..
சீப்பிலிருந்த தலைமுடியை
கைவிரலில் சுருட்டிக்கொண்டிருந்தாள்
எப்ப வந்த? என்று கேட்பதற்குமுன்...
வாந்த...ஊர்ல இருக்கியா? என்றாள்..
இல்ல இன்னைக்குத்தான்...
ஆமா நீ? சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டேன்
நேத்து வந்தேன்..
உம்பொண்ணா இது?
ம்ம்...
தூக்கியணைத்து.. முத்தமிட்டேன்
குழந்தையாய் பார்த்தாள்...
நல்லவேளை
சின்னபொண்ணும், ராசுபொண்டாட்டியும்
ஊரிலில்லை.
**********************
காரம் கூடின குழம்புக்கு
அவ்வப்போது பாட்டியும் திட்டுவாள்
த்தூ.. என்னாக் கொழம்புடியிது
புளிப்பு வாயில வய்க்கமுல்ல
இது அப்பா
‘ஒண்ணும் வாங்கியாரதில்ல..
வரட்டும் வச்சிக்கிறேன் இந்த மனுஷனை’
வைதுகொண்டிருப்பாள் அம்மா...
அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி.
*********************
சோப்பு சீப்பெல்லாம்
தனியா வச்சிக்கணும்யா..
இந்தா இதுல
பவுடரும் எண்ணையும் இருக்கு
பாய்த் தலையாணில்லாம்
நீ மட்டுந்தான வச்சிக்கிற...
என்று சொன்ன அப்பாவின்முன்
நண்பனின் சட்டையை அணிந்திருந்தேன்...
அவர் சட்டைசெய்யவில்லை.
...