். ஓர் இரவு கண்விழித்தாலே அடுத்தநாள் முழுதும் அர்த்தநாசம் குட்டிச்சுவர். ஆனாலும் நேற்றையப் பொழுதில் சில சுபங்கள். ஈரோடு வந்திருந்த பதிவரும் தீரா-இலக்கிய ஆர்வலருமான கோபியை சந்தித்து கொஞ்சநேரம் அளவளாவினேன். எங்களின் சங்கமங்கள் அனைத்திலும் பயணச் சிரமங்களைப் பொருட்படுத்தாது கலந்துகொள்ளும் இனிய நண்பர். இந்தவகை அண்ணன்களை சந்திக்கும்போது பெரும்பாலும் கால்கள் கடகடவென நடுங்க ஆரம்பிக்கும். ‘இந்தப் புத்தகத்த படிச்சியா, அந்தப் புத்தகத்த படிச்சியா’வென்று கேட்டுவிட்டு கடைசியில் ‘நீயெல்லாம் என்னய்யா மனுச’னென்று திட்டிவிடுவார்களோவென்ற பயம்தான். எனவே ‘எந்த பஸ்ல வந்தீங்க, எங்கங்க போனீங்க, சாப்டீங்களா, இந்த ரூம்க்கு வாடகை எவ்வளவு‘ போன்ற ‘இலக்கிய’த்தரமான கேள்விகளைக் கேட்க அவரும் பதிலுரைத்தார். ஓர் இலக்கியவாதியை இவ்விதமான கேள்விகளைக்கேட்டு ‘அவ்விதம்’ திருப்பாமலிருப்பது என்னுடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதெனப்பட்டது (with smiley). மாலை மூன்றுக்கு அவரை திருப்பூர் பேருந்தில் ஏற்றிவிட்டு அறைக்குச் சென்று தூஙகலாமென்றிருந்தேன். மனிதனுக்குமவன் மனதிற்குமான போராட்டத்தில் பெரும்பாலும் மனம் ஜெயித்துவிடுகிறது. அதிலும் அதீதமாய் நல்ல செயல்களுக்கு. தூக்கத்தைப்பார்ப்பதா, ‘கோபி’யாரைப் பார்ப்பதாவென்றதில் வென்றது அண்ணன் கோபி.

***

மற்றொன்று

நேசம் + யுடான்ஸ் + சேர்தளம் இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அவர்களிணைந்து நடத்திய சிறுகதை மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழாவும் நேற்று (01.04.2012) திருப்பூரில் நடந்தது. ‘போகலாமா வேண்டாமா, போகலாமா முடியுமா, அசதி.. தூங்கலாம், போகவேண்டாம் தூங்கலாம்,  தூங்கவேண்டாம் போகலாம்’ என்ற படிநிலைகளில் ஆர்வமும்,  கொஞ்சிய தூக்கத்தை பயணத்தில் கழிக்கலாமென்ற எண்ணமும் சேர்ந்தே உந்த, பேருந்தில் ஏறினேன். ஆனால் திருப்பூர் வரையில் கோவில்மணி நடுவாடும் நாக்கு கதியாக நின்றுகொண்டே பயணம். ‘விடியாமூஞ்சி, வேலை, கூலி’ பழமொழி ஞாபகம் வந்தது. போக... நிகழ்ச்சி நன்றாக நடந்தது. வலை நண்பர்கள் ஒன்றிணையும்போது கிடைக்கிற இனிமை சொந்த சுபகாரியங்களில்கூட இப்போது கிடைப்பதில்லை. புதியவர்களை காண நாணி முந்தானையொளியும குழந்தைகள் பதிவர்களைக் காணும்போது மட்டும் புழங்கிய வாசமடிக்குமோ என்னவோ. இயல்பாக ஒட்டிக்கொள்கிறார்கள். பரிசலின் பெண்ணும், விஜியக்காவின் பெண்களும் அப்படியே. கொஞ்சம் இறுக்கமான நிகழ்ச்சியின் இறுதியில் தப்பாட்ட குழுவினரின் சரியான ஆட்டம் நடந்தது. இக்காலம் இதைகாண புண்ணியம் தேவைதான். எல்லாம் அமைந்தாலும் மனிதனுக்கு அந்நேரத்தில் ரசிக்கிற மனம் கிடைப்பதரிது. கிடைத்தது. மொத்த நிகழ்வும் தேனூறிய அத்திப்பழம்.

நிகழ்ச்சி குறித்து மயில் விஜி

***

காலங்காலமாக திரைப்படங்களில் காட்டப்படுவதை மட்டுமே புற்றுநோய்க்கான தன்மையென்பதையே ஒருகாலத்தில் அறிந்திருந்தேன். இப்பவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்தனுபவங்கள் வாய்த்ததில்லை, அதன் கொடூரத்தை புகைப்படங்களிலும், ஏடுகளிலும் படித்ததோடன்றி. மார்பக புற்றுநோயை எதிர்கொண்டு அதையும் சவாலாக வென்று அதைப்பற்றி விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்கவேண்டுமென்ற எண்ணத்தில் திருப்பூர் நிகழ்ச்சியில் பேராசிரியை திருமதி.மோகனா அவர்கள் கலந்துகொண்டார். படித்ததை சொல்லும்போது ஏற்படுகிற அலட்சியத்தன்மை உணர்ந்ததைச் சொல்லும்போதே உறைக்கிறது. மேலும் இவர், இந்நிகழ்ச்சியொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

***

பதிவர் பல்டாக்டர் ரோகிணி அவர்கள் ‘ஒருகாலத்தில்’ வாய்ப் புற்றுநோய் வாய்ப்புகள் குறித்து எழுதியிருந்தார். பல் துலக்கும்போதெல்லாம் பயமாகவே இருந்தது. ‘பேய்’ அம்சம் கொண்ட கதைகளையோ, திரைப்படங்களையோ பார்த்துவிட்டு தூங்கினால் கனவிலும் பேய் வந்தாடும்... போலவேதான். நேற்றிலிருந்து இது அதுவா இருக்குமோ, அது இதுவா இருக்குமோ போன்றதான எண்ணங்களும் பயமும். முப்பதுக்குப் பிறகு ஆறுமாதத்திற்கொருதரம் முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது. ஆனாலும் எந்த எழவுக்குப்போனாலும் மருத்துவர்கள் ஊசியை எடுக்கிறார்கள். அது மூன்று மி.மீ. என்னுடலில் நுழைவதற்குள் தரைதட்டி எலும்பில் முட்டிவிடுகிறது. இதேபோலான பிரச்சனை என்னைக் கடிக்கும் ரங்குஸ்கி ரக கொசுக்களுக்கும் இருக்கும் போலிருக்கிறது. ‘நீ இன்னுமாடா இருக்க’ தோரணையில் மோந்து பார்ப்பதோடு சரி. அதுகெல்லாம் கொடுப்பனை வேணும் பாஸ்.

***

2004 ம் ஆண்டு ஜுலை 16ம் நாள் சென்னை கிண்டி நகர மக்கள் ஒரு அநாயசமான  அதிர்வை உணர்ந்திருப்பார்கள். செம்பொன்னார்கோவில் சிங்கமொன்று தன் பிடரியை சிலிப்பியபடியே சென்னை மண்ணில் முதலில் கால்வைத்தது அங்கேதான். சமகாலத்து தமிழ்த்திரை மரபுப்படி வலதுகாலை கடிகாரச்சுற்றுபடி மூன்று சுற்று சுற்றியபடியே தரையை ஓங்கி மிதித்தேன். தூசிதுரும்புகூட அசையவில்லை. போகட்டும். பிறகு போரூர் வாழ்க்கை, மைலாப்பூர், விண் டி.வி, சினிமா ஆசை, நடிகர் சத்யராஜை சந்திக்க ஏற்பாடு போன்றனவெல்லாம் நடந்தது. அக்கட்டத்தில்தான் என் கதையொன்று வாரமலரில் வந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் படித்து முன்னேறி மாவட்ட ஆட்சித்தலைவன் ஆகிறான் பாணியில். பிறகு கேட்கவாவேண்டும் ‘டேரக்டா ஹீரோதான்’ என்ற லட்சியக்கனவு வந்துவிட்டது. போரூர் நகர வீதிகள் கதறகதற கண்விழிப்பது என் பகற்கனவில்தானென்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். சொல்லமுடியாது இந்நேரம் தனுஷிற்கு சரியான போட்டியாக வந்திருப்பேன் ‘உடலளவில்’.

*

Friday, February 3, 2012

படர்க்கை

*

பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன்.

‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

‘இதான் உன்னோட அத்த’

‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’

‘இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன்.

எனக்கு சித்தியான பாலாவுடைய அம்மா சின்ன வயதிலேயே இறந்துவிட்டாள். இவளைப் போட்டுவிட்டு சித்தப்பனும் எங்கோ ஓடிவிட்டான். என்னதானிருந்தாலும் அப்பனாத்தா இல்லாத பிள்ளைகளை வளர்ப்பதென்பது புட்டிப்பால் கொடுப்பது போலத்தான். எண்ணையும் தண்ணீரும்போல ஒரு ஒட்டு இல்லாமல் இடைவெளி இருந்துகொண்டேயிருக்கும். வீட்டில் பெண்பிள்ளை இல்லாத குறையாக நாங்கள்தான் வளர்த்தோம். எனக்கு ஒரு தங்கையாக அம்மாவுக்கு ஒரு நல்ல மகளாக இருந்தாள். படிப்பு இத்யாதிகள் எதிலும் குறையில்லை.  

எடத்தெருவில் இருந்த 45 குழி இடத்தில் 15 குழியை நாங்களே வைத்துகொண்டு மீதி இடத்தை விற்கும்போது பாதி பணத்தில் வீடு கட்டிக்கொண்டு மீதியில் பாலாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் எண்ணினேன், அம்மாவுக்கும் அதான் எண்ணம். ‘நம்மள விட்டா அவுளுக்கு யாருப்பா இருக்கா?’ அம்மா அடிக்கடி சொல்லுவாள். வீடு கட்டி குடியும் போனாம். 10 பவுனுக்கும், சீர் செனத்திக்கும் போக எப்படியும் ஒரு கைப்பங்கு பணம் இருக்கும். அந்தப் பணத்தில் பிறகு என் கல்யாணத்தைப் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தேன்.

ஆனால் நடந்தது நேர்மாறாகத்தான். பாலாவுக்கு ஜாதகம் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லையென தட்டிக்கொண்டே போனது. வந்த ஜாதகத்திலும் பாதிக்கு மேல் புலுத்தி ஜாதகமாகத்தானிருந்தது. சரி இரண்டாந்தாரம் எதாவது கிடைக்குமா என்றும் தேடினோம். கொடுமையிலும் கொடுமை பெண்களை பிரத்தியில் ரெண்டாம்தாரத்திற்கு கட்டிக்கொடுப்பதுதான். யாரும் அந்த முறையை விரும்ப மாட்டார்கள். ஒரே ஒரு லாபம் இரண்டாம் தாரத்திற்கு கொடுத்தால் ஜாதகம் பார்க்க தேவையில்லை.  கும்மோணத்தில் ஒருத்தன் கிடைத்தான் நாலு பிள்ளைகளுடன். கேட்டவுடனே முகம் சுளித்தாள். எங்களுக்கும் சரியாகப் படாமல் விட்டுவிட்டோம். ரெண்டு வருடம் ஜாதகங்கள் வருவதும் போவதும், பெண் பார்க்க வருவதும் போவதுமாகத்தானிருந்தது. எதுவும் அமையவில்லை.

அம்மாவுக்கு சுகர் வந்து வாய் கோணிவிட்டது. கைகால்கள் அடிக்கடி மறப்பதும், சோம்பி விழுவதுமாக இருந்தாள். அந்த நேரத்தில்தான் வேறு வழியில்லாமல்தான் எனக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. மாமாவிடம் சொல்லி பெண்பார்க்கச் சொன்னார்கள். சொல்லி வைத்தது போல இந்த கவிதா கிடைத்தாள். பாலாவுக்கு மாப்பிள்ளை பார்த்த அனுபவத்தினால், முதலில் பார்த்த பெண்ணே ஒருவனுக்கு மனைவியாக அமைவதென்பது இக்காலகட்டத்தின் ஜென்ம பலனாகத் தெரிந்தது.

கவிதாவுக்கும் எனக்கும் திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின்போது மணமக்களுக்கு பின்புறம் காமாட்சி விளக்கு பிடிக்க கட்டுக் கழுத்தியைத்தான் நிற்க வைப்பார்கள்.நான்தான் பிடிவாதமாக பாலாவை காமாட்சி விளக்கு பிடிக்க வைத்தேன். அவளுக்கு அதில் ரொம்ப சந்தோஷமும் கூட. திருமணம் முடிந்தபின் பாலாவும், கவிதாவும் ரொம்ப அந்நியோன்யமாக இருந்தார்கள். அவர்களுக்குள் நல்ல நட்பும் இருந்தது. பாலா, அண்ணி அண்ணி என்று வாய்நிறைய அழைப்பாள்.

புதிதாக சென்ட் அடிப்பவன் அக்குளை மோந்து மோந்து பார்ப்பது மாதிரிதான் புதிதாக கல்யாணம் பண்ணினவர்கள் பாடு, மனைவிக்கு கணவனும் சரி, கணவனுக்கு மனைவியும் சரி. ஒருவரையொருவர் மோந்துகொண்டே இருப்பர். போலவேதான் நாங்களும். காலை எழுத்ததும் இருவரும் குளித்துவிடுவோம் என்றாலும் கலவி முடிந்தவுடன் பாத்ரூமுக்கு சென்று கைகால்கள் இத்யாதியை கழுவிவிட்டு வருவது எங்கள் பழக்கம். கூடாரத்தில் அம்மாவும் பாலாவும் படுத்திருப்பார்கள். நானும் கவிதாவும் சத்தம் வராமல் பொறுமையாக போய்வருவோம்.

ஒருநாள் பிற்பகலில் முடிந்தது. கூடாரத்தில் பாலா உட்காந்திருந்தாள். கவிதா கூடாரத்தின் வழியே கொல்லைக்குப் போகவும், ‘என்ன அண்ணி பகல்லியேவா?’ என்று சாடையாக கேலி செய்தாள். ரூமில் இருந்த எனக்கும் கேட்டது. கொஞ்சம் சங்கடமும், சங்கோஜமும் இருந்தாலும் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனக்கு ஒருவாரம் இரவு, ஒருவாரம் பகலாக வேலை மாறியிருந்தது. நாளாக நாளாக நாங்களிருவரும் வீட்டிலிருந்தாலோ அல்லது பேசிக்கொண்டிருந்தாலோ பாலா பக்கத்து வீட்டுக்குப் போக ஆரம்பித்தாள். என்னிடமும் அவளுக்கு பேச்சு குறைந்தது. கவிதாவுடன் எப்போதும்போல் இருந்தாள். புது உறவினர்கள் வருவதும்போவதும், நாங்கள் ஊர் சுற்றுவதுமென இரண்டு மூன்று மாதங்கள் பாலாவின் திருமணம் பற்றி எதுவும் பேசவில்லை. பாலாவும் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தனியாக படுக்க பயந்துகொண்டு எப்போதும் அம்மாவுடன் கூடாரத்தில்தான் படுப்பாள் பாலா. ஆனால் சிலநாட்களாக மளிகை சாமானும், பீரோவும் இருக்கும் ரூமில் படுத்துக் கொள்வதாக அம்மா சொன்னாள். என் ரூமுக்கு அடுத்த ரூம்தான் அது. ஒருநாள் பின்னிரவு நேரத்தில் முனகல் சத்தம் அவள் ரூமிலிருந்து கேட்டது. கவிதாவை பார்த்தேன். நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். நானும் ஜுரத்தில்தான் முனகுகிறாள் போலிருக்கிறதென்று அம்மாவை எழுப்பி பார்க்கச்சொன்னேன். ‘அதுல்லாம் ஒண்ணுல்ல போய் பேசாமப் படுடா’ என்றாள். மறுநாள் மறுநாள் அதே நேரம் அதே முனகல் தொடர்ந்தது.

அம்மாவிடம் எதுவும் கேட்க முடியவில்லை. ஒருநாள் பகலில் வீட்டிலிருந்த நேரத்தில் பாலா கோவிலுக்கு போயிருந்தாள். மனதில் அழுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தை தீர்த்துகொள்வதற்காக நான் அவளுடைய அறைக்குள் நுழைந்தேன். கவுச்சி வாடை அடித்தது. அம்மா அலறி அடித்துக்கொண்டு பின்னாலயே வந்து ‘அந்தண்டப்போ மொதல்ல’ என்று கையைப் பிடித்து தள்ளினாள்.

‘என்னம்மா என்னமா பிரச்சனை?’ எதோ மர்மங்களை உணர்ந்தவனாய் கேட்டேன்.

‘பாவம் பண்ணிட்டம்டா மவனே.. பாவம் பண்ணிட்டம்டா, வயசுக்கு வந்த பொண்ண வச்சிகிட்டு ஒனக்கு கல்யாணம் பண்ணது எவ்ளவு தப்புன்னு ரெண்டுவாரமா அனுபவிக்கிறன்டா.. அந்த பாவிக்குதான் அமையலையே பெத்ததுக்காச்சும் கால்கட்டு போட்டுப் பாப்பம்னு தானே செஞ்சேன்... இப்டி ஆவும்னு நெனச்சிப்பாக்கலையேப்பா...’ அம்மா சத்தம்போட்டு அழமுடியாமல் மழுமாறிக்கொண்டே கதறினாள். ‘உன்னயாச்சும் தனிக்குடித்தனம் அனுப்பிருக்கணும் அதுஞ்செய்யாம உட்டனே.. ஒருத்தி வாழ்க்கயையே நாசம் பண்ணிட்டம்பா... இந்த பாவத்த எங்கபோயி தெத்தப்போறன்னு தெரியலையே......’

என்னால் அம்மாவை சமாதானப்படுத்த முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுதாள். பாலாவுக்கு இப்ப என்ன பிரச்சனை என்பதை அறிவதிலேயே மனசு கூடுதலாக பிரயத்தனப்பட்டு அலைந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் அன்று இரவே பின்னிரவில் தெரியாமல் அவள் அறைக் கதவைத் திறக்க முயன்றேன். முடியவில்லை. சாவித் துவாரத்தின் வழியே பார்த்தேன். போர்வைக்குள் முனகிக்கொண்டே சுருண்டு கிடந்தாள். அருகில் ஒரு பாவாடை நிறைய இரத்தக் கறையாக இருந்தது. எனக்கு சூழ்நிலை புரிந்தது. முதன் முதலாக வாய்விட்டு கதறி அழுதேன். அம்மா எழுந்து வந்துவிட்டாள். ‘பாத்தியாடா.... பாத்தியாடா...’ என்று அவளும் கட்டிக்கொண்டு கதறினாள். ஆனாலும் பாலா ரூமில் முனகல் நிற்கவில்லை.

மறுநாளிலிலிருந்து தீவிரமாக வரன் தேட ஆரம்பித்தேன். மறுபடியும் அதே நிலைதான். பாலா சித்தப் பிரமை பிடித்ததுபோல் தானகவே பேசிக் கொள்ளத் தொடங்கினாள். யாருடனும் பேசுவது கிடையாது. கவிதாவுடன் அறவேயில்லை. பக்கத்துவீட்டுக்கு போவதும் நின்றுவிட்டதுபோலும். அந்த அறையிலேயே கிடந்தாள். ஒருநாள் அம்மாவும் நானும் ரெங்கபாஷ்யம் கல்யாணத்திற்கு சென்றிருந்தோம். கவிதா மட்டும் வீட்டிலிருந்தாள். அன்றுதான் அந்த விபரீதமும் நடந்தது. நாங்கள் திரும்பி வரும்போது கவிதா தலையில் அடிபட்டு ரெத்த வெள்ளத்தில் துடித்துகொண்டிருந்தாள். காது ஒருபக்கம் பிய்ந்து குழவிக்கல்லுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. பாலாவைத் தேடினேன், ஆளைக்காணோம். எனக்கு புரிந்துவிட்டது.

•••••••

நல்ல மழை. திருச்சி பேருந்து நிலையத்தினுள் சுக்கு காபிக்கு கூவி கூவி அழைத்தார்கள். அந்தப் பின்னிரவின் குளுமைக்கும், சாரல் ஊதலுக்கும் அது தேவையாகவும் பட்டது. சுக்கு காபியுடன் ஒரு தண்டவாளத் தூணினோரம் சாய்ந்து நின்றேன். ‘வர்ரீங்களா?’ என்று யாரோ கூப்பிட திரும்பினேன். ஒயர் கூடையுடன் பாலா நின்றிருந்தாள். ஒரு சில பெரிய பேருந்து நிலையங்களில் இதுபோல ஒயர் கூடையுடன் நிற்கும் பெண்களை பார்த்திருக்கிறேன். பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் விலைமாதென்று தெரிந்துவிடும். பாலாவை கொஞ்சம் நிதானித்துதான் அடையாளம் கண்டேன். தூக்கிவாரிப் போட்டது. நெஞ்செல்லாம் அடைத்தது. பாலா என்னை அடையாளம் காணவும் வாய்விட்டு ஓவென்று அழுதபடியே கண்மண் தெரியாமல் ஓடினாள். ஈரோட்டிலிருந்து பேருந்து நிலையத்தின் உள்ளே வந்த பேருந்தொன்று வந்த வேகத்தில் அவள்மீது மோதவும் பின் சக்கரம் அவள் மண்டையில் ஏறியது.

••••••

பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன்.

‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

‘இதான் உங்க அத்த’

‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’

இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன். கண்ணீர்தான் வரவில்லை.


நன்றி பண்புடன் இணைய இதழ்


  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO