க.பாலாசி: October 2010

Friday, October 29, 2010

நந்தி...

பிரதோஷந்தோரும் மௌன விரதமிருக்கும் பழக்கம் எனக்குண்டு. ஏன் ஆரம்பித்தேனென்று தெரியவில்லை. பெரும்பாலான ஆண்கள் இவ்விரதமிருப்பதில்லை. ஆனால் நானிருக்கிறேன். இந்தநாளில்தான் ஒருவேளை உணவுக்கும், அவ்வப்போதைய தொண்டை நனைத்தலுக்கும் இந்த உதடுகளை புணரவிடுதல் போதுமானதாக இருக்கிறது. மேலும் ஒரு தனி அறை முற்றிலுமொரு மயான அமைதியை தரவல்லதாதலின் இவையெல்லாவற்றிற்கும் உகந்தது. இன்று மாலை ஈஸ்வரன் கோவில் செல்லும்வரை இதுதான் என்னுலகம். இந்த சாலை பார்த்தமாதிரியான சன்னலும் வடக்கிலிருந்து வீசும் மெல்லிய கிழிசல் காற்றும் அனுபவிக்க அனுபவிக்க சுகந்தம். மனிதிலிருக்கும் தாண்டவ அமைதி இந்த நாளை தவிர்த்து மற்றைய நாட்களில் கிடைப்பதில்லை என்பது என் அனுபவ உண்மை.

இந்த தனியறையில் வியாபித்திருக்கும் அத்தனைப்பொருட்களுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது. அதையுணரக்கூட எனக்கிந்தப் பொழுது தேவைப்படுகிறது. இந்த நாற்காலி, மேசை, அரிக்கன் விளக்கு, சுவர் மூலையிலிருக்கும் அடுக்குப்பானைகள், மேசைமீது அடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள், அந்த எம்ப்ராய்டரிங் திரைச்சீலைகள் இப்படியாவும் இந்தவொருநாளில்தான் அழகாய் தெரிகிறது, மற்ற நாட்களில் எனையாட்கொள்ளும் இயந்திரத்தன்மை இவையனைத்தையும் கண்மூடி மறைத்துவிடுகிறது. இந்த நாளும், நான் பார்க்கும் இந்த சாலையும் அதில் பயணிக்கும் மனிதர்களும் என் பெருஞ்சுமையென்பது யாருக்குத்தெரியும்?. ஏனோ தெரியவில்லை, இதையனைத்தையும் நானே விரும்பி ஏற்கிறேன். ஒரு நாள் முழுதும் மலரும் அனைத்துப்பூக்களும் பூஜைக்குரியதாகவோ அல்லது ரசிப்பதற்குகந்ததாகவோவா இருந்துவிடுகிறது? எதோவொன்றேனும் குறைபட்டுதான் விடுகிறது. அதுபோலவே நான்பிறந்த அன்றையநாளில் என்கால்கள் விண்ணப்பட்டிருந்தது. ஈஸ்வரன்கோவில் நந்தியினுருவம் உங்கள் மனதிலிருக்கும். அதுபோல்தான் எனக்கும் எப்போதும் அமர்ந்தநிலை. அதற்காக எந்த ஈஸ்வரன் என்னெதிரே அமர்ந்திருக்கிறான் அல்லது அனுதினம் விஷேசப்படுகிறானென்று தெரியவில்லை. அதன் கால்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அந்தப்பெரிய நந்தியின் கால்கள் எவ்வளவு சிறிதாக சோம்பிக்கிடக்கும், அதேதான். இப்போது என்னை உருவகப்படுத்துங்கள்.

மனைவி மக்கள், குடும்பச்சுமை, உறவுகள், நல்லதுகெட்டது, நாள் கிழமை இப்படியிவை எதுவுக்கும் லாயக்கற்றவனென்பது எனக்கு கொடுக்கப்பட்ட வரம். கொஞ்சம் வசதியானதுதான். சென்றமாதம் நான்சென்ற வினோத்தின் திருமணம் நீங்கலாக வேறெதிலும் நான் பங்கேற்பதில்லை. அவன் என் பால்ய சிநேகிதன். அவனல்லால் வேறொருவன் என்னை வெகுவாக கவர்ந்ததில்லை. ஒவ்வொருநாளும் என்னை மொய்க்கும் பரிதாபக்கண்களுக்கு மத்தியில் அவன் என்னை உணர்ந்தவன் என்றால் மிகையில்லை. எவ்வளவு ஆழமான நட்பு அவனுடையது. நினைத்துப்பார்க்கையில் இப்போதும் இனித்துக்கொண்டேயிருக்கிறான். பதினெட்டு வருட நட்பில் இடையில் மனக்கசப்பில் ஒருவருடம் பேசாமல் இருந்திருக்கிறோம். என்தவறுதான் அது. அதுவொரு ஆழ்ந்த வலி, இருவருக்குமே.

அன்றைய நாளில் எனக்கு அறிமுகமானவன்தான் சிவா. அவன்மூலம்தான் இந்த அலுவலகப்பணி எனக்கு கிடைத்தது. இதுவும்கூட ஒரு ஆத்மார்த்தமான நட்பு. ஆயினும் என்னுள் எழும் பொறாமைக் குணம் அனைத்தையும் கெடுத்துவிடுமோ என்ற அச்சம்மட்டும் இருந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொருநாளும் அவன் அலுவலகத்திற்கு வரும்விதம், நடையுடைகள், பாவனைகள். வெகுவாக இம்சிக்கிறது. கட்டுடலும் செந்தோல் கவர்ச்சியுமிக்க ஒருத்தியை கண்கொட்டும் பார்வையில் அள்ளித்தின்னும் உணர்வு எந்தவொரு பருவமெய்தவனுக்கும் இருக்கத்தான் செய்யும். அதுபோலவே அவனின் தோற்றமும் நடையுடையும் என்கண்களை கொத்திக்கொள்கிறது. என்ன செய்ய? என் ஊனம் பிச்சிப்பிடுங்கும் கழுகாக சாகடிக்கிறது. நான் வணங்கும் தெய்வம் எனையேன் இப்படி சபித்தது, சபிக்கிறது என்று எண்ணும்போதெல்லாம் இவ்வுடலின் மீதுரும் வெறுப்பு அளவில்லாதது.

நான் மாற்றுத்திறனாளியாம், சிறகற்றப் பறவைக்கு இச்சமூகம் காட்டும் அற்ப அக்கறை. எந்த கொம்பனுக்கு தெரியும் என் அன்றாட அவஸ்தைகளும், வேதனைகளும் இன்னபிறவும். பார்ப்பதற்கு நானொரு சக மனிதன்தான். ஆனால்..ஆனால்...இந்த கால்...ச்சை..ச்சை.. சிவா மீதான நட்பு எப்போதும்போலிருப்பினும் அவன் மீதான வெறி என்னுள் தலைதூக்கத்தொடங்குகிறது. அதிலும் அவன் கரும்பச்சை பேண்ட், அதற்கு தகுந்தார்ப்போல் அணியும் வெளிர்நிற சட்டையும் நடக்கும்போது இடது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டுச் செல்வதும்.... என்ன சொல்ல? அவன் கோப்புகளைச் சுமந்து எனைகடக்கும்போதும், அலுவலகத்தில் இடையிடையே நடந்துசெல்லும்போதும் என்னையறியாமல் அவனை சபிக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள். என் மீது எனக்கே பரிதாபம் உண்டாகும் அல்லது உண்டாக்கும் கணங்கள் யாவிலும் என் சாபம் எவரையோ நோக்கி பயணிக்கிறது.

இந்த நேரத்தில் என்னைப்பற்றி என் நாட்குறிப்பேட்டில் எழுதிய வரிகள் ஒன்று ஞாபகம் வருகிறது. ‘என் வாழ்க்கை இருட்டறையில் எழுதப்பெற்றதொரு தொடர்கதை‘ எவ்வளவு உண்மை. இதையேன் எழுதினேன் தெரியவில்லை. எதோவொரு அற்பாசையும் அதன்மூலம் பெற்ற வெறுமையும் இதை எழுத காரணமாயிருந்திருக்கக்கூடும். இப்போது ஞாபகம் வருகிறது. ஒரு நாள் நான் எழ முயன்றேன். என் உள்ளங்கால்களை இப்புவியிலழுத்தி நிற்க முயன்றேன். எவர்எவர் மீதானோ ஈர்ப்போ வெறியோ எனையிப்படி செய்யத்தூண்டியது. ப்ச்..இது தோல்விதான் என்பது தெரிந்தே செய்யப்பட்ட முயற்சி. எல்லோருக்கும் ஒரு கனவிருக்கும். எனக்கும் இருக்கிறது இவ்வாழ்நாளில் ஒருநிமிடமேனும் சிவாவைப்போல வாழ்ந்து இல்லையில்லை நடந்துவிடவேண்டும். ஸ்டைலாக இந்தக் கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு கோப்புகளை அலுவலக அறையெங்கும் எடுத்துச்செல்லவேண்டும். அப்படியே இறந்துவிடலாம். என் பிறவிப்பயன் முழுமைபெறும். இப்போது ஈஸ்வரன்கோவில் செல்கிறேன். வழக்கம்போல நந்திதான் இன்றைய முக்கியஸ்தர். எனக்கு அதன் கால் மட்டுமே.


.

Monday, October 25, 2010

ஒரு கூடும் சில குளவிகளும்

நான் வந்த பேருந்தில் ஏறியவர்கள் கணவன் மனைவியாக இருக்கவேண்டும். தொடை உயரம் ஒரு மகன், இன்னொரு குழந்தை அப்பன் தோளில் தூங்கியது. அவர் கையில் பால் பாட்டிலும் தயாராகவே இருந்தது. பேருந்தினுள் நான்குபேர் இடைவெளியில் இருவரும் நின்றுகொண்டார்கள். மூக்கொழுகும் பெரிய மகன் அவளின் காலை கட்டிக்கொண்டான். ஒரு கையால் மேல்கம்பியை பிடித்துக்கொண்டாலும், மறுகையில் துணியடைத்த குச்சிப்பையை வைத்துக்கொண்டாள். ஒருவரின் மூச்சுகாற்று அடுத்தவர் முதுகில் சூட்டைப்பரப்புமளவு கூட்டம். இருவர் இருக்கையில் அமர்ந்திருந்த குண்டு சிறுக்கிகளுக்கு மூன்றுபேர் இருக்கையே தாங்காது. அவர்களின் தள்ளுமுள்ளலும் இவளுக்குத்தான் இடைஞ்சல். அவ்வப்போது விலகும் மாராப்பையும், இடுப்புச்சேலையையும் சரிசெய்துகொண்டாள். அருகருகே நிற்கும் ஆண்களின் இடிசலுக்கும், நடத்துநர் நடையழகுக்கும் ஓர் உடலங்கத்தை அவள் ஒதுக்கிவைத்தே ஆகவேண்டும். இந்த மேடுபள்ள சாலையில் பயணிப்பதில் ஆண்களுக்கே அடிவயிறு கலக்கும் அபாயம் உண்டு. ஐந்தாவது முறையாக பெரிய மகனின் ஒழுகும் மூக்கை முந்தானையால் துடைத்துவிட்டாள். ஒரு வேகத்தடையை கடந்தது பேருந்து. அப்பனிடம் தூங்கிய குழந்தை விழித்துக்கொண்டது. இவளைப்பார்த்து அழத்தொடங்கியது. அவர் பாலைக்கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார், குடிக்கவில்லை. அனைவரும் கவனிக்க தொடங்கினர், சிலருக்கு எரிச்சலும்கூட. அப்பன் கையில் திமிரிய அந்தப்பொடிசை அவளே வாங்கிக்கொண்டாள். ‘ச்ச்சுச்சூ...ச்ச்சுச்சூ...ஏஞ்செல்லம் அழுவுறீங்க.....’ என்றபடியே இடுப்பில் அமர்த்தி முத்தமிட்டாள், அவ்வளவுதான்....அதுவும் சிரித்தது, அவளும் சிரித்தாள்..... நான் இறங்கவேண்டிய நிறுத்தம் கடந்துவிட்டது.

•••••••

அக்கா மகள் தன் குறிப்பேட்டைக்காட்டி ’மாய்மா...இத பாறேன்’ என்றாள். ‘அ’னா‘வை அழகாக எழுதியிருந்தாள்.

‘ரொம்ப நல்லாயிருக்கே நீங்களா எழுதினீங்க?’என்றேன்.

‘ம்ம்ம்’ என்றாள்.

‘எந்த மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க?’

‘ஹர்ஸா மிஸ்’

‘ஓ...எங்க மறுபடி எப்டின்னு போட்டுக்காட்டுங்க பார்ப்போம்’

‘பர்ஸ்ட் மேலவொரு ஸ்மால் சர்க்கிள் இப்டி போட்டுட்டியா, அதுக்கு கீழ ஒரு பெரிய எலிப்ஸ், அப்பறம் ரெண்டையும் ஜாயிண்ட் பண்ணி ஒரு கர்வ், நெக்ஸ்ட் ஒரு ஹரிசான்டல் லைன், வெர்டிகிள் லைன். அவ்ளோத்தான்.......’

அக்கா கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள், மாமா பூரித்திருந்தார். ஒன்றாம் வகுப்பு சேரும்போது தமிழ்பண்டிட் பொன்னுசாமி அய்யா என் விரலைப்பிடித்து சிலேட்டில் ‘அ’ எழுதிக்காட்டியதை நினைத்துக்கொண்டிருந்தேன். விட்டத்து மூலையில் ஒட்டடைக்கூட்டினில் சிக்கிய பொன்வண்டை பார்க்கப் பாவமாயிருந்தது.

•••••••••

இப்போதெல்லாம் அவளை நினைத்துப்பார்ப்பதை குறைத்துவிட்டேன். ஓர் அகண்டவாய் ஏனமாக இன்றைய நிலை மாறிவிட்டதாலோ என்னமோ கொண்டதெல்லாம் கொண்டுவிடுகிறது. அவளென்னுள் படிந்த வேகம் ஒரு குறுகிய காலம். ஒரு ஜென்ம பகையும், ஏழு ஜென்ம நினைவுகளையும் மனதிலிருந்து சுரண்டமுடியாமல் செய்துவிட்டாள். ஒரு பெட்டிக்குள் அடைபட்டுள்ள துணிகளாய் வர்ணவர்ணமாய் அவளின் காதல் அடைந்துகிடக்கிறது. அவ்வப்போதைய கனவுகளும், சில பெருவெளி தனிமையும் அணிந்துகொள்வதோடு சரி. முக்கி முனகி நான்கு வருடங்களை கடந்துவிட்டேன். அண்ட சராசரங்களனைத்தும் ஒரே ஜீவனுக்குள் அடக்கிவைத்திருந்திருப்பதாய் பாரமாகவே கழிகிறது பொழுதுகள். ஒரு கழுமரமும் அதிலமர்ந்த காகமுமாய்த்தான் மடிந்து புலரும் பொழுதுகள் கண்ணாம்பூச்சிக்காட்டி ஓடி ஓடி மறைகிறது. எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டி மட்கசெய்துவிடத்தான் பார்க்கிறேன். போகும் வழியெங்கும் சேகரிப்பது குப்பைகளாகவே இருப்பின் எதை எங்கே கொட்ட.

•••••••••

நேற்றைய இரவுப்பொழுதை பேருந்துப்பயணம் மேயந்துகொண்டது. காலையிலதுமிழ்ந்த வெளிச்ச உலகில் மாற்றமேதுமில்லை. சென்றவருடத்தைவிட இப்போது 2 கிலோ எடை அதிகரித்திருக்கிறேன். தா(டி)டை முடிகள் சற்றே கூர்மையடைந்து காணப்படுகிறது. மீசை(?!!!)யில் கருமை அடர்ந்துள்ளது. வலது காதுமடல் மேல் ஒரு வெள்ளை மடையானின் இறகு நீட்சி. சென்றவருடம் இது இல்லை. ஒரு இருட்டறையும், அதிலமர்ந்து வாசிக்கும் தொடர்கதையுமாக இவ்வாழ்க்கை புரண்டுகொண்டேயிருக்கிறது எதுவும் புலப்படாமல் அல்லது படுத்தாமல். வெறுமனே புரட்ட 27 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. வீடு கட்டும் மணலில் காற்கூடு கட்டிக் கழித்த வயதுதான் இப்போதைய கனவுகளை சொரிந்து சுகப்படுத்துகிறது. வேறென்ன சொல்ல. இந்த நாளையினிமையாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



.

Thursday, October 14, 2010

புராதானங்கள் அபாய நிலையில்!!!

புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை.


ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை


அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி, (இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே


மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கீழ்கண்ட மின் அஞ்சலை அனுப்புங்கள்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

புதுக்கோட்டை ஆட்சியர் மின் அஞ்சல் முகவரி:-
collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in

செய்தி
To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
Regds:\


நன்றி
http://fourthpillar.wordpress.com/ மற்றும் பதிவர் ஆரூரன் விசுவநாதன்

குறிப்பு
இந்த இடுகைக்கு பின்னூட்டப்பெட்டி மூடப்பட்டுள்ளது. பின்னூட்டமிடும் நேரத்தில் எளிதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.



Saturday, October 9, 2010

இன்றிரவும்...


எல்லோருக்கும் தெரியும்
யார்தான் அறியாதவர்

காலையில் தோப்புத்தெரு
அடுத்து மேலவீதியும்
கலைஞர் காலனியும்

எங்கும் கிடைக்காமற்போனால்
எப்போதுமில்லாத அக்ரஹாரம்

கடைத்தெரு செல்லும்போது மட்டும்
கிடைத்துவிடவாப்போகிறது....

யாசிப்பவளின் இடுப்பெலும்பில்
வெறித்திருக்கும் சிசுவிற்கு

இன்றிரவும் கிடைக்கலாம்....

வேப்பெண்ணை வாசமும்
அதே உதிரமும்.


.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO