க.பாலாசி: நல்லது கெட்டது...
Showing posts with label நல்லது கெட்டது.... Show all posts
Showing posts with label நல்லது கெட்டது.... Show all posts

Monday, November 14, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்..

.

பேருந்தில் ஏறும்முன் நடத்துநரிடம் ‘இடமிருக்கா?’ என்று கேட்பது என் வழக்கமும்கூட. மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘உனகெதுக்குப்பா தனியாவொரு எடம்.. போ போ அங்கண ஓரமா ரவையோண்டு இருக்குப்பாரு’ என்பதாக தலையசைப்பார். கடக்கு கழுதையென்று தனியாவர்த்தனமாக ஓரிடம்பிடித்து உட்காரும்போதெல்லாம் கூடவே இன்னுமிருவர் வலுக்கட்டாயமாக நெருக்கியடித்து உட்காருவர், அது இருவரிருக்கையாயினும். ஏன்டா இப்படியென்று கேட்கவும் முடியாது. ‘ஒனக்கு இந்த எடம் போதும்’ மென்று பொளிச்சென சொன்னாலும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ‘ண்ணே ...க்கு ஒரு டிக்கெட்’ என்றால் ‘அரையா முழுசா?‘ என்பார் நடத்துநர், பார்வையில். உயரத்தில் இரண்டடி குறைவாகவும், இந்த இரண்டு மி.மீ நீள மீசையுமில்லையென்றால் மனசாட்சிக்கு விரோதமின்றி பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும் அரை கட்டணச் சலுகையில் என்னால் பயணிக்கமுடியுமென்பது தற்காலத்திற்குமான நிகழ்தகவு. இந்த மிகை, குறையல்லவென்பது எனைக் கண்டறிந்தவர்களுக்கும் தெரிந்ததுதான். இதைபோன்ற சிறப்பு நிகழ்வுகள் கூடிவந்து கும்மியடிக்கும்போதுதான் வருடந்தோறும் ஐப்பசியும் 8ம் நாளும் வந்து தொலைக்கிறது. அடுக்குப்பானையிலிருக்கும் அதிரசம்போல கடந்த இரண்டு வருடங்களாக 27 ம் அகவையிலேயே குடியிருந்தது ஒரு இனிமைதான். சென்ற ஐப்பசி எட்டுக்குப்பிறகு அதிலும் பூசணம் பூத்தது. 30 தொடங்கிவிட்டதாம். கலிகாலம்.
•••

இந்த நேரத்தில் நீங்கள் தாராசுரம் என்ற ஊரைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 5 ஆவது மைல்கல் தொலைவிலுள்ளது இந்தப் பேரூர். இங்குள்ள, உலகப் பாரம்பரிய சின்னங்களும் ஒன்றான ஐராவதேஸ்வரர் திருக்கோவில் 12 ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலும் மேற்கண்ட கோவிலும் கலையில் நிறைய ஒற்றுமையுடன் திகழ்வதாக அறியப்படுகிறது. மேலும் இக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இசைப் படிகள் உள்ளது. அதாவது 7 கருங்கற்படிகளும் 7 ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைப்பற்றி  ஒரு முழுமையான பயணக்கட்டுரையை பதிவர் புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கவும்
•••

கூத்தாடி கிழக்கே பார்க்கவும் கூலிக்காரன் மேற்கே பார்க்கவும் காரணமிருக்கிறது. கூத்தாடியின் பிழைப்பு ராப்பொழுதில். ஆகவே அவன் விடியலை கிழக்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். கூலிக்காரன் பிழைப்பு பகற்பொழுது. அவன் சூரியன் மறைவை மேற்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். போலவே மாயவரம் மண்ணில் பிறந்த நான் மேற்கண்ட பத்தியில் தாராசுர பெருமை போற்றவும் காரணமிருக்கிறது. என் வருங்காலத்திற்கானவள், அதாவது இந்த மாதொருபாகனுக்கான மாதவள்  அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். அது, அதற்கு  இன்னொரு பெருமை.

•••

பெண்பார்க்கப் அந்த வீட்டினுள் நுழையுமுன்னமும் படபடப்பிருந்தது. ‘ஏங்க இவரு மாப்பிள்ளைக்கு கடைக்குட்டி தம்பியா?’ என்று யாராவது என்னைப்பார்த்து கேட்டுவிடும் அபாயமிருந்தது. நல்லவேளை அதற்கான வாய்ப்பை உறவினரொருவர்  தடுத்து ‘இவர்தான் மாப்பிள்ளை’ யென்றார். அப்பாடா‘ என்றிருந்தது. காபி டம்பளரை நீட்டியவள் முன் நாணலாக நாணவும் தெரியாமல், வீராப்புடனுமில்லாமல் சங்கோஜப்பட்டேன். பரஸ்பரங்கள் முடிந்து இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது, இருவருக்கும். அடுத்த அகவை வருவதற்குள் நல்லூணைப் பெருக்கி உடலையும் பெருக்கி ஒரு டி.எம்.டி முறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ அல்லேல் குறைந்தபட்சம் பி.வி.சி குழாயையாவது வளைத்துக்காட்டும் தண்டுளப வண்ணனாகவோ மாறிவிடவேண்டுமென்பதை வருங்காலத்தாளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் கொண்டை முடிந்திருக்கிறாள்.

•••

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யமொன்றறியோம் பராபரமே என்பதற்கிணங்க கவிதையெழுதுவதை சமீபகாலமாக நிறுத்தியிருக்கிறேன். தெரியவில்லையென்பது இரண்டாம்பட்சம். நல்ல எளிமைக் கவிதைகளை படிப்பதிலிருக்கும் ஆர்வம் எழுதுவதில் கிஞ்சித்துமில்லை. ஒரு மதிமயங்கிய மாலைநேரம், மழைக்காலம் எதையோ பேசி, எதையோவொன்றைச் சொல்லப்போக என்னவள், ‘நானும் கவிதையெழுதுவே’னென்று என் வலப்பக்கச் செவியின்வழி  குண்டைத் தூக்கிப்போட்டாள். நள்ளிரவு 12 மணிக்குமேல் கவிதையெழுதத் தோன்றினாலும் உடனே துயில் கலை(த்)ந்து ஒரு கோடுபோட்ட குறிப்பேடு முழுக்க கவிதைகளாய் சமைத்துவிடும் வல்லமை  பெற்றவளாம். மாமியார்கூட புளங்காங்கிதமடைந்தார். இந்த கவிதாயினிக்கு ‘சாமி’ வராமல் காலமுழுக்க பார்த்துக் கொள்ளவேண்டுமென்பதே என் இப்போதைய ஆசை.


Friday, May 6, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்

சென்ற வாரம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரின் உறவினருக்கு அவரசமாக இரத்தம் (வெள்ளை அணுக்கள் மட்டும்) தேவைப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் இணையத்தில் பகிரலாம் என்று யோசித்தேன். பிறகு வழக்கம்போல் எங்கள் வேலுஜி இந்த (http://www.friendstosupport.org/index.aspx) (http://www.blooddonors.in/) இணைய தளங்களில் இருந்த இரத்தம் கொடுக்கும் தன்னார்வலர்களின் அலைபேசி எண்களை சேகரித்து, அழைத்து 15 நிமிடங்களில் வேலை முடிந்தது. இதில் கிடைத்த 5 எண்களை தொடர்பு கொண்டதில் 2பேர் முன்வந்தார்கள். வாரம் ஒருமுறையாவது எங்களுக்கு இந்த இணையங்கள் பயன்படுகிறது. உங்களுக்கு எந்தவகையான இரத்தம் தேவைப்படுகிறது, நீங்கள் எந்த மாவட்டம், எந்த ஊர் போன்ற விபரங்களை கொடுத்தவுடன் உடனடியாக அந்தப்  பகுதியிலுள்ள இரத்ததானம்  கொடுப்பவருடைய முகவரி மற்றும் அலைபேசி எண்களை பெறலாம். பயனுள்ள தளம். மேலும் நீங்கள் இரத்த தானம் செய்பவராகவோ, அல்லது செய்யவிரும்புபவராகவோ இருந்தால் இந்த தளத்தில் உங்களது அழைப்பு எண் மற்றும் முகவரியையும் பதிந்து வைத்துவிடுங்கள். இல்லையெனில் என்னைப்போல் 50 கிலோ எடையை தாண்டாமல் இருங்கள்.

•••

30 நாட்களாக வலதுகையில் குடியிருந்த மூன்றங்குல ‘ஆணியை’ மருத்துவர் எடுத்துக்கொண்டார். இப்போதுதான் கை உடைந்ததுபோல் உள்ளது. ஒருமாதமாக நொண்டிக்கையை சாக்காக வைத்து பெற்றுவந்த சலுகைகள் ‘கிளிக்கு ரெக்க முளைத்துடுத்து, ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்து‘ கதையாகிவிட்டது. மொத்த உடலெடையில் 15 கிராம் குறைந்திருக்கிறது. எப்போதும்போல் 50 கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டேன். மருத்துவத்துறை முன்புபோல் இல்லை. புறங்கையில் ஒரு சுள்ளி எலும்பு முறிந்ததற்கு 9 ஆயிரத்து முன்னூத்துச் சொச்சம் செலவு. எதற்கெடுத்தாலும் பிளேட், கம்பி, ஸ்க்ரூ, ஆப்(பு)ரேசன், எதோ டெம்ப்போ லாரிக்கு பாடி கட்டுவதுபோல் செய்கிறார்கள், நல்லவேளை வெல்டிங் மிஷின் மட்டும் இல்லை. இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீடு, க.கா.தி, அல்லது நட்சத்திரம். படுக்கவைத்து இரண்டுநாள் படுத்தியெடுத்து ரவுண்டாக ஒரு தொகை கரந்துவிடுகிறார்கள் மடியில்(இல்)லாவிட்டாலும், நம்மிடம் அல்லது காப்பீடு மூலம் இப்படி இம்சைப்பண்ணும் மருத்துவர்கள் இன்னொசென்ட் என்ற பெயரில்கூட இருக்கிறார்கள். எண்ணெய்க்கட்டு, புத்தூர்கட்டு, மாவுக்கட்டு, அறுவைசிகிச்சை, கம்பிகள்... ; கழனித்தண்ணி, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, SKM மாட்டுத்தீவனம், ஊசிகள்.... 

••••

5 வயதில் ராக்கெட் விடவேண்டும் என்ற ஆசை வந்தது. பள்ளிக்கூடத்தில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன். வீட்டிற்கு வந்து எங்கே பேப்பர், எங்கே பேப்பர் எனத்தேடியதில் சிக்கியது அந்த திருமண பத்திரிக்கை. கூராக மடித்து சொய்ங்..சொய்ங்.... மணியன் தாத்தா வீட்டுக்கொல்லையில் விழுந்தது. வேலியை தாண்டி எடுக்க திரானி இல்லை. மறுநாள் அந்தத் திருமணம். அப்பா பத்திரிக்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்மீதான குற்றச்சாட்டு சகல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது. வழக்கம்போல விளக்கமாறுதான்.  மியாமிக்குஷன் செருப்பை மறைத்து வைத்திருந்தேன். தெருவில் ஓடவிட்டு அடித்தார். யாரோ ஒரு புண்ணியவான் உதவ, அதை எடுத்துகொடுத்துவிட்டேன். விசயம் அதுவல்ல. சமீபத்தில் யப்பாரின் மேஜையை பீராய வேண்டிய கட்டாயம், கரையான். பூராவும் பழைய திருமணப் பத்திரிக்கைகள், தொழில் சம்பந்தப்பட்ட கணக்குநோட்டுகள், 1980 க்கு பிறகு வந்த கடிதங்கள், என்னுடைய 3ம் வகுப்பு பாட குறிப்பேடு, கூடவே அந்த திருமணப்பத்திரிக்கையும். நிறைய பத்திரிக்கைகளையும், கடிதங்களையும் பொறுமையாக அமர்ந்து வாசித்தேன். பின்னோக்கிய பயணம்தான் எவ்வளவு சுவாரசியம். எனது நண்பன் ஒருவனின் பெற்றோருக்கு நடந்த திருமணப்பத்திரிக்கையும் அதில் இருந்தது. அவனிடமே காட்டியும் மகிழ்ந்தேன். இப்பவும் வீட்டின் எதோமூலையில் வருகிற பத்திரிக்கைகளை திருமணம் முடிந்ததும் கொக்கியில் சொருகிவிடுகிறார் அப்பா.  சென்றவாரம் நண்பனொருத்தன் திருமணத்திற்கான அழைப்பை குறுந்தகவலாக அலைபேசிக்கு அனுப்பினான், ‘புடவைடா (sarry) மாப்ள. ட்யூ டூ ஸார்டேஜ் ஆப் இன்விட்டேசன்‘ இன்ன கிழமை, இன்ன தேதி, இன்ன நேரம், இவளுக்கும் எனக்கும் இன்னக்‘கொடுமை’ யென்று.    படித்துவிட்டு உடனடியாக உள்பெட்டியை சுத்தம் செய்தேன். என் புத்தி.

••••

ஒரு நூலை விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு புத்தியில்லையெனக்கு. ஆனாலும் இந்த நூலைப்பற்றி எதாச்சும் சொல்லவேண்டுமென்று மனது அடித்துக்கொள்கிறது. படித்து ஒருமாதமாகிறது. இன்றளவும் அசைபோடுகிறேன். இதைப்பற்றி விமர்சித்தவர்களையெல்லாம் தேடிதேடிச்சென்று படிக்கிறேன். சென்ற மாதம் ஆஸ்பத்திரியில் 2 நாள் படுத்துக்கிடந்தபோதுதான் வாசித்தேன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள். ஒரு அற்புதமான படைப்பு. கேரளத்து மண்ணில் எல்லாவித பசியோடும் ஒடுங்கிய வயிற்றோடுமலைந்த அந்தக் கவிஞனின் வாழ்க்கை சில பக்கங்களில். பெரும்பாலும் வறுமையில் சிதைந்த முகத்துடன், கூடவே சபலம், ஆற்றாமை, குற்றவுணர்வுகள். ஒரு மனிதனின் முகம் வெளிக்காட்டக்கூடிய அனைத்து உணர்ச்சிகளையும் படிக்கும்போது உள்ளத்தால் உணரவைக்கிறார். ஒரு இடத்தில் ‘மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான், நான் சாப்பிட ஆரம்பித்தேன்’ என்றிருப்பார், அந்த கணம் மனதைப் பிசையும். ‘சிதம்பர ஸ்மரண’ என்ற இந்த மலையாளப் புத்தகத்தினை வம்சி பதிப்பகம் வழியாக அதே உணர்வுகளோடு தமிழில் கோர்த்திருக்கிறார் திருமதி.கே.வி. ஷைலஜா. எனக்காக இதை பரிந்துரைத்தவர் திருமதி. பத்மஜா. இருவருக்கும் என்றென்றும் நன்றிகள். 



••

Tuesday, April 26, 2011

யரலவழள

*

அடுப்பினுள் தூங்கும் அந்தப் பூனைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
எதுவுமில்லா வீட்டில்
எலியும் இருக்காதென்று.

•••

யாசித்துக் கிடைக்காத
பிச்சையை வீதியெங்கும்
வீசிச்செல்கிறான் பிச்சைக்காரன்
சாபமாக....

•••

பசியில் இறந்தவன்
உயிர்நாற்றம் குப்பையில் 
சிதறிக்கிடக்கிறது
தலைவாழை இலையுடன்

•••

பகலில் தூங்கி 
இரவில் எழுகிறது
காய்ந்த வயிற்று   
வேசியின் சேலை.


Wednesday, March 30, 2011

தஞ்சாவூர் சிறுக்கி

90, 91 வாக்கில் என்று நினைக்கிறேன், 2 வகுப்பு. ஒரு மூன்று அடி சுவரு. செந்தாமரை டீச்சர் முன்பு பயில்வான் பக்கிரிசாமியாக காட்டிக்கொள்ள துள்ளிக் குதித்து விளையாடியதில் விழுந்து இடது கை முட்டியில் செங்கல் மோதி மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குமார் வாத்தியார்தான் ஒரு அடி ஸ்கேல் மூன்றை இரண்டு இரண்டாக உடைத்து சணல்போட்டு கையில் இறுக கட்டி வீட்டிற்கு அனுப்பினார். அம்மா அழுதாள், ‘க’னா பய மொவன், சும்மாயிருக்கவேமாட்டான்’ அப்பா அடிக்காமல் திட்டினார்.  மாயவரம் சுப்பையா டாக்டர் அப்போது பிரபலம். மனிதர் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சார்மினார் சிகரெட் வீதம் பற்றவைத்தப்படியேதான் வைத்தியம் பார்ப்பார். ஒரு மாதம் கைக்கு வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து சுபமங்களம்.

மீண்டும் 2001-2002 கல்வியாண்டு. ஸ்கிப்பிங் கையிற்றை இருவர் பிடித்துக்கொள்ள உயரம் தாண்டுதலில் கோலோச்சிக்காட்டியதில் அதே இடதுகை முட்டியில் ஒரு எலும்புத்துண்டு விவாகரத்துக்கு விரும்பிவிட்டது. விடமுடியுமா?, மீண்டும் சுப்பையா, சார்மினார் சிகரெட் மருத்துவம், விவாகரத்து தள்ளுபடியாகி எலும்புத்தம்பதிகள் ஒன்றுசேர்ந்தனர். இந்தமுறை வீட்டிற்கு தெரியாமல் கட்டுப்போட்டுவிட்டு கலைமகள் ஸ்கூல் ஸ்டாப்பிங்கில் இறங்கி வீட்டிற்கு செல்லும்போது அம்மா முந்தானையில் மூக்கை சிந்தியபடி எதிரே வந்துவிட்டாள். ‘ஏன் தம்பி ஒனக்கு?’ அழுதாள். நண்பன் தேற்றினான். ஒரு மாதம் கல்லூரிக்கல்விக்கு விடுப்பு கொடுத்துவிட்டு காதல் கல்வியைத் தொடங்கினேன். உமா என்னை முழுதும் அடைத்துக்கொண்டது அந்தக்காலகட்டம்தான். ஸ்கிப்பிங் கயிறை இறுகப்பிடித்து என் கையை உடைத்த அதே நண்பனின் தங்கை, பழிக்குப்பழி.


இவைகள் என் வீரவரலாற்றுக் கல்வெட்டுக்களின் இண்டு இடுக்குகளில் காணப்படும் இரண்டு முத்துக்கள்தான். எப்போதுமே எனக்கு எண்ணிக்கையில் மூன்று பிடிக்கும். ‘பொதுவாழ்விலும்’ முதலில் சுஜா, பிறகு பவானி மூன்றாவதாக காதல் ரசம் கரைத்தூட்டிய உமா, கடைசியாயும்கூட. நெருங்கிய நண்பர்கள்கூட மூன்றுபேர்தான். உருப்படாத கோவிலில் உண்டக்கட்டி வாங்கித்தின்ன கூட்டம் நாங்கள்தான். இன்றும் எவனும் விளங்கவில்லை என்னையும் சேர்த்து. இப்போது 2011, பொதுவாகவே புஜபல பராக்கிரமசாலியான எனக்கு மீண்டும் அந்த எலும்புத்தேவன் கோவில் மணியோசை வலதுகை சுண்டுவிரலில் கேட்டது.


ஒரு பிணத்தின் கால்கட்டைவிரல்களின் கட்டை அவிழ்த்துவிட்டு மூக்கில் உள்ள பஞ்சிகளையும் நீக்கிவிட்டு ஒருநாள் உயிர்க்கொடுத்தால் அந்த பிணம் என்ன செய்யும்? என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகள் அப்படிதான் 6.30க்கு விடிகின்றன. யாருக்கு எப்படியோ, எனக்கு விளையாட்டு புத்திதான் மோகித்திருந்தது. மைதானம், மட்டை, பந்து, எதிரணியில் ஒன்பது ஜாம்பவான்கள். ஆளும் அணியில் ஒன்பது. ஒரு(ரே) பந்து சுண்டுவிரலை நக்கியதில் உள்ளெலும்பில் மணியோசை. உடைந்துவிட்டது.


இந்தமுறை நண்பர்களைத்தவிர வீட்டிற்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை, மூக்கு சிந்தவும், ‘ஏந் தம்பி, ஏந் தம்பி ஒனக்கு?’ என்று ராகங்களை இசைக்கவும் அம்மா, அப்பாவுக்கோ, அக்காளுக்கோகூட தெரியாது. வழக்கம்போல இரவு 8 மணிக்கு அழைத்து ஏம்மா? நல்லாருக்கியா? சாப்டியா? போதும். என் நலத்தையும் அறிந்துகொள்வாள். பத்துநாளில் ஊருக்கு போகவேண்டும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டை எனக்கு. அப்போது இதை எப்படி தாங்கிக்கொள்வாள். ம்ம்ம்.... அது கிடக்கு கழுதை, இந்த அம்மா எப்போதும் இப்படிதான், அப்பாவைப்போல உள்ளுக்குள் பரிந்துகொள்வதில்லை.

ஒரு அறுவை சிகிச்சை. கோணி ஊசி அளவு ஒரு கம்பியை உள்ளே செருகியிருக்கிறார் டாக்டர்.இன்னொசென்ட் (பெயரில் மட்டும்) நல்ல விபரம். ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா? கேட்டுவிட்டுதான் இரண்டுநாள் படுக்கவைத்தார்.  நாலைந்து செவிலிப்பெண்கள். ஒருத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உமாவை அப்படியே உரித்து வைத்திருந்தாள். புருவத்து முடிகளை ட்ரிம் செய்து, நெற்றியில் சிறிய கருப்புநிற ஒட்டுற பொட்டு, அதே அளவு, நிற மூக்குத்தி. உமாவைவிட நல்ல நிறம். நன்றாக சிரித்து பேசவும் பழகவும் செய்தாள், எளிமை காட்டினாள். என் காட்டில் பெய்த இந்த மழையில் சிலீரென்று அந்த இருதய நரம்பு துருத்திக்கொண்டது. கட்டணம், ரசீதுகள் மற்றும் இத்யாதிகளை முடித்துக்கொண்டு எல்லாப்பெண்களிடமும் விடைபெற்றுக்கொண்டேன். ‘அடுத்தமொற ஒங்களுக்கு வாயில அடிபடணும்’ ஒருத்தி விளையாட்டாக சிரித்துக்கொண்டே சொன்னாள். வாயை மூடிக்கொண்டேன்.

‘அண்ணே நாலுநாள் கழிச்சி வாங்க, கட்டுப்போடணும்’,


‘எவடி அவ?’ திரும்பிப்பார்த்தேன், உமாவை உரித்துவைத்த அந்த தஞ்சாவூர் சிறுக்கிதான், பாதகி, கிராதகி. கையிலும் வலித்தது.


Thursday, February 3, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்

அதிகாலை 7 மணி இருக்கலாம். தேநீர் அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு திருப்பம், அங்கே லாரி ஒன்று எனது திசையில் வலதுபுறம் நிறுத்தப்பட்டிருந்தது. காலைநேரப் பனி, குளிர். நாசியில் நுழைந்த தூசிக்காற்று குறுகுறுத்ததில் கண்களை மூடி ஒருகை வாய்பொத்த தும்மிவிட்டேன். அதேநேரம் எதிரே ஒரு வயதானவர் டி.வி.எஸ் வண்டியில் வந்துகொண்டிருந்தார். சற்றேறக்குறைய இருவரும் மோதிவிடும் நிலைமை. கொஞ்சம் அவரோ அல்லது நானோ சுதாரித்துக்கொண்டு மையிரிழையில் மோதிக்கொள்ளாமல் தப்பித்தோம்@தார். மோதியிருந்தால் அவர் லாரியின் ஓர பட்டைகளில் அடிபட வாய்ப்பிருந்தது. நான் வெறுமனே தரையை தடவியிருக்கக்கூடும். இருவரும் ஒருவரையொருவர் கடந்து பத்தடி இடைவெளியில் நின்றுவிட்டோம். அவர் என்னை திட்ட ஆரம்பித்தார். ‘ஏன்டா காத்தால வர்ரீங்க..என்ன நெனப்புல போறானுங்களோ தெரியல’ இன்னும் இன்னும்.. அப்படியே கொஞ்சம் ‘ஒத்தச் சொல்லால தனுஷாக என்னை அவர் நினைத்திருக்கக்கூடும். என்மீது தவறு, உணர்ந்துகொண்டேன். நின்று திரும்பி கை சின்னத்தைக்காட்டி ‘சாரிங்க’ என்றேன். அவர் வாக்காளனைப்போலவே கருவிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அவர் அருகில் சென்றேன். ஒருமாதிரி மருண்ட விழிகளுடன் பார்த்தார். பிறகு தமிழில் ‘மன்னிச்சிடுங்க தப்பு என்மேலத்தான், திடீர்னு தும்மல் வந்திடுச்சு...அதான், இனிமே நடக்காம பாத்துக்கிறேன்’ என்று அமைதியான குரலில் சொன்னேன். முன்பிருந்த கோபம் முற்றிலும் அவரிடம் இல்லாமல்போனது. போலவே சாந்தமான குரலில் ‘பாத்துப்போ கண்ணு’ என்றார். ஒரே சொல்தான், முன்பு சொன்னதற்கும் இதற்கும் பொருளும் ஒன்றுதான், சொற்களின் ஒலியளவுகளில் வேண்டுமானால் சற்று வித்யாசம் இருக்கக்கூடும், ஆனால் இங்கே இருவேறானது மொழிகள்தான். அந்தச்சொல் கொடுக்கிற அழுத்தம் மனதை புரட்டிப்போடுகிறது. அதுதான் தமிழ்.

•••••••

வாரமொருமுறை இரவு உணவுக்கு செல்லும் ஒரு சிற்றுண்டி கடை. ஒரு தாத்தன்தான் பிரதான பாத்திரம், ஒரு அம்மாக்காரியும், பெரியம்மாக்காரியும் துணை. ஒரு குழந்தை இங்கே நாயகி. எப்போதும் துருதுருவென ஓடுவாள் ஒடியாறுவாள், நாம் சிரித்தால் சிரிப்பாள், முறைத்தால் முறைக்காமல் அவளம்மாவின் கொசுவத்தை பிடித்துக்கொள்வாள். நேற்று அவள் அம்மாவும், பெரியம்மாவும் இல்லை, பிரதானச்சாலையில் அடுத்தசாரியில் கால் பர்லாங்கு தள்ளியிருக்கும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கக்கூடும். எப்போதும் பூச்சிகளைக் கண்ட பூனையைப்போல் இருப்பவள் கொஞ்சம் சுணங்கியிருந்தாள். கொஞ்சநேரத்திற்கெல்லாம் அழவும் தொடங்கிவிட்டாள். தாத்தனைத் தவிர வேறுயாரும் கடையிலில்லை. அவரே சமையல்காரர், பறிமாறுபவர், துடைப்பவர் இத்யாதி.... நை..நை யென்று அழத்தொடங்கியவள், தாத்தன் தண்ணீர் மொள்ளப்போனால் பின்னாடியே... கைலியைப்பிடித்துகொண்டே, இலையெடுக்கப்போனால்  ....பிடித்துக்கொண்டே, தோசை ஊற்றப்போனால்....கொண்டே, காசு வாங்கி கல்லாவில் போட்டால் ...ண்டே... இன்னும். இந்த சூழ்நிலையைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குகூட எரிச்சல் வந்து அவளை சமாதானப்படுத்த முயன்றேன், ம்கூம். அவளுக்கு இப்போது வீட்டிற்கு செல்லவேண்டும். அதற்குதான் அடம், அழிச்சாட்டியம். கடையில் என்னைப்போலவே சாப்பிடும்  மற்றவர்களும் சமாதானம் செய்ய முயன்றார்கள் முடியவில்லை. கூடவே தாத்தனும். சாப்பிடுபவர்களை அப்படியே விட்டுவிட்டு கூட்டிச்செல்ல அவராலும் முடியாதுதான். ‘இரும்மா, இரும்மா.. தோ அம்மா வந்திடுவா.. ஒனக்கு என்னவேணும் சொல்லு, வாங்கியாறேன்.. அழாத..’ ம்கூம்..... இதே நானாகயிருந்தால் ஓங்கி செவுள் செவுளென்று அறைந்திருப்பேன், ருக்கலாம். ப்ப்ப்ச்ச். என்னுடைய வியப்பு இப்போது அந்த முதியவரிடத்தில் திரும்பியது. எப்படியிவர் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார்!!!. கொஞ்சம்கூட அந்த குழந்தையை கடிந்துகொள்ளவில்லையே!!. ஆனால் அவரிடத்தில் ஒரு இயலாமை, தன்னையே நொந்துக்கொள்ளும் கடுமை. பிறகு மீண்டும் ‘அழாத என்னவேணுஞ்சொல்லு, தாத்தா வாங்கியாரேன், சரி வாப் போலாம்’ என தூக்கிக்கொண்டு எதிர்த்த மளிகைக்கடைக்கு சென்றார். ஒரு லேய்ஸ் மற்றும் வாட்டர் பாக்கெட் அழுதுவீங்கிய கன்னம் மலர தேவைப்பட்டிருக்கிறது. ‘மீண்டு’ம் வந்தார், முகத்தில் சாதனை. எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது. எல்லா பெற்றோர்களும்தான் ‘இங்கே’ பேதையாகிருப்பார்கள்.


••••••••

வழக்கம்போலவே ஒரு விடுமுறைநாள். எப்போதும் சிந்திப்பதைவிட அதிகம் முயன்றதில்  2 வருடங்களுக்கு முன்பு சென்ற  சென்னிமலை முருகன் ஞாபகம் வந்தார். நண்பனும் நானும் மயில்வாகனனுக்காக இருச்சக்கர வாகனத்தில் கிளம்பினோம். சரியாக மதியம் ஒன்றரை மணி. மலையேற ஆயிரத்து முன்னூத்திச்சொச்சம் படிகளும் கூடவே பசியும் துணை. முருகனுக்கு கோபம் வந்தால் பொசுக்கென்று மலையுச்சியில் ஆண்டியாக உட்கார்ந்துகொள்கிறார். எல்லோரும் பணத்தைப் பணத்தால் எடுக்க அவரை மலையில் தேடுகிறார்கள், இயல்பு அல்லது ஆசை மற்றும் நப்பாசை என்னைப்போலவே!!!. போனமுறை நண்பனும் நானும் மேலே சந்நதிக்குப் பின்புறம் மலைக்கற்களைப் பொறுக்கி ஆளுக்கொரு வீடு கட்டினோம், சும்மா, கூம்பாக, அடுக்கடுக்கி. உள்ளே ஒரு நெய்விளக்கும். இந்தவருடம் நண்பனின் ஆசை நிறைவேறியதற்காக ஒரு நன்றிகடன், நான்  இம்முறையும் கற்கள், கூம்பு, நெய்விளக்கு. இந்தமுறை மரங்களில்லாத இடத்தில் கட்டவேண்டும்...டினேன் (குறியீடு). மேலேறும் போது பிரித்துவைத்த புளிச்சோரு மூட்டையுடன் ஒரு குடும்பத்தை பார்க்க நேர்ந்தது. எவ்வளவு காலமாகிறது, இந்த கட்டுச்சோறு சாப்பிட்டு, குறைந்தது நான்கு, ஐந்து. உச்சி வெய்யிலில் ஈரப்பதமிக்க எல்லா இடுக்குகளிலும் மொய்க்கிற எறும்புக்கூட்டம்போலான மனதிது. அவரைக்குளத்து மாரியம்மனும், திருவிழாயிரவில் கட்டுச்சோற்றுடன் மேடையின் முன்னமர்ந்து பார்த்த அரிச்சந்திரனும் ஞாபகம் வந்தார்கள். குளத்திலிருந்து துள்ளிய மீனொன்று கட்டாந்தரையில் துடிப்பதுபோலிருந்தது. கீழே இறங்கிவந்தபோது நான்கு மணி. மலையடிவாரம், கொஞ்சம் ‘கொஞ்ச’ லாம்போல் தென்படுகிற சுடிதார் யுவதிகள். பசிக்கு தின்ற பத்துரூபாய் பொரியும், கலவைக்காரமும் அடிவயிற்றை ஐம்பதுபைசா பலூன் அளவுக்கு ஆக்கியது. தைப்பூச திருவிழாக்கடைகள் இன்னும் எடுக்கவில்லை. சுற்றும் ராட்டினம், சில குழந்தைகள். நாமும் ஏறலாமா? வேண்டாமா? கொஞ்சம் குழப்பமும் கூச்சநாச்சமும் வேண்டாமென்றது, காரணம் பனிக்கூழ் நக்கியவாறான அழகு பெண்கள் மற்றும் கடந்துவந்த என் வயது. அருகருகே தள்ளுவண்டிகளில் பலாச்சுளை, வேர்க்கடலை, கீத்துப்போட்ட அண்ணாச்சிப்பழம்... ம்கூம்.. முக்கினாலும் முடியாது, சோற்றுப்பொரியால் வந்தவினை,  நாங்கள் வண்டியை கிளப்பினோம், வயிறும் மனதும் புடைத்தேயிருந்தது. வஞ்சனை வாழ்க்கை. 



.

Wednesday, December 22, 2010

ஒரு குழந்தையின் குமுறல்



விளை நிலங்களை விற்றாகிவிட்டது
மூலைக்கொரு வீடும் வந்துவிட்டது
காவலுக்கிருந்த அய்யனார்
கட்டிடத்திற்குள் வந்துவிட்டார்
இனி கவலையில்லை.

*******

பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம்
சாயுங்காலம் டியூசன்
விடுமுறையென்றால் வீடியோ கேமும் உண்டு
வேறென்ன குறைச்சல்
எங்கள்வீட்டு நாய்க்குட்டியும் இப்படித்தான்.

*******

கட்சிக்கும் நடிகனுக்கும்
பளபளக்கும் பதாகைகள் 
பட்டினியில் செத்தவன் பிள்ளை
சிரிக்கிறான் வலது ஓரத்தில்..
பெரியதாய் படம்போட்டு... 

*******

விதர்பாவைப்பாருங்கள்
தண்டகாருன்யாவைப்பாருங்கள்
அய்யோ என் இனமே செத்துவிட்டதே
போராடுவோம்.. போராடுவோம்...
திரட்டியில் இணைத்தால் வேலை முடிந்தது
ஹலோ? என் கேபினுக்கு டீ வரல.

*******

எல்லாரும் திருடனுங்க
அத்தனையும் ஊழல்
யாருவீட்டு காச யாரு திங்கறது?
இந்தமுறை ஓட்டுப்போட
தலைக்கு ரெண்டாயிரம் வேணும்...

*******

அக்காளுக்கு போட்ட நகைநட்ட
நம்ம கல்யாணத்துல புடுங்கிடலாம்
கூடவே ஒரு டூவீலரும் கெடைச்சிடும்
ஜாம்..ஜாம் கல்யாணம்தான்
தாலிதானே குத்தும்.. பரவாயில்லை.

*******

செத்தவன் சேதி சிறுத்துக்கிடக்கும்
முக்கியமானது ஒரு மூலையில்
அரசியல்வாதி கோமணம் அங்கங்கே
போதும் போதும்.. ஆனது ஆகட்டும்
நடிகனின் மசிருக்குள் தேடலாம்
பத்திரிக்கை தர்மத்தை.

********



.

Friday, November 26, 2010

கௌரவம் - ஆ

காதுல கிடக்கிற
குண்டுமணி சைஸ் தோடும்
கையில இந்த
அலுமினிய வளையலும் போதும்

கழுத்துக்கு மட்டும் எப்போதும்போல
சந்திராவோட முருக்கு செயின்
ஏன்னா..
அதுதான் எடுப்பாயிருக்கும்.

அவளும்
அதே கல்யாணத்துக்குப்போனா
இருக்கவே இருக்கு
சரசோட இன்னொரு சீரகச் சங்கிலி

ஒரே தெருவுல விஷேசம்னா
வேறவழியில்ல..
கழுத்தொட்டிக் கருத்துப்போன
சிதம்பரம் கவரிங்‘தான்

கிராக்கி பண்ற
சகுந்தலாகிட்டயும் கல்யாணிகிட்டவும்
எப்பவுமே கேட்கிறதில்ல

நமக்குன்னு
ஒரு கௌரவம் இருக்குல்ல.



••••••••••••••••••••


பூன் கட்டின மூங்கித்தடியும்
ஒரு கம்பி விட்டுப்போன குடையுந்தான்
தர்மலிங்க தாத்தாவோட அடையாளம்

ஒரு கல்யாணம் காட்சி
நம்ம திம்மன்னா
சும்மா கூப்பிட்டாப்போதும்
எட்டு மொழ வேட்டியும்,
காசித்துண்டோடையும் வந்திடுவாரு

வாசல்ல நிக்கிறவன்
வாங்கன்னு
கூப்பிடலன்னா அவ்ளோத்தான்

மொய்ய எழுதிட்டு
வீராப்பா போயிடுவாரு

அவர் கால்லதானயா செருப்பில்ல
கௌரவத்துக்கு என்ன குறைச்சல்.



கௌரவம் - அ



.

Friday, November 19, 2010

ஏன்யா இந்த காண்டுவாதம்?

சாதாரணமாவே கல்யாணம் முடிச்சு புதுபொண்டாட்டிய அம்மாவோட விட்டுட்டுப்போற வெளியூரு மாப்ளைகள் பாடு திண்டாட்டம். இதுல பயபுள்ள ஃபாரின்ல இருந்தா கேக்கவாவேணும். இப்டித்தான் எதுத்த வீட்லையும், பக்கத்தால லலித்தாக்கா, அதுக்கடுத்தால ஆனந்தி பெரிம்மா வீட்லையும் பசங்களுக்கு கல்யாணம் முடிச்சி அந்தப்பயலுங்க மூணுமாசம் லீவு முடிஞ்சி ஃபாரின் போயிட்டானுங்க. ஒரு வருசம் முடிஞ்சி புள்ளப்பெத்தபெறவுன்னு அதுவரைக்கும் மாமியா மருமகக்குள்ள எந்த பிரச்சனையுமில்ல. பாராட்டத்தான் செய்யணும். லைட்டா ரெண்டாவது வருசம் தீவாளி, பொங்கலுக்கு வரிசை வய்க்கிறப்பத்தான் எழவெடுத்த சண்ட ஆரம்பிச்சுது. முதல்ல லலித்தாக்கா வீட்ல. அஞ்சு தட்டு நெறைய சாமான்ங்கள  பொங்கச்சீரா அடுக்கிக்கொண்டுவந்தாலும் நொட்டாரம் சொல்ற மாமியாக்காரிங்க எங்கதான் இல்ல. அந்த நொல்லக்கண்ணு லலிக்கு மட்டும் இல்லாமலா போயிடும். என்மொவன் வெளிநாட்ல அவ்ளோ சம்பாரிக்கிறான், நாதியத்த குடும்பத்துல பொண்ணுகட்டி ஒண்ணுத்துக்கும் வழியில்லாம போயிடுச்சுன்னு அக்கம்பக்கத்து அக்காக்களோட சாயந்தரம் ஆனா கதையளக்க ஆரம்பிச்சிடும். கடைசியிலப்பாத்தா இந்தம்மாளோட பொண்ணுக்கு புருஷங்காரனவிட்டு மணியார்டர்ல 200, 300 ஓ அனுச்சிட்டு அடுத்தவன கொறசொல்லும். 

ஆத்துக்குப்போறவ அன்னாந்துகிட்டே போவாளாம், கூத்துக்குப்போறவன் குனிஞ்சிகிட்டே போவானாம் அந்த கதையா பெட்ரூமு, பைப்படி, அடுப்படி, சன்டிவி, ஆனந்தவிகடன், மாட்டுக்கொட்டா, ஏனம் வௌக்கறது, துணி தொவைக்கிறதுன்னு தன்னோட கோவத்தல்லாம் காட்டிட்டே பொழுத ஓட்டுற மாட்டுப்பொண்ணு சும்மாவா இருப்பா. தன்ன திட்டினாலும் கோவப்படாத எந்த பதுசான மனுஷிக்கும்  அப்பனாத்தால திட்டனா பொசுக்குன்னு வரத்தான் செய்யும். கோவத்துல ஒன்னு அழுவா, இல்லன்னா டக்குன்னு எதாவது ராங்கி ரப்பான வார்த்தையா கொட்டிடுவா. மாமியாளோட ஆட்டத்த ஆரம்பிக்க இதோட காரணம் வேணுமாயென்ன. அப்பறமென்ன ஈருகுளில்ல மாட்டின பேன் கதைதான் புதுப்பொண்ணோட பொழப்பு•. அது என்னமோத் தெரியல. எல்லா மாமியாக்காரிகளும் அம்மாவா இருக்கிறவரை நல்லாத்தாங்க இருக்குதுங்க. மருமக வந்தா அப்டியொரு குஜால் ஆயிடுதுங்க. சிக்கிட்டாடா ஒரு அடிமைங்கிறமாரி. 

ஈர நாக்குல யாருக்குத்தான் எலும்பிருந்திருக்கு. தெருக்கள்ல பாத்திங்கன்னா கட்டுக்கழுத்திங்கன்னு நாலுபேரு இருக்கும்ங்க. எங்கன கல்லு கருமாதி, நல்லதுகெட்டது, சாதி சடங்கு, சீமந்தம், வளயகாப்புன்னாலும் ஆரத்தியெடுக்கறதுக்கும் அம்மிக்கல்ல தூக்கி நேரா மூணு சுத்து, ரிவர்ஸ்ல மூணு சுத்து சுத்தறதுக்கும் இதுங்கத்தான் முன்னாடிப்போயி நிக்குங்க. ‘யக்கா பாத்துப்பாத்து கொண்டாந்த மருமவ ஒன்னையே எதுத்து பேசிட்டாம்ல. அப்டி என்னக்கா அவ்ளோ அதப்பா அவளுக்கு’ன்னு மூக்குப்பொடிய மூஞ்சிலத்தூவினாமாரி ஏத்தி விட்டுடுங்க. இதுக்கெடையிலத்தான் ரூமுக்குள்ள குமுறி குமுறி உட்காந்திருக்கிற மருமவ சிறிக்கி ஏர்மெயில் கவர் வாங்கி கண்ணீர் கடிதத்த ஆரம்பிக்கும்.. ‘அன்புள்ள அத்தான், அவ்வ்வ்வ்வ்வ்வ்....... ’ அதுக்கப்பறம் சொல்லவா வேணும், வந்தது போனது, நடந்தது நடக்காதது எல்லாத்தையும் நாலு பக்கமா எழுதி போஸ்ட் ஆயிடும். 

அதுக்கு முன்னாடியே ஆத்தாக்காரி 8 பக்கத்துக்கு கொறயாம எதுத்தவீட்ல எவனாச்சும் என்னாட்டம் இளிச்சவாயன் இருந்தான்னா எழுதச்சொல்லி ‘இங்க பாருடா மோகனு, உம் பொண்டாட்டி சரியில்ல, எது சொன்னாலும் எதுத்து எதுத்து பேசுறா, எதாச்சும் வேல சொன்னா மூஞ்ச சுழிச்சிக்கறா, ஆவூன்னா ரூமுக்குள்ள போயிடுறா, கரண்டு இல்லன்னா இந்த கொடகல்லுல ஆட்டுனா என்னா? அதகூட செய்யமாட்டுறா, அதென்னமோ குசுகுசுன்னு ஒரு நாளைக்கு ரெண்டு தரம் அவவீட்டுக்கு போன் பண்ணி கொறசொல்றா, போன் பில்லு நறையா வருது, சோறு போடுறப்ப தட்ட கீழ வச்சி சல்லுன்னு தள்ளிவிடுறா, உங்கொழந்தைய கொஞ்சநேரம் கொஞ்சக்கூட விடறதில்ல, சாயந்தரம் ஆனாவே பொட்டுதான் பூவுதான் சென்ட்தான். மேக்கப் போட்டுகிட்டு சித்ரா வீட்டுக்கு போயிடுறா, அவளும் இவளும் என்னதான் அப்டி பேசுவாங்களோ தெரியல, திரும்பி வர 9 மணிஆவுது. அதுவரைக்கும் எனக்கு சோறு போடறதில்ல. பேசி முடிச்சிட்டு வந்தப்பறம்தான் எனக்கு சோறு போடுறா. நானே போட்டு சாப்புட தெம்பாயிருக்கு. அவளோட சேர்மானம் சரியில்ல சொல்லிட்டேன் ஆமாம். அப்பா அன்னைக்கு எதோ சொன்னதுக்கும் எதுத்து பேசுறா, இது சரியில்ல. நானும் நீ மனசு கோணக்கூடாதேன்னுதான் எல்லாத்தையும் பொருத்துக்கிறேன். இப்பவும் நீ நல்லாருக்கனும்னுதான் நெனக்கிறேனே ஒழிய நான் என்னத்த மூட்டக்கட்டிகிட்டு போவப்போறேன் (ரெண்டு சொட்டு கண்ணீரு) சொல்லு. உம்பொண்டாட்டிய அடக்கி வைய்யி, இல்லன்னா உம் அம்மாவ நீ உசிரோட பாக்கமுடியாது. அவ்வ்வ்வ்வ்’ அப்பறம் எடையில எடையில மானே தேனே பொன்மானே.....

ங்ங்கொய்யால இந்தமாதிரி லெட்டர படிக்கிறவன் துபாயிலையும், சிங்கப்பூருலையும் நிம்மதியா வேலை செய்யமுடியும்கிறீங்க. ஏறச்சொன்னா எருதுக்கு கோவம் வரும், இறங்கச்சொன்னா நொண்டிக்கு கோவம் வரும்னு ஒரு பழமொழி உண்டு. இந்த மத்தளத்துல ரெண்டுபக்கமும் அடிவாங்குற தோலு மாதிரி கல்யாணம் முடிச்சிட்டு ஃபாரின் போற மாப்பிள்ளைங்க பொழப்பு நாத்தப்பொழப்புங்க. இதுங்க ரெண்டுபேரையும் சமாளிச்சு ஒருவழியா ஓஞ்சிப்போயிடுவான் அந்த படுபாவி. அது ஏன்டா உனக்கு இந்த ஃபீலிங்குன்னு நினைக்கிறீங்களா? ஏரி நிறைஞ்சா கரை கஸ்ஸ்ஸ்ஸியத்தானங்க செய்யும். எங்கத்தெருவில அஞ்சாரு குடும்பங்கள்ல இந்த நெலமத்தாங்க. இதெல்லாம் நெனச்சுப்பாக்குறப்பதான் ஏன்யா இந்த காண்டுவாதம்னு தோணுது.  



Monday, October 25, 2010

ஒரு கூடும் சில குளவிகளும்

நான் வந்த பேருந்தில் ஏறியவர்கள் கணவன் மனைவியாக இருக்கவேண்டும். தொடை உயரம் ஒரு மகன், இன்னொரு குழந்தை அப்பன் தோளில் தூங்கியது. அவர் கையில் பால் பாட்டிலும் தயாராகவே இருந்தது. பேருந்தினுள் நான்குபேர் இடைவெளியில் இருவரும் நின்றுகொண்டார்கள். மூக்கொழுகும் பெரிய மகன் அவளின் காலை கட்டிக்கொண்டான். ஒரு கையால் மேல்கம்பியை பிடித்துக்கொண்டாலும், மறுகையில் துணியடைத்த குச்சிப்பையை வைத்துக்கொண்டாள். ஒருவரின் மூச்சுகாற்று அடுத்தவர் முதுகில் சூட்டைப்பரப்புமளவு கூட்டம். இருவர் இருக்கையில் அமர்ந்திருந்த குண்டு சிறுக்கிகளுக்கு மூன்றுபேர் இருக்கையே தாங்காது. அவர்களின் தள்ளுமுள்ளலும் இவளுக்குத்தான் இடைஞ்சல். அவ்வப்போது விலகும் மாராப்பையும், இடுப்புச்சேலையையும் சரிசெய்துகொண்டாள். அருகருகே நிற்கும் ஆண்களின் இடிசலுக்கும், நடத்துநர் நடையழகுக்கும் ஓர் உடலங்கத்தை அவள் ஒதுக்கிவைத்தே ஆகவேண்டும். இந்த மேடுபள்ள சாலையில் பயணிப்பதில் ஆண்களுக்கே அடிவயிறு கலக்கும் அபாயம் உண்டு. ஐந்தாவது முறையாக பெரிய மகனின் ஒழுகும் மூக்கை முந்தானையால் துடைத்துவிட்டாள். ஒரு வேகத்தடையை கடந்தது பேருந்து. அப்பனிடம் தூங்கிய குழந்தை விழித்துக்கொண்டது. இவளைப்பார்த்து அழத்தொடங்கியது. அவர் பாலைக்கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார், குடிக்கவில்லை. அனைவரும் கவனிக்க தொடங்கினர், சிலருக்கு எரிச்சலும்கூட. அப்பன் கையில் திமிரிய அந்தப்பொடிசை அவளே வாங்கிக்கொண்டாள். ‘ச்ச்சுச்சூ...ச்ச்சுச்சூ...ஏஞ்செல்லம் அழுவுறீங்க.....’ என்றபடியே இடுப்பில் அமர்த்தி முத்தமிட்டாள், அவ்வளவுதான்....அதுவும் சிரித்தது, அவளும் சிரித்தாள்..... நான் இறங்கவேண்டிய நிறுத்தம் கடந்துவிட்டது.

•••••••

அக்கா மகள் தன் குறிப்பேட்டைக்காட்டி ’மாய்மா...இத பாறேன்’ என்றாள். ‘அ’னா‘வை அழகாக எழுதியிருந்தாள்.

‘ரொம்ப நல்லாயிருக்கே நீங்களா எழுதினீங்க?’என்றேன்.

‘ம்ம்ம்’ என்றாள்.

‘எந்த மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க?’

‘ஹர்ஸா மிஸ்’

‘ஓ...எங்க மறுபடி எப்டின்னு போட்டுக்காட்டுங்க பார்ப்போம்’

‘பர்ஸ்ட் மேலவொரு ஸ்மால் சர்க்கிள் இப்டி போட்டுட்டியா, அதுக்கு கீழ ஒரு பெரிய எலிப்ஸ், அப்பறம் ரெண்டையும் ஜாயிண்ட் பண்ணி ஒரு கர்வ், நெக்ஸ்ட் ஒரு ஹரிசான்டல் லைன், வெர்டிகிள் லைன். அவ்ளோத்தான்.......’

அக்கா கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள், மாமா பூரித்திருந்தார். ஒன்றாம் வகுப்பு சேரும்போது தமிழ்பண்டிட் பொன்னுசாமி அய்யா என் விரலைப்பிடித்து சிலேட்டில் ‘அ’ எழுதிக்காட்டியதை நினைத்துக்கொண்டிருந்தேன். விட்டத்து மூலையில் ஒட்டடைக்கூட்டினில் சிக்கிய பொன்வண்டை பார்க்கப் பாவமாயிருந்தது.

•••••••••

இப்போதெல்லாம் அவளை நினைத்துப்பார்ப்பதை குறைத்துவிட்டேன். ஓர் அகண்டவாய் ஏனமாக இன்றைய நிலை மாறிவிட்டதாலோ என்னமோ கொண்டதெல்லாம் கொண்டுவிடுகிறது. அவளென்னுள் படிந்த வேகம் ஒரு குறுகிய காலம். ஒரு ஜென்ம பகையும், ஏழு ஜென்ம நினைவுகளையும் மனதிலிருந்து சுரண்டமுடியாமல் செய்துவிட்டாள். ஒரு பெட்டிக்குள் அடைபட்டுள்ள துணிகளாய் வர்ணவர்ணமாய் அவளின் காதல் அடைந்துகிடக்கிறது. அவ்வப்போதைய கனவுகளும், சில பெருவெளி தனிமையும் அணிந்துகொள்வதோடு சரி. முக்கி முனகி நான்கு வருடங்களை கடந்துவிட்டேன். அண்ட சராசரங்களனைத்தும் ஒரே ஜீவனுக்குள் அடக்கிவைத்திருந்திருப்பதாய் பாரமாகவே கழிகிறது பொழுதுகள். ஒரு கழுமரமும் அதிலமர்ந்த காகமுமாய்த்தான் மடிந்து புலரும் பொழுதுகள் கண்ணாம்பூச்சிக்காட்டி ஓடி ஓடி மறைகிறது. எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டி மட்கசெய்துவிடத்தான் பார்க்கிறேன். போகும் வழியெங்கும் சேகரிப்பது குப்பைகளாகவே இருப்பின் எதை எங்கே கொட்ட.

•••••••••

நேற்றைய இரவுப்பொழுதை பேருந்துப்பயணம் மேயந்துகொண்டது. காலையிலதுமிழ்ந்த வெளிச்ச உலகில் மாற்றமேதுமில்லை. சென்றவருடத்தைவிட இப்போது 2 கிலோ எடை அதிகரித்திருக்கிறேன். தா(டி)டை முடிகள் சற்றே கூர்மையடைந்து காணப்படுகிறது. மீசை(?!!!)யில் கருமை அடர்ந்துள்ளது. வலது காதுமடல் மேல் ஒரு வெள்ளை மடையானின் இறகு நீட்சி. சென்றவருடம் இது இல்லை. ஒரு இருட்டறையும், அதிலமர்ந்து வாசிக்கும் தொடர்கதையுமாக இவ்வாழ்க்கை புரண்டுகொண்டேயிருக்கிறது எதுவும் புலப்படாமல் அல்லது படுத்தாமல். வெறுமனே புரட்ட 27 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. வீடு கட்டும் மணலில் காற்கூடு கட்டிக் கழித்த வயதுதான் இப்போதைய கனவுகளை சொரிந்து சுகப்படுத்துகிறது. வேறென்ன சொல்ல. இந்த நாளையினிமையாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



.

Saturday, October 9, 2010

இன்றிரவும்...


எல்லோருக்கும் தெரியும்
யார்தான் அறியாதவர்

காலையில் தோப்புத்தெரு
அடுத்து மேலவீதியும்
கலைஞர் காலனியும்

எங்கும் கிடைக்காமற்போனால்
எப்போதுமில்லாத அக்ரஹாரம்

கடைத்தெரு செல்லும்போது மட்டும்
கிடைத்துவிடவாப்போகிறது....

யாசிப்பவளின் இடுப்பெலும்பில்
வெறித்திருக்கும் சிசுவிற்கு

இன்றிரவும் கிடைக்கலாம்....

வேப்பெண்ணை வாசமும்
அதே உதிரமும்.


.

Friday, September 24, 2010

சுக்குமி ளகுதி ப்பிலி...

கொல்லவாசல் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரத்துகள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்கொடுக்கிற அம்மா இப்பவும் அதேமாதிரிதான் இருக்கு. நானிங்கவந்து நைட்டு ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு பக்கத்து பொட்டிக்கடையில ‘அண்ணா ஒரு பழம்னா?’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாங்க. பொழைப்பத்த அம்மாக்கு பொழைக்கத்தெரியலையா இல்ல எனக்கான்னு தெரியல. இந்த பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.

••••••••••••

ரெண்டுரூவாய தெருமொன ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்வாய்க்கு எப்பாருக்கு ஒரு பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல அதோட லாட்டரி சீட்டுக்கு நடுவுல வைச்சித்தர சுண்ணாம்போட கார்ரூவா கொட்டப்பாக்கு, கார்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச கார்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மாத்ரி.

•••••••••••••

அந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி வய்ச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரங்கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுகடையில வாங்கினா கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகால்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடயையும் சேர்த்து வித்துட்டு புள்ளைங்க சம்பாதிக்கறதே போதும்னு ஊட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அரிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.

••••••••••••

ஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள் எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட வந்தப்ப கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திராவீடு. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கு தாராளமா போதும். இந்தமாடு கறவ விட்டுட்டா அடுத்து அது, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம் பருத்திக்கொட்ட வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட மட்டுமில்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.

•••••••••••

இந்த மண்வெட்டி கால்ல விழுந்தாலுஞ்சரி, அருவா இல்லைன்னா கோடாளி எப்டிக்காயம்பட்டாலும் எலந்த இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும் வெட்டுக்காயம் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் தாத்தனுக்கு இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன என்னொடம்புக்கு அந்த டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும்.

•••••••••••••

அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.



Monday, September 13, 2010

மனிதம் சொட்டிய மலர்கள்...

பிடறியில் விழும் காலத்தின் அடி ஒவ்வொன்றும் வலுவாகவே இருக்கிறது. குன்றினில் ஏறியபின் மதிப்பற்றுப்போகும் கட்டாந்தரையை போலவே எல்லாமும் வளர்‘சிதை‘ ஆகிவிட்டது. கடந்ததை அசைத்துப்பார்ப்பதில் இருளடர்ந்த கனவுகள்கூட அள்ளிப்பருகொத்த அமிர்தம்தான்.

‘செத்த இரு ஆத்தா தோ போட்டுக்கொண்டாறேன், கால்‘ல வெந்நீரயா ஊத்தியாந்த?’,

‘அட பொருடா, அதுக்குள்ள வந்தடமாட்டாங்கொப்பன்’,

‘யப்பா பிரவு கொஞ்சம் மணித்தாத்தாவுக்கு சட்ணி ஊத்துப்பா’,

‘வா மாப்ள ஊர்ல இருக்கியா!!?, இப்பலாம் ரோட்டுக்கடத்தான் கண்ணுக்கு தெரியுதானொக்கு’,

‘வாங்க சார், எதோ கெடக்கன், இது யாரு பேரனா?, பய அப்டியே ஒங்களயே உரிச்சி வச்சிருக்கானே’,

‘இரும்மா அம்மா வந்திடுவா, தாத்தா ஒண்டியா இருக்கன்ல, நிறைய பேரு சாப்டுட்டிருக்காங்க, எல்லாம் போனப்பின்னாடி நீக் கேட்டத வாங்கியாறேன் என்ன’,

‘என்ன பட்டாமணியாரே, பையனுக்கு எதோ வேணுமாமே துரைக்ட்ட சொல்லி வாங்கித்தர்ரது?’,

‘எய்யா செயா அங்காடியில என்னைக்குயா மண்ணன்ன போடுவ? பத்து தேதியாச்சுய்யா......’,

‘என்னத்த சொல்றது மாமா, நாம படுறது நம்மளோட போவட்டும்னுதான் மொவனையாவது வேற வேலைக்கு அனுச்சிட்டு ஒண்டியாவே பாத்துக்கிறேன்‘ என கிராமங்களில் குடிசைக்குளியங்கும் சின்னச்சின்ன உணவு விடுதிகளும், டீக்கடைகளும் உறவுகளுக்குள்ளும், உரிமையெடுப்பிலும் வாழ்ந்துகொண்டிருக்கும். புலரும் ஒவ்வொரு பொழுதும் கொஞ்சலும், குலாவலுமாகவே எல்லாவற்றிற்கும் விடையும் விடிவாகவும் கரைந்துகொண்டிருப்பதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்.



தெருத்தெருவுக்கு விடியலைப் பார்த்து எழுந்து அன்பொழுக பறிமாறப்படும் எந்த உணவிலும் பறக்கும் ஆவியுடன் எதோவொரு மனம் மற்றும் மண் சுவை இருக்கத்தான் செய்தது. அன்போ, பண்போ, பரிவோ, மனிதமோ, உறவு முறையுடன் வந்துவிழும் வார்த்தைகளோ ஏதோவொன்றின் மூலம். அப்பாவின் பெரியவராயின் பெரியப்பாவாகவோ, அம்மாவுக்கு அண்ணனாக்கி மாமாவாகோ, வயதின் மிகை அண்ணனாகவோ ஏதோவொரு முறையில் உறவாகிவிடுவார் அதன் உரிமையாளர். இன்றும் கீத்துக்கொட்டகையில் டீக்கடைகளையும், சின்ன உணவு விடுதிகளையும் சில இடங்களில் காணும்பொழுது நெஞ்சினில் உருளும் நினைவுகள் மலரவே செய்கின்றன.

‘சித்தப்பா நீ படிச்சிப்படிச்சு சொன்னன்னுதான் அத்துப்போன ஒறவ ஒட்டலாம்னு பொண்ணு கேட்க வந்தேன். ஆனா அவன் என்னடான்னா முறுக்கிகிட்டுல்ல போறான்.‘

‘அட இரு மோனே.. நாங்பேசிப் பாக்குறேன். ஒடனேவா கோச்சிக்கறது. எதார்ந்தாலும் பொறும வேணும்பா. இந்தா, டீய குடிச்சிட்டுப்போ நான் பேசுறேன் அவர்ட, நாஞ்சொன்னா மனுஷன் கேப்பான்யா.‘ என்று பிரிந்திருக்கும் உறவுகளை சேர்ப்பதில் தொடங்கி வாய்க்கால் வரப்பு தகராறு வரை தீர்த்துவைக்கப்படும் இவ்விடங்களில் ‘அரசியல் பேசாதீர்’ என்ற வாசகம் மட்டும் அழுத்தம் திருத்தமாக மாவுக்கட்டிகளால் தெரியும். எவரும் உறவாகவும், எல்லாம் இயல்பாகவும் மனிதம் சொட்டும் மலர்களாய் எப்படித்தான் நடக்கிறதோ இந்தக் கடைகள் என்று எண்ணத்தோன்றும் இவ்வேளையில், பளபளக்கும் கண்ணாடி மாளிகைக்குள் இயங்கும் தற்போதைய நவநாகரீக உணவு விடுதிகள் செங்கல்லும், சிமெண்டும் கலந்த புதர்களாகத்தான் காட்சித்தருகின்றன.

அடுத்தவீட்டு முகவரியறியா இக்காலத்தில் எல்லா ‘நகரீய’ மாற்றங்களையும் இழுத்துக்கொண்டு, சீக்குவந்த கோழியாய் சிறுத்துப்போய்த்தான் கிடக்கிறது மனிதநேயமும் மற்றசிலவும்.


Friday, August 20, 2010

ஒளிகளின் நீட்சி...

பட்டிக்குள் அடைபட்ட செம்மறியாட்டுக் கூட்டமென ஆசாபாசங்களை துறக்க பழகிவிட்டது இந்த காலும், கையும். விஞ்ஞான துணுக்கினை வீட்டிற்குள் அமர்த்திவிட்டு அடைகாக்கத்துணிந்த உடலும், மேலிமையை புருவங்கள் கட்டிவைக்க விடியல் வீழ்வதறியாமல் வெறித்திருக்கும் கண்களும் எதையெதையோ தின்றுகொண்டிருக்கின்றன.

நிற்க...

ராஜன் ஜவுளிக்கடைக்காரர் வீட்டுக்கு வந்தபொழுதான் தெரிந்ததெனக்கு தொலைக்காட்சிப்பெட்டியின் மகிமை. நக்கீரர் தெருவுக்குள் இந்த வி.வளர்ச்சியை இழுத்துக்காட்டிய பெருமை ராஜனுக்கு. வாசல் சன்னலில் தொங்கும் திரைச்சீலையை விலக்கி ஒட்டிஒட்டி பத்துப்பதினைந்து கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாக நின்று பருவமடைந்தவளை பதுங்கியிருந்து பார்த்தார்போல் படங்கள் பார்த்த பொழுதுங்கள் இப்போதுமந்த வீட்டின் வாசலில் நிழலாய் நிற்கிறது. பிறகு குருசாமி வீட்டில், அடுத்து ஹரி வீட்டில் இப்படியாக நீமுந்தி, நான் முந்தியென அவரவர் கௌரவம் வீட்டுக்கூடாரத்தை கருப்பு வெள்ளையாக்கியது. யார் வீட்டில் படம் பார்க்கலாமென ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்திருக்கிறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படியில்லை. இந்த ஹை.ஃபி வானொலிப்பெட்டியும், அதில ஒலிக்கும் காரைக்கால் பண்பலையும் அவர்களின் அதிகபட்ச விஞ்ஞானமாக எண்ணியிருந்தனர். வேறெந்த பற்றும் அவர்களை ஆட்கொள்ளவில்லை. அப்பாவுக்கு இதுவரையும்கூட.

அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் வள்ளித்திருமணத்தையும், மயான காண்டத்தையும் கொன்றுவிட்டு சாஸ்த்தா கடையிலிருந்து வாடகைக்கு அந்த தொ.கா. பெட்டியும், ஒரு ஒளிநாடா இயக்கு கருவியும் எடுத்து வைத்தனர். திருவிளையாடலில் ஆரம்பித்து வருஷம் 16 ஓடிக்கொண்டிருக்கும்பொழுது விடிந்தேவிடும். ‘பாரு,பாரு.... எந்த காமுட்டி கோயில்லடா தீவெட்டி புடிச்சே?‘ன்னு வாத்தியார் தலையில் தட்டும்பொழுதான் பள்ளியிலிருப்பதாய் கண்களுக்கு சுரணைவரும்.

‘ஏம்பாலாஜி சவுளிக்கடக்காரு வூட்ல படம் போடுற மெஷினு வந்திருச்சாம்ல. பாத்தியா நீயி’ ன்னு அப்போது கேட்ட அலமேலு அவ்வாவும்(பாட்டி) குத்துக்காலிட்டு திண்ணையிலமர்ந்து ‘இந்த ராசாயா கெழவிக்கும் அது மொவனுக்கு காலைலேந்து எதோ சண்டையாம்லடி நவநி, ஒனக்கு தெரியுமா?’ என்று ஊர் வம்புகளை உலையுடன் சேர்த்து கொதிக்கவைத்த அஞ்சுகம்அம்மாலும், குஞ்சம்மாளும் இப்போது உரலுக்குள் குத்துண்ட நெல்லாக வாசலை எட்டிப்பார்ப்பதில்லை. உறவுகளை வளர்த்ததும், ஊர்வம்புகளை வெற்றிலைப்பாக்குடன் கதைத்ததுமாகயிருந்த பாட்டிகளின் வெறித்தனமான ஆட்சி இப்போது தொ.கா.பெட்டி இயக்குகருவிப் பொத்தான்களுடன்.

ரூபாய் 400 ஓ 600 ஓ மாதாமாதம் உதவித்தொகையாக வாங்கும் ஆதரவற்றோர்கள், கம்பிவழி அலைவரிசை இணைப்புக்கு ரூபாய் 100 யை இழக்கத்தயாராகிவிட்டனர். காரணம் அரசு அளித்த இலவச தொ.கா.பெட்டி. பொங்கித்தின்ன ஒரு ரூபாய் அரிசி கிடைப்பதும் அவர்களின் பலம். ஊன்றமுடியா காலுடன் வாழ்நாளின் உச்சியிலேறி உச்சிப்பிள்ளையாரைப்பார்த்த மகிழ்ச்சி அவர்களின் கண்களில் தொலைக்காட்சித் தொடர்களை காண்கையில் தெரிகிறது. தொடர்களைக்காண வீடுகள் தேடியலைந்த ஏக்கமும், தாகமும் தணிந்துவிட்டதெண்ணி ஒரு பெருமிதமும்கூட. நல்லதோ கெட்டதோ அவர்களின் வாழ்நாள் உறக்கம் முழுவதும் ஏதோவொரு தொ.காட்சித்தொடரின் நாயகியின் கண்ணீரில் கனவுகளாக கடந்துபோகுமென்பது மட்டும் திண்ணமாகத்தெரிகிறது.

எப்படியாயினும் ‘ந்த, ஏன் மாத்தர? 8 மணிக்கெல்லாம் போட்டுடுவான். வய்யி‘ என இப்போது அம்மாவும் அதட்டும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற காணம் தொடங்கும்முன் அலமேலுவை, சவுந்தர்ராசு நயினா வீட்டில்போய் அமர்த்திவிட்ட ஒளிகளின் நீட்சியை இப்போதுதான் உணர்கிறேன்.






Wednesday, August 18, 2010

எதோ வீ.ஏ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல...

‘எய்யா எதோ வீ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல நீ ஃபாம் அனுப்பிட்டியா’ன்னு எப்பாரு கேட்கும்போது ‘இல்ல’ன்னு சொல்லித்தொலைச்சிட்டேன். ஃபோன்லயே விட்டாரு பாருங்க டோஸு ‘அந்தப்பய மொவனே, இந்தப்பய மொவனே’ன்னு பாதி அவரையே திட்டிட்டு என்னையும் கொஞ்சமா கொதறி வச்சாரு. பெத்த மனுஷன் கத்தினா நல்லதுக்காதான இருக்கும். ஏழு கழுத வயசாயும் இன்னும் நமக்கிந்த புத்தி வரமாட்டுதேன்னு போஸ்டாபிஸ்க்கு போனாத்தான் தெரியுது, தலையில ஒட்டு முடிகூட இல்லாத கெழங்கட்டைகள்லாம் அவத்தால குத்தவச்சிருக்கறது.

வந்துதே எனக்கு வீரம், அப்பிளிகேஷன் வாங்கலாம்னு போனா ஸ்டாக் இல்லயாம். ஒருபக்கத்தால ‘அவைலபில்‘ன்னு நோட்டீஸூ, இன்னொரு பக்கத்தால அவுட் ஆஃப் ஸ்டாக்குன்னு.





ஒரு வழியா நண்பருகிட்ட வாங்கி ஃபில் பண்ணி போஸ்ட் பண்ணப்போனா ‘கொல்’லுன்னு ஒரே கூட்டம். உள்ளப்போனொன்னே ஒரு செம ஃபிகர்தான் கண்ணுல பட்டுது. ரொம்ப நேரமா அந்த க்யூவுலேயே நின்னுகிட்டிருந்தேன். போஸ்ட் மாஸ்டர் கிட்டத்தால போனப்பதான் தெரிஞ்சிது நான் நிக்கவேண்டியது அடுத்த க்யூன்னு. கொஞ்சநேரத்துக்கெல்லாம் ‘அம்மே’ன்னு ஒருப்பயபுள்ள வந்து அந்த ஃபிகர் கால கட்டிப்புடிச்சிது. அடக்கருமமே...நேத்து புள்ளபெத்தது, நாளைக்கு பெக்கப்போறதுலேர்ந்து நிக்குதுங்க. அதுங்களுக்கு அடுத்தால க்யூல புருஷனுங்களும் ஒரு கேரி பேக்கோட நிக்கிறாங்க. இந்த புள்ளையாண்டானுங்களுக்கு என்னா நம்பிக்க பாருங்க. எதோ காசு குடுத்தாதான் இந்த வேலையெல்லாம் கெடைக்கும்னு பேச்சுப்போக்குல சொல்லிக்கிட்டு திரிஞ்சதெல்லாம் சந்தடிச்சாக்குல அப்ளை பண்ணிட்டு வெளியில வருதுக. அதுசரி நம்பிக்கத்தான வாழ்க்கையே.

அந்த குண்டம்மா ஃபிரியட்ல கடைசிகாலத்துலதான் TNPSC-ய ஓப்பன் பண்ணுச்சு. எதோவொரு நம்பிக்கையில நானும் கடக்கு கழுதன்னு எக்ஸாம் எழுதுனேன். அதோட அந்தம்மா ஆட்டம் காலி. இப்பயும் அதே நம்பிக்கையிலத்தான் எழுதப்போறேன்.. பாப்போம்..



போஸ்ட் ஆபிஸ் வாசல்தாங்க


ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஃபில் பண்ணவேண்டியத, ஒருநாளைக்கு முன்னாடிதான் பண்ணணும்னு விதி போல..


தோ பாருங்க இவரும்தான்


கடைசியா கண்ணாமுழி தெரியற மாதிரி ஒருத்தன் நிக்ரானே, அவன எவத்தையோ பாத்த மாதிரி தெரியுது...


ம்க்கும்... எந்த புள்ளைய பெத்ததுக்காக இந்த நெலமயோ தெரியல



வெய்யலுதான். என்னா பண்றது. வயிறு காயுதுல்ல. இந்த சீஸன்ல விய்க்கலன்னா எப்ப விய்க்க முடியும்.




உள்ளபோன அம்மாக்காக வெயிட்டிங்...



எதோ சீரியஸான டிஸ்கஸன் போலருக்கு




பேரெல்லாம் நல்லாத்தான் வச்சிருக்காங்க.. ஒரு நல்ல மனுஷங்க பேர விடுறதில்ல..


இதுக்கு ஒண்ணும் சொல்ல தெரியல


என்னதான் காமடி பண்ணினாலும் அரசாங்க வேலைக்கு எளசுங்கள்ட கிராக்கி அதிகம்தான். நாரப்பயலுக அதையும் காச வாங்கிட்டு யாராருக்கோ பட்டாப்போட்டு குடுத்திர்ரானுங்க. என்னதான் அரசாங்கத்தோட தகுடுதித்தம் தெரிஞ்சாலும் எதோவொரு நம்பிக்கைதான் இவ்ளோ அலமலப்புக்கும் காரணம்.

சும்மாவாச்சொன்னாங்க ‘எலிக்கு திண்டாட்டம், பூனைக்கு கொண்டாட்டம்’னு..







Wednesday, July 21, 2010

ஒட்டுவாரொட்டி...

முருகேசனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் முருகேசனுக்கு பத்திகொண்டுதான் வரும்.

‘ஒருநாளைக்கு பதினஞ்சாயரத்து சொச்சம் பேராவது பொழங்குற எடத்துல க... பயலுங்க ஒரு பக்கத்தால மட்டும்தான் ஒண்ணுக்க இருக்க கட்டிவிட்டுருக்கானுங்க. அந்தப்பக்கத்தால ஒண்ணு கட்டினா இவனுவ வீட்டுக்காசு கொறஞ்சமாதிரி நெனப்பு. இந்த செவத்துல பொழுதுக்கும் நின்னு ஒண்ணுக்கடிச்சு நாறடிக்கிறத பயலுங்கல என்னத்த சொல்றது. பாழப்போனவனுங்களுக்கு புத்தியிருக்குமா என்னான்னே தெரியல. எல்லாம் முழுக்காலு சட்டையும் சவடாலுமாத்தான் திரியிரானுங்க, ஒரு பயலுக்காச்சும் இப்டி பொதுவால நின்னு இருக்கோமே இதுனால வர கெடுதல நெனச்சுப்பாத்தானுங்களா? நாத்தம் நாத்தம் அண்டசயிக்கல’
இது முருகேசனின் அன்றாட புலம்பல்.

‘ஏப்பா கொஞ்சம் தள்ளிதான் போங்களாம்பா.. அங்கணத்தான் கட்டிவுட்டுருக்காங்கல்ல’
இப்டியும் சிலநேரம் கத்திப்பார்ப்பான். ‘நல்லது சொன்னா எவங்கேக்குறான்.. நாசமாப்போச்சு..நமக்கென்ன’ என்று நினைப்பதுதான். ஆனாலும் அவனால் முடிவதில்லை. ‘பங்காளி ஆத்தர அவசரத்துக்கு போறதுதான். இதெல்லாமா பாத்துகிட்டுருப்பாங்க, அழிஞ்ச கொல்லையில ஆடு மேஞ்சான்ன? மாடு மேஞ்சான்ன??’ன்னு பக்கத்துக்கடை பங்காளி சொல்வதுண்டு. ‘சும்மாகெட பங்காளி. எனக்கு கெட்டக்கோவம் வந்திடும்’ என்பான்.

அன்றைக்கு ஆறுமணிக்கு கடைதிறக்கவேண்டியவன் ஏழு மணி ஆகிவிட்டது. அவசரஅவசரமாக வந்தவன் ‘இந்த கொண்டாங்கொடுத்தான் ஒறவே வேண்டான்னு நெனைக்கறதுதான். என்னப்பண்ணி தொலையறது. வந்ததுங்களுக்கு எதாவது செஞ்சித்தொலைய வேண்டிக்கடக்கு’ மனதிற்குள் புலம்பியவாறே ‘கிரிச்’ யென்ற உருமலோடு இயங்கும் சட்டரை மேலே தூக்கினான். கொல்லைப்பக்கமுள்ள ஒரு கழிவரையையும் சொந்தங்கள் அடைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. ‘எல்லாத்தையும் அடக்கலாம் போலருக்கு, இத அடக்க முடியறதில்ல. கடையத்தெறந்திட்டு போலாம்னா இப்டி அடிவயித்தால படுத்துதே. நேத்தைக்கு நைட்டு இந்த அரிசி கணக்கா உள்ள மாத்தரைய (Cetirizine) சாப்டது தப்பாப்போச்சு. நிமிசத்து ஒருவாட்டியா வரும். கருமம் புடுச்சவனுங்க. சலி அலர்ஜின்னாலும் சரி, அரிப்பு, புண்ணுன்னாலும் சரி இதததான் தர்ரானுங்க.’ அதற்குள் யாரோ கடைக்கு வந்துவிட்டார்கள்.

‘வாங்கம்மா என்ன வேணும்?’.
‘ஆப்பில் என்னவெல’.
‘கிலோ 140’
‘அரகிலோ போடுங்க’
‘ம்ம்ம்’
‘பை வச்சிருக்கீங்களா?’
‘இருக்கு’
‘இந்தாங்க.... காலைலேயே நூறுவாய தர்ரீங்களே. சில்லர இல்லைங்களா?’
‘இல்லப்பா’
‘பங்காளி இந்த நூறுவாய ஒடச்சி கொடேன்.’
‘காலைல ஏது பங்காளி. இல்ல...’
‘இரும்மா, எதுத்தால பூக்கடயில வாங்கியாரேன்.’

‘ச்ச..ச்ச.. அடிவயத்தவேற லேசா வலிக்கற மாரி இருக்கே. இனிமேலும் முடியாது. யாவாரத்தையும் உடமுடியல. நல்லவேள சில்லர வாங்க இங்கவந்தோம். அப்டியே போயிட்டு வந்திடவேண்டியதுதான்’ கீழண்டப்பக்கமாய் உள்ள இடுப்பளவு சிமெண்ட் கிராதிப்போட்டு அடைத்திருந்த அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்திற்குள் நுழைந்தான். உள்ளபோனதுதான் தாமதம்...‘அடக்கருமம் புடிச்சவங்களா இங்கயா வந்து பேண்டு வப்பானுங்க, நாறப்பயலுக. காலங்காத்தால, ஹ்கூம், கொல்லுன்னு மொய்க்கிற ஈக்கூட்டத்த பாத்தாலே பயமாயிருக்கு. வாயில நல்லா வருது. என்னாத்த சொல்லி திட்டறது. இப்ப எங்கப்போறது?. ம்கூம்....... அவசரத்துக்கு பாவமில்ல. இன்னைக்கு இந்த செவத்தாலையே போவவேண்டியதுதான். இங்க கூட பரவாயில்ல போலருக்கு. மூக்க பொத்திகிட்டே இருந்துக்கலாம்’ குற்றவுணர்ச்சியும் தானாக பொத்திக்கொண்டது.

•••••••••••••••

ராமநாதனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ராமநாதனுக்கு பத்திகொண்டுதான் வரும்.........................................


Wednesday, June 30, 2010

கனவுகள் பலவிதம்...

நிலவைக்காட்டி
அம்மாவும்

மிட்டாய் ஆசைகள் கூறி
அப்பாவும்

பூச்சாண்டிக்கதைகள் சொல்லி
பாட்டியும்

ஊட்டிஊட்டிவிடும்
எத்தனை ஆசாபாசங்கள்
நிறைத்தாலும்.......

கையேந்திபவனை கடக்கையில்
கலைந்துபோகிறது...

கைகளற்றவனின் கனவு.



•••••••••••••••••



கால்களால் வரைந்த பட்டத்தை

பார்த்தபடியே

துயிலடைந்தாள் அச்சிறுமி


அவளின் இரவுகள் முழுமையும்

வியாபித்திருக்கின்றன

ஆயிரமாயிரம் பட்டங்கள்


இமைகளுக்குள் கண்கள்

அங்கும் இங்கும் அலைந்தபடியே...


தன் பட்டம்

உயரப்பறப்பதில் ஆனந்த கண்ணீர்...


(தூக்கத்தினூடே)

அனிச்சையாகவும் துடைத்துகொள்கிறாள்

தோள்பட்டைகளால்...




Tuesday, June 22, 2010

சில புழுக்கள்


சிலநேரங்களில் காணுகின்ற நிகழ்வுகள் மனதின் மையத்தைப்பிடித்துக்கொண்டு அகலாமல் அரித்துக்கொண்டிருக்கும். அதுபோலவே இதுவும்...

அலுவலக நண்பருடன் சமீபத்தில் அம்மன் கோவில் கும்ப அபிடேகத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை உருவானது. பளபளக்கும் வெளிர்நிற ஆடைகளில் அவ்வூரே திரண்டு ஒற்றுமையாக அவ்விழாவினை நடத்தியது கண்டு வியந்தேன். விசேடங்கள் முடிவடைந்தவுடன் இருசக்கர வாகனத்தை எடுக்க திரும்பி வரும்பொழுதுதான் கவனித்தேன் ஒரு வீதி மக்கள் அவ்வீதி முகனையில் நின்றுகொண்டு அக்காலை உடையுடன் கோவிலைப் பார்த்துக்கொண்டிருப்பதை. அவ்வோடையின் அந்தப்பக்கம் கோவில். இந்தப்பக்கம் அவ்வீதி. நண்பரிடம் விசாரித்தபொழுதுதான் அத்தொண்டைக்குழியடைக்கும் நிலை ஏற்பட்டது. அம்மக்கள் அந்த கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களென்று. ஏனென்று வினவியபொழுது அவர்களின் சாதிதான் காரணமாய் சொல்லப்பட்டது. மீறி சென்றால் அடிதடி, வெட்டுக்குத்து போன்றன நிகழுமாம்.

அந்த சிறுவாய்க்காலின் படித்துறையில் பல்துலக்கியபடியும், துணிகளை தெருக்குழாய்களில் அலசியபடியும் அத்தனை நன்மக்களும் வேடிக்கை மட்டுமே பார்த்தது நெஞ்சில் அடைத்துக்கொள்ளத்தான் செய்தது. அவர்களுக்குக்கூட தோன்றவில்லை, அந்த அம்பாளை வணங்கவேண்டுமென்று. ஒரு ஊரில் மிகைவாழும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் திமிருடனான ஆதிக்க மனப்பான்மை இதுபோன்ற கீழ்ச்செயல்களுக்கு அடித்தளமாகிறது என்பது கண்கூடு. அந்தப்பக்கம் நின்று வெளுத்த சட்டைவேட்டியுடனும், பட்டுப்புடவைகளுடனும் அம்பாளை தரிசனம் செய்யும் அத்தனைப்பேரின் மனதிலும் எத்தனை அழுக்குகள் நிறைந்திருக்கின்றன. நாகரீக வளர்ச்சி எத்தனையோ படிகளை எட்டிவிட்டநிலையிலும் இன்னும் சில உட்கிராமங்களின் நிலை இப்படியேத்தான் உள்ளது.

எனது தாய் தந்தையருக்கு சாதியின் சாயம் ஒட்டியிருந்த சமயங்களில், அப்படியான மாயை எதுவுமில்லை, எல்லோரும் மனிதர்கள்தான், நம்முடலில் உள்ள யாவனவும் எல்லா மனித உடல்களிலும் இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு பகுத்தறிவிக்க என் கல்வியறிவும், அனுபவமும் உதவியது. இங்கு ஒரு ஊரே சேர்ந்து ஒரு குறிப்பிட்ட மக்களை சாதி அடையாளங்களால் ஒதுக்கிவைப்பது எத்துணை கொடுமையானது. அங்கு கல்வி பயின்ற மக்களே இல்லையோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

ஏட்டுக்கல்வி மதிப்பெண்களுக்காக என்றுமட்டும் ஆகிவிட்ட இந்நேரத்தில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்றன மனப்பாடம் செய்து மதிப்பெண்கள்பெற மட்டுமே பயன்படுகின்றனவே தவிர வேறெந்த புரிந்துணர்விற்கும், வாழ்வியலின் நற்பண்புகளுக்கும் பயன்படுவதில்லை என்றே நினைக்கிறேன். வயதில் மட்டும் முதிர்ந்த கல்வியறிவற்ற சில பெரிய புழுக்கள்தான் இப்படியென்றால் அதற்கு கொடிபிடித்துக்கொண்டிருக்கும் என்னொத்த இளையக்கூட்டமும் அதற்கு அடிக்‘காலாக’ முளைத்துக்கொண்டிருக்கிறதே. இச்சமுதாயத்தில் அகற்றப்படவேண்டிய அழுக்குகள்தான் எத்தனைவிதமாய் முளைத்துக்கிடக்கிறது !!!!


Wednesday, June 9, 2010

தண்டவாளங்களும் இன்னபிறவும்...

காட்டுக்கருவையையும், காட்டாமணக்கையும் கடந்துபோகையில் மெல்லியதொரு வாசம் அந்த ஒத்தயடிப்பாதையெங்கும் நிரம்பி நெலிந்துகிடக்கும். அநேகமாய் காட்டுமல்லியின் துயிலுடையும் தருணங்களில் இதுபோன்றதொரு மகத்துவம் வாய்க்கப்பெரும். இங்கே ஒத்தையடிப்பாதையென்பது தண்டவாளங்களருகே அமையப்பெற்றது என்பதை நினைவிற்கொள்க. அவ்வழியில் எருக்கம்பூக்கள் எத்தனையெத்தனை ‘மொட்’டென ஒலியுடன் மலர்ந்தாலும் அதன் மணத்தை நாசியுணர நுண்மதி வேண்டும். காட்டு மல்லிகைக்கு அப்படியில்லை. எந்த நரவை நாற்றத்தில் பூத்திருந்தாலும் எல்லாம் மறைத்து மணம்தரும். சில சமயங்களில் மிக நுட்பமாய் சுவாசித்தால் (சப்பாத்தி)கள்ளி பூக்கூட மிகுந்த மணம் பெற்றிருக்கும். நானும் அவ்வப்பொழுது முயன்றிருக்கிறேன், முடியவில்லை.

தண்டவாளங்களொட்டிய வழிதான் எத்தனை மலர்களை அனுதினமும் பெற்றுக்கொள்(ல்)கிறது. கவனித்திருக்கிறீர்களா? விரைந்து ஓடும் தொடர் (அ) புகை வண்டியின் சக்கரங்களுக்கு பழிப்பான் காட்டி தண்டவாள இடுக்குளில் தினம்தினம் மலர்ந்து மடியும் எத்தனையோ பூக்களிருப்பதை. யார் கண்களுக்கு அந்த ருசிதெரியும்? அதை ரசிக்கும் ஒரு இனிமைப்பொழுது எவருக்கேனும் வாய்த்திருக்கிறதா? முடிந்தால் ஒருபொழுதைக் கொடுத்து அதுகளை மகிழ்வுறச்செய்யுங்கள், முயன்றுபாருங்கள்.

நீங்கள் அவ்வாறு கழிக்கும் பொழுதுகளில் அவ்வழியே ஒரு ஓலைப்பாம்போ, கருந்தேளோ, கருவண்டோ, சாரைசாரையாய் கட்டெறும்பொத்த கூட்டங்களோ.....ஏதோவொன்று கடந்துபோகக்கூடும். பயம்வேண்டாம். இருமருங்கிலும் தண்டவாள கட்டைகளுக்கு இடையே நன்றாய் கூர்ந்து கவனியுங்கள். சூரியகாந்திப்பூவின் குழந்தைப்பருவத்தை நினைவுப்படுத்தும் அதேபோன்றேயொரு மலர் தெரியும். அதன் அழகை, மணத்தை அப்படியே உள்ளிழுத்து ஒருமுறை சுவாசியுங்கள் பார்ப்போம். அடடா இதுவல்லவோ வாழ்க்கை. பக்கத்தில் நீண்ட கழுத்துடைய அதேபோன்ற மலரும் இருக்கும். அது பனிரெண்டாம் வகுப்பில் ஹெர்பேரியம் சமர்ப்பிக்க பயன்படும். இது அதுவல்ல.

இதோ இன்னொன்றை பாருங்கள், கொத்தவரங்காய் போன்ற காய்களுடன் ஒரு செடி. அதிலும் மஞ்சள் நிறப்பூ, அதன் நடுவில் மகரந்தம் தாங்கிய நீட்சிகள். அதன் ஒவ்வொரு சிறுகிளை கனுவிலும் உற்றுப்பார்த்தால், எறும்பின் பின்புட்டம் போன்ற முடிச்சிகள்
தெரியும். இங்கேயே போன்சாய் மல்லிகைப்போன்ற மணமட்டுமில்லாமல் மலரும் வெளிர்நிறப்பூவும் இருக்கிறது. அதனுள்ளும் பாருங்களேன் எத்தனையெத்தனை சிறுசிறு பூச்சிகள். இதுகளுக்குகூட பசியென்பது இருக்கும்போல. அட அதென்ன பச்சை நிறத்தில் இந்த வடிவத்தில் ஒரு புழு அந்த புல்லின்மேல் ‘பின்னதை‘ முன்வைத்து ‘முன்னதை’ பின்வைத்து தவழும் குழந்தையாய் நகர்கிறது. அட..அட....

கொஞ்சம் இரண்டு அடிகள் நகர்ந்து வருவீர்களென்றால் எடுத்துக்காட்டுகளுக்கு எப்போதும் பெயர்பெற்ற தும்பைப்பூவை பார்க்கமுடியும். இந்த பூக்களுக்கு யார் சொட்டுநீலம் போட்டிருப்பார்கள் என்ற சந்தேகப்பார்வை உங்களைப்போலவே எனக்கும். அடுத்ததாய் அதோ தெரியும் பூண்டுச் செடிதான். சிறுவயதில் அடிபடும் காயங்களுக்கு அந்த கிளையை ஒடித்து அதிலொழுகும் பாலை தடவியதாய் ஞாபகம். சுர்ரென்று கொஞ்சம் எரிச்சல்லூட்டும், இரெண்டொருநாளில் காயம் பட்டுப்போகும். அதிலும் சின்னஞ்சிறு பூக்களிருப்பதை நீங்களும் கண்கூடாக பார்க்கமுடியும். இந்த பாதையைவிட்டு விலகிப்போகாதீர்கள் ஓரங்களில் சிலஇடங்கில் விளாமரங்களும், இலந்தை மரங்களும்கூட முற்களுடன் இருக்கும்.

கீழே சிந்திக்கிடக்கும் இந்த பூக்களைப்பார்த்துமா தெரியவில்லை இது மகிழம்பூவென்று. அதேதான் இந்த வாசனை முன்னமே உங்களிடம் சொல்லியிருக்குமே. சரிவிடுங்கள். அந்தப்பக்கம் போகவேண்டாம் அங்கேயிருப்பவை தாழம்பூக்கள். அந்தக்காட்டுக்குள் நல்லப்பாம்புகள் இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வெறுமனே காற்றுடன் கலந்துவரும் அந்த வாசத்தைமட்டும் சுவாசத்திற்காக விருந்தளியுங்கள். அதுவேபோதும். இப்படியேப்போனால் நிறைய காணக்கிடைக்கும், க்க்கும் அதற்குள் அந்த பயணியர் தொடர்வண்டி வந்துவிட்டது. போகலாம். ஒருநிமிடம், போகும்போது கொஞ்சம்
பூக்களுடன்கூடிய புஷ்படச்செடிகளை பறித்துச்செல்லுங்கள். அம்மியில் அரைத்து தலையில் தேய்த்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

அந்த கைகாட்டி மரத்தருகே மறைந்துநின்று பார்ப்பது யார்.? உங்களின் குழந்தைகளா!!!, அழைத்துவாருங்கள் அவர்களுக்கும் ஆசையிருக்கத்தானே செய்யும்...


Wednesday, May 26, 2010

யாதுமற்ற....

மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட அம்மாவின் முந்தாணி என் தலையிலும் அப்பாவின் துண்டென் மாரிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் அம்மாவிற்கும் அப்பாவிற்குமான தூக்கம். அப்பொழுதெல்லாம் அரைநாண்கொடி இடுப்பில் தங்கிக்கொள்ள பழகிவிட்டிருந்தது, அதன் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்க பள்ளிக்கூடத்து காக்கி அரைக்கால் சட்டையும்தான். ஆயினும் அவர்களின் கூட்டுக்குள் நான் குளிர்காய்ந்த இரவுகள் பெரிதாய் மதிக்கப்படாமலே இருந்திருக்கிறது. இருந்திருக்கவேண்டும்... அறியாப்பருவமாதலின்....

[ஒருவேளை எங்கப்பாவிற்கு எழுதத்தெரிந்திருந்தால் இப்படித்தான் ஆரம்பித்திருப்பார்...


மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட என்மகனின் தலை என்வலக்கை முட்டியிலும், இடக்கால் அவனம்மாவின் இடுப்பிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் என் மனைவிக்கான தூக்கம்..........]


கூரைக்குள் பொழியும் மழைநீர்க்குட்டுகளை அலுமினிய ஏனங்கள் அசையாமல் நின்று வாங்கிக்கொள்வதைப்போல மழையில் விளையும் என் சில்வண்டுத்தனங்களை அவர்கள் ரசித்திருக்கலாம். ‘அப்பாடி இப்பயாச்சும் மானம் நல்லா பேயுதே’ என்று மச்சுவீட்டு மாமனும், ‘இந்தவாட்டியாவது மழைலேர்ந்து என்னோட பயிர காப்பாத்தும்மா தாயே’ என்று சின்னவண்டி முனுசாமியும், ‘அய்யோ அடிக்கிற காத்துல வாசல்ல உள்ள முருங்கமரம் வீட்ல சாஞ்சிடப்போவுது’ என்று உடையார் வீட்டு ஆச்சியும் புலம்பிக்கொண்டிருப்பது கரைந்து என்வீட்டு வாசல்வரையும் வந்திருக்கும். வழக்கம்போல அம்மா இருப்புச்சட்டியில் பச்சரிசி வறுக்க தாழ்வாரத்தில் கட்டிவைத்த சுப்பிகளை எடுத்துக்கொண்டிருப்பார். ‘பஞ்சாங்கத்துலதான் மழைன்னு போட்டிருக்கானே... எப்டிப்பெய்யாம போவும்’ என்று 222
ம் நம்பர் பீடிப்புகையில் வட்டம் விடாமல் ஊதிக்கொண்டே இயல்பாகச் சொல்லுவார் அப்பா.

மகனாய் நான் அம்மாவின் அருகில், அடுக்கலையில் வறுத்த பொரியரிசியை கொரித்துக்கொண்டிருப்பேன். வேறெந்த இயல்பையும் மீறி பள்ளிக்கூட குறிப்பேட்டில் கத்திக்கப்பல் செய்து தாழ்வாரத்தில் ஒழுகியோடும் மழைநீர்களுக்கு தாரைவார்த்ததாக என் வரலாறு பதியப்படவில்லை. மிதிவண்டிக்கான கனவு மிகைந்திருந்தமையால் கப்பல்விடும் கனவு அதில் மிதிபட்டிருக்கலாம். வாசலொட்டி குதூகலமாய் நீச்சல்பயிலும் மண்புழுக்களும், மிகைநீர் பெற்றதால் சுமக்கமுடியாமல் மிகமெதுவாய் ஊர்ந்திடும் நத்தைகளும், மழையில் பொந்துகளையிழந்து அலைந்து திரியும் நெருப்பெறும்பு கூட்டங்களும், கூட்டுக்குள் விழும் நீர்ச்சிதறல்களுக்கு மெளிதாய் கீய்ச்சலிடும் சிட்டுக்குருவிகளின் கூச்சல்களும், அடுத்த வீட்டு லலி அக்காவின் ஆட்டுக்குட்டிகள் தூற்றிவிட்டுப்போன நனைந்த புலுக்கைகள் வாசம் என அந்நேரத்து அவசரத்துக்கான குளிர்ச்சிகள் ஏராளம். மழைக்கு மகுடியூதும் தவளைகூட்டங்களின் இரைச்சல்கள் சிலருக்கு எரிச்சலாகவோ அல்லது வரமாகவோ இருக்கக்கூடும். இன்னும் எத்தனையோ...


பணியிடம்பொருட்டு யாதுமற்ற தனியறையில் பாதுகாப்பாக நாற்காலி போட்டமர்ந்து எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடையில் முறுக்கு ஒரு பொட்டலம், உருளைக்கிழங்கு வறுவல் ஒரு பொட்டலம் வாங்கி சுவைத்துக்கொண்டே மழையை ரசிக்க சன்னலைத்திறந்தால் மேற்சொன்னவைகளே சாரல்களாய்....





  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO