க.பாலாசி: September 2009

Tuesday, September 29, 2009

கடலும்...நிலவும்...


நேர்

உன் கண்களின் நளினங்களில்
ஆயிரம் அர்த்தங்கள் அலைய...
நம் உடல் ஒட்டி பிறந்த
உஷ்ணத்தின் சிலிர்ப்புக்குள்
சிறைப்பட்டுபோனது என் கனவுகள்...
கடலில் கலந்த காவிரியைப்போல்...

********

எதிர்


உன் தங்கையின் நடையினில்
ஆயிரம் கவிதைகள் புதைய...
அவள் உடல் மோதி உடைந்த
கற்சிலையின் பாகத்திற்குள்
காணாமல்போனது அதன் அழகு...
நிலவுடன் மோதிய நட்சத்திரம்போல்...


********


தமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்...நன்றி...

Friday, September 25, 2009

ஒரு குழந்தையின் குமுறல்...


எங்கப்பா சுதந்திரத்திற்கு போராடினார்...
தற்பெருமையுடன் மகன்...
அவன் வீட்டில்...கூண்டுக்குள் குருவிகள்...

பிறந்தநாள், நினைவுநாளில்
அலங்கரிக்கப்படும் தலைவர்களின் சிலைகள்...
மற்ற நாட்களில் காக்கையின் கண்காணிப்பில்...

தீவிரவாதிகளை தேடும் பணியில்
பாதுகாப்பு படையினர்...வீடுவீடாக வேட்டை...
ஏழைப்பெண்களின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு...

மந்திய அமைச்சர்...விமானத்தில்...
இரண்டாம் வகுப்பில் பயணம்...
கட்சித் தொண்டன் கோவணத்துடன் பெருமை...

வரியேய்ப்பை தோலுரிக்கும் திரைப்படம்...
நடிகருக்கு தேசிய விருது...வருமான வரித்துறையின்
திடீர் ஆய்வில் சிக்கியது சில கோடிகள்...

குடும்பக் கட்டுபாட்டின் அவசியம்
கூப்பாடு போட்டும் பயனில்லை...
பெண்ணாய்ப் பிறந்தால் தெரிகிறது...

நாடாளுமன்றத்திலும் தமிழில்
பதிலளிக்கவேண்டும்...அமைச்சர் ஆரவாரம்...
அவர் பேரன் ஆங்கிலத்தில் மட்டும் தேர்ச்சி...


தமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை செலுத்தவும்....நன்றி...

Thursday, September 24, 2009

பாருக்குள்ளே பாண்டிச்சேரி...

இளமை விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு


எனது சமீபத்திய சாதனைகளில்(?!!!) ஒன்றாக பாண்டிச்சேரி என்றழைக்கப்படுகின்ற புதுச்சேரிக்கு சென்று வந்த நிகழ்வினை குறிப்பிடலாம். எனது நண்பரின் பகுத்தறிவு திருமணத்திற்காக அங்கே செல்ல நேரிட்டது.


மாலையில் திருமணம் என்பதால் முதல்நாள் இரவு புறப்பட்டோம் (அலுவலக தோழர்கள் உட்பட) மறுநாள் காலை புதுவையின் மண்ணில் எங்கள் காலடி பதித்தக் காலம், கீழ் விழுந்த கதிரவன் ஒளியதில் கால் படும் நேரமாக அமைந்தது என்றால் மிகையாகாது. கொஞ்ச நேரம் ஓய்வுறக்கம். பின்னர் 12 மணிவாக்கில் கிழக்கு கடற்கரையின் வாசம் நுகர சென்றோம்.


பெருகிவரும் அலைகளின் வீரியத்தினை குறைக்க பெருங்கற்கள் போடப்பட்ட கரையுடைய கடலின் அழகு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் கரை நுழையும் அன்பர்களை தடியோடு வரவேற்கும் காந்தியடிகளின் மணிமண்டபமே கூறும் புதுவையின் சொச்ச அழகினை.


உச்சிதொடும் வெயிலின் வெக்கை மிகையாகத்தான் இருந்தது. ஆயினும் வேகமாய் வீசிய கடற்காற்று எல்லாம் மறைத்து அதன் அழகினை ரசிக்க இடம் கொடுத்தது. கொஞ்ச நேரம் உலாத்திவிட்டு திரும்புகையில் கடந்து வந்த சாலையில் புதுச்சேரியின் வரலாற்றை அறிந்துகொள்ள அவசியம் காணவேண்டிய இடமாக திகழும் புதுவை அருங்காட்சியகத்தை தற்செயலாக காணும் வாய்ப்பு நேர்ந்தது. இது புதுவை ஆளுநர் இல்லம் அருகே உள்ள ஒரு வளைவில் உள்ளது. பல்லவர், சோழ காலச் செப்புச்சிலைகள், கற்சிலைகள், பிரஞ்சுக்காரர்களின் பழம்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு சிற்ப அரங்கு, பிரெஞ்சு அரங்கு, தொல்லியல் அரங்கு, நில இயல் அரங்கு, ஆயுத அரங்கு, ஓவிய அரங்க எனப் பல பகுதியாக அமைந்துள்ளது (புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை).

இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இந்த அருங்காட்சியகம் பாரதி பூங்காவிற்கு வடக்கில், ரோமன் ரோலண்டு நூலகத்திற்குப் பின்புறம் அமைந்துள்ளதாக அதன் வரைபடத்தில் உள்ளது. அருங்காட்சியகத்தை வெளியே வருகையில் முன்புறம் இருந்த அறிவிப்பு பலகையில், இந்த பழம்பெரும் (அதாவது பிரஞ்சுக்காரர்கள் பயன்படுத்திய) மாளிகையை 1999-ல் கருணைக்கொலை செய்யவிருந்ததாகவும், அப்போதைய சமூக ஆர்வலர்கள் சிலரின் முயற்சியால் தப்பித்து இப்போது அருங்காட்சியகமாக செயல்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. திங்கள் கிழமை விடுமுறை நாள். எங்களால் அன்றைய நாள் பார்க்கமுடிந்தது அவ்வளவுதான்.


ஆயினும் பிறகொருமுறை அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்தால் காணவேண்டும் என்று எனது மனக்குறிப்பேடின் நடுப்பக்கத்தில் குறித்து வைத்துள்ள இடங்கள் கீழ்கண்ட பெயரில் உள்ளன....

ரோமன் ரோலண்டு நூலகம்

காந்தியடிகளின் நண்பராக விளங்கிய பிரெஞ்சு அறிஞர் ரோமன் ரோலண்டு என்பவரின் பெயரால் இந்நூலகம் செயல்பட்டு வருவதாக செய்தி. 1827 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் துவங்கபட்டபோது, முதன்முதலில் புதுவை ரயில் நிலையம் அருகில் இருந்தது என்றும் 1974 ஆம் ஆண்டு முதல் ராஜ்பவனுக்கு அருகில் செயல்பட்டு வருகிறது என்றும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

அரவிந்தர் ஆசிரமம்

உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் இங்கு வந்து ஆசிரமவாசிகளாக உள்ளனராம். ரோமிலுள்ள வாடிகன் போல, புதுச்சேரி அரசுக்குள்ளே ஒரு தனி ராஜ்யம், தனி உலகில் இயங்கிவருவதாக இவ்வூரின் அடுத்த புத்தகத்தில் உள்ளது.

இவைகள் தவிர பாரதியார் அருங்காட்சியகம், பாரதிதாசன் அருங்காட்சியகம் மற்றும் இன்னம் சில முக்கிய இடங்கள் உள்ளதாக அறியப்பெற்றேன். வாய்ப்பு நேரும்போது அந்த கடலிலும் நீச்சலடிக்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது.

நாங்கள் திரும்பி வருகையில் (அதாவது திருமணம் முடிந்து மறுநாள் காலை) தற்பெருமை கொள்ளத்தக்க வகையில் பேருந்தின் சாளரம் அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது (!!). புதுச்சேரியின் புறநகர் என்று சொல்லமுடியாத ஓர் இடத்தின் சாலையோரம்... மதுவின் மயக்கத்தில் ஒரு மாதுவே அச்சாலையின் நீள அகலங்களை துல்லியமாக தன் கால்களாலேயே அளந்துகொண்டிருக்க....உணர்ந்துகொண்டேன்.....பாண்டிச்சேரி பாருக்குள் மட்டுமில்லை...BAR-ருக்குள்ளும் இருக்கிறதென்பதை...


தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்....நன்றி...




Monday, September 21, 2009

தொலைந்து போனது உறவுகளின் ஆசை...


உதிரும் சருகாய் பெற்றவள்...
உள்ளூர நினைக்கையில்...
வெளிப்படும் கீழிமை நீர்
கீழ் விழ நேரமில்லை...

கற்புடைய தாரமவள்...
கட்டியணைத்து பிரிகையில்
மனதெழுந்த கேள்வியதற்கு
விடையெழுத விடியவில்லை...

தான் ஈன்ற பிள்ளை...
தன்னிலையற்று உறங்குகையில்
உடல் அணைத்து, உச்சி முகர்ந்து...
இதழ் பதிக்க இயலவில்லை...

எல்லாம் மறந்து
எல்லையில் நின்றிருக்க...

எழுந்த துப்பாக்கியோசையதில்...
தொலைந்து போனது உறவுகளின் ஆசை...


இது எனது 50வது இடுகை.....இதுவரையில் வருகைதந்து ஊக்கமளித்த...இனிமேலும் வருகைதந்து ஊக்கமளிக்கப் போகின்ற அனைத்து பதிவுலக அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்...நன்றி...

Saturday, September 19, 2009

ராஜாவும் ராணியும்...


நம்ம ராஜாவுக்கு எப்பவுமே அவசரம்தாங்க...ஏன் சொல்றேன்னு கேட்கிறீங்களா? மேல படிங்க...

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வெளிநாட்டுக்கு போனவன் போன மாசம் தான் வந்தான். வந்ததும் வராததுமா வீட்ல சொல்லி பொண்ணுப் பாக்க சொல்லிட்டான். பயபுள்ளைக்கு அப்டி ஒன்னும் வயசாகல. 28 தான் அவுது. இன்னும் 3 மாசத்துல மறுபடியும் வெளிநாட்டுக்கு போவனுமாம். அதுக்காகதான் இவ்ளோ அவசரம்.

வீட்லையும் ஒரே பையன்தான இப்பவே முடிச்சிடுவோம்டு பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க. அவங்க அப்டி ஆரம்பிச்சதும்...பையனுக்கு தலகாலு புரியல தெனமும் பொட்டுதான்... பூவுதான்... சென்ட்டுதான்....என்ன நெனைச்சிகிட்டு இருப்பானோ தெரியாது. தரையில நடக்கறதாவே பல நேரத்துல நெனைக்கமாட்டான் போலருக்கு. ராத்திரியில படுக்க போறப்பவும் பொம்பளைங்க மூஞ்சில தடவுர எல்லா கருமத்தையும் தடவிகிட்டு, தலைய சீவிகிட்டுதான் படுக்குறான். கேட்டா வரலாறு முக்கியம்ங்கிறான். அடப்பாவி வரலாறுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம், என்னத்த சொல்றது. இப்டியே ரெண்டு வாரம் ஓடுச்சு.

ஒரு வழியா பக்கத்துல பத்து கிலோமீட்டர் தூரத்துல ஒரு பொண்ண பாத்து எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டாங்க. பொண்ண பாக்குறத்துக்கு முன்னாடியே தலகீழா நடந்தவன் இப்ப சும்மா இருப்பானா. என்னா ஆட்டம்...பாட்டம்...எதுக்கு இவ்வளவு ஆசயோட அலையிரான்னே தெரியல. பழுத்த மட்ட பச்ச மட்டைய பாத்து சிரிச்ச கதையா ஊருல உள்ள கல்யாணம் ஆவாத பசங்கள ஓட்டுறதே வேலயா செய்யுறான். இவன பாத்தாலே அந்த பசங்கல்லாம் ஆளவுட்றா சாமின்னு வீட்ட வுட்டே வெளிய வரமாட்டுங்கிறானுங்க.

கல்யாண நாளு நெருங்க நெருங்க வீட்டுக்குள்ளயே முடங்கிட்டான். அப்டி என்னதான் பண்றான்னு போயி பாத்தா வெயில்ல வந்தா கருத்துடுவான்னு அவங்க ஆத்தாகாரி சொல்லிருச்சாம். இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல, ஏற்கனவே நீ பிரிண்டர் டோனர் கலருல செகப்பாதானடா இருக்கன்னு சொன்னா....உனக்கு பொறாமடாங்கறான். அப்பறம் இன்னொரு கூத்து வேற நடக்குது. அவன் வீட்டு ஹால் இருந்த டி.வி.ய இப்ப கொண்டு போயி ரூமுல வச்சிருக்கான். இத ஏன்டா இங்க வைச்சிருக்கன்னு கேட்டா...கலைஞர் சொல்றமாதிரி பொது அறிவ வளத்துக்கன்னு சொல்றான். எங்க போயி முடிய போவுதோ தெரியிலையே?

சும்மா சொல்லக்கூடாது கல்யாண வேலையெல்லாம் ஒன்டிக்காரனாவே நின்னு செஞ்சிட்டான். நாங்களும் அப்பப்ப போயி எதாவது செஞ்சோம். கல்யாணமும் ஒருவழியா முடிஞ்சிது. மத்த சடங்குல்லாம் பொறுமையாவே நடந்துகிட்டு இருந்துச்சு. ஏன் இவ்வளவு ஆம வேகத்து எல்லா நடக்குதுன்னு பாத்தா நம்ம ராஜாவோட வேளதான்னு தெரிஞ்சுது. ஏன்னா எல்லா வேலையும் பொறுமையா நடந்தாதான் சீக்கிரம் பொழுது போவுமாம். ம்ம்ம்ம்......

பொண்ணோட வீடல ரூம் வசதி இல்லன்னுட்டு இவங்க வீட்லையே முதலிரவ வைச்சிக்க சொல்லிட்டாங்க. அப்பறம் அவன் எங்கள கூப்டு அவனோட ரூம அலங்காரம் பண்ண சொன்னான். நாங்களும் புதுசா சீர்வரிசையா வந்த இரும்பு கட்டில கொண்டாந்து போட்டு அத சுத்தி பூவெல்லாம் வாங்கியாந்து சும்மா ஜம்முன்னு அலங்காரம் பண்ணினோம். பயபுள்ள வந்து பாத்தான். நல்லாருக்குன்னு சொல்ல வேண்டாம், சுமாரா இருக்குன்னாவது சொல்லியிருக்கலாம்ல. ஒன்னுமே சொல்லல. சீக்கிரம் கிளம்புகடான்னு சொல்லிட்டான். எங்களுக்கு வந்துதே கோபம். சரி பரவாயில்ல அப்பறமா பேசிக்கலாம்னு கௌம்பிட்டோம்.

அன்னைக்கு நைட்டு ரூமுல ரொம்ப நேரமா காத்துகெடந்திருப்பான் போல. எவ்வளவு நேரம்தான் பூவாசனைய மட்டும் மோந்துகிட்டு இருக்குறது. புரட்டாசி மாசம்ங்கறதால கொஞ்சமா குளிர்வேற. பையனுக்கு அவதி தாங்கல. மெதுவா கதவு தெறந்துது. ராணி மெல்லமா நடந்து வரா. பையன் வச்சகண்ணு வாங்காம பாக்குறான். கையில பால் சொம்பு, அதுக்குமேல கவுத்து வைச்ச டம்ளரு. அவ குணிஞ்ச தல நிமிறல. வெக்கத்தோட தாக்கம் அவளோட நடையிலேயே தெரியுது. கழுத்துல புது தாலிய தொட்டும் தொடாமலும் மல்லியப்பூ. வரதட்சணையா வந்த நகையில பாதிய அப்பவே அவனோட ஆத்தாக்காரி வாங்கி பீரோக்குள்ள வைச்சிருப்பா போல. ரெண்டு மூணு செயின் மட்டும் மாராப்பு மேல தெரியுது. கிட்ட வரதுக்குள்ள பால கூட வாங்கி வைக்கல. காஞ்சமாடு கம்மங்கொல்லையில பாஞ்ச கணக்கா ஒரே பாய்ச்சல்தான். அவனோட வேகமும், அவளோட தாகமும் ஒரே திசையில பயணிச்சு கட்டில் மேல தொப்புன்னு விழுந்தாங்க. (நாங்க பாக்கல... எல்லாம் ஒரு கற்பனதான்)

அப்பறம் என்ன?... விழுந்த வேகத்துல கட்டிலு காலு கழண்டு போயி.....அவனுக்கு பின்னாடி மண்டையும், அவளுக்கு முன்னாடி மண்டையும் உடைச்சிடுச்சு. ரெண்டு மனசும் ஒன்னா போனதால ரெண்டு பேருக்குமே ரெண்டு ரெண்டு தையல். டாக்டரு இன்னும் ஒருவாரம் கழிச்சிதான் ரெண்டுபேரும் சேரனும்னு சொல்லிட்டாரு.

