க.பாலாசி: July 2009

Wednesday, July 29, 2009

அவள் தவிப்பதில்தான்......




தங்கள் பெண் முதியோர்களை பராமரிக்க தகுந்த முதியோர் இல்லம் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு சென்னையை அடுத்த குன்றத்தூரில் எழிலார்ந்த இயற்கை நிலையில் மனம் ஒருமுகப்படும் அமைதியான இடத்தில் அமைந்துள்ளது பெண் முதியோர்களுக்கான ஸ்ரீ.........................


மேற்கண்டமாதிரியானதொரு வர்த்தக விளம்பரத்தினை சென்ற ஞாயிறு அன்று கண்கான நேர்ந்தது. இது பெண்களுக்கான முதியோர் இல்லம் என்று ஒரு முத்திரைவேறு. அப்புறம் அவ்விளம்பரத்தில் அந்த ....சாமியாரின் படம். இன்னும் கொஞ்சம் கவர்ச்சியாகவே, அதாவது விளம்பரத்தை பார்த்த மாத்திரத்தில் அங்கே கொண்டுபோய் நம் அன்னைகுலங்களை செர்த்துவிடலாம் என்று தோன்றுகிறமாதிரி....

சரி, என்னுடைய சாடல் முதலில் இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு காரணம்

* பெற்ற ஒன்றா? அல்லது பிறந்த ஒன்றா? இரண்டா? முன்றா?......

**இம்மாதிரி விளம்பரங்களுக்கு அடிப்படையாக அமைவது எம்மாதிரியான முன்னுதாரணங்கள்?

*** இவ்விளம்பரத்தின் நோக்கம் வருவாய் ஈட்டுதலா? அல்லது பொதுசேவையின் அடிப்படையா? அல்லது பெண்குலங்களின் 33சதவித இடவொதிக்கீட்டின் முன்மாதிரியா?

பெற்று வளர்த்திட்ட என்மகனை,
இங்கு பேணி வளர்ப்பது குற்றமென்றால்,
தாய்க்குலம் மாண்டு மடிவதுவோ?அன்றி
தர்மம் தலைசாய்ந்து வீழ்வதுவோ?
என்னுடையப் பிள்ளைக்குச் சோறிடவும், அவன்
இளைப்பாறி நிற்க இடம் தரவும்
அன்னை யெனக்கிங் குரிமை யுண்டாம், இதை
ஆண்டவன் வந்தாலும் விட்டுக் கொடேன்...

ஆகா என்னே தாயின் கொக்கரிப்பு. அவளின் இன்றைய நிலை?

தடுக்கிவிழும் மகனை
‘சொர்க்கம்’ சீரியலில் பார்கிறாள் தாய்,
கண்ணீர் வழிகிறது,
அருகில் உள்ளோரும்
சேர்ந்து அழுகின்றனர்.
இவையெல்லாம்
முதியோர் இல்லத்தில் நடக்கிறது....

தற்போது பெரும்பாலான தலைமகன், இடைமகன், கடைமகன் என ஒருசில கூட்டமே சேர்ந்து பெற்றவளுக்கு செய்யும் இறுதி மரியாதை இதுவாகத்தான் இருக்கிறது.

உனக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து பூரிப்படையும் அவளுக்கு, நீ கொடுப்பது அவ்வளவுதானா? எவ்விடத்தில் உன்னை சுமந்தாலோ அவ்வவிடத்தில் அவளுக்கு நீ இடம்கொடாவிடினும் அதற்கு மேலாவது கொஞ்சம் இடம் கொடுக்கலாமே மனம் எனும் மணிமண்டபத்தில். ஒரு ஓரம் தானே. அவளுக்கு அதுபோதும்.

உன்னை தாங்கிய கைகளுக்கும்,
உனக்காய் தாவிய அவளின் கால்களுக்கும்
நீ தாழ்ந்து கொடுக்கும் அவளுக்கான இடம்
உன்வீட்டு தாழ்வாரமாக கூட இருக்கலாம்.

30வருடம் நமக்காக வாழ்ந்தவள், இன்னும் 3வருடங்களுக்கு நமக்காக வாழாமளா இருந்துவிடப்போகிறாள். நம்மை பெற்றதை விட அவள் செய்யும் பாவம் வேறெதுவாகவும் இருந்திட வாய்ப்பில்லை இப்படிப்பட்ட கல்நெஞ்ச மகனை பெற்றவளுக்கு.

படுக்கையை பகிர்ந்துகொள்ளும் கூடுதல் தகுதிமட்டுமே உடைய மனைவியை தவிர வேறெந்த விதத்தில் தாய் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுகிறாள் என்றுதான் எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் எனக்கு இன்னும் மணமாகவில்லை.

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தா மட்டும் போதாது, கொஞ்சம் பெற்றவர்களையும் பார்க்கவேண்டும். பொண்டாட்டி கையப்புடிச்சிகிட்டே எங்கல்லாம் போகமுடியுமோ அங்கெல்லாம் போகும்போது கொஞ்சம் நெனைச்சு பாக்கனும், இந்ந கையிக்கும், காலுக்கும் உயிரக்கொடுத்தவளே அவதான்னு. தடவிகொடுக்குறவதான் தாரம், தாங்கி பிடிக்கறவ தாய்தான்.

பெத்தவ போயிட்டான்னா அந்த இடத்துல மனைவி ஒரு பொம்மை மாதிரிதான்.

ஓடு மீன் ஓட
ஒரு மீன் வர
காத்திருக்குமாம் கொக்கு....
உனக்கான காலமும்தான்.


நீ நடந்து பழக

அவள் கானும்

இன்பத்தைவிட

நீ விழாமல் இருக்க

அவள் தவிப்பதில்தான்

இருக்கிறது தாய்ப்பாசம்.



***********

Saturday, July 25, 2009

ஐயம் இன்றி அறிந்தன போல

"சாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும், என்றன் சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்" - "ஈழக்கவினர்" முனைவர் கே.சச்சிதானந்தான் கூறியது


எத்தனை மொழிப்பற்றுள்ள, வலிமையுள்ள கவிஞனும் சொல்லக்கூடியவார்த்தைகள்தான் என்றாலும், இந்த ஈழக்கவிழனின் வார்த்தைகளுக்கு ஈடாகுமாஎன்று தெரியவில்லை.


அமெரிக்கா தொடங்கி இலங்கைவரை ஒழிக்கப்படாத ஒரே சொல் இனவாதம். அன்றைய கருப்பின மக்கள் அமெரிக்க ஏகாதிபத்யன்களால் அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கப்பட்டு கண்ட துயரங்கள் இன்றைய நமது ஈழத்தமிழர்களுக்கு ஒப்பாக மேலோங்கி இருக்க காரணமும் அதுவே.


அவர்களை காப்பாற்ற ஒரு மார்டின் லூதர்கிங், ஒரு ஆப்ரகாம் லிங்கன், ஒரு ஹோ சி மின், ஒரு நெல்சன் மண்டேலா போன்ற தன்னலமில்லா தலைவர்கள் இருந்தார்கள். பலநுற்றாண்டுகள் போராட்டத்திற்கு பின் தனது அடிமை எனும் சாத்தானை ஓட ஓட விரட்டினார்கள், கிறார்கள், வார்கள்.

இன்றைய நிலையில் கருப்பின மக்கள் இல்லையேல் அமெரிக்காவிற்கு இந்தசர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்க வாய்ப்பில்லைதான்.


இதே நிலை நாளை இலங்கையிலும் ஏற்படலாம். ஆனால் அதுவரை தமிழ்இனம்இருக்குமா என்பது அந்நாட்டு ஆளும் வர்க்கத்தின் கையில் இருக்கிறது. ஏனெனில்தமிழ்நாடோ, அல்லது இந்திய அரசோ அதில் கவனம் கொள்ளப்போவதில்லை.


தமிழன் மட்டும் உறக்கக் கத்தி,

உயரக் கத்தியை நீட்டி உயிர்விடப்போகிறான்.

பேணிப்பாதுகாக்க ஒன்றும் இருக்கப்போவதில்லை,

அவன் இவ்வுலகில் விட்டுசெல்லும் பேதமையைத் தவிர.


ஏனிந்த நிலை, ஏனிந்த அவலம், எல்லாம் இனம், இனம் எனும் சாபக்கேடு. தான், தான்எனும் தன்னலம். எந்த இனமும் தன்இனத்தை இந்த அளவுக்குஅழித்துகொள்வதில்லை. கேட்க இனி எவனும் பிறக்கபோவதில்லை நானும்கேட்காதவரை.


சங்கம் வைத்து தமிழ்வளர்த்த எனக்கு

என் தங்கத்தமிழனை காக்க தெரியவில்லை என்றால்

என் அங்கமும் எதற்கு,

அதனுள் வாழும் மான பங்கமும் எதற்கு.


சொல்லமுடியாது நாளையே என் தமிழகத்தின் நிலையும் இதே ஈழத்தமிழனின்நிலையோடு ஒத்துபோகலாம். அதனாலோ என்னவோ இன்றைய தமிழர்களுக்கும்தமிழர்களாக வாழ பிடிப்பதில்லை. நல்ல மாற்றம், இதுவும் இல்லையேல் தமிழனைஇந்த அரசியலே, அரசியல்வாதிகளே கொன்றுவிடுவார்கள்.


இன்னொரு பிரபாகரனே இலங்கையில் பிறந்தாலும், அவனும் அவன் குடிகளும்இதுபோலவே அழிக்கப்படும். அதற்கும் எல்லா நாடுகளும் உதவிக்கரம் நீட்டும். அப்போதும் தமிழன் என்று பெயர் சொல்லி தமிழனின் குருதியை குடித்து வாழும்அரசியல் அட்டை பூச்சிகள் அவர்களின் பெயரைச்சொல்லி நாடகமாடும். கோபாலபுரத்திலிருந்து கோமோ நிலைக்கு போனாலும் தன் குலம் காக்கவும், தன்தமக்கையின் வளம் காக்கவும் போராடும். அன்றைய நாள் தமிழகத்திலும் ஒருபிரபாகரன் பிறக்கலாம், பாலாஜி என்ற பெயருடன்.

தெய்வக் கனல் விளைத்து காக்குமே - நம்மைச்
சேரு மிரு ளழியத் தாக்குமே.
கை வைத்தது பசும்பொன் னாகுமே - பின்பு
காலன் பய மொழிந்து போகுமே.




Wednesday, July 22, 2009

பச்சைமா மலைபோல் மேனி...



“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!”

எனும் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரின்,
திருமாலையில் வரும் பாடலின்
பொருளிற்கேற்றாற்போல
இவ்விருதினை நான் கருதுகிறேன்.


இவ்விருதினை எனக்கும் அளித்து என்னுள்ளும் ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திய திரு. கதிர் அவர்களுக்கும், மற்றும் இவ்விருதினை ஏற்படுத்தி வலையுலகில் மகிழ்ச்சியுடன் வலம் வர செய்த திரு. செந்தழல் ரவி அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

மேலும் எனக்கு கொடுக்கப்படிருக்கும் இவ்விருதினை, யான் பெற்ற இவ்வின்பம் பெறுக இவ்வையகம் எனும் நோக்கில், கீழ்கண்ட நல் உள்ளங்களை பரிந்துரைத்து வழங்குவதில் பெருமையடைகிறேன். ஒரு நல்ல எண்ணத்தில் தொடுக்கப்பட்ட இந்த நன்விருது எல்லோரின் ஒற்றுமையை வளர்க்க பயன்படட்டும் என்கிற ஆவலில்
"பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க" எனும் நாலடியாரின் வாக்கிற்கிணங்க நானும் கீழ்கண்டவர்களுக்காக நாமொழிகிறேன்.

௧. கேபிள் சங்கர் * எனது பதிவுலக ஆசான்.

(ஆசானுக்கு விருதுகொடுக்க அடியேனுக்கு அனுபவம் இல்லையென்றாலும் இதை ஒரு காணிக்கையாக செலுத்துகிறேன்.)

ங. தங்கமணி பிரபு
*

ச. சடகோபன் முரளிதரன்
*

ஞ. கவிக்கிழவன்
*

த. சென்ஷி
*

ந. லவ்டேல்மேடி
*


இவர்களில் எவருக்கேனும் முன்னமே இந்நன்மதிப்பு வழக்கப்பட்டிருப்பின் ஈருடல் கலந்து ஓர் உயிர் என்பதுபோல கருதவேண்டுகிறேன். நன்றி.



••••••••

Monday, July 20, 2009

மினிமம் கேரண்டி...




இந்த படத்துக்கும் இந்த பதிவுக்கும் கொஞ்சம் சம்பந்தம் உண்டு. அது கடைசியில்...

1. புகையிலை பழக்கத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு பீடி, சுருட்டு சிகரெட், மற்றும் புகையிலை, மூக்குபொடி ஆகிய பாக்கெட்டுகளில் எச்சரிக்கை செய்யும் வகையில் மண்டை ஓடு, தேள், மற்றும் ஆரோக்கியம் இல்லாத நுரையீரல் படத்தை வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

2. உடலை கெடுக்கும் போதை பொருட்களில் அபாய எச்சரிக்கை படங்கள் இல்லாமல் வெளியிட்டால் பொருட்களின் தயாரிப்பாளர்கள் மீது 5 ஆண்டு ஜெயில், ரூ.10 ஆயிரம் அபராதம் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், விற்பனை செய்யும் வியாபாரிகள், வினியோகஸ்தர்கள் மீது ஒரு ஆண்டு ஜெயில், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவையெல்லாம் செய்திகள் மட்டுமே. நமக்கு அது தேவையில்ல.

சரி இப்புடி செஞ்சதுனால புகையிலை புழக்கம் நம்ம மக்கள் மத்தியில குறைந்திருக்கா? ன்னு கேட்டா, அப்படி ஒன்னும் நடக்கலன்னுதான் நெனைக்குறேன். மாறா நம்ம எம்.எல்.ஏவும், எம்.பியிம், பண்ணையாரும் மற்றும் ஒருசில பணக்கார மனுசங்களும் தன்னோட சொத்தா வைச்சுருந்த சாராயக்கடைய அரசே ஏத்துக்கிட்டு நடத்துனதுக்கு அப்பறம் எப்படி குடிமகனெல்லாம் குடிமக்களா மாறுனாங்களோ அது மாதுரி அரசாங்கமே அங்கீகாரம் குடுத்து இதுகளை விக்கறமாதிரி ஆயிடுச்சு.

பாக்கட்டுல எலும்புக்கூடோ, இல்ல தேளு, பூரான், கரப்பான்பூச்சு இதுகள மாதிரி எதுனாச்சும் போட்டு இல்லன்னா மேற்படி வாங்குற மக்கள்லாம் இதுகள் இல்லாத பாக்கெட்டோ, டப்பாவோ பழசுன்னு முடிவுபண்ணி வாங்கறத நிறுத்திடுறாங்க (அந்த கடையில மட்டும்).

ஆக புகையோ புகையில சார்ந்த எதுவோ பகையை கடக்காரக்கிட்ட வளக்குதே ஒழிய புகைக்கிட்ட வளக்கல. இதுல ரொம்ப பாதிக்கப்படது யாருன்னா நம்ம சேட்டு மக்கள்தான். எப்படின்னா அவங்கதான் அட்டபெட்டிகணக்குல பாக்கும் பாக்கு சார்ந்த பொருளும் வாங்கி வைச்சுகிட்டு விக்க முடியாம திண்டாடுறாங்க. பாவம் அவங்களுக்கு எம்.பிக்கிட்டயோ, எம்.எல்.ஏ கிட்டயோ சொல்லி யாராவது உதவுங்கப்பா...தையிரியமிருந்தா...

இப்ப அரசாங்கம் செஞ்சிக்கிட்டு இருக்குற ஒரு நல்ல காரியம், மேற்படி படங்கள போடாத பொருள எல்லாம் கண்டுபிடிச்சு அழிச்சுட்டு புதுசா வர சரக்குகளை மட்டும் விக்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு செய்யறதுதான். இதுனால எல்லா (புகை)குடி மக்களும் புதுசா வந்த சரக்க மட்டுமே யூஸ் பண்ற நெலம உண்டாயிட்டு. சோ, நம்ம உடலுக்கு பிரஸ்ஸான வியாதிதான் வருமே ஒழிய பழசல்லாம் வராது. அரசாங்கத்தோட மினிமம் கேரண்டி அடிப்படையில புகையிடலாம் வாங்க...

இப்ப படத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமுன்னா, இதுல எதுக்காச்சும் நாம வாடிக்கயாளரா இருந்ததா காதலிய இழுத்துகிட்டு ஓட முடியாது, ஏன்னா ஓடவே முடியாது.

இதுக்குமேல புகையோட 25 அருமைபெருமையெல்லாம் தெரிஞ்சுக்க கீழ உள்ள இடத்துல உங்க எலிய கடிக்கவுடுங்க...சாரி கடிச்சா போகல, அதனால கடிச்சிகிட்டுபோயி எங்க போடனுமோ போட்டுக்குங்க.

http://sathik-ali.blogspot.com/2009/02/25.html

இந்த லிங்க் மட்டும் தெரியாம சுட்டதுதான். எல்லாரும் தெரிச்சுக்கறதுக்காக. ஆனால் பதிவு என்னுடையது. அந்த நண்பர் என்னை மன்னிப்பாராக.


குறிப்பு:- இங்க நீங்க போடுற ஓட்டுக்கு ஓட்டுரிமை அவசியமில்லை. பதிநாயக கடமை உண்டு.



••••••••••

Friday, July 17, 2009

கடிதம் முதல் கடைசி வரை.....






நீட்டிய கடிதத்தின்
நீளம் குறைவுதான் என்றாலும்
காரமோ, காரணமோ குறையில்லை.
பெற்றுக்கொள்ளா நீயும்
அதை பேணிப்பாதுகாக்கும் நானும்
இன்றுவரை அவிழ்த்துகொள்ளாமல்
இருக்கிறோம் நம் மனம் கட்டிய
ஆடைகளை.

உனக்கு தெரிந்திருக்க வாய்பில்லைதான்
நான் கொடுத்தது கடிதம் இல்லை என்று.
ஆம் அதை ஒரு கடிதம் எனும்
கடினமான வாக்கியங்களில்
அடைக்க விரும்பாத எனக்கு அது....
அது இல்லைதான்.

வாங்காத நீயும், வைத்திருந்த நானும்
வஞ்சிக்கப்படுகிறோம் என்று மட்டும்
ஒரு உணர்வுகொண்டேன்.

பார்க்காத உன் பார்வையில்
நானிருக்க வேண்டுமென்று
வேண்டிக்கொண்டது என் சுயநலம்.
நீ பார்ப்பது என்னைதான்
என்று நானறிந்து நான் கண்டதில்லை.

ஒன்றுமில்லா ஒன்றை ஊதி
பெரிதாக்கும் உன் கண்களைபோல
எதுவுமில்லா உன் பார்வையில்
கசிந்தொழுகும் காதல் இருப்பதாய்
நண்பன் கூற நாசமாய் போனேன்.

நாணல் வளைவது
நாணத்தால் அல்ல,
அதை தாண்டிச்செல்லும்
தண்ணீரால் என்று அறிவுகொண்டேன்.

உன்னை படைத்தவன்
வேண்டுமானால் காவியன் ஆகியிருக்கலாம்.
ஆனால், உன்னை நினைத்தவன்,
இன்று நினைவழிந்த ‘காவி’யனாக
மனதை மட்டும்
விட்டுசெல்கிறேன்.

பார்த்துக்கொள் எதற்கும் பயன்படாமல்...


••••••

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO