சிலநேரங்களில் காணுகின்ற நிகழ்வுகள் மனதின் மையத்தைப்பிடித்துக்கொண்டு அகலாமல் அரித்துக்கொண்டிருக்கும். அதுபோலவே இதுவும்...
அலுவலக நண்பருடன் சமீபத்தில் அம்மன் கோவில் கும்ப அபிடேகத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை உருவானது. பளபளக்கும் வெளிர்நிற ஆடைகளில் அவ்வூரே திரண்டு ஒற்றுமையாக அவ்விழாவினை நடத்தியது கண்டு வியந்தேன். விசேடங்கள் முடிவடைந்தவுடன் இருசக்கர வாகனத்தை எடுக்க திரும்பி வரும்பொழுதுதான் கவனித்தேன் ஒரு வீதி மக்கள் அவ்வீதி முகனையில் நின்றுகொண்டு அக்காலை உடையுடன் கோவிலைப் பார்த்துக்கொண்டிருப்பதை. அவ்வோடையின் அந்தப்பக்கம் கோவில். இந்தப்பக்கம் அவ்வீதி. நண்பரிடம் விசாரித்தபொழுதுதான் அத்தொண்டைக்குழியடைக்கும் நிலை ஏற்பட்டது. அம்மக்கள் அந்த கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களென்று. ஏனென்று வினவியபொழுது அவர்களின் சாதிதான் காரணமாய் சொல்லப்பட்டது. மீறி சென்றால் அடிதடி, வெட்டுக்குத்து போன்றன நிகழுமாம்.
அந்த சிறுவாய்க்காலின் படித்துறையில் பல்துலக்கியபடியும், துணிகளை தெருக்குழாய்களில் அலசியபடியும் அத்தனை நன்மக்களும் வேடிக்கை மட்டுமே பார்த்தது நெஞ்சில் அடைத்துக்கொள்ளத்தான் செய்தது. அவர்களுக்குக்கூட தோன்றவில்லை, அந்த அம்பாளை வணங்கவேண்டுமென்று. ஒரு ஊரில் மிகைவாழும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் திமிருடனான ஆதிக்க மனப்பான்மை இதுபோன்ற கீழ்ச்செயல்களுக்கு அடித்தளமாகிறது என்பது கண்கூடு. அந்தப்பக்கம் நின்று வெளுத்த சட்டைவேட்டியுடனும், பட்டுப்புடவைகளுடனும் அம்பாளை தரிசனம் செய்யும் அத்தனைப்பேரின் மனதிலும் எத்தனை அழுக்குகள் நிறைந்திருக்கின்றன. நாகரீக வளர்ச்சி எத்தனையோ படிகளை எட்டிவிட்டநிலையிலும் இன்னும் சில உட்கிராமங்களின் நிலை இப்படியேத்தான் உள்ளது.
எனது தாய் தந்தையருக்கு சாதியின் சாயம் ஒட்டியிருந்த சமயங்களில், அப்படியான மாயை எதுவுமில்லை, எல்லோரும் மனிதர்கள்தான், நம்முடலில் உள்ள யாவனவும் எல்லா மனித உடல்களிலும் இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு பகுத்தறிவிக்க என் கல்வியறிவும், அனுபவமும் உதவியது. இங்கு ஒரு ஊரே சேர்ந்து ஒரு குறிப்பிட்ட மக்களை சாதி அடையாளங்களால் ஒதுக்கிவைப்பது எத்துணை கொடுமையானது. அங்கு கல்வி பயின்ற மக்களே இல்லையோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
ஏட்டுக்கல்வி மதிப்பெண்களுக்காக என்றுமட்டும் ஆகிவிட்ட இந்நேரத்தில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்றன மனப்பாடம் செய்து மதிப்பெண்கள்பெற மட்டுமே பயன்படுகின்றனவே தவிர வேறெந்த புரிந்துணர்விற்கும், வாழ்வியலின் நற்பண்புகளுக்கும் பயன்படுவதில்லை என்றே நினைக்கிறேன். வயதில் மட்டும் முதிர்ந்த கல்வியறிவற்ற சில பெரிய புழுக்கள்தான் இப்படியென்றால் அதற்கு கொடிபிடித்துக்கொண்டிருக்கும் என்னொத்த இளையக்கூட்டமும் அதற்கு அடிக்‘காலாக’ முளைத்துக்கொண்டிருக்கிறதே. இச்சமுதாயத்தில் அகற்றப்படவேண்டிய அழுக்குகள்தான் எத்தனைவிதமாய் முளைத்துக்கிடக்கிறது !!!!
