க.பாலாசி: சமூகம்
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, March 10, 2011

இவளும் பெண்தான்..

அவள் அப்போதுதான் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாள். பள்ளிக்கூடம் திறப்பதற்கு ஒன்றரை மாதகால அவகாசம் இருந்தது. பத்தாம் வகுப்பு செல்வதற்கான கனவுடனிருந்தாள். தெருவில் வரும் கிளி ஜோசியன் அவளுக்கான வாழ்க்கை சீட்டை கையில் வைத்துக்கொண்டு கூவி வருகிறான். அவளின் பெற்றோர்கள் அவனை அழைத்து ஆரூடம் பார்க்கின்றனர். தெருவில் சில்லிக்கோடோ என்னவோ விளையாடிக்கொண்டிருந்தவள் ஆர்வத்துடன் கிளிக்காகவோ, ஜோசியத்துக்காகவோ அந்த இடத்தில் அமர்கிறாள். விளையாட்டுப்போக்கில் அவளுக்கும் 2 ரூபாய் மொய்வைத்தப் பிறகு  ராஜாத்தியென்றோ பாப்பாத்தியென்றோ அழைக்கப்படும் அந்த பச்சைக்கிளி ஒரு சீட்டை எடுத்துப்போடுகிறது. பிரித்துப்பார்த்த ஜோசியக்காரர் பலவிசயங்களை சொல்லிவிட்டு இவளுக்கு இந்நேரம் வரம் பார்த்திருக்கவேண்டும் இல்லையென்றால் இன்னும் சொற்ப நாட்களில் வரம் வந்துவிடும், கிழக்கிலிருந்துதான் வருவான். சொந்தக்காரன், சீமைத்தண்ணி குடிப்பவனாக இருப்பான் போன்றனவும் இன்னும் சிலவும் வாயில் வசம்பு தேய்த்ததுபோல் சொல்கிறார்.

‘இவள் படிப்பில் கெட்டிக்காரி’ என்று அந்த ஜோசியன் சொன்னதை இரவு முழுக்க கனவாக காண்கிறாள். பெற்றவர்கள் வரப்போகும் வரனை அவனோ, இவனோ, எவனோ என்கிற யூகத்தில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சொல்லிவைத்தார்போல ஒரு ராஜன் (வயது 28) அந்த ராணிக்காக துபாயிலிருந்து பொத்துக்கொண்டு திருவெண்காட்டில் குதிக்கிறான். அவன் ராணிக்கு மாமன் முறை, ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட அல்லது கேடுகெட்ட. துபாயில் கதாநாயகன் சித்தாளோ, கொத்தனாரோ என்னயெழவோ. மார்பில் சங்கிலியும் கையில் மோதிரமும், ஒரு மைனர் குஞ்சு போல மூர்த்திக்கடை மிக்ஸரும்,  அல்வாவும் வாங்கிக்கொண்டு அக்கா வீட்டுக்கு வருகிறான். அவனுக்கு நம் ராணி அக்கா மகள் (முறையில்). இவள் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கிறாள். பேச்சிப்போக்கில் தனக்கு பெண் பார்த்துக்கொண்டிருப்பதாக அக்கா, மாமாவிடத்தில் சொல்லிவைக்கிறான். விருந்து கருமங்கள் முடிந்தது. நாயகன் நாயகியை ஓரக்கண்ணால் ஒரு லுக், அவள் அந்த மிக்ஸருக்காக ஒரு லுக், அவ்வளவே.

எங்கோ தட்டிய பொறி அவள் பெற்றோர்களுக்குள் பற்றிக்கொள்கிறது. சரி அவர்களாக கேட்டால் நாமும் பேசலாம் என்று முடிவாகிறது. அந்த சனியனும் அடுத்தவாரமே நடந்துவிட்டது. மூன்றாம் நபர் வழியாக ராணியை பெண் கேட்டு தூது வருகிறது. இவளின் குடும்பத்திற்குள் குதூகளம். அக்கம்பக்கத்திலுள்ள மொத்தம் 10 டூ 15 குடும்பங்களும் இவர்களுக்கு சொந்தம்தான். அனைவருக்கும் இந்த சம்பந்தம் பிடித்தாலும், ‘சின்னவயசுல இவளுக்கு எதுக்கு இப்ப கல்யாணம்?, நாலு வருஷம் தள்ளி பண்ணா ஆவாதா?’ என்று சொல்லிப்பார்க்கிறார்கள். ம்கூம். காதில்லாதவன் காதில் ஊதியென்ன, செவிட்டில் அப்பிதான் என்ன புண்ணியம்?. மறுபடியும் சிங்கானோடை ஜோதிடனிடம் ஜோடிப்பொருத்தம் பார்க்கிறார்கள். ஜோடிப்பொருத்தத்தில் ஒன்பதோ, எட்டோ பொருந்தியிருக்கவேண்டும். முடிவாகிவிட்டது.

நகை, நட்டு, சீர்வரிசை, அப்போதே இருபத்தைந்தாயிரம் செலவு செய்து கட்டில், பீரோ கூடவே ஒரு ஹெர்குலஸ் சைக்கிளோ, டி.வி.எஸ் வண்டியோ எனக்கு மறந்துவிட்டது. ஜாம் ஜாம் திருமணம் திருவெண்காடு அந்த பிரசித்திப்பெற்ற கோவிலில். ராணியின் கூடப்பிறந்தவர்கள் இருவர், ஒரு அண்ணன், ஒரு தம்பி. அந்த தம்பியும் நானும் பால்ய நண்பர்கள். பக்கத்துவீடுதான். ஜாதியில் வேற்றுமையிருந்தாலும், பெரியம்மா, பெரியப்பா உறவுப்பிணைப்புடையது எங்களின் குடும்பங்கள். நானும் திருமணத்திற்கு சென்றிருந்தேன். எனக்கும் ஒன்றுமறியாத வயது. எல்லாம் முடிந்தது. இது நடவாமலிருந்தால் இந்நேரம் அவளுக்கு பத்தாம் வகுப்பு  ஆரம்பித்திருக்கும். ஆனால்..?

6 மாதங்கள் ஓடிவிட்டது. அனைவருக்கும் சந்தோஷம், சென்னை ஏர்போர்டில் மாமனுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு சென்ற காரிலேயே திருவெண்காட்டிற்கு திரும்புகிறார்கள் ராணி. ஆறுமாத சந்தோஷ வாழ்க்கை இந்த பிரிவில் அவளுக்கு ஆற்றமுடியா சங்கடத்தைக்கொடுக்கிறது. பிறந்த வீட்டிற்கு 3 மாதம் வந்து தங்கிக்கொள்கிறாள். அங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இந்த மூன்றுமாத காலமும் அவளின் நடத்தை யை அசிங்கப்படுத்தி இவளின் குடும்ப எதிரிகள், அந்த மாமியாருக்கு வாராவாரம் கடிதம் எழுதுகிறார்கள். அப்படி செய்வது மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்தான், அவளுடன் இன்னும் இரண்டு பெண்டுகள். மாமியார் வீட்டில் புகைச்சல் அதிகமாகிறது. அவர்களும் நம்புகிறார்கள். ‘அவ இங்க இருக்கும்போதே அப்டித்தான் இருந்தா, அப்பன் வீட்லன்னா கேக்கவாவேணும்’ இது மாமியார்.

இந்நிலையில் 9 வது மாதம் வளையல் காப்பு (சீமந்தம்) முடிகிறது. மனதில் குமைச்சலுடன் மாமியாளும் நாயகன் வீட்டு உறவினர்களும் கலந்துகொள்கிறார்கள். பத்தாவது மாதம் அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. மூன்றுமாதம் கழித்து சாஸ்த்திரத்திற்கு திருவெண்காட்டுக்கு அழைத்து செல்கிறார் மாமியார். மீண்டும் ஆறுமாதங்கள் சண்டை சச்சரவு, மாமியார் கொடுமை நடத்தையை குத்திக்காட்டி, பச்சையான, கொச்சையான வார்த்தைகள். பச்ச உடம்புக்காரி ஓரளவிற்கு மேல் தாங்கமுடியாமல் அந்த ஒரு வயதை அடையப்போகும் தன் குழந்தையுடன் பிறந்த வீட்டிற்கு வருகிறாள், கணவனும் சேர்ந்து கைவிட்ட நிலையில். அடுத்த ஒரு வருடங்கள் சமாதானப்பேச்சு, இரண்டு மாதம் அங்கே, இரண்டு மாதம் இங்கே. வேலைக்காகவில்லை. அதே கொடுமை. நிரந்தரமாக பிறந்த வீட்டிலேயே தங்கிவிடுகிறாள்.

எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுது பித்தளை சொம்பில் ஜோடித்த கரகத்தை எந்த துணையுமின்றி தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு அரங்கம் அதிர ஆடிய அவளேதான் இப்போது அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாய். அனாதரவான நிலையில். பெற்றவர்கள் தலையில் போட்ட இந்த பாறாங்கல் அவளை தற்கொலைக்குக்கூட தூண்டியது. காப்பாற்றிவிட்டார்கள். ஊர், தெருமக்களின் இழிச்சொற்கள், வாழாவெட்டி என்ற அந்த பட்டம், எதிரி குடும்பத்தாரின் ஏளனச்சிரிப்பு, எல்லாவற்றிற்கும் மேல் இந்த நிர்கதிக்கு துணைநின்ற கணவன், மாமியார் மயிரை அறுக்கவேண்டும் இவை அனைத்தும் சாத்தியப்பட அவள்முன் எதிர்காலம் கனிந்துகிடக்கிறது. ஆனது ஆயிற்று அடுத்தது விவாகரத்து.

கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. எந்த சட்டப் புடுங்கிகளாலும் அந்த 18 வயது நிரம்பாத அந்த அபலைக்கு நீதி கொடுக்கமுடியாத சூழ்நிலை. சீர்வரிசை நகை நட்டில் பாதிதான் திரும்ப வருகிறது. வேறு இம்மியளவுக்கூட அசைக்கமுடிவில்லை. துபாய் துரை ஃபாரின் கிளம்புவதற்கு முன் இன்னொரு இடத்தில் பெண் பார்த்துகொண்டிருப்பதாக கேள்வி. ராணியின் அண்ணணும் தம்பியும் அவனை அடித்து வெளுக்கிறார்கள். மறுபடியும் வழக்கில் சிக்கல். தீர்ந்தபாடில்லை. அவளின் நிலை பார்க்கும் நல்லுள்ளங்களுக்கு பரிதாபம், எதிராளிக்கு இளக்காரம். கூனிக்குருகி வீட்டின் மூலையில் முடங்கியே கிடக்கிறாள். செய்த தவறை உணர்ந்தும் செய்வதறியாது அப்படியே காலத்தை ஓட்ட முனையும் பெற்றோர்கள். எங்கோ ஒரு வெளிச்சம் தெரிந்தது அவளுக்கு. அது....

3 வயது நிரம்பிய தன் மகளை மெட்ரிக் பள்ளியில் சேர்த்துவிட்டாள். தன் படிப்பையும் தொடர்ந்தாள். பத்தாவது, பனிரெண்டாவது... முடிந்தது. அடுத்து ஒரு டிகிரி படிக்கவேண்டும். அவளின் அனைத்து வழிகளுக்கும் உதவ பெற்றவர்கள் தயாராகவே இருந்தனர். டிகிரியும் முடித்தாயிற்று. பிறகு ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டும். ஏதோவொரு வெறி முளைத்துக்கொண்டேயிருந்தது அவளுள். இடையில் துபாய் துரை வரும்போதெல்லாம் ராணியின்  அண்ணன் தம்பிகளிடம் உதைவாங்கி கொண்டுதானிருந்தான். ஐ.ஏ.எஸ் ரெண்டாம்கட்ட தேர்வில் தோல்வி. ஓரளவிற்கு மேல் அவளாலும் முடியவில்லை. அந்த நேரத்தில் நமது ஊரின் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் பணி ஒருவருடத்தில் காலியாகும்போல் தெரிந்தது. பி.பி.டி.கோர்ஸ் சேர சிதம்பரம் செல்கிறாள். வெற்றிகரமாக முடிந்தது. வேலை கிடைக்கவேண்டிய சூழ்நிலை கைகூடியது. அண்ணணுக்காக அதை விட்டுக்கொடுக்கவேண்டிய நிலையும் வந்தது. அப்படியே செய்துவிட்டாள். வேறு என்ன செய்யலாம்....??

தமிழ்நாடு காவல்துறையின் எஸ்.ஐ. பணி தேர்விற்காக விண்ணப்பித்திருந்தாள். அதற்காக அனைத்துவிதத்திலும் தன்னை தயார்படுத்திக்கொண்டாள். எல்லாம் சுபமாக முடிந்தது. சில லகரங்களில் வேலையும் கிடைத்தது. ஒரு புதியதோர் வாழ்க்கை பிறந்தது. ட்ரெய்னிங் இத்யாதிகள் முடிந்து சீர்காழியில் ட்ரெய்னிங் எஸ்.ஜ. அங்கேயே கொஞ்சகாலம் சகவாசம். பெற்றவர்கள் மறுமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார்கள், அவளும். இப்போது எதிராளியாக இருந்த குடும்பங்களும் நெருங்கிவிட்டார்கள். அனைவரும் ஒற்றுமை.  இந்த நேரத்தில் அந்த செய்தி உச்சந்தலையில் இடியை இறக்குகிறது. அவள் மகள் பருவமெய்திவிட்டாள். அனைவரும் நொடிந்துபோனார்கள்.

கையை பிசைந்துகொண்டிருந்த பெற்றோர்கள் ஒரு வருடம் பொறுத்திருந்துவிட்டு நம் ராணிக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராணியின் விருப்பப்படி அவளே தேர்ந்தெடுத்த அல்லது காதலித்த வரனுக்கு அவளை கட்டிக்கொடுக்கிறார்கள். எல்லாம் சுபம்.

இது லட்சத்து சொச்சம் டெம்ப்ளேட் கதைகளில் துவைத்து காயப்போட்ட  சம்பவமாக இருக்கலாம். ஆனால் இதுவும் உண்மை. இப்போது ராணி நாகை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர். அந்த துபாய் துரை இன்னொரு திருமணம் முடித்துவிட்டு எங்கோயிருக்கிறான். இந்நிலையில் அவனை ஸ்டேஸனில் வைத்து மானியிலேயே உதைக்க அவளால் முடியும். ஆனால் அவள் அப்படியில்லை.


..

Wednesday, July 21, 2010

ஒட்டுவாரொட்டி...

முருகேசனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் முருகேசனுக்கு பத்திகொண்டுதான் வரும்.

‘ஒருநாளைக்கு பதினஞ்சாயரத்து சொச்சம் பேராவது பொழங்குற எடத்துல க... பயலுங்க ஒரு பக்கத்தால மட்டும்தான் ஒண்ணுக்க இருக்க கட்டிவிட்டுருக்கானுங்க. அந்தப்பக்கத்தால ஒண்ணு கட்டினா இவனுவ வீட்டுக்காசு கொறஞ்சமாதிரி நெனப்பு. இந்த செவத்துல பொழுதுக்கும் நின்னு ஒண்ணுக்கடிச்சு நாறடிக்கிறத பயலுங்கல என்னத்த சொல்றது. பாழப்போனவனுங்களுக்கு புத்தியிருக்குமா என்னான்னே தெரியல. எல்லாம் முழுக்காலு சட்டையும் சவடாலுமாத்தான் திரியிரானுங்க, ஒரு பயலுக்காச்சும் இப்டி பொதுவால நின்னு இருக்கோமே இதுனால வர கெடுதல நெனச்சுப்பாத்தானுங்களா? நாத்தம் நாத்தம் அண்டசயிக்கல’
இது முருகேசனின் அன்றாட புலம்பல்.

‘ஏப்பா கொஞ்சம் தள்ளிதான் போங்களாம்பா.. அங்கணத்தான் கட்டிவுட்டுருக்காங்கல்ல’
இப்டியும் சிலநேரம் கத்திப்பார்ப்பான். ‘நல்லது சொன்னா எவங்கேக்குறான்.. நாசமாப்போச்சு..நமக்கென்ன’ என்று நினைப்பதுதான். ஆனாலும் அவனால் முடிவதில்லை. ‘பங்காளி ஆத்தர அவசரத்துக்கு போறதுதான். இதெல்லாமா பாத்துகிட்டுருப்பாங்க, அழிஞ்ச கொல்லையில ஆடு மேஞ்சான்ன? மாடு மேஞ்சான்ன??’ன்னு பக்கத்துக்கடை பங்காளி சொல்வதுண்டு. ‘சும்மாகெட பங்காளி. எனக்கு கெட்டக்கோவம் வந்திடும்’ என்பான்.

அன்றைக்கு ஆறுமணிக்கு கடைதிறக்கவேண்டியவன் ஏழு மணி ஆகிவிட்டது. அவசரஅவசரமாக வந்தவன் ‘இந்த கொண்டாங்கொடுத்தான் ஒறவே வேண்டான்னு நெனைக்கறதுதான். என்னப்பண்ணி தொலையறது. வந்ததுங்களுக்கு எதாவது செஞ்சித்தொலைய வேண்டிக்கடக்கு’ மனதிற்குள் புலம்பியவாறே ‘கிரிச்’ யென்ற உருமலோடு இயங்கும் சட்டரை மேலே தூக்கினான். கொல்லைப்பக்கமுள்ள ஒரு கழிவரையையும் சொந்தங்கள் அடைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. ‘எல்லாத்தையும் அடக்கலாம் போலருக்கு, இத அடக்க முடியறதில்ல. கடையத்தெறந்திட்டு போலாம்னா இப்டி அடிவயித்தால படுத்துதே. நேத்தைக்கு நைட்டு இந்த அரிசி கணக்கா உள்ள மாத்தரைய (Cetirizine) சாப்டது தப்பாப்போச்சு. நிமிசத்து ஒருவாட்டியா வரும். கருமம் புடுச்சவனுங்க. சலி அலர்ஜின்னாலும் சரி, அரிப்பு, புண்ணுன்னாலும் சரி இதததான் தர்ரானுங்க.’ அதற்குள் யாரோ கடைக்கு வந்துவிட்டார்கள்.

‘வாங்கம்மா என்ன வேணும்?’.
‘ஆப்பில் என்னவெல’.
‘கிலோ 140’
‘அரகிலோ போடுங்க’
‘ம்ம்ம்’
‘பை வச்சிருக்கீங்களா?’
‘இருக்கு’
‘இந்தாங்க.... காலைலேயே நூறுவாய தர்ரீங்களே. சில்லர இல்லைங்களா?’
‘இல்லப்பா’
‘பங்காளி இந்த நூறுவாய ஒடச்சி கொடேன்.’
‘காலைல ஏது பங்காளி. இல்ல...’
‘இரும்மா, எதுத்தால பூக்கடயில வாங்கியாரேன்.’

‘ச்ச..ச்ச.. அடிவயத்தவேற லேசா வலிக்கற மாரி இருக்கே. இனிமேலும் முடியாது. யாவாரத்தையும் உடமுடியல. நல்லவேள சில்லர வாங்க இங்கவந்தோம். அப்டியே போயிட்டு வந்திடவேண்டியதுதான்’ கீழண்டப்பக்கமாய் உள்ள இடுப்பளவு சிமெண்ட் கிராதிப்போட்டு அடைத்திருந்த அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்திற்குள் நுழைந்தான். உள்ளபோனதுதான் தாமதம்...‘அடக்கருமம் புடிச்சவங்களா இங்கயா வந்து பேண்டு வப்பானுங்க, நாறப்பயலுக. காலங்காத்தால, ஹ்கூம், கொல்லுன்னு மொய்க்கிற ஈக்கூட்டத்த பாத்தாலே பயமாயிருக்கு. வாயில நல்லா வருது. என்னாத்த சொல்லி திட்டறது. இப்ப எங்கப்போறது?. ம்கூம்....... அவசரத்துக்கு பாவமில்ல. இன்னைக்கு இந்த செவத்தாலையே போவவேண்டியதுதான். இங்க கூட பரவாயில்ல போலருக்கு. மூக்க பொத்திகிட்டே இருந்துக்கலாம்’ குற்றவுணர்ச்சியும் தானாக பொத்திக்கொண்டது.

•••••••••••••••

ராமநாதனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ராமநாதனுக்கு பத்திகொண்டுதான் வரும்.........................................


Tuesday, June 22, 2010

சில புழுக்கள்


சிலநேரங்களில் காணுகின்ற நிகழ்வுகள் மனதின் மையத்தைப்பிடித்துக்கொண்டு அகலாமல் அரித்துக்கொண்டிருக்கும். அதுபோலவே இதுவும்...

அலுவலக நண்பருடன் சமீபத்தில் அம்மன் கோவில் கும்ப அபிடேகத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை உருவானது. பளபளக்கும் வெளிர்நிற ஆடைகளில் அவ்வூரே திரண்டு ஒற்றுமையாக அவ்விழாவினை நடத்தியது கண்டு வியந்தேன். விசேடங்கள் முடிவடைந்தவுடன் இருசக்கர வாகனத்தை எடுக்க திரும்பி வரும்பொழுதுதான் கவனித்தேன் ஒரு வீதி மக்கள் அவ்வீதி முகனையில் நின்றுகொண்டு அக்காலை உடையுடன் கோவிலைப் பார்த்துக்கொண்டிருப்பதை. அவ்வோடையின் அந்தப்பக்கம் கோவில். இந்தப்பக்கம் அவ்வீதி. நண்பரிடம் விசாரித்தபொழுதுதான் அத்தொண்டைக்குழியடைக்கும் நிலை ஏற்பட்டது. அம்மக்கள் அந்த கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களென்று. ஏனென்று வினவியபொழுது அவர்களின் சாதிதான் காரணமாய் சொல்லப்பட்டது. மீறி சென்றால் அடிதடி, வெட்டுக்குத்து போன்றன நிகழுமாம்.

அந்த சிறுவாய்க்காலின் படித்துறையில் பல்துலக்கியபடியும், துணிகளை தெருக்குழாய்களில் அலசியபடியும் அத்தனை நன்மக்களும் வேடிக்கை மட்டுமே பார்த்தது நெஞ்சில் அடைத்துக்கொள்ளத்தான் செய்தது. அவர்களுக்குக்கூட தோன்றவில்லை, அந்த அம்பாளை வணங்கவேண்டுமென்று. ஒரு ஊரில் மிகைவாழும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் திமிருடனான ஆதிக்க மனப்பான்மை இதுபோன்ற கீழ்ச்செயல்களுக்கு அடித்தளமாகிறது என்பது கண்கூடு. அந்தப்பக்கம் நின்று வெளுத்த சட்டைவேட்டியுடனும், பட்டுப்புடவைகளுடனும் அம்பாளை தரிசனம் செய்யும் அத்தனைப்பேரின் மனதிலும் எத்தனை அழுக்குகள் நிறைந்திருக்கின்றன. நாகரீக வளர்ச்சி எத்தனையோ படிகளை எட்டிவிட்டநிலையிலும் இன்னும் சில உட்கிராமங்களின் நிலை இப்படியேத்தான் உள்ளது.

எனது தாய் தந்தையருக்கு சாதியின் சாயம் ஒட்டியிருந்த சமயங்களில், அப்படியான மாயை எதுவுமில்லை, எல்லோரும் மனிதர்கள்தான், நம்முடலில் உள்ள யாவனவும் எல்லா மனித உடல்களிலும் இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு பகுத்தறிவிக்க என் கல்வியறிவும், அனுபவமும் உதவியது. இங்கு ஒரு ஊரே சேர்ந்து ஒரு குறிப்பிட்ட மக்களை சாதி அடையாளங்களால் ஒதுக்கிவைப்பது எத்துணை கொடுமையானது. அங்கு கல்வி பயின்ற மக்களே இல்லையோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

ஏட்டுக்கல்வி மதிப்பெண்களுக்காக என்றுமட்டும் ஆகிவிட்ட இந்நேரத்தில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்றன மனப்பாடம் செய்து மதிப்பெண்கள்பெற மட்டுமே பயன்படுகின்றனவே தவிர வேறெந்த புரிந்துணர்விற்கும், வாழ்வியலின் நற்பண்புகளுக்கும் பயன்படுவதில்லை என்றே நினைக்கிறேன். வயதில் மட்டும் முதிர்ந்த கல்வியறிவற்ற சில பெரிய புழுக்கள்தான் இப்படியென்றால் அதற்கு கொடிபிடித்துக்கொண்டிருக்கும் என்னொத்த இளையக்கூட்டமும் அதற்கு அடிக்‘காலாக’ முளைத்துக்கொண்டிருக்கிறதே. இச்சமுதாயத்தில் அகற்றப்படவேண்டிய அழுக்குகள்தான் எத்தனைவிதமாய் முளைத்துக்கிடக்கிறது !!!!


Monday, February 8, 2010

புரையோடும் ஆலமரம்

நாகரீக போர்வைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகளின் நிலையைப்பற்றி பெருமையுடன் சொல்வதற்கொன்றுமில்லை. இதற்கு விதிவிலக்காய் என்னைப்பெற்றதும் மற்றுமென் சுற்றுவட்ட 54 கிராமங்களும் இல்லையென்பதே அவிழ்ந்துகிடக்கும் உண்மை.


எங்கள் தெருவிலுள்ள 25 விவசாயக்குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இல்லாதவர்கள் (நானறிந்தவரையில்). மழையினாலோ அல்லது வெள்ளத்தினாலோ வேறெந்த இடர்களாலோ பயிர்கள் பாதிக்கப்பட்டாலும் அடுத்த குறுவை சாகுபடியில் விட்டதை பிடிக்கலாம் என்ற ரீதியில் நம்பிக்கையும்பணத் திடமும்உள்ளவர்கள். அடுத்தமுறையும் நட்டமாயின் அவர்களின் வெளிநாட்டுப்பிள்ளைகள் அவர்களை காப்பாற்றிவிடுவார்கள் அல்லது அடுத்த சாகுபடிக்கு பணநீரூட்டி உயிர் கொடுத்துவிடுவார்கள். அவர்களுக்கு இதுதான் தொழிலே (பிள்ளைகளுக்கல்ல). இது எங்கள் தெருவின் நிலை.


இந்நிலை அப்படியே தலைகீழாய் எங்களது அடுத்தடுத்த தெருவாசிகளுக்கு. முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். முதல் போகம் முறிந்துபோனால் அடுத்தபோகம் விளையும் வரையில் ஒரு ரூபாய் அரிசிதான் கதி. (இதன் விலை இன்னும் ஒருரூபாய் ஏறினால் அதோகதிதான்). இன்றைய நாளில் அவ்வப்போது அடித்துப்பெய்யும் மழையில் படுத்துக்கொண்ட நெற்பயிர்கள் அழுகி உயிர்த்துறந்த நிலையில் எல்லாம் வற்றி ஈரப்பதமுள்ள நிலத்தினை மீண்டும் கைகலப்பைக்கொண்டு (இன்றும் உயிருடன் உள்ளது) உழுது மறுநடவு செய்தாலும், எல்லாவித துன்பங்களையும் தாண்டி நெல்மணிகள் நிலத்தினை பார்க்கும் தருவாயில், மாரியின் மயக்கத்தில் பொய்க்கும் பருவமழை பல்லிளித்துக்காட்டும். மீண்டும் நட்டம்.


வானம் பார்த்த பூமி இல்லை. மின்மோட்டார் வசதி இருக்கிறது. இல்லாவிட்டாலும் அடுத்த வயலுக்கு சொந்தக்காரர் தண்ணீர் தரும் நல்லவராக இருப்பார். இப்போது காவிரி டெல்டா பகுதியில் பெரும்பாலானோர் காவிரியைமட்டும் நம்பி இல்லை. அது அம்மா வந்தால் கொஞ்சம், அப்பா வந்தால் கொஞ்சம், இல்லையேல் கருநாடகத்தில் வெள்ளம் வந்தால்மிகவும்கிடைக்கும் வரம். (அதேநேரத்தில் இங்கே மழை அடித்துப்பெய்து கொண்டிருக்கும்) என்றும் இந்த வரம்கடையாதுஎன்றும் தெரியும். மழை வரவில்லையென்றால் வருந்துவதும், மிகைந்து வந்தால் வேதனைக்குள்ளாவதும் எல்லாப்பகுதி விவசாயிகளுக்கும் உரியதுதான். அருவடைக்கு தயாராகும் நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தால் விவசாய மக்கள் ஒவ்வொருவரின் அடிவயிற்றிலும் அலறலெடுக்கும். தன்பயிருக்காக மட்டுமல்லாது, அடுத்தவர் பயிர்களும் அழுகுவதை நினைத்து கண்ணீர்மல்குவது விவசாயிகளுக்கே ()ரிய குணம். இது இன்றைய நிலையில் விவசாயிகளின் இன்னொரு பிரச்சனை.


இவையெல்லாவற்றையும் தாண்டி அருப்பருத்து களத்துக்கு கொண்டுவந்து அடித்துப்பார்த்தால் மிஞ்சுவது முதலாகத்தான் இருக்கும். சரிபோகட்டும் என்று அடுத்த நடவுக்கு தயாராவான் அதே நிலையவன். ஆனால் அவன் மனதில் ஆழப்பதியும் எண்ணமென்பது, தன் பிள்ளைகளுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்பதே. விவசாயத்தைவிட்டால் கிராமப்புறங்களில் இன்று வெளிச்சம்காட்டுவது கொத்தனார் தொழில். சித்தாளாக வேலைசெய்தால் ஒருநாளைக்கு (அதாவது காலை 10 மணிமுதல் மாலை 5.30வரை) 150திலிருந்து 200வரை ஊதியம் (கிராமப்புறங்களில்). கொஞ்சம் முன்னேறிகரனைபிடிக்க ஆரம்பித்தால் 250க்கு குறைவில்லாமல்.


அதைவிடுத்து காலை 7 மணிக்கு அருப்புக்குச் சென்றால் மாலை 6.30 மணிவரையில் வெயிலை மென்று துப்பினாலும் விஞ்சிக் கிடைப்பது 150ரூபாய் வரையும், இரண்டு டீயும், பட்சணங்களுமே. (பெண் நடவாட்களுக்கு இன்னும் குறைவு). வயலுக்குச்சென்று பசியில் குத்தும் வயிற்றை பட்சணங்களில் நிரப்பி பலன் காணுவதை தனது சந்ததியினருக்கும் தொடரவிடாமல் செய்யவே எந்தவொரு தகப்பனும் விரும்புவான். அதே நிலைதான் இந்நிலை விவசாயிகளுக்கும். எப்பாடுபட்டாவது பிள்ளைகளை படிக்கவைக்கின்றனர், இல்லையேல் கொத்தனார் தொழில் அல்லது விவசாயமல்லாத வேறொரு தொழில், மிகை மிஞ்சினால் வெளிநாடு அனுப்பிவிடுகின்றனர். இல்லையேல் தருதலை உருப்படாது என்று தண்ணீர்தெளித்து விட்டொழிக்கின்றனர். எது எப்படியாயினும் இவர்களின் நோக்கம் விவசாய கஷ்டமென்பது தம்மோடு ஒழியட்டுமென்பதே. (விதிவிலக்குகளும் உண்டு).


“ஆலமரம் போல நீ வாழ - அதில்

ஆயிரம் பறவைகள் இளைப்பாற

காலமகள் உன்னைத் தாலாட்ட - அந்த

கருணையை நாங்கள் பாராட்ட..”


எல்லாம் சரி. விழுதுகளின் ஊன்றலின்றி புரையோடிய ஆலமரநிழலில் எத்தனைக்காலந்தான் நம்மாலும் இளைப்பாறமட்டுமே முடியும்.



Thursday, January 21, 2010

பிஞ்சிற் பழுத்த...

உள்ளத்து ஆளுமைகளை ஆசுவாசப்படுத்தி அமர்த்திவிட்டு, அதனுள் படிந்திருக்கும் கசடுகளை அவ்வப்போது அகற்றவேண்டிய கட்டாயம் எனக்கும் இருக்கிறது. எங்கோ பார்த்தோ பழகியோ நமக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் அவ்விதமான படிமங்களை பறித்தெரிவதற்கான நேரமும் காலமும் சுலபமாய் அமைந்துவிடுவதில்லை. எனக்கான இந்த வாய்ப்புகள்போல் (பகிர்தல்). சாம்பலைத்தின்று, வெளியே வெண்ணைகளை பூசிக்கொள்ளும் சக மனிதர்களையும் நம் கண்கள் அவ்வப்போது உள்ளிடுகைச்செய்யும்போது ஏற்கிறோமோ அல்லது ஏற்றுகிறோமோ ஆயினும் கடந்துவிடுகிறோம் அல்லது கடத்திவிடுகிறோம். வெண்ணையைத்தின்றாலும், சாம்பலைத்தின்றாலும் செல்லுமிடம் எதுவாக இருக்குமோ அதுவே மடியலுக்கு செல்லும்பாதையாகவும் அமையும். சிறிது ஆயுட்காலங்கள் மட்டும் வித்யாசப்படலாம்.

சமீபத்திய எனதூர் பயணத்தில் நான் கண்டறிந்த விடயங்கள் கொஞ்சம் மனதை திகைக்கவும் இளைஞர்களில் நிலையைக்கண்டு திகட்டவும் செய்தது. என் வீட்டுக்கு எதிர்வீட்டுப்பையன் வயது 19-20 இருக்கும். நான் தூக்கிவளர்த்தவன் என்பதை சொல்வதற்கும் மெல்லக் கூசவும் செய்கிறது. இன்றைய நாளில் வாரத்திற்கு இரண்டுநாட்களுக்கு குறையாமல் மது அருந்துகிறான். அவன் மட்டுமல்ல. எங்களது தெருவிலுள்ள மற்றய நாலைந்து இளைஞர்களும் (சிறுவர்கள்) சேர்ந்து. கல்லூரியில் முதலாமாண்டு தொழில்நுட்பம் படிக்கிறார்கள். தொழில்நுட்பத்தைதான் படிக்கிறார்களா? என்ற கேள்வியும் அவர்களின் செயல்கண்டு எழுந்துபார்க்கிறது.

நானும் கல்லூரிப் பயிலும்போது இவ்வாய்ப்பினில் மாட்டி மங்கியிருக்கிறேன். இந்தப்பழச்சாறும் புளிக்குமென்று முதல்நாளே அகற்றியெரிந்திருக்கிறேன். வீட்டுக்கொரு குடிமகனிருந்தாலே நாடு நலம்பெறும் என்ற நோக்கின் அடிப்படை அறிவினால் எனது தந்தைக்கு அவ்விலாக்காவை தாரைவார்த்துவிட்டேன். எனது தந்தைக்கு அப்பழக்கம் உண்டு. இருந்தாலும் அவரின் செய்கை மன்னிக்கத்தக்கது (என்னால் மட்டிலும்கூட இருக்கலாம்). பகற்பொழுதினில் உழைத்து உடல்வலுவை வியர்வைகள் வெளிக்கொணர்வதால் அவருக்கந்த இளைப்பாற்றல் தேவைப்படலாம்...படலாம்... அதனால் என்மனம் அவரின் செய்கையை ஒத்துக்கொள்கிறது தவறுதானென்றாலும்.

ஆனால் இந்த இளைவர்களுக்கு என்னக்கேடு என்றுதான் தெரியவில்லை. அவர்கள் குடிப்பதற்கான காரணமாய் ஏதோவொன்று இருக்கவேண்டும். (நொண்டிச்சாக்காக). சிறிதுநேர மனமகிழ்வுக்காக என்கிறார்கள். மஞ்சள்நிற சிலேடைகளின் சிலுசிலுப்பில், பிஞ்சில் வெதும்பி குறைநேர சிற்றிந்தின்பத்திற்காட்பட்டு விலைமாதுவின் வியர்வைகளை விலைக்குவாங்கி விலங்காகும் என்வயதொத்த ஒரு ஆண்மகனின் மனநிலையும் இதுவும் ஒன்றன்றி வேறெப்படி எண்ணவென்று தெரியவில்லை. இதற்கு வழிகாட்டுதலாக சில பெரியவர்களும் அமைந்துவிடுகிறார்கள். அப்துல்கலாம் காணச்சொன்ன கனவு இவ்வாறு மதிமயங்கி காணும் கனவாகவா இருக்கப்போகிறது??


Monday, January 11, 2010

கழுதைகளுக்கு தெரியுமா?

சக மனிதனொருவன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், தனது வெள்ளை வேட்டிச்சட்டையில் படப்போகும் ரத்தக்கரைகளுக்கு பயந்தோ அல்லது அசிங்கப்பட்டோ தூரநின்று தொலைப்பேசிவழி அடுத்தவர்களுக்கு தகவல்கொடுக்கும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதே காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களது உதவியாளர்கள், மற்றும் இன்னபிற அரசுத்துறை அதிகாரிகள், தீண்டத்தகாவன் என்பதுபோல் தண்ணீரை தூரநின்று ஊற்றும் ஒரு சமூகப்பிரஜை ஆகிய இவர்களின் ரத்தசொந்தமொன்றுக்கு இவ்வாறு நடந்திருந்தால், இதையேத்தான் செய்துகொண்டிருந்திருப்பார்களா? என்று எண்ணத்தூண்டுகிறது சமீபத்திய திருநெல்வேலி நிகழ்வு. இத்தனை வாகனங்களிருந்தும் அவசரகால ஊர்திக்காக காத்திருந்துதான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவேண்டுமென்ற ‘விடாப்பிடியான கொள்கையுடன் நின்றிருந்தவர்களை எப்படி வசை பாடினால் என்ன?


புரியாதவர்கள் இந்த காணொளியைப் பார்க்கவும்.


அவ்வாறு அவர் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே ஜீவனற்றுகிடந்த மரக்கட்டைகளுக்கும், உயிர்வலியை அல்லது துடிப்பை சகித்துக்கிரகித்துக் கொண்டிருந்த இவர்களுக்கும் இருக்கும் வித்யாசங்கள் வெகுக்குறைவாகே தெரிகிறது.


வழக்கமாய் பொதுமக்கள் செய்யும் காரியத்தைதான் உயர்மட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் செய்திருக்கிறார்கள் பூசிமொழுகிய ஊடகப்பார்வையுடன். இதில் கவனிக்கவேண்டிய விசயம் இதை ‘தத்ரூபமாக ஒளிப்பதிவு செய்தவருக்கும் மனிதாபிமானமோ வேறெந்த மண்ணாங்கட்டியோ இல்லாமல் இருந்திருக்கிறது.


ஒரு நாய்க்கு அடிப்பட்டால் கூட இன்னொரு நாய் அதனருகில் நின்று அழும். இன்னொரு காக்கைக்கு காலொடிந்திருந்தால் சுற்றிலும் காக்கைகளின் கூட்டம் அலப்பறியும். ஆனால் ஒரு மனிதன் அடிப்பட்டாலோ, அல்லது உயிர்வலியில் துடித்தாலோ நானா? நீயா? என்ற போட்டியிலோ அல்லது சுயநலப்புண்ணாக்கிலோ அனைவரும் வேடிக்கைப் பார்ப்பது எவ்வளவு கேவலமான செயல். அதுசரி கழுதைகளுக்கு தெரியுமா???



  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO