சென்றவாரம் தினசரி பத்திரிக்கைகளில் ஒரு செய்தி.
‘குடிபோதையில் கணவனை கொன்ற மனைவி’
இதென்ன புதுமை? செய்தி அச்சுப்பிழையோ என்றவாறே ஆராய்ந்தேன். உண்மையாகவே இந்த வீரப்பெண்மணி தனது கணவன் இன்னொருத்தியுடன் இருந்ததாக சந்தேகமடைந்து வெட்டிக்கொன்றுள்ளார். அவனும் அப்படித்தான் இருந்திருக்கிறான். இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் இருவருமே மது அருந்துபவர்கள். கூலித்தொழிலாளிகள். செய்தது சரியோ தவறோ அந்த பெண்ணை பாராட்டியே ஆகவேண்டும்.
•••••••••
அண்மையில் எனது கணிணி வைரஸ்களால் வலுவிழந்ததற்கு காரணமாக வன்பொருள் வல்லுனர்களால் சொல்லப்பட்டது சீனாவிலிருந்து வந்த மின்னஞ்சல்கள். ஒருவழியாக அவைகளை ஒருநாள் ஒருவேளை அடையாள உண்ணாவிரதமிருந்து அகிம்சை வழியில் ‘கொலைசெய்’தேன்(தோம்).
சீனர்களின் கண் இப்போது நமது இரசாயன சந்தை. நானும் இரசாயனம் சார்ந்த துறையிலேயே பணிபுரிவதால் தெரிந்துகொண்டேன். இங்கே உற்பத்தி செய்யப்படும் இரசாயனங்களின் விலைகளை காட்டிலும் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் இரசாயனங்களின் விலை மிகக்குறைவு (அனைத்து வரிகள் மற்றும் செலவுகள் உட்பட) குறிப்பாக துணிச்சந்தைக்கு தேவைப்படும் இரசாயனங்கள். இவைகள் இலங்கை வழியாக நமது சென்னைத் துறைமுகங்களை வந்தடைந்து மற்ற மாநிலங்களுக்கும் வழிந்தோடுவதாக தகவல். நமது இரசாயன சந்தையும் அதன் விலைகளுடன் போட்டியிட முடியாமல்தான் உள்ளது. நமது பிரதமர் அடுத்தமுறை வெள்ளைமாளிகைக்கு விருந்தோம்பலுக்குச் செல்லும்பொழுது இதுபற்றி ஒபாமாவின் இரண்டு குழந்தைகளுடன் விரிவாக உரையாட உள்ளார். மதுரை நெஞ்சங்கள் அஞ்சவேண்டாம்.
••••••••
பகுத்தறிவாதியின்
அரைநாண் கொடி
அறுந்து விழுந்தது...
அங்காளம்மன் கோவில்
தாயத்துடன். (!?)
•••••••••
பருத்தி பயிரப்படுவதில் ஆரம்பித்து அது நமது உடலுக்கு உடையாகும் வரை குறைந்தது 30 விதமான இரசாயனங்களை உள்வாங்கிக்கொண்டுதான் வெளிவருகிறது. ஆடைகளின் தரம், தன்மை, நிறம் இவைகளைப்பொருத்து அவைகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், சாயங்கள் கூடவோ குறையவோ செய்யலாம். இதில் குழந்தைகளுக்கான ஆடைகளை குறைவான செயல்திறனுடைய இரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன.
••••••••••