ம்...போங்க போங்க... போயி வேலய பாருங்க....

டிஸ்கி: ஏன் கட்டிலு காலு கழண்டுதுன்னு கேளுங்க, நாங்க அலங்காரம் பண்ணி முடிச்சவொடனே எங்கள வெளியில தொரத்திவுட்டான்ல. அதனால அவனுகிட்ட சாக்குபோக்கு சொல்லி ரூமுக்கு போயி இடதுகை பக்கம் இருக்குற காலோட நட்ட கழட்டி உட்டுட்டேன். இது தெரியாம என்னமாதிரியே இன்னொருத்தனும் போயி வலதுகை பக்கம் இருக்குற நட்ட கழட்டிவுட்டுருக்கான்.


தமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்...நன்றி




Thursday, September 17, 2009

என் கண்ணீரையும் சேர்த்து...

ஏற்றம் இறக்கம்
இழுக்க முடியா சுமை...
கழுத்தில் வலி, காலில் நடுக்கம்
எல்லாம் பொறுத்து
கடக்க முயலும் நேரத்தில்...

சாட்டை எடுத்து
முதுகில் பாய்த்து
கூட்டல் கழித்தலின் குறிப்புணர்த்தி
அதன்நடுவே
ஊசிமுனைக் குச்சியால் புள்ளியிட்டு...

அப்பப்பா...தாங்கமுடியா துயர்நடுவே
பாரத்தின் எல்லையடைந்து
திரும்பி வருகையில்...
கடன் சொல்லி வாங்கிய
தீவனமும் புண்ணாக்கும்
பாதி பசியணைக்க
...

வண்டியுடன் கட்டிவிட்டு
வஞ்சியுடன் அவனிருக்க...

கால்வயிற்று கஞ்சியுடன்
கடுங்குளிரில் நானிருக்க...
அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது....
என் கண்ணீரையும் சேர்த்து...


(தமிழ்மணம் மற்றும் தமிலிஸில் உங்களது வாக்கினை பதிவிடவும்)

Friday, September 11, 2009

ஈழத்தமிழனுக்காக 20 நொடிகள்....





இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.

இலங்கையில் மழைக்காலம் நெருங்கிவிட்டது. வெட்டவெளியில் மிக மோசமான ஆரோக்கியமற்ற சூழலில் அடைபட்டுள்ள நம் தமிழர்களின் நிலை மழை வெள்ளத்தால் தொற்றுநோய் தொடங்கி பல்வேறு விதமாக ஏற்படக்கூடிய இடர்களால் பாதிக்கப்பட்டு அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று தெரியவருகிறது! அவர்களின் உயிரையும் வாழ்வையும் இலங்கை அரசு ஒரு பொருட்டாக கருதப்போவதில்லை! நம் தமிழ் சகோதரர்கள் இன்னலுற்று சாவதை வேடிக்கை பார்த்து ரசிக்கவே சிங்கள அரசு காத்திருக்கிறது!

இது நம் முறை!

நம் ஈழ சகோதரர்களுக்காகாக குரல் கொடுக்கும் Sri Lanka Peace Campaign என்கிற அமைப்பு, முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள நம் தமிழினம் இயற்கை கொடூரங்களால் இலங்கையில் அழிபடுவதை முன்கூட்டியே தடுப்பது உட்பட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து ஐநா சபைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி எண்ணற்ற ஈமெய்ல்கள் அனுப்புமாறு நம்மை கோருகிறது!

நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்

ஈழமக்களுக்கான நம் கோரிக்கைகள் அந்த இணையப்பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. நாம் அனுப்பும் ஈமெய்ல்கள் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாதியாலும், இயற்கை சீரழிவாலும், ராணுவ துண்புறுத்தல்கள்லாலும் மனம் நொந்தும் மரணத்தை நோக்கிப் பயணப்படும் நம் ஈழத்தமிழினத்தை காப்பாற்ற தயவுசெய்து 20வினாடிகள் செலவழியுங்கள்!

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm


இந்த தகவல் சிந்தனி (தங்கமணிபிரபு) என்ற வலைப்பூவில் இருந்து பெறப்பட்டது. அவருக்கு நன்றி...


*********


Thursday, September 10, 2009

உணர்ந்தேன் உன் அப்பன் புத்தியை...


என் வயிற்றில் உன் கால்தெரிய
தொட்டுப்பார்த்த தருணங்களில்
எட்டி உதைத்தாய் உணர்ந்தேன்
உன் வேகத்தை...

உன் தங்கையை நான் சுமக்க
அவளைக் கொஞ்சுவதாய்
என் வயிற்றில் முத்தமிட்டாய்... உணர்ந்தேன்
உன் பரிதவிப்பை...

நீ நடந்து பழகிய போது
கால் மிதித்த கசடுகளை என்னிடம்
காட்டி துடைக்கச்சொன்னாய்...உணர்ந்தேன்
உன் அறுவருப்பை...

பள்ளி சென்ற நாட்களில்
மதிப்பெண் குறைவாய் வாங்கியதற்காக
என் மார்பினில் சாய்ந்து அழுதாய்...உணர்ந்தேன்
உன் அறியாமையை...

கல்லூரி சென்ற நாட்களில்
அழகாய் ஒருத்தியுடன் ஊர்சுத்த
இவள் தான் என் காதலி என்றாய்...உணர்ந்தேன்
உன் வாலிபத்தை...

காதலியை கைப்பிடித்த நாளில்
என் காலில் விழுந்து ஆசிபெற
உன் கண்ணீரும் சேர்ந்து விழுந்தது...உணர்ந்தேன்
உன் மனதினை...

நின் மனைவிக்கும் எனக்கும் சண்டைவர
இடையிருந்த நீ தடுப்பதாய் நினைத்து
அவளை அடித்து விட்டாய்...உணர்ந்தேன்
உன் கோபத்தை...

எங்களிருவருக்கும் தினமும் போர்க்களமாக
செய்வதறியாது மௌனித்திருந்த நீ
என்னை முதியோர் இல்லம் அனுப்பினாய்...உணர்ந்தேன்
உன் அப்பன் புத்தியை....

********

தமிழ்மணத்திலும், தமிழிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்...நன்றி....




Wednesday, September 9, 2009

ஒருவழிச்சாலை இருவிழிப்பயணம்...


அன்றைய இரவு 9 மணிவாக்கில் எனது அலுவகப்பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப தயாரானேன். அலுவலகம் பூட்டுவதற்கும் மின்சாரம் தடைபடுவதற்கும் சில நொடிகளே முன்னும் பின்னுமாய் அமைந்தது. அமாவாசை இரவென்பதால் நான் பார்த்த உலகமே கருப்பு நிற ஆடையில் சாந்தமான முகத்துடன், அமைதியாய் இருந்தது. எனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

வழுக்கைத்தலையில் முடி முளைத்தார்ப்போல ஆங்காங்கே சில மரங்கள் உள்ள சாலையின் வழியேதான் எனது பயணம். இரவு ஒன்பது மணியை தாண்டிவிட்டபடியால் அந்த சாலையில் என்னைத்தவிர யாரும் இல்லை. ஒன்றிரண்டு பறக்கும் பறவைகள் கூட காக்கைகளைப்போலவே காட்சியளித்தன. ஓரங்களில் இருந்த சில மரங்களும் இருளில் நனையாமல் குடைபிடித்தாற்போல் தெரிந்தது. எங்கும் கும்மிருட்டு. ஒரு சில ஒலியைத்தவிர வேறெந்த ஒளியும் அங்கே இல்லை.

எப்போதும் அந்த சாலைவழியே சென்றுகொண்டிருப்பதால், இருளாக இருந்தாலும் வழியினை அனுமானித்து செல்லக்கூடிய தைரியம் எனக்கு. ஏனென்றால் எங்கெங்கெல்லாம் குழிகள், பள்ளங்கள் இருக்கும் என்பது அத்துப்படி.

உள்ளுர எனக்கு கொஞ்சம் பயம்வேறு. ஏனென்றால் எத்தனையோ முறை அந்த சாலையில் சென்றிருந்தாலும் இதுபோன்றதொரு தருணத்தில், அதுவும் மின்சாரம் இல்லாத நேரத்தில் பயணிப்பது எனக்கு புது அனுபவம். கொஞ்சம் தைரியத்தினை வரவழைத்துக்கொண்டு செல்கையில், அரை கி.மீ அளவு கடந்திருந்தேன். எதிரே அரை கி.மீ. தொலைவில், அதே சாலையில் ஒரு வெள்ளைநிற உருவம் தொங்கி கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. லேசாக அசைவதுபோலவும் தெரிந்தது. அது ஒரு ஆணின் உருவம்தான் என்பது மட்டும் திண்ணமாக தெரிய, என்னுடைய பாட்டி சொன்ன பேய்க்கதையெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. அந்த பயத்திலும் கை, காலெல்லாம் இருக்கிறதா என்று உற்றுப் பார்க்கிறேன். தூரம் அதிகமாய் இருந்தாலும் எல்லாம் சரியாக இருப்பதுபோல்தான் தெரிந்தது. ஆனால் கால் இருப்பதுபோலவும், இல்லாததுபோலவும் தெரிந்தது.

மெல்ல வீசிய தென்றலின் சப்தம் கூட சற்று அதிகமாகவே கேட்க, நான் பார்த்த பேய்ப்படங்களெல்லாம் விழித்திரையில் வெளிச்சமாக தெரிந்தன. உடல் நடுங்குகிறதா அல்லது மிதிவண்டியின் குலுங்கலா என்று அடையாளம் காணமுடியாமல் தொடர்ந்தது என் பயணம். ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அந்த உருவத்தை நோக்கியே நான் சென்றுகொண்டிருந்தேன். ஏன் செல்கிறேன்? ஏன் பயத்தால் நான் திரும்பிச்செல்லவில்லை? என்று என்மனதில் எழுந்த கேள்விகளுக்கு என்னிடமே பதில் இல்லை, ஆனாலும் செல்கிறேன். பனியின் சாரம் முகத்தின் வழியே வியர்வையுடன் கலந்து வெளிப்பட அது அப்பனியின் தாக்கமா அல்லது பயத்தின் ஆக்கமா என்பதை அறிந்துகொள்ள அப்போது தோன்றவில்லை.

இப்படியே அந்த உருவத்தை நெருங்க நெருங்க... அதன் அளவும் பெரிதாகிக்கொண்டே போனது. என்னுள் இன்னும் கொஞ்சம் பயம் வரிந்து கட்டிக்கொண்டு வா வா என்றது. நாம் வந்த வழியே திரும்பிவிடலாமா? என்ற எண்ணம் இருந்தாலும், அதை செயல்படுத்த முடியவில்லை. ஆனாலும் அது அசைவின்றி என்னையே பார்ப்பதுபோல் தோன்றியது. கொஞ்சம் வேகம் குறைந்து 200 அடி தூரத்தில் நின்றேன்.

மற்ற எல்லா இடங்களையும் இருள் பிடித்துக்கொண்டிருக்க அந்த உருவம் மட்டுமே எனது கண்ணிற்கு பளிச்சென்று தெரிகிறது. அதன் முகத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. அது நெருப்பினில் நீர்விட்டால் வரும் நிறத்தினை ஒத்தே இருந்தது. ஆனால் தலையில் முடி இல்லை. ஏனென்றால் அந்த பகுதி கொஞ்சம் பளபளப்பாய் தெரிந்தது. மிதிவண்டியை விட்டு இறங்கி தள்ளிக்கொண்டு அதன் அருகினில் நெருங்குகிறேன். இப்போது 100 அடி...50 அடி...20 அடி... எனது செல்லிடப்பேசிக்கு உயிர் கொடுத்து அந்த வெளிச்சத்தில் அந்த உருவத்தினை உற்றுப் பார்க்கிறேன்.....ஒரு 20 அடி உயரத்தில் நமது மின்துறை அமைச்சர் சிரித்துக்கொண்டு நிற்கிறார். இவர் ஏன் இங்கு வந்தார் என்று பார்த்தால்... அந்த விளம்பரத்தட்டியின் அடிப்பகுதியில், மறுநாள் இலவச தொலைக்காட்சிப்பெட்டி வழங்க எங்கள் கிராமத்திற்கு அவர் வருகைத்தரப் போவதாக இருந்தது.

ம்கும்....இது ஒன்று தான் குறை என்று நினைத்தவாரே வியர்வைகளை துடைத்துக்கொண்டு மீண்டும் அதே இருட்டில் பயணமானேன்...

(இது ஒரு கற்பனைக் கதையே...இதனால் யார்மனதேனும் புண்படுமானால் மன்னிக்கவும்)


தமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் தங்களது வாக்கினையும் பதிவு செய்யவும் நன்றி...



********

Monday, September 7, 2009

நாடோடிகள்...





எனது கல்லூரி நாட்களில், எனது ஊரினைச்சார்ந்த ஒருவன் என்னுடன் சக மாணவனாக வந்து சேர்ந்தான். எனக்கும் நண்பனானான். அவனது ஊர் எங்கள் வீட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில்தான் இருந்தது. அதனால் தினமும் என் வீட்டிற்கு வருவான். இப்படி வந்துபோய்க்கொண்டிருக்கையில் எனது பால்ய நண்பனொருவனுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தேன்.

இருவரும் ஒரு ஜாதிக்காரர்களாக இருக்கவே என்னைவிட இருவரும் நெருங்கிய நண்பர்களாகிப்போனார்கள். அதனால் பின்னாளில் (2, 3 மாதத்திற்கு பிறகு) அவர்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும் மாலை நேரங்களில் சொந்தமாக வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார்கள். நானும் அவ்வப்போது அவர்களுடன் சென்று அடுத்தடுத்த தெருவில் இருக்கும் வீடுகளுக்கு வசூலுக்கு சென்றுகொண்டிருந்தேன்.

இப்படியாக நாட்கள் கழிய கல்லூரி நண்பன் வட்டிக்கு பணம் கொடுத்த ஒரு வீட்டிலுள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்திகொண்டான். அந்த பெண் அப்போது 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.


அக்டோபரில் உருவான அவர்களது காதல் ஜனவரிமாதம் வரையே தொடர்ந்தது. இந்த விஷயம் பெற்றவர்களுக்கு தெரிந்துபோக, அவர்கள் அப்பெண்ணிற்கு வரன் தேட ஆரம்பித்தார்கள். அந்த பெண் பள்ளிக்கு சென்றுகொண்டுதான் இருந்தாள். பள்ளிக்கு செல்லும் நேரங்களில் என் நண்பனும் அவளும் பேசிக்கொண்டார்கள். அப்போது அந்த பெண் என் நண்பனிடம் இந்த விஷயங்களைக் கூற, அவன் எடுத்த முடிவு இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போவது.

இதை எங்களிருவரிடமும் கூற நாங்களும் ஒத்துக்கொண்டோம். சரியாக ஜனவரிமாத இறுதி என்று நினைக்கிறேன். (அவர்களிருவரும் காதலிக்க ஆரம்பித்து மூன்று மாதங்களே ஆன நிலை) அவர்கள் ஓடிப்போவதற்கான ஏற்பாடுகளை எனது பால்ய நண்பன் செய்துகொண்டிருந்தான். அவனுக்கு தெரிந்த கேரள நண்பர்களிடம் சொல்லி, இவர்களை அங்கே அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான்.

சரியாக அன்றைய இரவு, அந்தப்பெண் அவளது மூட்டைமுடிச்சிகளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். நான்தான் அவளை சைக்கிளில் அழைத்து சென்று 5 கி.மீ. தொலைவில் உள்ள ஊரின் பஸ் ஸ்டான்டில் விட்டேன். அவர்கள் இருவரும் எனக்கு முன்னமே காத்திருந்தார்கள். ஒருவழியாக எங்களிடம் இருந்த கொஞ்ச பணத்தையும் கொடுத்து இருவரையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, நாங்களிருவரும் வீட்டிற்கு வந்தோம். மணி சரியாக 10.00 ஆனது.

அன்றைக்கு இரவே 11 மணியளவில், பெண்ணின் தகப்பன் எனது பால்ய நண்பன் வீட்டிற்கு வந்துவிட்டார். பிறகு என்னையும் அழைக்க எனது வீட்டிற்கும் ஆள் வந்துவிட்டது. நானும் சென்றேன். நண்பன் வீட்டின் வாசலில் பெண் வீட்டார் சார்பாக அவரது தெரு மக்களே கூடியிருந்தனர். அப்போதுதான் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் பெண்ணின் தந்தை வயிற்றில் அடித்துக்கொண்ட அழுதது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

ஒரு பெண்ணை பெற்று, வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்கி அவளுக்குரிய தேவைகளை பிச்சையெடுத்தாவது பூர்த்தி செய்து, அவள் வளர்ந்து ஆளாக அடிவயிற்றில் நெருப்பினை கட்டிக்கொண்டதுபோல பெற்றோர்கள் அடையும் வேதனை அவர்களுக்குதான் தெரியும்.

அப்போதுதான் உணர்ந்தேன் நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று. எங்களிருவரிடமும் அவர்கள் எப்படி எப்படியோ கேட்டுப்பார்தார்கள். நாங்கள் உண்மையை சொல்லவேயில்லை. பிறகு போலிஸ் கேஸாகி அடிவாங்காமல் மட்டும் தப்பித்து வந்துவிட்டோம்.

இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு வாரம் வரை எனது குடும்பமும், நண்பனது குடும்பமும் படாதபாடுபட்டோம். எங்களது குடும்பங்களே இந்த பாடு பட்டார்கள் என்றால், ஓடிப்போன இருவரின் குடும்பங்களும் எவ்வளவு வேதனையில் இருந்திருப்பார்கள்.

பிறகு பையனின் தகப்பனார் அவர்களின் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை அழைத்துவந்து சமாதானம் பேசி முடித்தார்கள். பிறகு அந்த நண்பன் இருக்கும் இடத்தை நாங்கள் கூற அந்த இடத்திற்கு அவர்கள் செல்லவில்லை என்பது அப்போதுதான் தெரியும். பிறகு எங்கே சென்றார்கள் என்ற கேள்விக்கு பதில் ஓடிப்போன பையனின் அண்ணனிடம் இருந்து வந்தது. அவர்களிருவரும் அவனது அண்ணனிடமே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

பிறகு எல்லோரும் சமாதானமாகி எல்லாம் சுபம்.

நானும் எனது பால்ய நண்பனும் கொஞ்ச நாள் எங்கள் ஊரில், ஷாஜகான் என்றே அழைக்கப்பட்டோம்.(ஏனென்றால் ஷாஜகான் படம் அப்போதுதான் வந்தது)

சரியாக ஆறு வருடங்கள் ஆகிறது. இன்றும் எனது மனதில், நான் வாழ்வில் செய்த பெரிய தவறாக கருதுவது அவர்களிருவரையும் பஸ் ஏற்றிவிட்டதுதான். என்னதான் இன்று மாமனார் மருமகன் என்று இருவரும் சிரித்துக்கொண்டிருந்தாலும், அன்றைய நாளில் பெண்ணைப்பெற்றவனாய் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுத சம்பவங்கள், அந்த நேரத்தில் எங்கள் மீது அவர் விட்ட சாபங்கள் இவையாவுமே வீணாகவில்லை. இன்றளவும் ஏதோ ஒரு விஷயங்களில் நாங்களிருவருமே அதற்கான தண்டனைகளை அனுபவித் துக்கொண்டிருக்கிறோம்.

பின்னாளில் எனக்கு கிடைத்த தண்டனை எனது காதலியை நான் இழக்க நேரிட்டது. அவள், அவள் கணவனுடன் வாழ்கிறாள், நான் அவள் கனவுடன் வாழ்கிறேன்.

இந்த 27ம் அகவையில் நான் கடந்து வந்த பாதையினை திரும்பிப்பார்க்கிறேன், என் பாதையிலும் சில எறும்புகள் இறந்துகிடக்கின்றன...



தமிழ்மணத்திலும், தமிலிஸ்சிலும் தங்களது வாக்கினை பதிவிடவும்... நன்றி...
**********

Friday, September 4, 2009

பெண்ணவள்... பெண்ணாக...

(இந்த படத்தை எடுத்தவர் பெயர் கருவாயன் என்ற சுரேஷ், அவருக்கு நன்றி)


பத்துமாதம் சுமந்தவள்
பெற்றெடுத்த பிள்ளையது
பெண்ணாய் போக...

வருந்திய தகப்பன்
மூன்றுவேளை சோற்றில்
ஒரு முழுவேளை குறைத்து...

அவள் வளர இவன் குறுக...
அழகுற நடந்தவள்...
3ம் அகவைபெற...

கொஞ்சம் சேர்ந்த பணம்
பள்ளிதனில் கொள்ளைபோக...
ஐந்து வருடமும் அவன்பட்டபாடு...

சாரெடுத்த சக்கைதனை
மேலும் பிழிய...
அதிலொழுகும் உதிரம் போல் ஆனது...

பெண்ணவள்... பெண்ணாக...
அவன் கொண்ட இன்பத்தில்...
இமைவடிந்த நீரது இம்சையென்றே காட்டியது.

அஞ்சு பத்து கடன் வாங்கி
அவளை மேல்நிலையில் சேர்த்துவிட...
பள்ளி சென்றவள்...

பிஞ்சொன்று கனிய
வஞ்சமது கொண்டு
கொத்தித் திண்ண காத்திருந்த கழுகினைப்போல்...

காமம் கொண்டு
கண்மறைக்க ஆசிரியன்
எனும் அரக்கனவன்.......................

நாசம்பட்ட வாழ்வுதனை...
பெற்றவனிடம் சொல்ல நாகூச...
அவள் கொண்ட துயரமது குருதியாய்க் குறிப்புணர்த்த...

பொங்கியெழுந்தவன்...எடுத்த கத்தி...
ஆற்றினில் நீராடிய ஆசிரியனவனின்...
................அறுத்தெறிந்தே அடங்கியது...

ஆறது சிவக்க...
அங்கே அறமது சிறக்க...
ஆறாத மனதுடன் வீடு வந்தான்...


தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் தங்களது வாக்கினை பதிவிடவும்....நன்றி...



***********

Wednesday, September 2, 2009

மறந்தால்தானே...நினைக்கனும் மாமா...


இருள்கவ்வ எழும்பும் விளக்குகள், சில தூர இருளினை மறைத்து, உருண்டோடி... பத்துமணி ஆகும் தருவாயில்... இரைவுண்டு நான் உறங்கச்செல்லும் வேளைதனில் தானும் உறங்கும்...

கண்ணயரும் நேரத்தில் ஏதாவதொரு மெல்லிய இதமான இசையைப்பருக எண்ணி... செல்லிடப்பேசியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு பாடலை ஒலிக்கவிட்டேன்...மெல்ல இளகிய அந்தப்பாடல்...

குடகுமலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா என் பைங்கிளி...

இந்த பாடலின் வரிகளில் உள்ளார்ந்து மூழ்கி உறைந்து உறங்கிப்போனேன்...சில ஞாபகங்கள் மட்டும் இடையிடையே உறவாடின...

நானும் அவளும் சண்டையிட்டு பிரிந்துபோன நிலையில், நான் ஏதோ ஒன்று கேட்க, அவள் தனது வலிகளை ஒரு கடிதத்தில் வடித்திருந்தாள். அதில் அவள், இந்த பாடலின் ஒரு வரியான மறந்தால்தானே நினைக்கனும் மாமா...நினைவே நீதானே...நீதானே... என்று குறிப்பிட...

அதைப் படித்தமாத்திரத்தில் கண்ணில் ஒழுகிய நீரின் ஒருபகுதி கன்னம்தொட, அறியாதவனாய் உருகிப்போனேன். பின் அவள் மீது எனக்கிருந்த காதல், இன்னும் அதிகமானது. வாசல் நீரிட்டு, வாயிற்படிதனில், அவள் இடும் கோலத்தில் சிக்குண்ட புள்ளியினைப்போல் சிக்கிக்கொண்டேன்.

அவளின் பிறந்தநாளான அன்று வீட்டிற்கு சென்று பார்த்தேன். ஓர் புதிய பட்டுச்சேலையில் நின்றிருந்தாள். அவள் கட்டிய சேலையில் மடித்து சொருகிய தலைப்பினில் மாட்டிக்கொண்ட எறும்புக்கு எந்த திசை தெரியும்? என் நிலையும் அதேதான்... பின் சுயநினைவு கொண்டவனாய் சுதாரித்து அவளைப்பார்க்க...அவள் என்னைப்பார்க்க...மெல்லிய புன்னகையில் வழியும் எச்சிலின் சுவையும் சுகமாய்போனது...

பிரிதொருநாளில்...


எங்களிருவரின் கரம்சேர...
உடல் அணைய...
கடற்கரை மணலில்
கால்பதித்த வேளைதனில்...
தொட்டுச்சென்ற அலைகளெல்லாம்,
தன்னிலைமறந்து தானாட...
அதனுடன் சேர்ந்து
ஆங்கே மீன்களுமாட...
இனித்துப்போனது கடல்...

பின்னே அலைக்கு பயந்தவளாய்
அவள் ஓட..அவள் பின்னே நானுமோட...
துரத்தி வந்த அலைகள்

சுனாமி என்ற பெயரினைப் பெற்றது...


தொடர்ந்து வந்த அலைகள்
எங்களிருவரையும் அணைத்துக்கொள்ள
அதனுள் அடங்கிப்போன நாங்களில்...

அவள் மட்டும் அடங்கிவிட்டாள்...

இறந்துபோன அவளை என் நெஞ்சில் அணைத்துகொண்டு கதற....


நான் அழுத கண்ணீரின் மிகையால்

காவிரி கடைமடை வரை பாய...
ஓருடல் கலந்த நீரினால்
மீண்டும்
இயல்புநிலையுடன்
கரிக்கத் தொடங்கியது கடல்...

பிறகு, கானக்கருங்குயிலே....காதல் ஒர் பாவமடி....காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி...என்ற பாடல் ஒலிக்க எழுந்துபார்க்கிறேன்... செல்லிடப்பேசியில் நான் வைத்த எழுப்புமணி...நேரம் 7am என்று காட்ட பாடலைமட்டும் அணைத்துவிட்டு படுத்துவிட்டேன்...


தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் தங்களது வாக்கினை பதிவிடவும்....நன்றி...



**********

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO