க.பாலாசி: November 2010

Friday, November 26, 2010

கௌரவம் - ஆ

காதுல கிடக்கிற
குண்டுமணி சைஸ் தோடும்
கையில இந்த
அலுமினிய வளையலும் போதும்

கழுத்துக்கு மட்டும் எப்போதும்போல
சந்திராவோட முருக்கு செயின்
ஏன்னா..
அதுதான் எடுப்பாயிருக்கும்.

அவளும்
அதே கல்யாணத்துக்குப்போனா
இருக்கவே இருக்கு
சரசோட இன்னொரு சீரகச் சங்கிலி

ஒரே தெருவுல விஷேசம்னா
வேறவழியில்ல..
கழுத்தொட்டிக் கருத்துப்போன
சிதம்பரம் கவரிங்‘தான்

கிராக்கி பண்ற
சகுந்தலாகிட்டயும் கல்யாணிகிட்டவும்
எப்பவுமே கேட்கிறதில்ல

நமக்குன்னு
ஒரு கௌரவம் இருக்குல்ல.



••••••••••••••••••••


பூன் கட்டின மூங்கித்தடியும்
ஒரு கம்பி விட்டுப்போன குடையுந்தான்
தர்மலிங்க தாத்தாவோட அடையாளம்

ஒரு கல்யாணம் காட்சி
நம்ம திம்மன்னா
சும்மா கூப்பிட்டாப்போதும்
எட்டு மொழ வேட்டியும்,
காசித்துண்டோடையும் வந்திடுவாரு

வாசல்ல நிக்கிறவன்
வாங்கன்னு
கூப்பிடலன்னா அவ்ளோத்தான்

மொய்ய எழுதிட்டு
வீராப்பா போயிடுவாரு

அவர் கால்லதானயா செருப்பில்ல
கௌரவத்துக்கு என்ன குறைச்சல்.



கௌரவம் - அ



.

Friday, November 19, 2010

ஏன்யா இந்த காண்டுவாதம்?

சாதாரணமாவே கல்யாணம் முடிச்சு புதுபொண்டாட்டிய அம்மாவோட விட்டுட்டுப்போற வெளியூரு மாப்ளைகள் பாடு திண்டாட்டம். இதுல பயபுள்ள ஃபாரின்ல இருந்தா கேக்கவாவேணும். இப்டித்தான் எதுத்த வீட்லையும், பக்கத்தால லலித்தாக்கா, அதுக்கடுத்தால ஆனந்தி பெரிம்மா வீட்லையும் பசங்களுக்கு கல்யாணம் முடிச்சி அந்தப்பயலுங்க மூணுமாசம் லீவு முடிஞ்சி ஃபாரின் போயிட்டானுங்க. ஒரு வருசம் முடிஞ்சி புள்ளப்பெத்தபெறவுன்னு அதுவரைக்கும் மாமியா மருமகக்குள்ள எந்த பிரச்சனையுமில்ல. பாராட்டத்தான் செய்யணும். லைட்டா ரெண்டாவது வருசம் தீவாளி, பொங்கலுக்கு வரிசை வய்க்கிறப்பத்தான் எழவெடுத்த சண்ட ஆரம்பிச்சுது. முதல்ல லலித்தாக்கா வீட்ல. அஞ்சு தட்டு நெறைய சாமான்ங்கள  பொங்கச்சீரா அடுக்கிக்கொண்டுவந்தாலும் நொட்டாரம் சொல்ற மாமியாக்காரிங்க எங்கதான் இல்ல. அந்த நொல்லக்கண்ணு லலிக்கு மட்டும் இல்லாமலா போயிடும். என்மொவன் வெளிநாட்ல அவ்ளோ சம்பாரிக்கிறான், நாதியத்த குடும்பத்துல பொண்ணுகட்டி ஒண்ணுத்துக்கும் வழியில்லாம போயிடுச்சுன்னு அக்கம்பக்கத்து அக்காக்களோட சாயந்தரம் ஆனா கதையளக்க ஆரம்பிச்சிடும். கடைசியிலப்பாத்தா இந்தம்மாளோட பொண்ணுக்கு புருஷங்காரனவிட்டு மணியார்டர்ல 200, 300 ஓ அனுச்சிட்டு அடுத்தவன கொறசொல்லும். 

ஆத்துக்குப்போறவ அன்னாந்துகிட்டே போவாளாம், கூத்துக்குப்போறவன் குனிஞ்சிகிட்டே போவானாம் அந்த கதையா பெட்ரூமு, பைப்படி, அடுப்படி, சன்டிவி, ஆனந்தவிகடன், மாட்டுக்கொட்டா, ஏனம் வௌக்கறது, துணி தொவைக்கிறதுன்னு தன்னோட கோவத்தல்லாம் காட்டிட்டே பொழுத ஓட்டுற மாட்டுப்பொண்ணு சும்மாவா இருப்பா. தன்ன திட்டினாலும் கோவப்படாத எந்த பதுசான மனுஷிக்கும்  அப்பனாத்தால திட்டனா பொசுக்குன்னு வரத்தான் செய்யும். கோவத்துல ஒன்னு அழுவா, இல்லன்னா டக்குன்னு எதாவது ராங்கி ரப்பான வார்த்தையா கொட்டிடுவா. மாமியாளோட ஆட்டத்த ஆரம்பிக்க இதோட காரணம் வேணுமாயென்ன. அப்பறமென்ன ஈருகுளில்ல மாட்டின பேன் கதைதான் புதுப்பொண்ணோட பொழப்பு•. அது என்னமோத் தெரியல. எல்லா மாமியாக்காரிகளும் அம்மாவா இருக்கிறவரை நல்லாத்தாங்க இருக்குதுங்க. மருமக வந்தா அப்டியொரு குஜால் ஆயிடுதுங்க. சிக்கிட்டாடா ஒரு அடிமைங்கிறமாரி. 

ஈர நாக்குல யாருக்குத்தான் எலும்பிருந்திருக்கு. தெருக்கள்ல பாத்திங்கன்னா கட்டுக்கழுத்திங்கன்னு நாலுபேரு இருக்கும்ங்க. எங்கன கல்லு கருமாதி, நல்லதுகெட்டது, சாதி சடங்கு, சீமந்தம், வளயகாப்புன்னாலும் ஆரத்தியெடுக்கறதுக்கும் அம்மிக்கல்ல தூக்கி நேரா மூணு சுத்து, ரிவர்ஸ்ல மூணு சுத்து சுத்தறதுக்கும் இதுங்கத்தான் முன்னாடிப்போயி நிக்குங்க. ‘யக்கா பாத்துப்பாத்து கொண்டாந்த மருமவ ஒன்னையே எதுத்து பேசிட்டாம்ல. அப்டி என்னக்கா அவ்ளோ அதப்பா அவளுக்கு’ன்னு மூக்குப்பொடிய மூஞ்சிலத்தூவினாமாரி ஏத்தி விட்டுடுங்க. இதுக்கெடையிலத்தான் ரூமுக்குள்ள குமுறி குமுறி உட்காந்திருக்கிற மருமவ சிறிக்கி ஏர்மெயில் கவர் வாங்கி கண்ணீர் கடிதத்த ஆரம்பிக்கும்.. ‘அன்புள்ள அத்தான், அவ்வ்வ்வ்வ்வ்வ்....... ’ அதுக்கப்பறம் சொல்லவா வேணும், வந்தது போனது, நடந்தது நடக்காதது எல்லாத்தையும் நாலு பக்கமா எழுதி போஸ்ட் ஆயிடும். 

அதுக்கு முன்னாடியே ஆத்தாக்காரி 8 பக்கத்துக்கு கொறயாம எதுத்தவீட்ல எவனாச்சும் என்னாட்டம் இளிச்சவாயன் இருந்தான்னா எழுதச்சொல்லி ‘இங்க பாருடா மோகனு, உம் பொண்டாட்டி சரியில்ல, எது சொன்னாலும் எதுத்து எதுத்து பேசுறா, எதாச்சும் வேல சொன்னா மூஞ்ச சுழிச்சிக்கறா, ஆவூன்னா ரூமுக்குள்ள போயிடுறா, கரண்டு இல்லன்னா இந்த கொடகல்லுல ஆட்டுனா என்னா? அதகூட செய்யமாட்டுறா, அதென்னமோ குசுகுசுன்னு ஒரு நாளைக்கு ரெண்டு தரம் அவவீட்டுக்கு போன் பண்ணி கொறசொல்றா, போன் பில்லு நறையா வருது, சோறு போடுறப்ப தட்ட கீழ வச்சி சல்லுன்னு தள்ளிவிடுறா, உங்கொழந்தைய கொஞ்சநேரம் கொஞ்சக்கூட விடறதில்ல, சாயந்தரம் ஆனாவே பொட்டுதான் பூவுதான் சென்ட்தான். மேக்கப் போட்டுகிட்டு சித்ரா வீட்டுக்கு போயிடுறா, அவளும் இவளும் என்னதான் அப்டி பேசுவாங்களோ தெரியல, திரும்பி வர 9 மணிஆவுது. அதுவரைக்கும் எனக்கு சோறு போடறதில்ல. பேசி முடிச்சிட்டு வந்தப்பறம்தான் எனக்கு சோறு போடுறா. நானே போட்டு சாப்புட தெம்பாயிருக்கு. அவளோட சேர்மானம் சரியில்ல சொல்லிட்டேன் ஆமாம். அப்பா அன்னைக்கு எதோ சொன்னதுக்கும் எதுத்து பேசுறா, இது சரியில்ல. நானும் நீ மனசு கோணக்கூடாதேன்னுதான் எல்லாத்தையும் பொருத்துக்கிறேன். இப்பவும் நீ நல்லாருக்கனும்னுதான் நெனக்கிறேனே ஒழிய நான் என்னத்த மூட்டக்கட்டிகிட்டு போவப்போறேன் (ரெண்டு சொட்டு கண்ணீரு) சொல்லு. உம்பொண்டாட்டிய அடக்கி வைய்யி, இல்லன்னா உம் அம்மாவ நீ உசிரோட பாக்கமுடியாது. அவ்வ்வ்வ்வ்’ அப்பறம் எடையில எடையில மானே தேனே பொன்மானே.....

ங்ங்கொய்யால இந்தமாதிரி லெட்டர படிக்கிறவன் துபாயிலையும், சிங்கப்பூருலையும் நிம்மதியா வேலை செய்யமுடியும்கிறீங்க. ஏறச்சொன்னா எருதுக்கு கோவம் வரும், இறங்கச்சொன்னா நொண்டிக்கு கோவம் வரும்னு ஒரு பழமொழி உண்டு. இந்த மத்தளத்துல ரெண்டுபக்கமும் அடிவாங்குற தோலு மாதிரி கல்யாணம் முடிச்சிட்டு ஃபாரின் போற மாப்பிள்ளைங்க பொழப்பு நாத்தப்பொழப்புங்க. இதுங்க ரெண்டுபேரையும் சமாளிச்சு ஒருவழியா ஓஞ்சிப்போயிடுவான் அந்த படுபாவி. அது ஏன்டா உனக்கு இந்த ஃபீலிங்குன்னு நினைக்கிறீங்களா? ஏரி நிறைஞ்சா கரை கஸ்ஸ்ஸ்ஸியத்தானங்க செய்யும். எங்கத்தெருவில அஞ்சாரு குடும்பங்கள்ல இந்த நெலமத்தாங்க. இதெல்லாம் நெனச்சுப்பாக்குறப்பதான் ஏன்யா இந்த காண்டுவாதம்னு தோணுது.  



Friday, November 12, 2010

பாட்டி...

வெற்றிலைக்காம்பை கிள்ளி
வெகுசுலபமாய்
வாசல் குப்பைகளில்
போட்டுவிடுகிறாள்

நீண்டுத் தொங்கும்
காதுமடல் குண்டலத்தை
இழுத்து விளையாடும் விரல்களிலிருந்து
விடுதலையும் கிடைத்தாயிற்று

உறங்கச்செய்யப் பாடும்
‘என் செல்லமே கண்ணுறங்கு’
தாலாட்டும் கதைகளும்
நின்று காலமாகிவிட்டது

முந்தியில் முடிந்திருக்கும்
ஒன்றிரண்டு ரூபாயைப்பிடுங்கி
கடுக்காய் மிட்டாய் வாங்கிச்
சாப்பிடவும் யாருமில்லை

குடலேற்றம் வந்தால்
முதுகை தட்டி வயிற்றை நீவி
குணமாக்கவேண்டிய கடமையும்
இல்லாமல் போனது

எங்கள் வீட்டில்...
மின்சாரம் நின்றால் திரும்பிப்பார்க்க
அம்மியும் இருக்கிறது
அவளும் இருக்கிறாள்.


..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO