க.பாலாசி

Wednesday, May 26, 2010

யாதுமற்ற....

மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட அம்மாவின் முந்தாணி என் தலையிலும் அப்பாவின் துண்டென் மாரிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் அம்மாவிற்கும் அப்பாவிற்குமான தூக்கம். அப்பொழுதெல்லாம் அரைநாண்கொடி இடுப்பில் தங்கிக்கொள்ள பழகிவிட்டிருந்தது, அதன் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்க பள்ளிக்கூடத்து காக்கி அரைக்கால் சட்டையும்தான். ஆயினும் அவர்களின் கூட்டுக்குள் நான் குளிர்காய்ந்த இரவுகள் பெரிதாய் மதிக்கப்படாமலே இருந்திருக்கிறது. இருந்திருக்கவேண்டும்... அறியாப்பருவமாதலின்....

[ஒருவேளை எங்கப்பாவிற்கு எழுதத்தெரிந்திருந்தால் இப்படித்தான் ஆரம்பித்திருப்பார்...


மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட என்மகனின் தலை என்வலக்கை முட்டியிலும், இடக்கால் அவனம்மாவின் இடுப்பிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் என் மனைவிக்கான தூக்கம்..........]


கூரைக்குள் பொழியும் மழைநீர்க்குட்டுகளை அலுமினிய ஏனங்கள் அசையாமல் நின்று வாங்கிக்கொள்வதைப்போல மழையில் விளையும் என் சில்வண்டுத்தனங்களை அவர்கள் ரசித்திருக்கலாம். ‘அப்பாடி இப்பயாச்சும் மானம் நல்லா பேயுதே’ என்று மச்சுவீட்டு மாமனும், ‘இந்தவாட்டியாவது மழைலேர்ந்து என்னோட பயிர காப்பாத்தும்மா தாயே’ என்று சின்னவண்டி முனுசாமியும், ‘அய்யோ அடிக்கிற காத்துல வாசல்ல உள்ள முருங்கமரம் வீட்ல சாஞ்சிடப்போவுது’ என்று உடையார் வீட்டு ஆச்சியும் புலம்பிக்கொண்டிருப்பது கரைந்து என்வீட்டு வாசல்வரையும் வந்திருக்கும். வழக்கம்போல அம்மா இருப்புச்சட்டியில் பச்சரிசி வறுக்க தாழ்வாரத்தில் கட்டிவைத்த சுப்பிகளை எடுத்துக்கொண்டிருப்பார். ‘பஞ்சாங்கத்துலதான் மழைன்னு போட்டிருக்கானே... எப்டிப்பெய்யாம போவும்’ என்று 222
ம் நம்பர் பீடிப்புகையில் வட்டம் விடாமல் ஊதிக்கொண்டே இயல்பாகச் சொல்லுவார் அப்பா.

மகனாய் நான் அம்மாவின் அருகில், அடுக்கலையில் வறுத்த பொரியரிசியை கொரித்துக்கொண்டிருப்பேன். வேறெந்த இயல்பையும் மீறி பள்ளிக்கூட குறிப்பேட்டில் கத்திக்கப்பல் செய்து தாழ்வாரத்தில் ஒழுகியோடும் மழைநீர்களுக்கு தாரைவார்த்ததாக என் வரலாறு பதியப்படவில்லை. மிதிவண்டிக்கான கனவு மிகைந்திருந்தமையால் கப்பல்விடும் கனவு அதில் மிதிபட்டிருக்கலாம். வாசலொட்டி குதூகலமாய் நீச்சல்பயிலும் மண்புழுக்களும், மிகைநீர் பெற்றதால் சுமக்கமுடியாமல் மிகமெதுவாய் ஊர்ந்திடும் நத்தைகளும், மழையில் பொந்துகளையிழந்து அலைந்து திரியும் நெருப்பெறும்பு கூட்டங்களும், கூட்டுக்குள் விழும் நீர்ச்சிதறல்களுக்கு மெளிதாய் கீய்ச்சலிடும் சிட்டுக்குருவிகளின் கூச்சல்களும், அடுத்த வீட்டு லலி அக்காவின் ஆட்டுக்குட்டிகள் தூற்றிவிட்டுப்போன நனைந்த புலுக்கைகள் வாசம் என அந்நேரத்து அவசரத்துக்கான குளிர்ச்சிகள் ஏராளம். மழைக்கு மகுடியூதும் தவளைகூட்டங்களின் இரைச்சல்கள் சிலருக்கு எரிச்சலாகவோ அல்லது வரமாகவோ இருக்கக்கூடும். இன்னும் எத்தனையோ...


பணியிடம்பொருட்டு யாதுமற்ற தனியறையில் பாதுகாப்பாக நாற்காலி போட்டமர்ந்து எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடையில் முறுக்கு ஒரு பொட்டலம், உருளைக்கிழங்கு வறுவல் ஒரு பொட்டலம் வாங்கி சுவைத்துக்கொண்டே மழையை ரசிக்க சன்னலைத்திறந்தால் மேற்சொன்னவைகளே சாரல்களாய்....





Friday, May 21, 2010

வெட்டிவேரு வாசம்....


.......வெட்டிவேரு வாசம்... இந்த வெடலப்புள்ள நேசம்.... பூவுக்கு வாசமுண்டு.... பூமிக்கும் வாசம் உண்டு...... வேருக்கு வாசம் வந்தது ஓஓ.. மானே....

“அடியே........ ஏங்கறன்ங் காலங்காத்தால பாட்டப்போட்டு உசுரெடுக்குறன்ங்..... ”

“ந்ந்ந்த ஏந்திரிய்யா.... மணி ஆறாச்சு...... ”

“ஏ.... என்னைக்குல்லாம இன்னைக்கு என்னாங்கறன்ங்.... ”

“யோ... இன்னைக்கு நம்ம கண்ணால நாளுயா.... ”

“அட....ரெண்டு பெத்தப்பறமுமா நாபவம் வச்சிருக்குறன்ங்..... ”

“ம்ம்க்க்கும்.... எவத்தாளத்துக்கு ஒண்ணு கொறச்சல்ல... ஏந்திரி மொதல்ல.. கொள்ளடுப்புல வெந்நீரு போட்ருக்கன்ங்... தோப்புக்கு போய்ட்டு வந்து குளி.. நாத்தத்தோடவ படுத்துகிட்டு.....”

“ஏங்... காலைல்ல குளிக்க சொல்றங்கறன்ங்... ஏன்ங் எங்கப்போணும்... ”

“வாய்யா.... திருக்கடவூருக்கு போயிட்டு வந்திடுவோம்..... ”

“அடியே...கோயிலுக்குபோறவ கேக்குற பாட்டாடி இது?? அதுவுல்லாம அறுவதாங் கண்ணாலத்துக்கதாங்கறன்ங் அங்கப்போவணும்...”

“ஆமா... இப்ப போனா அந்த சாமீ வேண்டான்னுடுமாக்கும்... ”

“சொல்லிக்கேக்குறவளா நீயி.... இரு..... ”

“யோ... அப்டியே... மஞ்சப்பொட்டியில வேட்டி சட்ட சலவப்போட்டு வச்சிருக்கன்ங்... கட்டிக்க...”

“அட... இதுவேறயா... நமக்கு ஏங்கறன்ங் இந்த சவடாலு.... ”

“....வாயடைக்காத நீ..... யோவ்... நல்லா யோசனப்பண்ணிப்பாரு.... என்னைக்காவது சாக்கட நாத்தமும் இந்த ஊர்க்காரப்பயலுவோ பீநாத்தமுல்லாம உன்ன பாக்க முடியுதா?”

“ம்ம்ங்ங்ங்.... கழுதைக்கு வாக்கப்பட்டா ஒதப்பட்டுதான ஆவ்ணும். புதுசா என்ன ஓசன....சரி... வர்ரப்ப மடப்பொறத்துல பெரியாச்சிய ஒரு எட்டு பாத்துட்டு, பசங்களையும் அனுப்பி ஒருவாரமாச்சி... அதுங்களையும் பாத்துட்டு வந்திடுவம்...கண்ணுலையே நிக்குதுங்க...”

“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்... மொதல்ல கோயிலுக்கு போயிட்டு நேரா வூட்டுக்குதான் வரணும். மதியானம் சமைச்சி சாப்புட்டு மொத ஆட்டம் சிம்லஸ்க்கு படம் பாக்க போவணும்... ”

“அடி... எழவெடுத்தவள... பெரிசா கனவோடத்தான் திரியிறயா நீ... வௌக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் தேவையா....... ம்ம்ம்ம்.........”

•••••••••••••••••••

“ஏ..சின்னாளு..?? .சின்னாளு....?? ”

“ஏக்கா... காலைல ஜோடிச்சிட்டு களம்பிட்ட...??”

“கோயிலுக்கு போயிட்டு... 12 மணிப்போல வந்திடுவன்ங்.. மொட்ட தெருவுக்கு மீனு கொண்டாரும்.... பாற கருவாடும், சதநண்டும் கொண்டார சொல்லிக்கன்ங்.. இந்தா 50 ரூவா இருக்கு... வாங்கி வைய்யி வந்திடுறேன்ங்..”

“எக்கா... கோயிலுக்கு போறங்கறன்.. கருவாடு, நண்டு வாங்கச்சொல்ற.. ”

“அதான் போயிட்டு வந்திடுவன்ல்ல... பிறவென்ன.. வாங்கி வைய்யிந்த...அப்டியே கொள்ளைக்குப்போயீ கொழம்புல போட ரெண்டு வாழக்காவும் பறிச்சி வைய்யி... ”

“ம்ம்ம்... ஒரு மாக்கமாத்த இருக்க... போயிட்டு வா....”

•••••••••••••••••

“நல்லா வேண்டிக்குய்யா..... மொதல்ல இந்த நாத்தம்புடிச்ச வேலய வுட்டுட்டு மேல போவணும்.. ”

“அடியே நானுங் பாக்குறன்ங்... .நாத்தம் நாத்தமுன்னே பேசிட்டு திரியிறன்ங்... போட்டன்னு வைய்யி...”

“நாத்தமுல்லாம பின்ன என்ன... சந்தனத்துலயா டெயிலி முழுவி கெடக்குற நீ.. ”

“ஆமா.. அய்யன்ங் போனப்பறம்... கருணப்பாத்து எனக்கு இந்த வேலய கொடுத்தானுவோ.. இல்லன்னா தெருத்தெருவா குப்பய கூட்டிட்டு எவன்டா எட்டனா ஒர்ரூவா குடுப்பான்னு கையேந்திகிட்டுதான் நிக்கணும் தெரிஞ்சிக்க.”

“இப்ப மட்டும் என்னவான்ங்... எவன் வூட்ல பீத்தக்கொழா அடச்சிக்கெடந்தாலும் உள்ள யெறங்கி நோண்டி வுட்டுட்டு அப்டித்தான செய்யிற... ஒங் மேல வர்ர நாத்தம் பத்தாதுன்னு சாராயமும், பீடியும் வேற...”

“ஏன்டி தெரியாமத்தாங் கேக்குறன்ங் ஒப்பன் உன்ன இந்த நாத்தத்தோடதானடி பெத்தான்ங்...”

“சரி... கோயில்ல நின்னு சத்தம்போடாத... போயிட்டு வந்து வச்சிக்கலாம்ங்....”

••••••••••••••••••••••

“ஏய்.. படமும் பாத்தாச்சு.. சந்தோஷந்தான...?? லைட்ட போடு மொதல்ல.. இருட்டாருக்கு...

“இந்தாய்யா அப்டியே போயி குளிச்சிட்டு வா...”

“ம்ம்ம்........ம்ம்ம்.......என்னா வேக்காலம்....மானம் வேற மூடிக்கெடக்கு.. சரி அந்த துண்ட எடு... ”

••••••••••••••••••••••

“இந்தா இத போட்டுக்க.. ”

“என்னாடியிது... சவ்வாது பவுடறாட்டம்.... ”

“அதான்..”

“இந்நேரத்துல என்னாத்துக்கு?? ”

“யோ... நல்லா நெனச்சிப்பாரு... எப்பவாவது உம்பக்கத்துல மூக்க மூடாம படுக்க முடியுதா? நானும் பொம்பளதான... ஊருல உள்ள மனுஷப்பயலுவோல்லாம் என்னமா சம்முன்னு இருக்கானுங்க. உன்னயும் அந்த மாதிரி பாக்கணும்னு எனக்கும் ஆச இருக்கும்ல.. நீ வந்தப்பறமும் குளிக்கவுமாட்ட.. சாராயப்பாக்கட்ட ஒடச்சி ஊத்திகிட்டு...கொஞ்சமாச்சும் நெனச்ச்....”

“ஏ... வாயமூடு.. எனக்கும் ஆசபாசமுல்லாமயா கெடக்குறன்ங்.... இப்ப என்னங்கற.... ”

“இந்தா இத போட்டுக்க... உம்மாருல கொஞ்சநேரமாச்சும் இந்த வாசத்தோட சாஞ்சிகெடக்கணும்யா...எனக்காவ....”

“ச்ச்சீ... ஏன்டி கண்ணக்கசக்குறன்ங்... ஒனக்காவ்வும், புள்ளைங்களுக்காவுந்தானடி இந்த நாத்தப்பொழப்பு...என்ன பண்ணச்சொல்ற...சரி...வா........”





•••••••••••



Friday, May 14, 2010

இலைமறை கனி...


அம்மன் படத்துடன்
பிச்சைக்கேட்டு வரும் ஒருத்திக்கு
குடிசைக்குள்ளிருந்தவள்
‘இல்லை’யென்ற பதிலையே
வைத்திருந்திருந்தாள்...

பிறகு
மாதா படத்துடன் வந்தாள்...
அதே பதில்தான்....

யாசித்து வந்தவளும்
தடவைக்குத்தடவை வெவ்வேறான
காரணங்களை அவிழ்த்துவிட்டாள்...

ஒருமுறை அப்பா, அம்மா
அடுத்து ஊனமுற்ற தம்பி
அடுத்தடுத்து வேறொன்று....

இந்தமுறை ‘என் கல்யாணத்திற்கு’ என்றவளுக்கு...
அதேபதிலை சொல்லமுடியவில்லை...

உள்ளே சென்று
சில்லரையுடன் வந்தாள்...
தன் கருகமணியை மறைத்துக்கொண்டு...


.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO