க.பாலாசி

Friday, July 29, 2011

காத்திருத்தல்


பெரும்பாலும் பெரிய விசயங்களைவிட சிறுசிறு விசயங்களில்தான் காத்திருத்தலென்பது ஒரு சுமையெனப் படுகிறதெனக்கு, என் புத்திக்கு. நான் காத்திருந்த நேரங்களைவிட காக்கவைத்த நேரங்கள்தான் அதிகமிருக்குமென்பது இதையெழுத நினைக்கும்போதுதான் ஞாபகம் வந்துதொலை(க்)கிறது. விவசாயி மழைக்கு, மாணவன் பரிட்சை முடிவுக்கு, இளைஞன் காதலுக்கு, பெண் திருமணத்திற்கு, ஒரு குடும்பத் தலைவன் கணக்குப் போட்டு கடன் வாங்கி பின் வரும்படிக்கு என இப்படி ஒவ்வொரு காலத்திற்குமான ஒவ்வொரு வகை  பெரிய காத்திருப்புகள் கட்டாயம். ஒரு காத்திருத்தலும் அதற்குள் மனதிற்குள் உண்டாகும் எண்ணங்களும் மொத்த வாழ்வின் வலி, போராட்டம், தவிப்பு, இன்பம், துன்பம், அனைத்திற்கும் மேலான ஒருவித சுகச்சுமை போன்ற அத்துணைப் பண்புகளையும் காலத்திற்கேற்றாற்போல் ஒருங்கே கொடுத்துவிடுகிறது. நான் இத்தனைப் பிசகில்லாமல் எளிமையாகக் கடந்திருக்கிறேனோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இது வரமா, சாபமா தெரியவில்லை.



தெருவே அல்லோகலப்பட்டுக் கிடந்தது. அனைத்து வீட்டு வாசல்களிலும் என்னொத்தச் சிறுவர்கள் வெடிகளை காயப்போட்டிருந்தனர். பார்க்கப்பார்க்க பொங்கிப் பொங்கி வந்தது. மாலை மணி ஆறாகிவிட்டது. அப்பா வந்தபாடில்லை. மாயவரம் மரவாடிக்கு சென்றிருந்தார். துணிமணிகளை எடுத்து ஒரு மாதமாகியிருந்தது. ஆனால் வெடி? ‘தோ செத்தயிரு வந்திடும்பா’ இரும்புச் சாரணியில் முறுக்குப் பிழிந்தபடியே அம்மாவின் ஆறுதல். பாவி மனசு கேட்கணுமே. ஏக்கமும், தவிப்பும் நிரம்பி உதடுகள்வழி பிதுங்கி பொங்கிவிட்டது. ஏழு, எட்டு... கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி பொங்கலும் அடங்கியது. எனக்கு அப்போது புஸ்வானம் விட ரொம்பப் பிடிக்கும். ஒரு புள்ளியிலிருந்து விரிகின்ற மலர்போல அழகு.   எல்லோர்வீட்டு பிள்ளைகளும் புஸ்வானம் விட்டுக்கொண்டிருந்தனர். நான் ‘புஸ்’ஸானேன். உண்டேனா இல்லையாவென்று தெரியவில்லை ஆனால் உறங்கிவிட்டேன். பதினொன்றரை மணியிருக்கலாம் அப்பா வந்தார், ஐம்பது ரூபாய் வெடிகளுடன். அம்மா எழுப்பி காட்டினாள். செய்தித்தாளில் சுற்றி சணல் போட்டுக் கட்டியிருந்தார்கள். காத்திருந்த மனதிலிருந்து அத்தனை அடைசல்களும் நீங்கி ஆற்றாமையும், தவிப்பும், பொய்க் கோபங்களும் பெருமூச்சின் வழி காற்றுடன் கலந்தது. ஐப்பசி குளிரில் புஸ்வானங்கள் ஜில்லென்றிருந்தது. ‘இந்தா இந்தா கொளுத்து’ என்று அப்பாவும் துணைக்கு வந்தார். மழையும் வந்தது.



கல்லூரிக் காலம். பவானியின் அண்ணனைப் பார்க்க தனியாக ஆக்கூர் பஸ்டாண்ட் பேக்கரி கடையில் உட்கார்ந்திருந்தேன், இடுப்பில் பைப் கத்தி சகிதம். பவானியை காதலித்தேனென்பது உலகறிந்தது. அந்த ‘ஒரே’ குற்றத்திற்காக என்னை ஆள்வைத்து மிரட்டினான், கிராதகன். வந்ததே கோபம், வச்சனா தகடியா ஒன்று நான், இல்லை அவன். அதற்குதான் அந்தக் காத்திருத்தல். என்னை மிரட்டியவன் பார்த்து விட்டான். ஆனால் கண்டு கொள்ளவில்லை. 2வது சந்திலிருக்கும் பவானி வீட்டிற்கு அவன் சென்றிருக்க வேண்டும். அந்த சந்து முகனையில்தான் பஞ்சாயத்து அலுவலகம். அதுவரை எந்த வம்பு தும்புகளுக்கும் போனவனில்லை. அரசமரம், கோயில்கள் தவிர்த்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பஞ்சாயத்து நடக்குமென்பது என் அறிவீனம். கொஞ்சம் மனதுக்குள் வியர்க்கத் தொடங்கியது. போன பேருந்தைக் காணோம். ஒண்டிக்கட்டை. எவ்வளவு தைரியம்?  இவ்வளவு தூரமென்று உணர்வதற்கும் நேரமில்லை. பொதுவாகவே நான், இணையாகவிழும் இரு மழைத்துளிகளுக்கிடையேப் பிசகாமல் நுழைந்துவரும் புஷ்டியான உடலமைப்பைப் பெற்றவன். சற்றைக்கெல்லாம் அவள் அண்ணன் வந்துவிட்டான். நல்லவேளை வேறு யாரும் வரவில்லை. ‘டேய் வேணான்டா விட்டுடு, அதான் புடிக்கலன்னு சொல்லுதுல்ல, அப்பறம் ஏன்டா?, எப்பாவுக்கு (வாத்தியார்) தெரிஞ்சா பிரச்சன ஆயிடும்.. அவ்ளோதான்’ சொல்லி முடித்தான்.. ப்ப்ப்ரு... இவ்ளோத்தானா? அட சொங்கிப்பயலே.. (மனதிற்குள்) முகத்தை விரைப்பாக வைத்திருந்தேன், கையும் காலும் கடகட, மனது பக்பக். அடுத்த பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினேன். அரைமணி நேரமானது... அந்தக்(கால) காத்திருத்தலொரு இளப் போராட்டம்.



அதே காலம். நண்பனையும் அவன் காதலியையும் பேருந்தில் ஏற்றிவிட்டோம், இன்னொரு நண்பனும் நானும். சம்போ சிவசம்போ பாடல் அப்போதில்லை. இரண்டுநாள் கழித்து நானும் அவனும் காவல் நிலையத்தில், ஆய்வாளர் வருகைக்காக ‘அமர’ வைக்கப்பட்டிருந்தோம். காவல் நிலையமென்பது சிகப்புக் கலர் பெயிண்ட் அடிக்கப்பட்ட கட்டிடமென்பது என் பரம்பரைக்கே அத்துப்படி. அதில் ‘உள்ளாழ்ந்து’ நடப்பவற்றை முதலில் ‘புல’னாய்வு செய்தவன் நான்தான். பெண்ணைப் பெற்றவர் ‘உங்க ரெண்டுபேரையும் என்னப்பண்றேன் பாருங்கடா’  என்று காவல்நிலைய வாசலில் சவால்விட்டுக் கொண்டிருந்தார். (என்) அப்பா கொஞ்சதூரம் தள்ளி மரநிழலில் குருசாமியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் காவலர், தெருக்காரர், மேலும் எங்களிருவருக்கும் வக்காலத்து. வரப்போகும் காவல்துறை ஆய்வாளர் மிகவும் கண்டிப்பானவரென்று அறிந்திருந்தேன். உள்ளே மரப்பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பனும் நானும் உச்சா போகாதக் குறைதான். ‘ஒழுங்கா உண்மையச் சொல்லிடுங்கடா, விட்டுர்றோம், அய்யா வந்தாருன்னா பின்னிருவாரு’ என்னமோ சடைப் பின்னுவதுபோல் அந்த எழுத்தர் சொன்னார். அடிவயிறு முட்டியது. எப்பாடுபட்டாலும் உண்மையைச் சொல்லக்கூடாது என்பது எங்கள் திண்ணம். ஆனால் லத்தியைப் பார்க்கும்போது அது இளகிக்கொண்டிருந்தது. அதுவரைக்கும் அப்பாவின் விளக்கமாத்து அடிகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட எனக்கு லத்திகளை பார்த்தபோதே வலிக்க தொடங்கிவிட்டது. நண்பனுக்காவது கொஞ்சம் என்புசதை போர்த்திய உடம்பு, இங்கே என்புதோல்தான்.. ஒரு மணிநேரம் ஆகும். உதைவாங்க காத்திருந்தோம். அம்மா, அப்பா, அக்கா எல்லா உறவுகளும் கண்முன் நிழலாடியது. வாங்கப்போகும் அடியின் அச்சாரம் எப்படியிருக்குமென்பதை பக்கத்திலிருந்தவன் கன்னம் சொல்லியது. வந்தார். சில கட்டளைகள், சில வசவுகள், எச்சரிக்கைகள்...அவ்வளவுதான். சோம்பல் முறித்துக்கொண்டு வெளியே வந்தேன். காத்திருந்த அப்பா அழுதிருந்தார், பெத்தமனம்...


அழைத்த அண்ணன் மாதவராஜ் அவர்களுக்கும் நன்றி.

Thursday, June 30, 2011

பம்பரம்



நீலவேணி இறந்து திங்களோடு திங்கள் எட்டு செவ்வாய் ஒன்பது நாட்களாகிறது. கோபுரத்தில் விழுந்த காகத்தின் எச்சம், முளைத்து ஆலமரமும் பின் அதுவே விருட்சமுமானது போல்தான் எங்கள் வாழ்க்கை. பாசி பிடித்த படித்துறையில் கால் வைத்தால் வழுக்கிவிடும், ஆனால் அதையும் மீறி இத்தனைக்காலம் ஓடிவிட்டது. போய் சேர்ந்துவிட்டாள் புண்ணியவதி. புதைத்த கையோடு உடன் பாலும் கையோடு மையோடு கல்லு கருமாதியும் முடிந்தேவிட்டது. ஊதுபத்தி வாடையும், பன்னீரின் வாடையும் கலந்து அவளின் சுவாசம் நிறைந்த இந்த கூடாரத்தை அபகரித்துவிட்டது. கண்ணுக்குத் தெரிந்து இந்த வீடும், தோ அவள் படத்தின் முன்னுள்ள பாக்கு வெட்டியும்தான் அவளுக்கான ஜென்மபலன், எங்களுக்கும். ஒட்டங்காடு போகவேண்டுமென்று தோன்றியது. இத்தனை நாளும் இந்த எண்ணம் இல்லாமலில்லை, இப்போதுபோல் இத்தனை நாளுமில்லை.

‘ரெங்கா? நான் ஒட்டங்காடுவரைக்கும் போவலாம்ணு இருக்கேன்யா...’ ரெங்கா என்னையே பார்த்துகொண்டிருந்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், அவனும் என்ன செய்வான்?

‘ஏம்ப்பா? இப்பபோயி?!!!’

‘இல்லய்யா, எனக்கென்னமோ போலருக்கு, நீலா பொறந்த ஊரு, அவளோட நான் வந்ததுலேர்ந்து இப்பதான் நேரங்கூடி வந்திருக்கு, தடவைக்கு தடவ நாஞ்சொன்னாலும் வேண்டா வேண்டாம்பா.. ஒரு நாலு நாளு இருந்திட்டு வர்ரன்யா’ நிறைய ஆற்றாமையும் கொஞ்சம் இயலாமையும் கலந்த என் பேச்சை அவன் தட்டவில்லை.

‘அதுக்குச்சொல்லல...’ முழுங்கிவிட்டு ‘சரிப்பா, அங்கப்போயி எங்க தங்குவீங்க? யாரிருக்கா? பட்டாமணியாரு இருக்காரா இப்ப? அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு போங்களேன்..’

‘சரிய்யா, பாக்கறேன், ராத்திரி சாப்பாடு முடிச்சிட்டே கெளம்பறேன்’

எல்லாம் தயாராகிவிட்டது. ஒரு கருப்புப் பையும், துணிமணிகளும், பேஸ்ட், பிரஸ் எல்லாமும் சரியாக எடுத்துவைத்திருந்தாள் சரசு, மருமகள். ‘போலாமா?’

‘தோ வந்திட்டேம்பா’ வண்டியில் கொண்டுவந்து பஸ்டாண்டில் விட்டான்.

ஒன்பதே முக்காலுக்கு கோயம்பேட்டில் எடுப்பான் அந்த பொறையார் பஸ். பொறையார் டூ மெட்ராஸ், மெட்ராஸ் டூ பொறையார் பைபாஸ். நெய்வேலி, சீர்காழி, மாயவரம், அப்பறம் நேர்வழியாக பொறையார் செல்லக்கூடியது. மாயவரத்தில் இறங்கி லாட்ஜில் தங்கி, குளித்துவிட்டு லைட்டாக டிபன் முடித்துக்கொண்டு கிளம்பினாலும் போதும். காலையில் ஒன்பதரைக்கோ என்னமோ 23ம் நம்பர் பஸ். செம்பனார்கோவில், ஒட்டங்காடு, திருவிளையாட்டம் வழியாக சங்கரன்பந்தல் போகும் அப்போது. இப்போதும் அந்த பஸ் ஓடுவதாக பட்டாமணியார் சொன்னார். இன்னேரம் அவருக்கும் என்னைப்போலவே வயதாகிருக்கும். தாடி, மீசை, கழுத்தில் ஒற்றை ருத்ராச்சம் இன்னமும் அப்படியே இருப்பாரா?!! வயோதிகம் அவர் உடலையும் வாட்டியிருக்கலாம். அவர் மனைவி செத்தது தெரியும். ஒட்டங்காட்டில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளையும் அவர் மூலமேதான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது ‘வர்ரேன்’ என்று சொன்னேனே ஒழிய எப்போதென்று சொல்லவில்லை. அவர் கண்ணில் படாமல் ஊரில் உலாவ முடியுமா? முடியும், முடியும்.. பாப்போம்..

மஞ்சளாற்றைத் தாண்டி இடதுபுறம் திரும்பியது பேருந்து. எனக்கு மனதெல்லாம் பக்..பக்..கென்று அடித்துக்கொள்ளத் துவங்கியது. கிட்டத்தட்ட 32 வருடங்கள். இங்கிருந்து இதே வழியேதான் நானும் நீலாவும் சைக்கிளில் செம்பனார்கோவில் போய், பின்பு பேருந்தில் மாயவரம், அப்பறம் மெட்ராஸ். அப்போது இந்தச் சாலை சிகப்பு கப்பியில் நிரம்பியிருக்கும். தொலைவில் இடதுபுறத்தில் சட்ரஸ்ஸும், வலதுபுறத்தில் முனியப்பன் கோவிலும் தெரிந்தது. அப்படியேத்தானிருக்கிறது. எந்த மாற்றமும் தெரியவில்லை. அருகருகே இரண்டு மூன்று குடிசைகள். நாங்கள் ஊரைவிட்டுப்போன அந்தக் கடைசிநேர பரபரப்பிலும் நீலா முனியப்பன் உண்டியலில் எதோ காசுபோட்டுவிட்டு சைக்கிளில் வந்து குந்தினாள். விபூதியும் பூசிக்கொண்டாள், நான் கண்டுகொள்ளவில்லை, இருவரையும். பனைமுட்டு, கோனமுட்டி வாய்க்கால், ஒரு சர்ச், உத்திராபதி கோவில் எல்லாம் செருகச்செருக கடந்துகொண்டேயிருந்தது. உடல் வயிறெல்லாம் ஒரு சந்தோஷ திரவம் சில்லென்றாற்போல் ஊறியது. பேருந்து இறக்கத்தில் இறங்கும்போது அடிவயிற்றில் ஒரு இனம்புரியா கிறக்கம் உண்டாகும், அப்படிதான் இதுவும்.

ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் ஸ்டாப்பிங்கில் இறங்கினேன். யாருக்கும் என்னைத்தெரிய வாய்ப்பேயில்லை. ஆனால் என் அப்பனை அறிந்தவர்கள் யாரேனுமிருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். ஆமாம்...என்னிடம் என் அப்பனின் முகம் அப்படியே ஒட்டியுள்ளது. இந்த பத்துநாள் தாடியும், வீசையும் அந்தாள் மூஞ்சை பளிச்சென்று காட்டிக்கொடுத்துவிடும். நெஞ்சின் படபடப்பு அடங்கவில்லை. மாரியம்மன் கோவில் வாசலில் தீக்குழி, கரிகள் அள்ளியபின் தெரியும் கருமை படர்ந்திருந்தது. எத்தனைக் கூட்டம் தீமிதித்திருக்குமோ!!!? ஒட்டங்காடு மாரியம்மன் தீமிதியென்றால் மாமாங்க கூட்டம் கூடும். ஜெ.ஜெ வென்று சுத்துபட்டு 54 கிராம மக்கள் கூடுவார்கள். எதிர் சாரியில் ஒரு பெட்டிக்கடை, வாடகை சைக்கிளும் இரண்டு முன்று கிடந்தது. அருள்ராஜ்தான் முன்பு இந்தக் கடை வைத்திருந்தார். இப்போது யாரென்று தெரியவில்லை. கடையில் யாரோ பொடியன் இருந்தான்.

‘தம்பி, சைக்கிள் வாடகைக்கு வேணும்பா?’

‘சைக்கிளா? நீங்க? எங்க போணூம்?’

‘பெருமாக் கோவிலாண்ட’

‘எப்ப வருவீங்க?’

‘ஒரு மணிநேரத்துக்குள்ள வந்திடுவம்பா’

‘ஐ.டி. கார்ட் வேணும், இருக்கா?’

சட்டையிலிருந்த பழைய லைசன்ஸ் கார்டை நீட்டினேன். வாங்கிக்கொண்டான்.

‘கேரியர் வய்ச்சி வேண்டால்ல’ ஒரு சைக்கிளைக் காட்டினான். எடுத்து ஸ்டேண்ட் தள்ளினேன். ரொம்ப நாளாகிறது, சைக்கிளைத்தொட்டு. மெட்ராஸில் கொஞ்சகாலம் சைக்கிள் ஓட்டியிருந்தாலும் நீண்ட இடைவெளி. ஒரு உந்து உந்தி ஏறினேன். பெடலை மிதிக்கும்போது சுலபமாக என்னையும் தள்ளிக்கொண்டே போவதுமாதிரி தோன்றியது.

நல்லவேளை, பெருமாள் குளத்தங்கரையில் யாருமில்லை. சைக்கிளை நிறுத்திவிட்டு  அரசமரத்தைச் சுற்றி கட்டியிருந்த திண்ணையில் அமர்ந்தேன். கோவிலின் உள்ளே மணிச் சத்தம் கேட்டது. மதியக்கால பூஜையாக இருக்கும்.

இந்த அரச மரத்தடியில் சிறுவனாக இருக்கும்போது சோறு தண்ணியின்றி விளையாடிய காலங்கள் எத்தனை!!! எத்தனை!!! என்னடாயிது வயோதிகத்திலாவது இந்த ஞாபகக் கொடுக்குகள் அற்றுப்போகக்கூடாதா? அதுசரி அப்படியிருந்தால் நாம் ஏன் இங்குவரப்போகிறோம்? கோவிலிலிருந்து யாரோவொருவர் வந்தார். ஆ... அந்த உருவம் பழக்கப்பட்டதுதான். அந்தக்காலத்து ஒற்றைநாடி, இப்போது.. இன்னும் தளர்ந்து... கூன் விழுந்து, அய்யரேதான்!!!!. என்னைப் பார்த்துவிட்டார்.

‘யாருப்பாது? இங்க உட்காந்திண்டிருக்க? புதுசாட்டருக்கு!!’

நெற்றியில் அவர் வைத்திருக்கும் குங்குமக் கீற்றலே போதும் அடையாளங் காண. புருவ மத்தியிலிருந்து உச்சி மண்டை வரை நீளும் அந்தக்கோடு. ‘ஆமாங்க சாமீ, புதுசுதான்.’

‘இஞ்ச யாரப்பாக்கணும்?’

‘சாமீ.. கோதண்டபாணிய ஞாபவமிருக்கா ஒங்களுக்கு?’

‘எந்தப் போதண்டபாணிங்க, தெர்லியே’

காது சரியாக கேட்கவில்லை போலும் ‘போதண்டபாணில்ல, கோதண்டபாணி, கோதண்டபாணி..’ உறக்கச்சொன்னேன். பிறகு ‘கொசவங் குட்டைக்கிட்ட ரெய்லோடு போட்ட வீடு ஞாபவமிருக்கா? 30-35 வருஷத்துக்கு முன்னாடிச் சொல்றேன் நானு. அவரு?’

‘ஆங்... டேய், படவா.. கோதண்டம் மொவங்காரனா??!!.. அதாங் மொவரக்கட்ட காட்டுதே...!!, குண்டுகுண்டுன்னு ஓடியாடிண்டிருந்த அந்தக் கொழந்தைய சைக்கிள்லயே இழுத்துண்டு ஓட்ன பயலாச்சே நீ... தாடி வீசல்லா வச்சிண்டு, கெழவனாட்டங்க கடக்க.. கூம் நாம்பரவால்லடாப்பா...’

‘ஆமாங்க சாமீ’. அவர் இத்தனையும் ஞாபகம் வைத்திருப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நாளில் ஊர் ஜனங்களுக்கே இந்த சேதி பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கும், அந்த விசும்பல்தான் இந்த ஐயரும். இந்த மரத்தடியில் பம்பரம் விளையாடும் பொழுதுகளில்தான் நீலா ரோட்டுக்கு அந்தண்டைப் பக்கம் வீட்டிலிருந்து பார்ப்பாள். சின்னப்பிள்ளையிலேயே அப்படிதான். ஊரிலேயே அவள் வீடுதான் மாடிவீடு. சீமத்தண்ணி குடித்த குடும்பமென்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மாட்டு கொட்டகைக்கூட ஒரு ஒட்டுக் கட்டிடத்தில்தான் இருந்தது. இப்பொழுது அந்த வீடும் கொட்டகையுமிருந்த சுவடுகளேயில்லை.

‘ஏண்டாப்பா நீலா எப்டியிருக்கா?! இன்னும் நீ சாமிச்செலைய ஒடைச்சிண்டுதானிருக்கியா?.... மொகரையே தெரியுதே... தோ பாத்தியா இந்த புள்ளையார? அவரு மூக்க உடைச்சது உன் வேலைதானேடா, இன்னும் ரெண்டு மூணுப் பேரோட தூக்கிப்போட்டியே இந்த கொளத்துல..’

உண்மைதான் இந்தப் பிள்ளையாரின் மூக்கு உடைந்தது என்னால்தான். அப்போதிருந்த வேகம், பகுத்தறிவு சிந்தனைகள், பெரியார், இராவணன் அண்ணன்... இந்த பிள்ளையார்தான் அதற்கு பலி, சாட்சி. அதனால் ஊரில் கெட்டப்பெயர், என்னுடன் சேர்ந்திருந்த மூன்றுபேருக்கும். நீலாவுக்குக்கூட இது பிடிக்கவில்லைதான். ஆனாலும் அதுவொரு பொருட்டில்லாமல் என்னை முழுமனதோடு ஏற்றுக்கொண்டிருந்தாள்.

‘ஆனா ஒண்ணுடாம்பி, எப்ப புள்ளையாரத்தூக்கி கொளத்தண்டைப் போட்டியோ அப்பலேர்ந்து கொளத்துல தண்ணி அத்துப்போச்சு.. என்ன சாபமோப்போ. பூட்டியிருந்ததால இந்தப் பெருமாள் தப்பிச்சிண்டார். இல்லன்னா அப்பருந்ததுக்கு இவரையும் தூக்கிப்போட்டிருப்ப..  ஒண்ணு தெரிஞ்சிக்கோடா, பெருமாளாயிருந்தாயென்ன? பெரியாராயிருந்தாயென்ன? மனுஷாள்மேல மனுஷாளுக்கு நம்பிக்கயத்து போனதாலனேடா இந்த தெய்வங்கள் வந்தது. அதையும் லோகத்லேர்ந்து அழிச்சிண்டா எல்லாஞ் சரியாயிடுமாயென்ன?, சரிவுடு, நீலா எப்டியிருக்கா?’ விட்ட இடத்திற்கே வந்து மீண்டும் அவர் கேட்கும்போது அவர் கண்களில் தெரிந்த ஆச்சர்யம் என்னை நடைமுறைக்கு தள்ளியது.

‘ம்ம்..நல்லாருக்கா சாமீ’ வேறெதையும் சொல்லத்தோன்றாமல் அசட்டையாக பொய் சொன்னேன்.

‘நீ கெடக்கவுடு, அவ நல்லாருக்கணும்டாப்பா, ஓடுபுள்ள ஒடியாருபுள்ளையா நாங் பூஜைக்கு வந்தாப்போதும் ஓடோடி வந்திடுவா, குளத்திலேர்ந்து தண்ணி கொண்டாரன்னே.. லெஷ்மி கடாஷம் அப்டியேருக்கும், இந்தப் பெருமாளுக்கு அவளை புடிக்கலப்போல.. அதான உன்னாண்டை விட்டுட்டான். ம்கூம் சூட்டிக்கலானப் பொண்ணு.., சின்ன வயசிலே பம்பரம் வெளையாண்டே அவள ஜோடி சேத்திண்டியேடா? அடுக்குமா, லோகத்துல எந்த பயலுக்காவது இந்த கொடுப்பினை உண்டா?!!’

நீலாவையே சுற்றி சுற்றி பேசிக்கொண்டிருந்தார், அவள் அம்மா அப்பா செத்தது, போனது, வந்தது, இன்னொரு பட்டாமணியார் கணக்காக ஆகிவிட்டது. அப்பறம் கிளம்பினார். என்னைப் பற்றி பெரிதாக விசாரிக்கக்கூட அவர் விரும்பவில்லை. போய்விட்டார். 

‘இந்த அரச மரத்தடிதான் என் வாழ்க்கை, இங்குதான் என் பொழுதுகள் விடிந்தது, இங்குதான் நீலா கிடைத்தாள், இந்த புனர்ஜென்மம் கிடைத்தது. நாலடி விட்டத்தில் ஒரு வட்டமும் நடுவே முக்கி வெளியேற முடியாத பம்பரங்களுமிருக்கும். வெளியே வந்த பம்பரக்காரர்களின் குறி உள்ளேயிருக்கும் பம்பரங்கள் மீது. அதில் உக்கு வைக்கவே அத்தனைப்பேரின் உக்கிர குணங்களும் ஆசைப்படும். எல்லோருக்கும் பொருந்தும் இந்த நீதி. எல்லாப் பம்பரங்களும் அடிபட்டு வெளியேறினால் பம்பரத்தை இழுப்பு விட்டு கையிறால் இரண்டு சுற்று சுற்றி மேலே தூக்கி இரண்டுகையாலும் பிடிக்கவேண்டும். அப்பீட் என்பார்கள். கடைசியாக எடுப்பவர் பம்பரத்தை உள்ளே வைக்கவேண்டும். இதுதான் பொழுது முச்சூடுமான விளையாட்டு. நான் பம்பரம் விடும் அழகுக்காகவும், அதை குத்துவிடும் ஆக்ரோஷத்திற்காகவும்தான் நீலா என்னை பார்த்துக்கொண்டேயிருப்பாள்.  அவளே பிறிதொரு நாளில் சொன்னாள். எல்லாப்பசங்களும் போனப்பிறகு நான் மட்டுமிருப்பேன். மரத்தடிக்கு வந்து ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ என்பாள். அப்போதெல்லாம் பம்பரக்கயிறு புதுத்தாலிக் கயிறு மொத்தமிருக்கும். பம்பரத்தின் கூர்முனையிலிருந்து படிப்படியாக சுற்றி தலைக்குமேல் ஓங்கி கீழ்நோக்கி ஒரு சொடுக்கு சொடுக்குவேன. தரையில் விழாமல் அதை வலது உள்ளங்கியில் தாங்கி அவள் கையில் விடுவேன். பிஞ்சிக்கைகளில் அந்த ஆணிப் பம்பரம் சுற்றிவர சிவந்துவிடும். ரசித்துக் கொண்டிருப்பாள்.

இந்த பம்பரத்திற்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு ஒற்றுமை, தொடர்பு. சாட்டையால் சுற்றிவிடுவது எவனோ. சுற்றுவது நாம், தெம்பு குறைந்தபின் ஆட்டம் காலி படுதா காலி. முடியாமல் கஷ்ட வட்டத்தில் மாட்டிக்கொண்டால் உக்கு விழுவதுபோல் சில அடிகள், மரண அடிகள். இதை நினைக்க நினைக்க எனக்கு பம்பரம் விடவேண்டும் என்ற ஆசை வந்தது.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வேங்குவேங்கென்று அந்தக் கடைக்குப்போனேன். ‘தம்பி, பம்பரம் இருக்கா?’ மூச்சி இறைத்தது.

‘இருக்குங்க’ முழுக் கொட்டைப்பாக்கு அளவில் ஒன்றைக் கொடுத்தான். ப்ளாஸ்டிக் பம்பரம். தமிழ்நாட்டில் பம்பரத் தட்டுப்பாட்டுக்கு விஜயகாந்தும், வைகோவும் காரணகர்த்தாக்கள் போலிருக்கிறது. ச்ச்சை..

‘கயிறு கொடப்பா?’ சிகப்புக்கலரில் ஒரு தாம்புக் கயிறுப்போல் கொடுத்தான். மொத்தம் 8 ரூபாய்.

மறுபடியும் அரச மரத்தடிக்கு வந்தேன். பெருமாள் கோவில் உள்ளேயிருந்து ஊதுபத்தி மணம் வெளிவரைக்கும் அடித்தது. அரசமர இலைகள் சலசலவென்று அடித்துக் கொண்டிருந்தன. சைக்கிளை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமில்லை. பம்பரத்தில் கயிற்றைச் சுற்றினேன். வழுக்கி வழுக்கி வந்தது. பிறகு பிடித்துகொண்டது. தரையில் ஓங்கி குத்துவிட்டேன், டங்கென்று தரையில் தட்டி குளத்துப் படிக்கட்டில் விழுந்தது. சுற்றவில்லை. மீண்டும் எடுத்து கொஞ்சம் பொறுமையாகக் குத்தினேன். சுற்றியது. ஒரு பின்னிரவு நேரத்தில் மொட்டைமாடியை அலங்கரிக்கும் காற்று மனதைப் பரவசப்படுத்தும், அதுபோலிருந்தது. கீழே குனிந்து புறங்கை தரையில் பட ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் ஒரு விரிசல் உண்டாக்கி பம்பரத்தில் ஆணிக்கு நேராக நீட்டிச் சொருகினேன். பம்பரம் சுற்றியபடியே கையில் ஏறியது.

என்னைக் கேட்டால் பம்பரம் கையில் சுற்றும் அந்த விநாடிகளின் குருகுருப்பையும் கூச்சத்தையும் ஏந்தி ரசிப்பது இந்த வயோதிகத்தின் புண்ணியம் என்பேன். நாற்பது வருடங்கள் இருக்கலாம். இதே மரம், இதே இடம், கலகலவென்று எத்தனைப்பேர் இந்தப் பம்பரம் விளையாட. ஆனால் இப்போது? மல்லாந்துப் படுத்து  மார்பில் துப்பிக்கொள்வதுபோல் நகர வாழ்க்கை, கிராமத்துப் பிள்ளைகளுக்கும் இதேதான் கதி. நெஞ்செங்கும் நிம்மதியால் நிறைந்தது. கொஞ்சநேரம் மரத்தடி திண்ணையில் படுத்து கண்களை மூடினேன். ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ நீலா கை நீட்டினாள்..  


Tuesday, May 31, 2011

மீசை


ரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன்கோவில் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு!! இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு  கொடுக்கவில்லை.

“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க?” எனக்கு முந்திக்கொண்டான்.

அவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு!!!. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.?”

“ம்ம்ம் நல்லாருக்கன்டா” என்றான்.

சிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க? பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்?”

“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன?”

“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா? கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது.

“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச..? மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா? அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான். 

மாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன். 

“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது.? அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார்.

ஆமாம் எனக்கு என்ன குறைச்சல்! என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குகூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தாதான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சிகோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன். 

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!!!  அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது.

இங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகடிலிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார்.  கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார்.

எப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார்.

ரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந்த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன்.

இப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.

இப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன்.

“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.

“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன்.

“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா? நீய் செய்யி” என்றான்.

“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் கொமட்டிலேயே குத்தினான், அந்த முக்காமீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.


••

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO