க.பாலாசி

Monday, October 25, 2010

ஒரு கூடும் சில குளவிகளும்

நான் வந்த பேருந்தில் ஏறியவர்கள் கணவன் மனைவியாக இருக்கவேண்டும். தொடை உயரம் ஒரு மகன், இன்னொரு குழந்தை அப்பன் தோளில் தூங்கியது. அவர் கையில் பால் பாட்டிலும் தயாராகவே இருந்தது. பேருந்தினுள் நான்குபேர் இடைவெளியில் இருவரும் நின்றுகொண்டார்கள். மூக்கொழுகும் பெரிய மகன் அவளின் காலை கட்டிக்கொண்டான். ஒரு கையால் மேல்கம்பியை பிடித்துக்கொண்டாலும், மறுகையில் துணியடைத்த குச்சிப்பையை வைத்துக்கொண்டாள். ஒருவரின் மூச்சுகாற்று அடுத்தவர் முதுகில் சூட்டைப்பரப்புமளவு கூட்டம். இருவர் இருக்கையில் அமர்ந்திருந்த குண்டு சிறுக்கிகளுக்கு மூன்றுபேர் இருக்கையே தாங்காது. அவர்களின் தள்ளுமுள்ளலும் இவளுக்குத்தான் இடைஞ்சல். அவ்வப்போது விலகும் மாராப்பையும், இடுப்புச்சேலையையும் சரிசெய்துகொண்டாள். அருகருகே நிற்கும் ஆண்களின் இடிசலுக்கும், நடத்துநர் நடையழகுக்கும் ஓர் உடலங்கத்தை அவள் ஒதுக்கிவைத்தே ஆகவேண்டும். இந்த மேடுபள்ள சாலையில் பயணிப்பதில் ஆண்களுக்கே அடிவயிறு கலக்கும் அபாயம் உண்டு. ஐந்தாவது முறையாக பெரிய மகனின் ஒழுகும் மூக்கை முந்தானையால் துடைத்துவிட்டாள். ஒரு வேகத்தடையை கடந்தது பேருந்து. அப்பனிடம் தூங்கிய குழந்தை விழித்துக்கொண்டது. இவளைப்பார்த்து அழத்தொடங்கியது. அவர் பாலைக்கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார், குடிக்கவில்லை. அனைவரும் கவனிக்க தொடங்கினர், சிலருக்கு எரிச்சலும்கூட. அப்பன் கையில் திமிரிய அந்தப்பொடிசை அவளே வாங்கிக்கொண்டாள். ‘ச்ச்சுச்சூ...ச்ச்சுச்சூ...ஏஞ்செல்லம் அழுவுறீங்க.....’ என்றபடியே இடுப்பில் அமர்த்தி முத்தமிட்டாள், அவ்வளவுதான்....அதுவும் சிரித்தது, அவளும் சிரித்தாள்..... நான் இறங்கவேண்டிய நிறுத்தம் கடந்துவிட்டது.

•••••••

அக்கா மகள் தன் குறிப்பேட்டைக்காட்டி ’மாய்மா...இத பாறேன்’ என்றாள். ‘அ’னா‘வை அழகாக எழுதியிருந்தாள்.

‘ரொம்ப நல்லாயிருக்கே நீங்களா எழுதினீங்க?’என்றேன்.

‘ம்ம்ம்’ என்றாள்.

‘எந்த மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க?’

‘ஹர்ஸா மிஸ்’

‘ஓ...எங்க மறுபடி எப்டின்னு போட்டுக்காட்டுங்க பார்ப்போம்’

‘பர்ஸ்ட் மேலவொரு ஸ்மால் சர்க்கிள் இப்டி போட்டுட்டியா, அதுக்கு கீழ ஒரு பெரிய எலிப்ஸ், அப்பறம் ரெண்டையும் ஜாயிண்ட் பண்ணி ஒரு கர்வ், நெக்ஸ்ட் ஒரு ஹரிசான்டல் லைன், வெர்டிகிள் லைன். அவ்ளோத்தான்.......’

அக்கா கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள், மாமா பூரித்திருந்தார். ஒன்றாம் வகுப்பு சேரும்போது தமிழ்பண்டிட் பொன்னுசாமி அய்யா என் விரலைப்பிடித்து சிலேட்டில் ‘அ’ எழுதிக்காட்டியதை நினைத்துக்கொண்டிருந்தேன். விட்டத்து மூலையில் ஒட்டடைக்கூட்டினில் சிக்கிய பொன்வண்டை பார்க்கப் பாவமாயிருந்தது.

•••••••••

இப்போதெல்லாம் அவளை நினைத்துப்பார்ப்பதை குறைத்துவிட்டேன். ஓர் அகண்டவாய் ஏனமாக இன்றைய நிலை மாறிவிட்டதாலோ என்னமோ கொண்டதெல்லாம் கொண்டுவிடுகிறது. அவளென்னுள் படிந்த வேகம் ஒரு குறுகிய காலம். ஒரு ஜென்ம பகையும், ஏழு ஜென்ம நினைவுகளையும் மனதிலிருந்து சுரண்டமுடியாமல் செய்துவிட்டாள். ஒரு பெட்டிக்குள் அடைபட்டுள்ள துணிகளாய் வர்ணவர்ணமாய் அவளின் காதல் அடைந்துகிடக்கிறது. அவ்வப்போதைய கனவுகளும், சில பெருவெளி தனிமையும் அணிந்துகொள்வதோடு சரி. முக்கி முனகி நான்கு வருடங்களை கடந்துவிட்டேன். அண்ட சராசரங்களனைத்தும் ஒரே ஜீவனுக்குள் அடக்கிவைத்திருந்திருப்பதாய் பாரமாகவே கழிகிறது பொழுதுகள். ஒரு கழுமரமும் அதிலமர்ந்த காகமுமாய்த்தான் மடிந்து புலரும் பொழுதுகள் கண்ணாம்பூச்சிக்காட்டி ஓடி ஓடி மறைகிறது. எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டி மட்கசெய்துவிடத்தான் பார்க்கிறேன். போகும் வழியெங்கும் சேகரிப்பது குப்பைகளாகவே இருப்பின் எதை எங்கே கொட்ட.

•••••••••

நேற்றைய இரவுப்பொழுதை பேருந்துப்பயணம் மேயந்துகொண்டது. காலையிலதுமிழ்ந்த வெளிச்ச உலகில் மாற்றமேதுமில்லை. சென்றவருடத்தைவிட இப்போது 2 கிலோ எடை அதிகரித்திருக்கிறேன். தா(டி)டை முடிகள் சற்றே கூர்மையடைந்து காணப்படுகிறது. மீசை(?!!!)யில் கருமை அடர்ந்துள்ளது. வலது காதுமடல் மேல் ஒரு வெள்ளை மடையானின் இறகு நீட்சி. சென்றவருடம் இது இல்லை. ஒரு இருட்டறையும், அதிலமர்ந்து வாசிக்கும் தொடர்கதையுமாக இவ்வாழ்க்கை புரண்டுகொண்டேயிருக்கிறது எதுவும் புலப்படாமல் அல்லது படுத்தாமல். வெறுமனே புரட்ட 27 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. வீடு கட்டும் மணலில் காற்கூடு கட்டிக் கழித்த வயதுதான் இப்போதைய கனவுகளை சொரிந்து சுகப்படுத்துகிறது. வேறென்ன சொல்ல. இந்த நாளையினிமையாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



.

Thursday, October 14, 2010

புராதானங்கள் அபாய நிலையில்!!!

புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை.


ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை


அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி, (இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே


மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கீழ்கண்ட மின் அஞ்சலை அனுப்புங்கள்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

புதுக்கோட்டை ஆட்சியர் மின் அஞ்சல் முகவரி:-
collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in

செய்தி
To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
Regds:\


நன்றி
http://fourthpillar.wordpress.com/ மற்றும் பதிவர் ஆரூரன் விசுவநாதன்

குறிப்பு
இந்த இடுகைக்கு பின்னூட்டப்பெட்டி மூடப்பட்டுள்ளது. பின்னூட்டமிடும் நேரத்தில் எளிதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.



Saturday, October 9, 2010

இன்றிரவும்...


எல்லோருக்கும் தெரியும்
யார்தான் அறியாதவர்

காலையில் தோப்புத்தெரு
அடுத்து மேலவீதியும்
கலைஞர் காலனியும்

எங்கும் கிடைக்காமற்போனால்
எப்போதுமில்லாத அக்ரஹாரம்

கடைத்தெரு செல்லும்போது மட்டும்
கிடைத்துவிடவாப்போகிறது....

யாசிப்பவளின் இடுப்பெலும்பில்
வெறித்திருக்கும் சிசுவிற்கு

இன்றிரவும் கிடைக்கலாம்....

வேப்பெண்ணை வாசமும்
அதே உதிரமும்.


.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO