க.பாலாசி: December 2010

Monday, December 27, 2010

நன்றி என்னய்யா பெரிய நன்றி...

நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய அலைபேசிக்கு ஒரு பழக்கமிருக்கிறது, எப்போதும் ஊமையாகவே இருப்பது. அதற்கு அடிமையாகாமல் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கதைவிட்டாலும் அந்தளவிற்கு எனக்கு அழைப்புகள் வருவதில்லையென்பது உண்மை. மேலும் சீக்குவந்த கோழியின் தலைபோல அலைபேசியில் பேசிக்கொண்டேயிருப்பதும் எனக்கு பிடிக்காத செயல்தான். இந்த இரண்டு நாட்களாக என் அலைபேசி ‘சிரித்து’க்கொண்டேதானிருந்தது. சங்கமத்தைப்பற்றிய அழைப்புகள் மற்றும் கலந்துகொள்ளும் நண்பர்களின் அழைப்புகளென்று இந்த திருவிழாவில் பங்கேற்ற பெருமை என் அலைபேசிக்கும் உண்டு. இரட்டிப்பு மகிழ்ச்சி இப்போது உள்ளது. இப்படியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள் எல்லோரையும்  முதற்கண் வணங்குகிறேன்.

ஒரு பெரிய மலையை இரண்டுகைகளினால் புரட்டிப்போட்டதுபோன்ற பிரமிப்புணர்ச்சி எங்கள் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கிறது. இந்த முல்லைச்செடியை வளர்த்தது நாங்கள்தானென்றாலும் தேர்கொடுத்தவர்கள் நீங்கதானே. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் எங்களின் சங்கமத்தில்  இத்தனைப் பதிவர்கள் கலந்துகொண்டதையெண்ணி மிகவும் மகிழ்கிறேன்.  நாட்கள் நெருங்கநெருங்க எனக்கு கொஞ்சம் பயம் எடுக்கத்தான் செய்தது. எங்களது ஏற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தவேண்டுமே என்கிற இதயத்துடிப்புதான் அதற்கு காரணம். இப்போது வருகைதந்தோர் ஒவ்வொருவரும் இதைப்பற்றி சிறப்பாக கூறும் போது எங்களது உழைப்பு பயனுள்ளதாகிவிட்டது என்ற திருப்தியும் ஒட்டிக்கொண்டுள்ளது.

எங்களது உழைப்பு என்பது இந்நிகழ்வில் மிக மிக குறைவுதான். ஒவ்வொருவருடைய வாழ்த்தும் வருகையும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியில் அடங்கியுள்ளது. ஏதோவொரு சந்திப்பு நடைபெறுகிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்று சிரத்தையெடுத்துக்கொண்டு வருகைபுரிந்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள், மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டவர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு அனைத்துவகையிலும் உதவியவர்களுக்கும் எனது நன்றியை தனிப்பட்ட முறையிலும், குழுமத்தின் சார்பாகவும் தெரிவிக்கிறேன்.

குறிப்பாய் இம்மாபெரும் விழாவிற்கு வருகைதந்த பெண் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்.

நன்றி என்னய்யா பெரிய நன்றி... கண்கள் பனித்ததும் இதயம் இனித்ததும்  (கலைஞர் உபயம்) எப்படியென்று மனதார உணர்ந்தேன். எல்லோருக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்...


நன்றி...நன்றி...நன்றி சொந்தங்களே!!!!


சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் பட்டியல்

மேலும் விரிவான இடுகை ஈரோடு கதிர் அவர்கள் பக்கத்தில்
 
 சங்கமம்‘2010 படங்களைக் காண இந்த சுட்டியை சொடுக்கவும்



Friday, December 24, 2010

மார்கழி மகோற்சவம்

இந்த மாதத்து காலைகள் இப்படித்தான் விடிகின்றன. வாசல் முருங்கை மரத்தில் அடைந்த கோழிகள் எழுந்துவர ஆறு ஆறரை ஆகிவிடுகிறது. உடலில் போர்த்திய போர்வையின் கதகதப்பை எரித்துக்கொண்டிருக்கிறது குளிர். குடிசைக்குள்ளிரங்கும் பனித்தூரல் பூனைகளின் உறக்கத்தைக்கூட கொஞ்சநேரம் வேடிக்கைப்பார்க்கிறது. முகனைப் பிள்ளையாரை துயிலெழுப்ப 4 மணிக்கே ஆயத்தமாகின்றனர் மைக்செட் காரர்கள். ‘கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?‘  மதுரை சோமுவின் குரல் அதிகாலைக் கனவினை முருகன் பக்கம் திருப்ப முயல்கிறது. போதாக்குறைக்கு ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ’ நாகேஷின் நடுங்கும் குரலில் திருவிளையாடல் வேறு. எப்பூவும் சூடாத கோலங்கள் இப்பொழுதான் சுமங்கலி வேடம் கொள்கிறது. மேலும் மழைவேறு பெய்தால் கேட்கவாவேண்டும்? தாழ்வாரத்தில் கட்டிவைத்த தூங்குமூஞ்சி சுப்பிக்கட்டுகள் மிதந்துபோகும். அடுப்பில் வறட்டித் துண்டுடன் காடா விளக்கில் மண்னெண்ணையை ஊற்றிப் பற்றவைக்கும் அம்மாவிடம் உதைவாங்கும் புகை, தென்னங்கூரையினூடே மலையைக் குடையமுனையும் மேகமாய்க் கடப்பதும் ஒரு கவர்ச்சிதான். விளாமிச்சைவேருக்கு விடுதலைக் கிடைத்து காய்ந்துகிடக்கும். வாசலில் சாணந்தெளித்து கூட்டவும், பெருக்கவும் தேவைப்படும் அதிகாலைப்பொழுது மழைகூட்டலில் அடைந்து போனதில் இன்னும் வேலைமிச்சம். அப்பாக்களின் தேநீர் கடைகள் அப்படியல்ல, எப்போதும் போலவே காதொட்டி முண்டாசு கட்டின தலைகளுடன் நிறைந்தோடும். மாட்டுத் தொழுவங்களின் நசநசத்துப்போன போன நாத்தம் வீதியெங்கும் விரவிக்கிடக்கும். கொஞ்சம் கொஞ்சம் தலைக் காட்டும் கதகத கதிரொளி தெருக்குழாய்களை நிழற்கோடாக்கிச் சிரிப்பதுகூட அழகுதான். நிற்க


அந்தக்கரையில் கூடின அலைகளின் நுரைக் குமிழ்கள் இன்னும் உடையவில்லை. அந்தக்கூடத்தில் சூழ்ந்த அனைவரின் மூச்சுக்காற்றும்கூட இன்னும் அங்கேயேத்தான் இருக்கும். மார்கழிக்குளிரில் ஒரு தந்திக்கம்பியில் ஒட்டியொட்டி அமர்ந்திருக்கும் குருவிகளை பார்த்திருக்கிறீர்களா? அந்த உடற்சூட்டில் ஒளிந்துகிடக்கும் நட்பெனும் செருக்கை உணர்ந்ததுண்டா? வாருங்கள் நமது ஈரோடு சங்கமத்திற்கு. ஒரு சேர கரம் கோர்க்கலாம். யார் யாருக்கோ எதெதுக்கோ பனிக்கும் கண்கள் நமக்கும் இந்நிகழ்வில் பனிக்கட்டும். மின்னஞ்சல் வழியும், அலைபேசிகள் வழியும் வந்துகுவியும் வாழ்த்துக்களும், வருகையை உறுதிப்படுத்துவதும் எங்களுக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அரங்கு இந்த ஜனத்திரளை தாங்குமா என்பதை பயத்துடனும் எதிர் நோக்குகிறோம். எப்படியாயினும் இதுவொரு மார்கழி மகோற்சவம்தான்.


.

Wednesday, December 22, 2010

ஒரு குழந்தையின் குமுறல்



விளை நிலங்களை விற்றாகிவிட்டது
மூலைக்கொரு வீடும் வந்துவிட்டது
காவலுக்கிருந்த அய்யனார்
கட்டிடத்திற்குள் வந்துவிட்டார்
இனி கவலையில்லை.

*******

பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம்
சாயுங்காலம் டியூசன்
விடுமுறையென்றால் வீடியோ கேமும் உண்டு
வேறென்ன குறைச்சல்
எங்கள்வீட்டு நாய்க்குட்டியும் இப்படித்தான்.

*******

கட்சிக்கும் நடிகனுக்கும்
பளபளக்கும் பதாகைகள் 
பட்டினியில் செத்தவன் பிள்ளை
சிரிக்கிறான் வலது ஓரத்தில்..
பெரியதாய் படம்போட்டு... 

*******

விதர்பாவைப்பாருங்கள்
தண்டகாருன்யாவைப்பாருங்கள்
அய்யோ என் இனமே செத்துவிட்டதே
போராடுவோம்.. போராடுவோம்...
திரட்டியில் இணைத்தால் வேலை முடிந்தது
ஹலோ? என் கேபினுக்கு டீ வரல.

*******

எல்லாரும் திருடனுங்க
அத்தனையும் ஊழல்
யாருவீட்டு காச யாரு திங்கறது?
இந்தமுறை ஓட்டுப்போட
தலைக்கு ரெண்டாயிரம் வேணும்...

*******

அக்காளுக்கு போட்ட நகைநட்ட
நம்ம கல்யாணத்துல புடுங்கிடலாம்
கூடவே ஒரு டூவீலரும் கெடைச்சிடும்
ஜாம்..ஜாம் கல்யாணம்தான்
தாலிதானே குத்தும்.. பரவாயில்லை.

*******

செத்தவன் சேதி சிறுத்துக்கிடக்கும்
முக்கியமானது ஒரு மூலையில்
அரசியல்வாதி கோமணம் அங்கங்கே
போதும் போதும்.. ஆனது ஆகட்டும்
நடிகனின் மசிருக்குள் தேடலாம்
பத்திரிக்கை தர்மத்தை.

********



.

Tuesday, December 14, 2010

அனைவரும் வருக!!!

அதிகாலைநேரத்தில் பனிப்புகையுடன் தொண்டையில் பரவும் சூடான தேநீர், மழைக்காலத்தே பசியிலலையும் எறும்புக்கூட்டங்களுக்கு சாமிமாடம் முன்பு போடப்பட்ட அரிசிமாக் கோலம், மார்கழிமாதக் காலையில் சாணந்தெளித்த வாசலதில் வைத்த மகரந்தம் மிளிரும் பூசணிப்பூ, எரியூட்டப்படும் மண் அடுப்புகளில் கிழக்கு நோக்கி முதலில் பொங்கும் வெண்சோற்றுப்பானை, தூரதேசம் வாழும் மகனின் கையில் தாய் தன்கைப்பட சுட்டுக்கொடுத்த முறுக்கும், அதிரசமும் கிடைக்கும் நேரம், இருளடர்ந்த வீட்டினரையில் விளையாடும் குழந்தையின் கையிலிருக்கும் விளக்கெரியும் பொம்மை, தீப்பிழம்புகள் காடழிக்க நல்லரவத்திற்கு கரையான் புற்று கண்படும் நொடி, முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம், போலவே வருகிற திசம்பர் 26 ம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கின்ற பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கான மாபெரும் சங்கமம்‘2010.

இணையத்தில் இணைந்த கண்கள் இச்சங்கமத்தில் சங்கமிக்கட்டும். காத்திருக்கிறோம் அனைவரின் அகமும் புறமும் மகி(ழ)ழ்த்த.

நாள்         : 26.12.2010 ஞாயிறு
நேரம்      : காலை 11.00 மணி
இடம்       : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
                       URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம்: -

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!

தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.


.

Friday, December 10, 2010

காஞ்ச மலர்

எந்த திசையுமின்றி விசைகளுக்கேற்ப ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. பறவையன்றி, விமானத்தின் நிழல்போல ஒரு செயற்கை நேர்கோடு பின்தொடர்ந்தே வருகிறது. குருவிகள் இறந்தபின்னும் கூண்டுக்குள் சிதறிக்கிடக்கும்  இரைகள்போல எதோவொன்று இருக்கத்தான் செய்கிறது. எதேச்சையாக பார்க்கின்ற ஓர் உயிரின் மீதான பரிவும் பச்சாதாபமும் ஆயிரம் மரங்களில் தன்னுடைய வசிப்பறியும் கோடைக்கால பட்சிகளாய் அமர்ந்துகொண்டு பழையதை உடைத்துக்காட்டுகிறது.

அந்த இலுப்பைத் திடலில் சுள்ளிப் பொறுக்கும் பெண்களுக்கும், காலைநேரத்தில் நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் செய்து உடலைக்கரைக்கும் ஜாம்பவான்களுக்கம்,  அருகிலுள்ள சாராயக்கடையில் மொய்க்கும் ஈக்களுக்கும்கூட அவளை நன்றாகவே தெரியும். நான் பார்க்கும் பொழுதுகளில் எப்போதும் ஒரு இலுப்பை மரத்தை உதைத்துக்கொண்டேயிருப்பாள். புழுதியில் கருத்துப்போன நாடா அறுந்த பாவாடையும், அதன்மேல் இறுக்கி கட்டப்பட்ட ஒரு சணல் கயிறும், ஜாக்கெட் என்று சொல்லமுடியாதபடிக்கு ஆங்காங்கே உறிந்து தொங்கும் ஏதோவொரு மேலங்கியும் அவளின் அடையாளத்திற்கு போதுமானது. பள்ளிப்பருவத்தில் அதன் பக்க மைதானத்தை மேயும்  இளம்பிஞ்சிகளுக்கு அவள் ஒரு பொருட்டல்ல.

ஒருகட்டத்தில் அவளை அன்றாடம் காண்பது என் வழக்கமாயிற்று. மரத்தை அவள் உதைக்கும்போது வசை வார்த்தைகள் சரமாரியாக வந்துகொண்டேயிருக்கும். கண்டிப்பாக அவள் ஒரு ஆண்மகனை உருவகப்படுத்திதான் மரத்தினை உதைத்திருக்கிறாள். சரிதான் எத்தனைப் பெண்களுக்குத்தான் தைரியம் இருந்திருக்கிறது புத்தி சுவாதீனத்துடன் ஓர்  ஆடவனை  உதைக்க? அவளைக் கடந்தபின்பும் வெகுநேரம் அவளிடமே மனது சுற்ற ஆரம்பித்தது. இவள் மட்டும் ஏன், இப்படி, எப்படி, உண்டு, உடுக்க என்ன செய்வாள்? எத்தனையோ கேள்விகள் அலைந்துகொண்டேயிருக்கும். ஒருநாள் மாலைவேளையில்தான் கவனித்தேன். எவனோவொருவன் ஒரு பாக்கெட்டை (சாராயம்) அவளிடம் கொடுத்தான். வாஞ்சையுடன் அவரசமாக மடிக்குள் புதைத்துக்கொண்டாள். மறுபடி அவன் நின்றானா போய்விட்டானா என்பதை கவனிக்கவில்லை.

அருகிப்போன மானுடப்பண்பு எங்கும் கோலோச்ச இனியேதும் காலமிருக்கிறதாயென்ன? கொஞ்சமாக அவளை கவனிக்கத் தொடங்கினேன். அவள் உடலில் மாற்றம். சிறுது காலம் கழித்து அவள் கைகள் நிறைய பழைய வளையல்களை அணிந்திருந்தாள். நெற்றியில் எதோ கொஞ்சம் சிகப்பு நிறம். முதலில் ரத்தமாக இருக்குமென்று நினைத்தேன். இல்லை. அவள் உடலில் வயிற்றுப்பகுதி பெரிதாக இருந்தது.  எனக்கு புரிந்தது, அவள் கருத்தரித்திருந்தாள். நாடெங்கிலும் அலையும் காமக்கண்களுக்கு ஏது பஞ்சம், எவனோ ஒருவன் காரணமாக இருக்கலாம். ஒரு புத்தி சுவாதீனமற்றவளை தின்றுப்பார்த்தவன் எந்தக்கொம்பனாக இருப்பான்? என்னால் யூகிக்க முடியவில்லை. மீண்டுமொரு இடைவெளி. பிறகு அவளைப் பார்த்தநாள் ஆற்றமுடியாத பாரத்தை கொடுத்தது. அவள் இறந்துகிடந்தாள், ஈக்கள் மூடிய உடலுடன். அருகில் கிடந்த அவளின் கிழிந்த ஆடைகளெங்கும் மர்மக்கறைகள். அந்த இலுப்பை மரம் அப்படியேத்தான் இருந்தது.



.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO