க.பாலாசி

Friday, January 3, 2014

ஒரு கூடும் சில குளவிகளும்..

.

முன்புபோலில்லை. கொஞ்சம் வயதாகிவிட்டதென எண்ணுகிறேன். ரெண்டுவரி தட்டுவதற்குள் நாக்கு தள்ளுகிறது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. கைவிரல்கள் ‘ஏன்டா உனக்கிந்த வேலை என்பதாக..’.. ‘சும்மா உக்காந்தா துருப்பிடிச்சாப்போவப்போற‘ என்கிறது மனது. செவனேன்னு உட்காந்திருப்பதில் ஒரு அலாதிப்பிரியமும் மிகுந்த சௌகர்யமும் கிடைக்கிறது. என்னவாச்சும் படிப்பமாவென்றால் ச்சீ... போ..போ.. வேலையப்பாரு என்ற நினைப்புவேறு. வேலைநேரம் போக தொலைக்காட்சி கொஞ்சம் விடுதலை, அதோடு இணையம் கொஞ்சம். எதுவும் எழுதாமலிருப்பதில் கிட்டும் நிம்மதியனைத்தும் என் கோடானுகோடி வாசகர்களுக்கு(!!!)தானேயொழிய எமக்கொன்றுமில்லை யேசப்பா... ஆமேன். ஆயினும் சீர்கேடுகளடர்ந்த இச்சமூகத்தை என்‘னெழுத்தால் காத்தருள வேண்டுமென்ற மனவேட்கை இருக்கத்தான் செய்கிறது. ரசிகர்களின் வேண்டுகோளை நிராகரிக்க மனமில்லாமல் எதையாவது செய்தே ஆகவேண்டிய சூழல். ஆகவே செழித்தோங்கியிருக்கும் இந்நாட்டின் வளங்களையும், பரிபாலங்களையும் நான் கட்டிக்காப்பாத்தாம விடமாட்டேனென்ற உறுதிமொழியில்...

••

‘ராஜா இருக்கவரையும்தான் ராஜாவீட்டு நாய்க்கு கூட மதிப்பு, தெரிஞ்சிக்க‘ சண்டை சமயங்களின் அப்பாவின் வாய்மொழி. அவர் போனபிறகு அதை நிஜத்தில் உணர்கிறேன். அவர் இருந்தவரை குணநலன்களுக்கு அப்பாற்பட்டு பெருந்தலை என்ற மரியாதை உறவுகளினிடத்து உண்டு. இப்போது ‘தலையே போயிடுச்சி இனிமே என்னகெடக்கு‘ போன்ற மனநிலை அவர்களினிடத்தும். போலவே அவருக்குப் பின்னான அம்மாவின் நிலை. துணையிழந்த தனிமை. ‘என்ன யாருப்பா மதிக்கறா, என்னக்கேட்டா எல்லாஞ்செய்றீங்க? நாவொரு கருவேப்பில கொத்துமேரி, வேணுன்னாதான்...  ம்ம்ம்’ ஒரு பெருமூச்சுடன் எதையும் எதிர்பார்க்காத நிலை. கூடம், மோட்டுவலை, நீர்நிறைக் கண், படுக்கை, சோறு, எனது சௌகர்யமும், அவ்வப்போதைய அழைப்பும் போதுமானதாயிருக்கிறது. அப்பாவிற்குப்பின் அம்மாவுக்குத் தேவையான கௌரவத்தை என்னளவில் கொடுத்தாலும், குடும்பச்சூழலில், உறவுகளிடத்தே தோல்வியே மிஞ்சுகிறது. என்னதான் பாடுபட்டாலும், உயர்த்திப்பிடித்தாலும் யதார்த்தத்தில், இச்சமூக கட்டமைப்பில் அப்பாக்கள் மட்டுமே ராஜாவாக வாழ்ந்தும் மறைந்தும் போகிறார்கள். ஏனையோர்* மேற்சொன்ன...

••

அப்பா இறந்த இரண்டொரு வாரங்கள் தவிர்த்து அம்மா பெரிதாக அலட்டிக்கொள்ளாததுபோல் தோன்றியது. நானும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அல்லும் பகலும் அவர் நினைவுதான். ம்ம்ம்முடியல.. அவர் கடைசி மூச்சை நானே சுவாசித்ததனால் இருக்கலாம். அந்தக் கடைசிப்பார்வை... கொடுமை... நான்கு மாதங்கள் கடந்தது, எங்களுக்கு ஆண் குழந்தை. பேரன் என்றவுடன் அம்மாவுக்கு அளப்பறியா ஆனந்தம், ஒரு பெரும் சிரிப்பு, மகமாயி...மகமாயி என்று நன்றிக்கடன். கிட்டத்தட்ட கேள்விப்பட்ட எல்லோருமே சொல்லிவிட்டார்கள் ‘அப்பா இருந்திருந்தால் பூரித்திருப்பார்‘. மருத்துவமனை.. அம்மாவை அழைத்துவந்து அவள் மடியில் மகனை கிடத்தினேன். ‘அப்பா மேரியே இருக்கான்ல... அப்பாவேதான் தம்பி பொறந்திருக்காரு, என் தங்கம் பெத்த தங்கமே... மாருடன் அனைத்து கொஞ்சினாள்.. இருவரும் அழுதோம்.. மகனும் அந்நேரம்...

••

மனது அம்மா உணவக இட்லி போல, ஒருநாள் கல்லாகவும் (இறுக்கமாகவும்) மறுநாள் பஞ்சுபோல லேசாகவும் இருக்கிறது. சூழ்நிலைகள், தேவைகள், வேலைகள்.. இன்னும் சில‘கள்... அப்ரஸன், டிப்ரஸன், கப்ரஸன்... என்ற ஆங்கில பண்புத்தொகைக்கொப்ப.. எல்லாவற்றிலுமே எடைக்குறைச்சல்தான் நமக்கு சரிவரும்போலிருக்கிறது. இந்த செருப்பு வெயிட்டா இருக்கு வேண்டாம். லைட் வெய்ட் வீ.கே.சி. கொடுங்க, ஆடைகள் கூட உடம்பில் இருப்பது தெரியாமலிருந்தால்தான் சௌகர்யம். 30 நாளைக்கு ஒருதடவை தலைமுடி கழிக்காவிட்டால் அதுவும் பெரிய பாரம். கூடவே பொண்டாட்டியாக இருந்தாலும் நாப்பத்தஞ்சு டூ அம்பது கிலோ இருந்தால் கச்சிதம். போலவேதான் மனதும். ஒருநிலைக்குமேல் அழுத்தங்கள் கூடக்கூட எல்லாத்தையும் தூக்கித் தூரப்போட்டுவிட்டு பாரம் குறைத்தால் தேவலை. எப்படியாவது மகிழ்ச்சியும், நிறைவும் தேவையாகிவிடுகிறது. எழுத்தும் இலக்கியமும் எள்ளளவும் மனதை லேசாக்குமென்று தோன்றவில்லை. அதைவிட்டு விட்டு விலகி நிற்பதே என்னளவிற்கொண்ட அனுபவம்.

••

இட்லி என்றவுடன் ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல இட்லி தின்பதற்காக நாய்படா பாடு பட்டிருக்கிறேன். 1 முதல் 18ரூபாய் வரையிலான இட்லிகளை க(உ)ண்டாயிற்று. ஆனாலும் திருப்தி? ம்கூம். ஈரோடு முழுக்கவே விதவிதமான இட்டேலி, இட்டிலி, இட்ட்லி மற்றும் இட்லிக்கடைகள். பொண்டாட்டி வந்த புதிதில் ஒருகல்லு மாவாட்ட நாலு மணிநேரம் எடுத்துக்கொள்வார். பிறகு படிப்படியாக குறைந்து அல்லது தேர்ந்து மூனேமுக்காலுக்குள் முடித்து சாதனையும் செய்தார் (மனைவிகளுக்கு இ‘ர்’ விகுதி அவ்வளவு பொருத்தமில்லை) கடைசிவரைக்கும் இட்டேலி பச்சரிசிக் கொழுக்கட்டைப் பதத்தில் மட்டுமே கிடைத்தது. இன்னும், இன்றும்.. உடல்நிலை சரியில்லாத அம்மாவுக்கு ஒரு நல்ல இட்லி வாங்கிக் கொடுப்பமேயென்று பிரயத்தனப்பட்டதில் கண்டது நளன் என்றொரு உணவகம். எதோ சித்தாவோ, ஆயுர்வேதாவோ அந்த முறையில் உணவுகளை தயாரித்துப் பரிமாறுகிறார்கள். நல்ல முயற்சி. ஒரு இட்டேலி எட்டு ரூபாய். மேலே ரெண்டு மூணு கேரட் துருவல். என்போன்ற நோஞ்சான்கள் மீதெரிந்தால் அவ்விடத்தே காலி. கொலை வழக்குதான். ஆனால் மற்ற உணவுகள் நல்ல முறையில் நன்றாகவே செய்கிறார்கள். ப்ப்ரமாதம். ஒரு நாலு தப்படியில்தான் ஈரோடு கதிர் அவர்களின் அலுவலகம். அவர் காசுலேயே சாப்பிட்டால் இன்னும் ப்ப்ரமாதமாக இருக்கும்.

••

கற்பனைகளும், கற்பிதமுமென் முதல் எதிரியென்பேன். கொல்லுகிறது. எ.கா.‘வாக மிதியுண்ட எறும்பின் வலி எனக்கு கற்பிதமாகிறது, அல்லது அப்படியாவதுபோல் கற்பனை தொடங்குகிறது. எதோவொருநாள் கும்பகோணம் பஸ்டாண்டில் 1000 ரூவாயை தொலைத்த கருவாட்டுக் கிழவியின் அழுகுரல், அவளின் வேதனைக்கூடிய முகம், மனம் இப்போதும் நிழலாடுகிறது, கனவுகள் வரை அதன் நீட்சி. இதுபோல் எல்லாமும், எல்லாரும், சந்தோஷத்தருணங்களற்ற வேதனைகள், வலிகள், உயிர்வலிகள். எல்லோருக்கும் இருக்கும் வெறும் பரிவும் பட்சாதாபமும்தானென்றாலும் இது கொஞ்சம் அதிகம். வலியின் கற்பிதங்கள் கொடுக்கும் மனவலி வேறுவிதமான இம்சை. வார்த்தைகளில்லை.. மீளவேண்டும்.

••

Tuesday, January 29, 2013

மீசை மகாத்மியம்...



ரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு!! இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு  கொடுக்கவில்லை.

“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க?” எனக்கு முந்திக்கொண்டான்.

அவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு!!!. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.?”

“ம்ம்ம் நல்லாருக்கன்டா” என்றான்.

சிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க? பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்?”

“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன?”

“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா? கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது.

“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச..? மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா? அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான். 

மாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன். 

“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது.? அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார்.

ஆமாம் எனக்கு என்ன குறைச்சல்! என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குக்கூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தன்‘தான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வெய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சிகோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன். 

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!!!  அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது.

இங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகடிலிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார்.  கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார்.

எப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார்.

ரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந்த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன்.

இப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.

இப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன்.

“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.

“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன்.

“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா? நீய் செய்யி” என்றான்.

“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் குமட்டிலேயே குத்தினான், அந்த முக்கா மீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.


••
 
குறிப்பு: - மீள் இடுகை

Friday, August 24, 2012

சுக்குமி ளகுதி ப்பிலி..

.

கொல்லப்பக்கம் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரங்கள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்குடுக்கிற அம்மா இப்பவும் அதேமேரிதான் இருக்கு. நானிங்க ராநேரத்துல ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு, ஆர் ஆர் லாட்ஜ் பங்க் கடையில ‘அண்ணா ஒரு பழம்ணா’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாரு. அடி என்னப்பெத்தவளே நீ ரூவாய்க்கு மூணு குடுப்பியே இங்க பாத்தியான்னு மனசுலயே நெனச்சிக்க வேண்டிதான்.  பொழப்பத்த அம்மாக்கு பொழைக்கத் தெரிலியா, இல்ல எனக்கான்னு தெரில. பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.

••••••••••••

ரெண்டு ரூவாய தெருமொனைல ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்ரூவாய்க்கு எப்பாருக்கு 222 பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல (ரெண்டா கிழிச்ச லாட்டரி சீட்டு நடுவுல சுண்ணாம்போட) அதோட கா(ல்)ர்ரூவா கொட்டப்பாக்கு, கா(ல்)ர்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச மீர்ற கா(ல்)ர்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய சோடி போட்டுப்பமா சோடின்னு நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மேரி.

•••••••••••••

அந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், சேகரு டீக்கடைக்கு இந்தாண்ட காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி வெச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரத்தான் கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுக் கடையில வாங்கினா ஒரு கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகாப்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடை‘யும் சேர்த்து வித்துட்டு, புள்ளைங்க சம்பாத்தனையே போதும்னு வூட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அரிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.

••••••••••••

ஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள் எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பிச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட. அதுக்கப்பறம் கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திரா. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கும் தாராளமா போதும். இந்தவூட்டு மாடு கறவ நின்னுட்டா அடுத்து அந்த வூடு, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம், பருத்திக்கொட்டன்னு வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி, தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட இல்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.

•••••••••••

இந்த மம்புட்டி (மண்வெட்டி), அருவா இல்லைன்னா கோடாளி எது கால்ல வுழுந்தாலுஞ்செரி எப்டிக்காயம்பட்டாலுஞ்செரி எலந்த (இலந்தை) இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும். எப்பேர்பட்ட வெட்டுக்காயும் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் அப்பாக்கும், தாத்தனுக்கும் இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன ஒடம்புக்குகூட டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும் போலருக்கு.

•••••••••••••

அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.


மீள் இடுகை..

.

Monday, April 23, 2012

வரவேற்கிறேன்! வாழ்த்த வாருங்கள்!!

அன்பு நண்பர்களே,

நிகழும் மங்களகரமான நந்தன வருடம் சித்திரை மாதம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை (04-05-2012) காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தாராசுரம், கும்பகோணம் எம். ஆர். எஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் எனது திருமணத்துக்கு வந்திருந்து வாழ்த்துமாறு வேண்டுகிறேன். இதனுடன் உள்ள எனது திருமண அழைப்பிதழை நேரில் அழைத்ததாகக் கருதி வந்திருந்து சிறப்புற நடத்தித் தருமாறு விரும்பி அழைக்கும்

...பாலாசி.



Monday, April 2, 2012

ஒரு கூடும் சில குளவிகளும்..

*
கடந்த இருநாட்களில் 36 மணிநேரம் தூங்காமலிருந்திருக்கிறேன். இதிலொரு கொடுமை அலுவலக நேரத்திலும் கொட்டகொட்ட விழித்திருந்ததுதான். ஓர் இரவு கண்விழித்தாலே அடுத்தநாள் முழுதும் அர்த்தநாசம் குட்டிச்சுவர். ஆனாலும் நேற்றையப் பொழுதில் சில சுபங்கள். ஈரோடு வந்திருந்த பதிவரும் தீரா-இலக்கிய ஆர்வலருமான கோபியை சந்தித்து கொஞ்சநேரம் அளவளாவினேன். எங்களின் சங்கமங்கள் அனைத்திலும் பயணச் சிரமங்களைப் பொருட்படுத்தாது கலந்துகொள்ளும் இனிய நண்பர். இந்தவகை அண்ணன்களை சந்திக்கும்போது பெரும்பாலும் கால்கள் கடகடவென நடுங்க ஆரம்பிக்கும். ‘இந்தப் புத்தகத்த படிச்சியா, அந்தப் புத்தகத்த படிச்சியா’வென்று கேட்டுவிட்டு கடைசியில் ‘நீயெல்லாம் என்னய்யா மனுச’னென்று திட்டிவிடுவார்களோவென்ற பயம்தான். எனவே ‘எந்த பஸ்ல வந்தீங்க, எங்கங்க போனீங்க, சாப்டீங்களா, இந்த ரூம்க்கு வாடகை எவ்வளவு‘ போன்ற ‘இலக்கிய’த்தரமான கேள்விகளைக் கேட்க அவரும் பதிலுரைத்தார். ஓர் இலக்கியவாதியை இவ்விதமான கேள்விகளைக்கேட்டு ‘அவ்விதம்’ திருப்பாமலிருப்பது என்னுடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதெனப்பட்டது (with smiley). மாலை மூன்றுக்கு அவரை திருப்பூர் பேருந்தில் ஏற்றிவிட்டு அறைக்குச் சென்று தூஙகலாமென்றிருந்தேன். மனிதனுக்குமவன் மனதிற்குமான போராட்டத்தில் பெரும்பாலும் மனம் ஜெயித்துவிடுகிறது. அதிலும் அதீதமாய் நல்ல செயல்களுக்கு. தூக்கத்தைப்பார்ப்பதா, ‘கோபி’யாரைப் பார்ப்பதாவென்றதில் வென்றது அண்ணன் கோபி.

***

மற்றொன்று

நேசம் + யுடான்ஸ் + சேர்தளம் இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அவர்களிணைந்து நடத்திய சிறுகதை மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழாவும் நேற்று (01.04.2012) திருப்பூரில் நடந்தது. ‘போகலாமா வேண்டாமா, போகலாமா முடியுமா, அசதி.. தூங்கலாம், போகவேண்டாம் தூங்கலாம்,  தூங்கவேண்டாம் போகலாம்’ என்ற படிநிலைகளில் ஆர்வமும்,  கொஞ்சிய தூக்கத்தை பயணத்தில் கழிக்கலாமென்ற எண்ணமும் சேர்ந்தே உந்த, பேருந்தில் ஏறினேன். ஆனால் திருப்பூர் வரையில் கோவில்மணி நடுவாடும் நாக்கு கதியாக நின்றுகொண்டே பயணம். ‘விடியாமூஞ்சி, வேலை, கூலி’ பழமொழி ஞாபகம் வந்தது. போக... நிகழ்ச்சி நன்றாக நடந்தது. வலை நண்பர்கள் ஒன்றிணையும்போது கிடைக்கிற இனிமை சொந்த சுபகாரியங்களில்கூட இப்போது கிடைப்பதில்லை. புதியவர்களை காண நாணி முந்தானையொளியும குழந்தைகள் பதிவர்களைக் காணும்போது மட்டும் புழங்கிய வாசமடிக்குமோ என்னவோ. இயல்பாக ஒட்டிக்கொள்கிறார்கள். பரிசலின் பெண்ணும், விஜியக்காவின் பெண்களும் அப்படியே. கொஞ்சம் இறுக்கமான நிகழ்ச்சியின் இறுதியில் தப்பாட்ட குழுவினரின் சரியான ஆட்டம் நடந்தது. இக்காலம் இதைகாண புண்ணியம் தேவைதான். எல்லாம் அமைந்தாலும் மனிதனுக்கு அந்நேரத்தில் ரசிக்கிற மனம் கிடைப்பதரிது. கிடைத்தது. மொத்த நிகழ்வும் தேனூறிய அத்திப்பழம்.

நிகழ்ச்சி குறித்து மயில் விஜி

***

காலங்காலமாக திரைப்படங்களில் காட்டப்படுவதை மட்டுமே புற்றுநோய்க்கான தன்மையென்பதையே ஒருகாலத்தில் அறிந்திருந்தேன். இப்பவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்தனுபவங்கள் வாய்த்ததில்லை, அதன் கொடூரத்தை புகைப்படங்களிலும், ஏடுகளிலும் படித்ததோடன்றி. மார்பக புற்றுநோயை எதிர்கொண்டு அதையும் சவாலாக வென்று அதைப்பற்றி விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்கவேண்டுமென்ற எண்ணத்தில் திருப்பூர் நிகழ்ச்சியில் பேராசிரியை திருமதி.மோகனா அவர்கள் கலந்துகொண்டார். படித்ததை சொல்லும்போது ஏற்படுகிற அலட்சியத்தன்மை உணர்ந்ததைச் சொல்லும்போதே உறைக்கிறது. மேலும் இவர், இந்நிகழ்ச்சியொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

***

பதிவர் பல்டாக்டர் ரோகிணி அவர்கள் ‘ஒருகாலத்தில்’ வாய்ப் புற்றுநோய் வாய்ப்புகள் குறித்து எழுதியிருந்தார். பல் துலக்கும்போதெல்லாம் பயமாகவே இருந்தது. ‘பேய்’ அம்சம் கொண்ட கதைகளையோ, திரைப்படங்களையோ பார்த்துவிட்டு தூங்கினால் கனவிலும் பேய் வந்தாடும்... போலவேதான். நேற்றிலிருந்து இது அதுவா இருக்குமோ, அது இதுவா இருக்குமோ போன்றதான எண்ணங்களும் பயமும். முப்பதுக்குப் பிறகு ஆறுமாதத்திற்கொருதரம் முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது. ஆனாலும் எந்த எழவுக்குப்போனாலும் மருத்துவர்கள் ஊசியை எடுக்கிறார்கள். அது மூன்று மி.மீ. என்னுடலில் நுழைவதற்குள் தரைதட்டி எலும்பில் முட்டிவிடுகிறது. இதேபோலான பிரச்சனை என்னைக் கடிக்கும் ரங்குஸ்கி ரக கொசுக்களுக்கும் இருக்கும் போலிருக்கிறது. ‘நீ இன்னுமாடா இருக்க’ தோரணையில் மோந்து பார்ப்பதோடு சரி. அதுகெல்லாம் கொடுப்பனை வேணும் பாஸ்.

***

2004 ம் ஆண்டு ஜுலை 16ம் நாள் சென்னை கிண்டி நகர மக்கள் ஒரு அநாயசமான  அதிர்வை உணர்ந்திருப்பார்கள். செம்பொன்னார்கோவில் சிங்கமொன்று தன் பிடரியை சிலிப்பியபடியே சென்னை மண்ணில் முதலில் கால்வைத்தது அங்கேதான். சமகாலத்து தமிழ்த்திரை மரபுப்படி வலதுகாலை கடிகாரச்சுற்றுபடி மூன்று சுற்று சுற்றியபடியே தரையை ஓங்கி மிதித்தேன். தூசிதுரும்புகூட அசையவில்லை. போகட்டும். பிறகு போரூர் வாழ்க்கை, மைலாப்பூர், விண் டி.வி, சினிமா ஆசை, நடிகர் சத்யராஜை சந்திக்க ஏற்பாடு போன்றனவெல்லாம் நடந்தது. அக்கட்டத்தில்தான் என் கதையொன்று வாரமலரில் வந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் படித்து முன்னேறி மாவட்ட ஆட்சித்தலைவன் ஆகிறான் பாணியில். பிறகு கேட்கவாவேண்டும் ‘டேரக்டா ஹீரோதான்’ என்ற லட்சியக்கனவு வந்துவிட்டது. போரூர் நகர வீதிகள் கதறகதற கண்விழிப்பது என் பகற்கனவில்தானென்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். சொல்லமுடியாது இந்நேரம் தனுஷிற்கு சரியான போட்டியாக வந்திருப்பேன் ‘உடலளவில்’.

*

Friday, February 3, 2012

படர்க்கை

*

பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன்.

‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

‘இதான் உன்னோட அத்த’

‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’

‘இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன்.

எனக்கு சித்தியான பாலாவுடைய அம்மா சின்ன வயதிலேயே இறந்துவிட்டாள். இவளைப் போட்டுவிட்டு சித்தப்பனும் எங்கோ ஓடிவிட்டான். என்னதானிருந்தாலும் அப்பனாத்தா இல்லாத பிள்ளைகளை வளர்ப்பதென்பது புட்டிப்பால் கொடுப்பது போலத்தான். எண்ணையும் தண்ணீரும்போல ஒரு ஒட்டு இல்லாமல் இடைவெளி இருந்துகொண்டேயிருக்கும். வீட்டில் பெண்பிள்ளை இல்லாத குறையாக நாங்கள்தான் வளர்த்தோம். எனக்கு ஒரு தங்கையாக அம்மாவுக்கு ஒரு நல்ல மகளாக இருந்தாள். படிப்பு இத்யாதிகள் எதிலும் குறையில்லை.  

எடத்தெருவில் இருந்த 45 குழி இடத்தில் 15 குழியை நாங்களே வைத்துகொண்டு மீதி இடத்தை விற்கும்போது பாதி பணத்தில் வீடு கட்டிக்கொண்டு மீதியில் பாலாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் எண்ணினேன், அம்மாவுக்கும் அதான் எண்ணம். ‘நம்மள விட்டா அவுளுக்கு யாருப்பா இருக்கா?’ அம்மா அடிக்கடி சொல்லுவாள். வீடு கட்டி குடியும் போனாம். 10 பவுனுக்கும், சீர் செனத்திக்கும் போக எப்படியும் ஒரு கைப்பங்கு பணம் இருக்கும். அந்தப் பணத்தில் பிறகு என் கல்யாணத்தைப் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தேன்.

ஆனால் நடந்தது நேர்மாறாகத்தான். பாலாவுக்கு ஜாதகம் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லையென தட்டிக்கொண்டே போனது. வந்த ஜாதகத்திலும் பாதிக்கு மேல் புலுத்தி ஜாதகமாகத்தானிருந்தது. சரி இரண்டாந்தாரம் எதாவது கிடைக்குமா என்றும் தேடினோம். கொடுமையிலும் கொடுமை பெண்களை பிரத்தியில் ரெண்டாம்தாரத்திற்கு கட்டிக்கொடுப்பதுதான். யாரும் அந்த முறையை விரும்ப மாட்டார்கள். ஒரே ஒரு லாபம் இரண்டாம் தாரத்திற்கு கொடுத்தால் ஜாதகம் பார்க்க தேவையில்லை.  கும்மோணத்தில் ஒருத்தன் கிடைத்தான் நாலு பிள்ளைகளுடன். கேட்டவுடனே முகம் சுளித்தாள். எங்களுக்கும் சரியாகப் படாமல் விட்டுவிட்டோம். ரெண்டு வருடம் ஜாதகங்கள் வருவதும் போவதும், பெண் பார்க்க வருவதும் போவதுமாகத்தானிருந்தது. எதுவும் அமையவில்லை.

அம்மாவுக்கு சுகர் வந்து வாய் கோணிவிட்டது. கைகால்கள் அடிக்கடி மறப்பதும், சோம்பி விழுவதுமாக இருந்தாள். அந்த நேரத்தில்தான் வேறு வழியில்லாமல்தான் எனக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. மாமாவிடம் சொல்லி பெண்பார்க்கச் சொன்னார்கள். சொல்லி வைத்தது போல இந்த கவிதா கிடைத்தாள். பாலாவுக்கு மாப்பிள்ளை பார்த்த அனுபவத்தினால், முதலில் பார்த்த பெண்ணே ஒருவனுக்கு மனைவியாக அமைவதென்பது இக்காலகட்டத்தின் ஜென்ம பலனாகத் தெரிந்தது.

கவிதாவுக்கும் எனக்கும் திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின்போது மணமக்களுக்கு பின்புறம் காமாட்சி விளக்கு பிடிக்க கட்டுக் கழுத்தியைத்தான் நிற்க வைப்பார்கள்.நான்தான் பிடிவாதமாக பாலாவை காமாட்சி விளக்கு பிடிக்க வைத்தேன். அவளுக்கு அதில் ரொம்ப சந்தோஷமும் கூட. திருமணம் முடிந்தபின் பாலாவும், கவிதாவும் ரொம்ப அந்நியோன்யமாக இருந்தார்கள். அவர்களுக்குள் நல்ல நட்பும் இருந்தது. பாலா, அண்ணி அண்ணி என்று வாய்நிறைய அழைப்பாள்.

புதிதாக சென்ட் அடிப்பவன் அக்குளை மோந்து மோந்து பார்ப்பது மாதிரிதான் புதிதாக கல்யாணம் பண்ணினவர்கள் பாடு, மனைவிக்கு கணவனும் சரி, கணவனுக்கு மனைவியும் சரி. ஒருவரையொருவர் மோந்துகொண்டே இருப்பர். போலவேதான் நாங்களும். காலை எழுத்ததும் இருவரும் குளித்துவிடுவோம் என்றாலும் கலவி முடிந்தவுடன் பாத்ரூமுக்கு சென்று கைகால்கள் இத்யாதியை கழுவிவிட்டு வருவது எங்கள் பழக்கம். கூடாரத்தில் அம்மாவும் பாலாவும் படுத்திருப்பார்கள். நானும் கவிதாவும் சத்தம் வராமல் பொறுமையாக போய்வருவோம்.

ஒருநாள் பிற்பகலில் முடிந்தது. கூடாரத்தில் பாலா உட்காந்திருந்தாள். கவிதா கூடாரத்தின் வழியே கொல்லைக்குப் போகவும், ‘என்ன அண்ணி பகல்லியேவா?’ என்று சாடையாக கேலி செய்தாள். ரூமில் இருந்த எனக்கும் கேட்டது. கொஞ்சம் சங்கடமும், சங்கோஜமும் இருந்தாலும் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனக்கு ஒருவாரம் இரவு, ஒருவாரம் பகலாக வேலை மாறியிருந்தது. நாளாக நாளாக நாங்களிருவரும் வீட்டிலிருந்தாலோ அல்லது பேசிக்கொண்டிருந்தாலோ பாலா பக்கத்து வீட்டுக்குப் போக ஆரம்பித்தாள். என்னிடமும் அவளுக்கு பேச்சு குறைந்தது. கவிதாவுடன் எப்போதும்போல் இருந்தாள். புது உறவினர்கள் வருவதும்போவதும், நாங்கள் ஊர் சுற்றுவதுமென இரண்டு மூன்று மாதங்கள் பாலாவின் திருமணம் பற்றி எதுவும் பேசவில்லை. பாலாவும் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தனியாக படுக்க பயந்துகொண்டு எப்போதும் அம்மாவுடன் கூடாரத்தில்தான் படுப்பாள் பாலா. ஆனால் சிலநாட்களாக மளிகை சாமானும், பீரோவும் இருக்கும் ரூமில் படுத்துக் கொள்வதாக அம்மா சொன்னாள். என் ரூமுக்கு அடுத்த ரூம்தான் அது. ஒருநாள் பின்னிரவு நேரத்தில் முனகல் சத்தம் அவள் ரூமிலிருந்து கேட்டது. கவிதாவை பார்த்தேன். நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். நானும் ஜுரத்தில்தான் முனகுகிறாள் போலிருக்கிறதென்று அம்மாவை எழுப்பி பார்க்கச்சொன்னேன். ‘அதுல்லாம் ஒண்ணுல்ல போய் பேசாமப் படுடா’ என்றாள். மறுநாள் மறுநாள் அதே நேரம் அதே முனகல் தொடர்ந்தது.

அம்மாவிடம் எதுவும் கேட்க முடியவில்லை. ஒருநாள் பகலில் வீட்டிலிருந்த நேரத்தில் பாலா கோவிலுக்கு போயிருந்தாள். மனதில் அழுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தை தீர்த்துகொள்வதற்காக நான் அவளுடைய அறைக்குள் நுழைந்தேன். கவுச்சி வாடை அடித்தது. அம்மா அலறி அடித்துக்கொண்டு பின்னாலயே வந்து ‘அந்தண்டப்போ மொதல்ல’ என்று கையைப் பிடித்து தள்ளினாள்.

‘என்னம்மா என்னமா பிரச்சனை?’ எதோ மர்மங்களை உணர்ந்தவனாய் கேட்டேன்.

‘பாவம் பண்ணிட்டம்டா மவனே.. பாவம் பண்ணிட்டம்டா, வயசுக்கு வந்த பொண்ண வச்சிகிட்டு ஒனக்கு கல்யாணம் பண்ணது எவ்ளவு தப்புன்னு ரெண்டுவாரமா அனுபவிக்கிறன்டா.. அந்த பாவிக்குதான் அமையலையே பெத்ததுக்காச்சும் கால்கட்டு போட்டுப் பாப்பம்னு தானே செஞ்சேன்... இப்டி ஆவும்னு நெனச்சிப்பாக்கலையேப்பா...’ அம்மா சத்தம்போட்டு அழமுடியாமல் மழுமாறிக்கொண்டே கதறினாள். ‘உன்னயாச்சும் தனிக்குடித்தனம் அனுப்பிருக்கணும் அதுஞ்செய்யாம உட்டனே.. ஒருத்தி வாழ்க்கயையே நாசம் பண்ணிட்டம்பா... இந்த பாவத்த எங்கபோயி தெத்தப்போறன்னு தெரியலையே......’

என்னால் அம்மாவை சமாதானப்படுத்த முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுதாள். பாலாவுக்கு இப்ப என்ன பிரச்சனை என்பதை அறிவதிலேயே மனசு கூடுதலாக பிரயத்தனப்பட்டு அலைந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் அன்று இரவே பின்னிரவில் தெரியாமல் அவள் அறைக் கதவைத் திறக்க முயன்றேன். முடியவில்லை. சாவித் துவாரத்தின் வழியே பார்த்தேன். போர்வைக்குள் முனகிக்கொண்டே சுருண்டு கிடந்தாள். அருகில் ஒரு பாவாடை நிறைய இரத்தக் கறையாக இருந்தது. எனக்கு சூழ்நிலை புரிந்தது. முதன் முதலாக வாய்விட்டு கதறி அழுதேன். அம்மா எழுந்து வந்துவிட்டாள். ‘பாத்தியாடா.... பாத்தியாடா...’ என்று அவளும் கட்டிக்கொண்டு கதறினாள். ஆனாலும் பாலா ரூமில் முனகல் நிற்கவில்லை.

மறுநாளிலிலிருந்து தீவிரமாக வரன் தேட ஆரம்பித்தேன். மறுபடியும் அதே நிலைதான். பாலா சித்தப் பிரமை பிடித்ததுபோல் தானகவே பேசிக் கொள்ளத் தொடங்கினாள். யாருடனும் பேசுவது கிடையாது. கவிதாவுடன் அறவேயில்லை. பக்கத்துவீட்டுக்கு போவதும் நின்றுவிட்டதுபோலும். அந்த அறையிலேயே கிடந்தாள். ஒருநாள் அம்மாவும் நானும் ரெங்கபாஷ்யம் கல்யாணத்திற்கு சென்றிருந்தோம். கவிதா மட்டும் வீட்டிலிருந்தாள். அன்றுதான் அந்த விபரீதமும் நடந்தது. நாங்கள் திரும்பி வரும்போது கவிதா தலையில் அடிபட்டு ரெத்த வெள்ளத்தில் துடித்துகொண்டிருந்தாள். காது ஒருபக்கம் பிய்ந்து குழவிக்கல்லுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. பாலாவைத் தேடினேன், ஆளைக்காணோம். எனக்கு புரிந்துவிட்டது.

•••••••

நல்ல மழை. திருச்சி பேருந்து நிலையத்தினுள் சுக்கு காபிக்கு கூவி கூவி அழைத்தார்கள். அந்தப் பின்னிரவின் குளுமைக்கும், சாரல் ஊதலுக்கும் அது தேவையாகவும் பட்டது. சுக்கு காபியுடன் ஒரு தண்டவாளத் தூணினோரம் சாய்ந்து நின்றேன். ‘வர்ரீங்களா?’ என்று யாரோ கூப்பிட திரும்பினேன். ஒயர் கூடையுடன் பாலா நின்றிருந்தாள். ஒரு சில பெரிய பேருந்து நிலையங்களில் இதுபோல ஒயர் கூடையுடன் நிற்கும் பெண்களை பார்த்திருக்கிறேன். பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் விலைமாதென்று தெரிந்துவிடும். பாலாவை கொஞ்சம் நிதானித்துதான் அடையாளம் கண்டேன். தூக்கிவாரிப் போட்டது. நெஞ்செல்லாம் அடைத்தது. பாலா என்னை அடையாளம் காணவும் வாய்விட்டு ஓவென்று அழுதபடியே கண்மண் தெரியாமல் ஓடினாள். ஈரோட்டிலிருந்து பேருந்து நிலையத்தின் உள்ளே வந்த பேருந்தொன்று வந்த வேகத்தில் அவள்மீது மோதவும் பின் சக்கரம் அவள் மண்டையில் ஏறியது.

••••••

பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன்.

‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

‘இதான் உங்க அத்த’

‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’

இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன். கண்ணீர்தான் வரவில்லை.


நன்றி பண்புடன் இணைய இதழ்


Monday, December 12, 2011

சங்கமம்‘2011 அன்போடு அழைக்கிறோம்

.

அதிகாலையும் பனிப்புகையும் தொண்டையிலிறங்கும் இளஞ்சூடான தேநீரும் போல இந்த மாதத்திற்கெனவே சில சிறப்பான நிகழ்வுகள் இருக்கின்றன.

மழைக்காலத்தே பசியிலலையும் எறும்புக்கூட்டங்களுக்கு சாமிமாடம் முன்பு போடப்பட்ட அரிசிமாக் கோலம், மார்கழிமாதக் காலையில் சாணந்தெளித்த வாசலதில் வைத்த மகரந்தம் மிளிரும் பூசணிப்பூ, எரியூட்டப்படும் மண் அடுப்புகளில் கிழக்கு நோக்கி முதலில் பொங்கும் வெண்சோற்றுப்பானை, தூரதேசம் வாழும் மகனின் கையில் தாய் தன்கைப்பட சுட்டுக்கொடுத்த முறுக்கும், அதிரசமும் கிடைக்கும் நேரம், இருளடர்ந்த வீட்டினரையில் விளையாடும் குழந்தையின் கையிலிருக்கும் விளக்கெரியும் பொம்மை, தீப்பிழம்புகள் காடழிக்க நல்லரவத்திற்கு கரையான் புற்று கண்படும் நொடி, முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம், போலவேதான் எங்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் நடத்தும் பதிவர்கள், இணையதள வாசகர்கள், முகநூல் மற்றும் ட்விட்டர் நண்பர்களுக்கான மாபெரும் சங்கமம்‘2011. 




நாள் : 18.12.2011 ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணிமுதல் மதியம் 2 மணிவரை
இடம் : ரோட்டரி CD அரங்கம்
பெருந்துறை ரோடு,
பழையபாளையம், ஈரோடு

முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011 நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு

தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு:
தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி (செயலர்) 90037-05598,
கார்த்திக் (பொருளர்) 97881-33555,
ஆரூரன் - 98947-17185 ,
கதிர் – 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர் - 98658-39393,
ராஜாஜெய்சிங் - 95785-88925,
சங்கவி – 9843060707

இணையத்தில் இணைந்த இதயங்கள் இச்சங்கமத்தில் சங்கமிக்கட்டும்.  அன்புதோய்ந்த கரங்களுடன் வரவேற்க காத்திருக்கிறோம்...  


.

Monday, November 14, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்..

.

பேருந்தில் ஏறும்முன் நடத்துநரிடம் ‘இடமிருக்கா?’ என்று கேட்பது என் வழக்கமும்கூட. மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘உனகெதுக்குப்பா தனியாவொரு எடம்.. போ போ அங்கண ஓரமா ரவையோண்டு இருக்குப்பாரு’ என்பதாக தலையசைப்பார். கடக்கு கழுதையென்று தனியாவர்த்தனமாக ஓரிடம்பிடித்து உட்காரும்போதெல்லாம் கூடவே இன்னுமிருவர் வலுக்கட்டாயமாக நெருக்கியடித்து உட்காருவர், அது இருவரிருக்கையாயினும். ஏன்டா இப்படியென்று கேட்கவும் முடியாது. ‘ஒனக்கு இந்த எடம் போதும்’ மென்று பொளிச்சென சொன்னாலும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ‘ண்ணே ...க்கு ஒரு டிக்கெட்’ என்றால் ‘அரையா முழுசா?‘ என்பார் நடத்துநர், பார்வையில். உயரத்தில் இரண்டடி குறைவாகவும், இந்த இரண்டு மி.மீ நீள மீசையுமில்லையென்றால் மனசாட்சிக்கு விரோதமின்றி பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும் அரை கட்டணச் சலுகையில் என்னால் பயணிக்கமுடியுமென்பது தற்காலத்திற்குமான நிகழ்தகவு. இந்த மிகை, குறையல்லவென்பது எனைக் கண்டறிந்தவர்களுக்கும் தெரிந்ததுதான். இதைபோன்ற சிறப்பு நிகழ்வுகள் கூடிவந்து கும்மியடிக்கும்போதுதான் வருடந்தோறும் ஐப்பசியும் 8ம் நாளும் வந்து தொலைக்கிறது. அடுக்குப்பானையிலிருக்கும் அதிரசம்போல கடந்த இரண்டு வருடங்களாக 27 ம் அகவையிலேயே குடியிருந்தது ஒரு இனிமைதான். சென்ற ஐப்பசி எட்டுக்குப்பிறகு அதிலும் பூசணம் பூத்தது. 30 தொடங்கிவிட்டதாம். கலிகாலம்.
•••

இந்த நேரத்தில் நீங்கள் தாராசுரம் என்ற ஊரைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 5 ஆவது மைல்கல் தொலைவிலுள்ளது இந்தப் பேரூர். இங்குள்ள, உலகப் பாரம்பரிய சின்னங்களும் ஒன்றான ஐராவதேஸ்வரர் திருக்கோவில் 12 ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலும் மேற்கண்ட கோவிலும் கலையில் நிறைய ஒற்றுமையுடன் திகழ்வதாக அறியப்படுகிறது. மேலும் இக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இசைப் படிகள் உள்ளது. அதாவது 7 கருங்கற்படிகளும் 7 ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைப்பற்றி  ஒரு முழுமையான பயணக்கட்டுரையை பதிவர் புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கவும்
•••

கூத்தாடி கிழக்கே பார்க்கவும் கூலிக்காரன் மேற்கே பார்க்கவும் காரணமிருக்கிறது. கூத்தாடியின் பிழைப்பு ராப்பொழுதில். ஆகவே அவன் விடியலை கிழக்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். கூலிக்காரன் பிழைப்பு பகற்பொழுது. அவன் சூரியன் மறைவை மேற்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். போலவே மாயவரம் மண்ணில் பிறந்த நான் மேற்கண்ட பத்தியில் தாராசுர பெருமை போற்றவும் காரணமிருக்கிறது. என் வருங்காலத்திற்கானவள், அதாவது இந்த மாதொருபாகனுக்கான மாதவள்  அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். அது, அதற்கு  இன்னொரு பெருமை.

•••

பெண்பார்க்கப் அந்த வீட்டினுள் நுழையுமுன்னமும் படபடப்பிருந்தது. ‘ஏங்க இவரு மாப்பிள்ளைக்கு கடைக்குட்டி தம்பியா?’ என்று யாராவது என்னைப்பார்த்து கேட்டுவிடும் அபாயமிருந்தது. நல்லவேளை அதற்கான வாய்ப்பை உறவினரொருவர்  தடுத்து ‘இவர்தான் மாப்பிள்ளை’ யென்றார். அப்பாடா‘ என்றிருந்தது. காபி டம்பளரை நீட்டியவள் முன் நாணலாக நாணவும் தெரியாமல், வீராப்புடனுமில்லாமல் சங்கோஜப்பட்டேன். பரஸ்பரங்கள் முடிந்து இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது, இருவருக்கும். அடுத்த அகவை வருவதற்குள் நல்லூணைப் பெருக்கி உடலையும் பெருக்கி ஒரு டி.எம்.டி முறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ அல்லேல் குறைந்தபட்சம் பி.வி.சி குழாயையாவது வளைத்துக்காட்டும் தண்டுளப வண்ணனாகவோ மாறிவிடவேண்டுமென்பதை வருங்காலத்தாளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் கொண்டை முடிந்திருக்கிறாள்.

•••

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யமொன்றறியோம் பராபரமே என்பதற்கிணங்க கவிதையெழுதுவதை சமீபகாலமாக நிறுத்தியிருக்கிறேன். தெரியவில்லையென்பது இரண்டாம்பட்சம். நல்ல எளிமைக் கவிதைகளை படிப்பதிலிருக்கும் ஆர்வம் எழுதுவதில் கிஞ்சித்துமில்லை. ஒரு மதிமயங்கிய மாலைநேரம், மழைக்காலம் எதையோ பேசி, எதையோவொன்றைச் சொல்லப்போக என்னவள், ‘நானும் கவிதையெழுதுவே’னென்று என் வலப்பக்கச் செவியின்வழி  குண்டைத் தூக்கிப்போட்டாள். நள்ளிரவு 12 மணிக்குமேல் கவிதையெழுதத் தோன்றினாலும் உடனே துயில் கலை(த்)ந்து ஒரு கோடுபோட்ட குறிப்பேடு முழுக்க கவிதைகளாய் சமைத்துவிடும் வல்லமை  பெற்றவளாம். மாமியார்கூட புளங்காங்கிதமடைந்தார். இந்த கவிதாயினிக்கு ‘சாமி’ வராமல் காலமுழுக்க பார்த்துக் கொள்ளவேண்டுமென்பதே என் இப்போதைய ஆசை.


Friday, September 16, 2011

வதம்

துண்டான சிலந்தியின் கால் துடிப்பதைபோல அவளின் இடதுகை மட்டும் பாயில் பிறாண்டிக் கொண்டிருந்தது. இரண்டு கண்முழிகளும் பிதுங்கி மேற்நோக்கி நிலைகுத்திவிட்டது. இந்நேரம் அவள் நாடி அடங்கியிருக்கும். இத்தனை ரண வேதனையும் நெஞ்செரிச்சலையும் தாண்டி என்மனதில் பூரண நிம்மதி, சந்தோஷம். இரண்டுவாரமாக இருந்த என் வயிற்றெரிச்சல் இன்று அடங்கிவிட்டது. ஆனாலும் வாய்விட்டு சிரிப்பதற்கு என்னிடம் திராணியில்லை. ஒரே இறுக்கமாக இருக்கிறது. இந்த மரமட்டைகள் அசைந்து தொலைத்தால் தேவலை. வாசற்கதவுக்கூட திறந்துதான் கிடக்கிறது.  இவள் போட்ட இந்தக்கூச்சலை யாராவது கேட்டிருப்பார்களா? இருக்காது... இருக்காது. எனக்கே லேசாகத்தான் கேட்டது.  பாஷாணம் எனக்கும் வேலை செய்கிறது. மெல்ல மெல்ல பார்வை மறைவதை நன்றாக உணரமுடிகிறது. கூரையின் மோட்டுவலைக் குச்சிகள் கோடுகோடாய்த்தான் தெரிகிறது.


காலையில் செய்தி தெரிந்தபின் என்னாகுமோ!? கலைந்த கோலமும் அதனை மொய்க்கும் எறும்புகளுமாய் ஊர் சனமே கூடி நிற்கும். ஆளாளுக்கு வாயில் வந்ததை மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். “சும்மாவாடி சொன்னாங்க… புத்திக்கெட்டதுங்க பூமிக்கிப்பாரம்னு” , “இந்த ரெண்டுங்கெட்டானோட வாழறதுக்கு அவ இப்டி சாவலாங்கறேன்” “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு வளத்தத தாரவாத்துட்டுதுங்க, இனி இருந்தென்ன? இல்லன்னாயென்ன? பேரன்பேத்தி பாத்துட்டு போயிருக்கலாம், என்ன கஷ்டமோ என்னமோ?” இப்படி. எப்படியும் எவனாவது ஓடிப்போய் பபிதாவுக்கு தந்தி அடித்துவிடுவான். அவளிடமிருந்து வந்த கடிதங்கள் குதிருக்கு பக்கத்தில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதிலேயே அவளின் முகவரியும் இருக்கிறது. MOTHER AND FATHER DEAD அல்லது VAITHYANATHAN AND ANNAM DEAD இப்படித்தான் கொடுக்கப்போகிறார்கள். இப்படித்தான் நாலைந்து எழவு வீடுகளுக்கு நானும் கொடுத்திருக்கிறேன்.


செய்தி தெரிந்தால் பபிதா துடித்துதான் போவாள். சிறா உடைக்கும் கோடரியை நடுமாரில் போட்டதுபோல்தான் இருக்கும், வயிறிலும் வாயிலும் அடித்துக்கொள்வாள். அந்த நேரத்தில் பஸ் கிடைக்குமோ என்னமோ?. அவளுக்கு எங்களைவிட்டால் நாதியில்லைதான், அதுவும் என்மேல் அவளுக்கு ரொம்பவே ப்ரியம். ஒரே பெண், சொல்லவா வேண்டும்.. எத்தனை ஊட்டி வளர்த்திருக்கிறேன். இவள் வயிற்றில் பிறந்ததுதான். கல்யாணம் முடிந்து இரண்டுவாரம்தான் ஆகிறது. நேற்று ஊருக்குப் போகும்போது கலங்கிய விழிகளுடன் என்னையேன் அப்படிப் பார்த்தாளென்று தெரியவில்லை. தீர்க்கதரிசனம் என்பார்களே! அதுபோல் எதாவது இருந்திருக்குமோ? இருக்கும் இருக்கும்.. நான் வளர்த்தவளாயிற்றே. பெண் வீட்டாரின் மூன்று அழைப்புகளும் முடிந்து ரெண்டுபேரையும் நேற்றுதான் அனுப்பிவைத்தோம். நானும் அவள் நல்லபடியாக போகட்டுமென்றுதான் காத்துக்கிடந்தேன். பபிதாவை நினைத்தால் கொஞ்சம் சங்கடமாகயிருந்தாலும் இது சரியான முடிவுதான். என்ன செய்வது?.


பலநாள் திருடன் ஒருநாளில் மாட்டுவான் என்பார்கள். ஒருவேளை அந்தச் செய்தி பப்பிக்குத் தெரிந்தால்... அவ்வளவுதான், நாண்டுகொள்வாள், இதைவிட பெரிய அவமானம் அவளுக்கு கிடையாது. குடியே முழுகிவிடும். அய்யோ, வேண்டாம்..வேண்டாம், நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அந்த மாதிரி நடப்பதற்குதான் இனி வழியில்லையே. அன்னம் வாய் திறந்தால்தான் உண்டு. அவள் வாய்தான் பிளந்துகிடக்கிறதே. ஹ..ஹ... என்னமோ சொல்வார்களே கரவம் கட்டி பழிதீர்ப்பதென்று. இந்த ரெண்டு வாரமும் என் மனம் கிடந்து எப்படித் துடித்தது, யாருக்காவது தெரியுமா?.. எத்தனை சாணக்கியக்காரி, கைகாரி இந்த அன்னம். நாக்கில் எத்தனை கொடுக்குகள். சாகும்போதுக்கூட என்ன துடுக்கான பேச்சு பேசுகிறாள்.


எனக்கும் அன்னத்துக்குமான இந்த 24, 25 ஆண்டுகால வாழ்க்கை மேம்போக்காக அப்பா, அம்மா ஸ்தானத்தில் பப்பிக்கு தெரிந்தாலும் இலைமறை காய்மறையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்த விசயம் வெளியுலகத்திற்கு தெரிந்தால் என்னாவது? வெளியுலகம் கிடக்கு, முதலில் பபிதாவிற்கு தெரியாமலே போய்விடவேண்டும். இனித்தெரியவும் வாய்ப்பில்லை. சுப்பிணி ஒருத்தனை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது.  அவனும் சொல்லக் கூடியவனில்லை. மானஸ்தன்தான். என்ன பெரிய மானஸ்தன்? பொல்லாத மானஸ்தன், நயவஞ்சகன்... காரியசாலி.. அவனைவிட்டால் இது வெளியில் ரெண்டாம்பேருக்கு தெரியாது, சொல்லமாட்டான் அவன்...


தெரிந்தால்தான் என்ன? நான் இனி எதைப் பார்க்கப்போகிறேன். தோ, இந்த பூரணம் அற்பமாகப்போகிறது. பிராணன் போனப்பிறகு என்ன நடந்தால் என்ன..? இந்த சுப்பிணி இல்லையென்றால் எனக்கும் அன்னத்துக்குமான வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்!! இருந்திருக்குமா? அவன் முன்னமே செத்திருந்தால் இது சாத்தியம். நிச்சயம் இருந்திருக்கலாம், ஆனால் இவள்.. நெஞ்செல்லாம் வஞ்சம், சண்டாளி... செத்தாள் சனியன், சாகட்டும், சாகட்டும்.


அப்போது எங்களுக்கு கல்யாணம் ஆகி 6 மாதமாகியிருந்தது. தனிக்குடித்தனம். அதற்குள் எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது, மாயை. வேண்டா வெறுப்பான வாழ்க்கையாக தெரிந்தது. கொல்லன் பட்டறையில் பதம் பார்த்தடித்த அரிவாள் முனையில் சம்மட்டியை போட்டு மழுங்கடித்தாற் போலாகிவிட்டது. வேறென்ன சொல்வது? அன்னம் அன்று காலரா வந்துகிடந்தாள். பக்கத்தில் பார்த்துக்கொள்ள ஆளில்லை. இருவர் வீட்டிற்குமே நான் சொல்லவுமில்லை. பார்த்துக்கொள்ளலாமென்ற அசட்டை. நான் பட்டறையில் கிடந்தேன். முதல்நாளே வயிற்றைப் பிடித்துக் கிடந்தவளை நான்தான் அலட்சியப்படுத்திவிட்டேன். அவளும் தன் தீவிரத்தைக் காட்டவில்லை. இந்த சுப்பிணி பக்கத்து வீட்டுக்காரன். துணிமணியெல்லாம் கழிந்து கிடந்தவளை தூக்கிக்கொண்டு அவன்தான் ஆஸ்பத்திரிக்கு ஓடியிருக்கிறான். பிறகு சேதிவந்துதான் அரக்கபறக்க நானும் ஓடினேன். காய்ந்த மாவிலைப்போல படுக்கையில் கிடந்தாள். எனக்கும் உச்சிமண்டையில் அப்போதுதான் உரைத்தது. ஒரு உயிரை உதாசீனப்படுத்துமளவுக்கு எத்தனை வன்மம், வக்கிரப்புத்தி எனக்கு. படித்து என்ன பிரையோஜனம். ஒன்றுமில்லை. ஒரு நல்ல வேலைக்குக்கூட போகமுடியவில்லை, நல்ல புத்தியும் இல்லை, இந்த உடல், நடை, உடை, பாவனை எதுவும் ம்கூம்....


அப்போதெல்லாம் நான் சுப்பிணியை தினமும் வணங்காத குறைதான். அவ்வளவு மதிப்பு அவன் மீதிருந்தது. நண்பர்களைப்போல நல்ல பழக்கம்தான் சுப்புணிக்கும் எனக்கும். அவனுக்கு நல்ல தலதல உடல்வாகு, மண்வெட்டி இலைபோல ஏந்தலான மார்புகள், தலை, கை, கால், மூக்கு முழி எதுவும் குறையில்லை. என்னைப்போலில்லைதான். எனக்கென்ன குறைச்சல் நானும் அவனைப்போல ஆண்பிள்ளைதான், ஆமாம் ஆண்பிள்ளைதான். அன்னத்தை தவிர எல்லாருக்கும் நானொரு ஆண்மகன்தான். தாம்பத்தியத்தை அன்னம் ரொம்பவும் விரும்பியிருப்பாள் போலிருக்கிறது. ஆனால் வெறும் தாம்பத்தியம்தான் இந்த வாழ்க்கையா? ச்ச்ச.. நானும் அவ்வாறு நினைக்கவில்லைதானே. அதிலும் குறையாக எனக்கு தெரியவில்லையே...


ஆனால் அன்னம்.. இந்த அன்னம்.......? இதோ கோசா..கோசா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கத்தியே செத்துப்போனாளே இந்த அன்னம்.. இவளைத்தவிர நான் எல்லோருக்கும் ஆண்பிள்ளைதான். என்னைப்பற்றி யாரிடமாவது சொல்லியிருப்பாளா? இருக்காது, சொல்லியிருந்தால் அக்கம் பக்கத்துக்கு சிறுக்கிகள்
என்னை ஏளனமாக பார்த்திருக்கவேண்டும். யாரும் அப்படி பார்த்ததே கிடையாது. ஆங்... ஆனாலும் சகுந்தலா சிறுக்கி மட்டும் ஒருமாதிரி வெடைப்பாக பார்ப்பாள், அப்பப்பா அதில்தான் எத்தனை எள்ளல்...!! த்தூ...


எப்போதோ பள்ளிவயதில் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு சிங்கானோடை ஜோசியக்காரன் சொன்னான், அந்த கருநாக்கன்தான் சொன்னான்..  இன்னும் ஞாபகமிருக்கிறது. ‘இது, பொம்மனாட்டி ஜாதகம்ல, இது தப்பிப்பொறந்தது, கேந்திரஸ்தானம், லக்னத்துல புதனும், சுக்கிரனும் சேந்துக்கெடக்கான், சந்திரன்  உச்சம்... புதன் அலி, சுக்கிரனும், சந்திரனும் பொம்பளச் சாதி.... ம்ம்ம்... ஜாதக அம்சமே அதாஞ்சொல்லுது, ஆளு பாத்தாலே தெர்லயா... ‘ஆனாலும்?’ இரண்டு மூன்று விரல்களை எண்ணிவிட்டு பிறகு சொன்னான் ‘....... காலத்துல சரியாயிடும், பாருங்க. கெட்டிக்காரனாயிடுவான்’.


உண்மைதான், என் பேச்செல்லாம்கூட ரெண்டுங்கெட்டான் நிலைதான், இப்போதெல்லாம் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன், மாற்றிகொண்டேனென்றால் அதிகம் எவரிடமும் பேசுவது கிடையாது. வாயைக் குதப்ப வெற்றிலைப் பாக்கு, இருக்கவேயிருக்கு. வேறென்ன.. அப்போதெல்லாம் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ள ரொம்ப பிரியப்படுவேன். ஏனென்றும் தெரியாது. அந்த பருவத்தில் ஆண்கள் மீதான விருப்பம்தான் மிதமிஞ்சியிருந்தது. பள்ளியில் என்கூட படித்த பயல்கள் எல்லாமே முதுகுக்குப்பின்னாடி ‘கோசா, ஒம்போது’ என்றுதான் பேசிக்கொள்வார்கள். எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் எனக்கு அது பொருட்டில்லை, பழகிப்போய்விட்டது.


ஒரு மாட்டின் கன்றுக்குட்டியை தினமும் தூக்கிப்பழகினால், அது மாடானப்பிறகும் நம்மாள் தூக்க முடியும். அதுபோல்தான் எல்லாமே எனக்கு பழகியிருந்தது. புளித்துப்போன வார்த்தைகள். ஒரு உச்ச வெறுப்பான நாளில் அன்னத்துக்கும் எனக்கும் சண்டை. பப்பிக்கு அப்போது மூன்றரை வயதிருக்கும். அன்னம் என்னை ‘வாடா, போடா’ போட்டு திட்டினாள். ஓங்கி அறைந்தேன், ‘டேய் கோசாப்பயலே என்னையாடா அடிக்கிற? சாண்டக்குடிக்கார, உங்கூட எவளாச்சும் குடும்பம் நடத்துவாளாடா, இம்மாந் தண்ணிக்கு உன்னய தெருவுல கையேந்த விடறேன்டா’ என்று பிடித்து தள்ளினாள், பிறகு அப்பன் வீட்டுக்கு போய்விட்டாள். பிறகு மாமனார் சமரசம், இத்யாதிகள். ஆனாலும் அவள்மனதில் என் மீதான இளக்காரப் பார்வை தொடர்ந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. நிஜமாகவே குமட்டுகிறது... உவ்வ்வ்... பாஷாணம் வேலை...


இத்தனை நாள் இல்லாத அல்லது தெரியாத அந்த இடி இரண்டு வாரங்களுக்கு முன்னால்தான் என்தலையில் விழுந்தது. அது எனக்கு தெரியாமலே இருந்திருக்கக்கூடாதா?... பப்பி என் மகளே இல்லையாம்.


‘மகமாயி.. மகமாயி.. நித்தம் உன்னக் கும்பிடுறனே... என்னடி சோதனையிது..’ கொல்லைக்கட்டில் இந்த சிறிக்கியும், அந்தப்பயலும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, எவ்வளவு அன்யோன்யமாக பேச்சு அவர்களுக்குள், குசுகுசுன்னு. ‘தாயே... மகமாயி...மகமாயி... நீயாச்சும் அப்பவே இவள காட்டிகொடுக்கக்கூடாதா?...’ ஆமாம் தெரிந்துதான் என்ன? ஒன்றும் கிடையாது. என் வாழ்க்கையே பப்பிக்காகதானே... அதெப்படி? இத்தனைக்காலம் எனக்குத் தெரியாமல்.... இவர்களின் உறவு புடம்போட்டதுபோல் மறைந்திருக்க முடியும்?.. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திருக்கும், எத்தனை நாள், ராப்பகல் பாராத பட்டறை வாழ்க்கை.. தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டது பிறகென்ன... பப்பிக்குப்போட்ட அந்த நாலு பவுன் நகையும், அவன்தான் கொடுத்திருப்பானோ? அவனேதான்.. நான் கேட்டதுக்கு இவள்தான் பதிலே சொல்லவில்லையே.. அப்படித்தானிருக்கும். அய்யோ பப்பி.. பப்பி..  ‘ச்ச்ச்ச்ச... இதென்ன புதிசா.. ஞாபகம் கொடுக்கும் பப்பியின் முகம் அவன் மூகமாட்டம்... அந்த உள்ளி மூக்கு அவனுடையதுதானோ? அவனுடையதுதான்.. அவனுடையதுதான்.. அப்படியே அவனைத்தான் உரித்துவைத்திருக்கிறாள். இத்தனைநாள் எனக்கு தோன்றவில்லையே.. இதென்ன.. ச்சை..ச்சை..


இந்த பாஷாணம் என்ன இப்படி உடம்பை முருக்குகிறது. யப்பா.. நெஞ்சிக்குள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதுபோல் எரிகிறது.... அன்னம் இன்று பரங்கிப்பழம் போட்டு பூண்டுக் குழம்புதான் வைத்திருந்தாள். அதில்தான் இதை ஊற்றினேன். பூண்டு வாடை எல்லாவற்றையும் மறைத்தேவிட்டது. நல்லதுதான். ஒன்றரை தட்டு சாதமாவது சாப்பிட்டிருப்பாள். தெரிந்ததாலோ என்னமோ அரைதட்டுக்குமேல் என்னால் முழுங்க முடியவில்லை. ரெண்டு மொனரு தண்ணீரும் குடித்தேன்.


அன்னம் போய்ச்சேர்ந்து இவ்வளவு நேரமாகியும் நான்மட்டும் இழுத்துக்கொண்டு கிடக்க அதுதான் காரணம். ஆனாலும் பூண்டுக்குழம்பில் பரங்கிப்பழம் போட்டால் எவ்வளவு ருசி!! நன்றாக வெந்த சேமியாபோல அதன் சதைகள், ஹும்.. ரசித்து ருசித்துச் சாப்பிடவேண்டும். ‘நாடகம் விடும் வேலைதான் உச்ச காட்சி நடக்குதம்மா....’ பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது. ‘கண்ணெல்லாம் சொருகுதுடி, நெஞ்செரிச்சல் தாங்கமுடியலடி ப்ப்பி...தாயீ.. நீ என் பொண்ணேயில்லையாமே?.. அய்யோ..அய்யோ..அய்யோ.. இது அடுக்குமா? தலையிலகூட அடிச்சிக்க முடியலடி.. சண்டாளி... செத்தா... இப்டி ஒரு வாழ்க்கை தேவையாடி ஒனக்கு அன்னம்..?? தேவயா......’ பூலோகம் இருண்டது.

நன்றி அதீதம்

Friday, July 29, 2011

காத்திருத்தல்


பெரும்பாலும் பெரிய விசயங்களைவிட சிறுசிறு விசயங்களில்தான் காத்திருத்தலென்பது ஒரு சுமையெனப் படுகிறதெனக்கு, என் புத்திக்கு. நான் காத்திருந்த நேரங்களைவிட காக்கவைத்த நேரங்கள்தான் அதிகமிருக்குமென்பது இதையெழுத நினைக்கும்போதுதான் ஞாபகம் வந்துதொலை(க்)கிறது. விவசாயி மழைக்கு, மாணவன் பரிட்சை முடிவுக்கு, இளைஞன் காதலுக்கு, பெண் திருமணத்திற்கு, ஒரு குடும்பத் தலைவன் கணக்குப் போட்டு கடன் வாங்கி பின் வரும்படிக்கு என இப்படி ஒவ்வொரு காலத்திற்குமான ஒவ்வொரு வகை  பெரிய காத்திருப்புகள் கட்டாயம். ஒரு காத்திருத்தலும் அதற்குள் மனதிற்குள் உண்டாகும் எண்ணங்களும் மொத்த வாழ்வின் வலி, போராட்டம், தவிப்பு, இன்பம், துன்பம், அனைத்திற்கும் மேலான ஒருவித சுகச்சுமை போன்ற அத்துணைப் பண்புகளையும் காலத்திற்கேற்றாற்போல் ஒருங்கே கொடுத்துவிடுகிறது. நான் இத்தனைப் பிசகில்லாமல் எளிமையாகக் கடந்திருக்கிறேனோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இது வரமா, சாபமா தெரியவில்லை.



தெருவே அல்லோகலப்பட்டுக் கிடந்தது. அனைத்து வீட்டு வாசல்களிலும் என்னொத்தச் சிறுவர்கள் வெடிகளை காயப்போட்டிருந்தனர். பார்க்கப்பார்க்க பொங்கிப் பொங்கி வந்தது. மாலை மணி ஆறாகிவிட்டது. அப்பா வந்தபாடில்லை. மாயவரம் மரவாடிக்கு சென்றிருந்தார். துணிமணிகளை எடுத்து ஒரு மாதமாகியிருந்தது. ஆனால் வெடி? ‘தோ செத்தயிரு வந்திடும்பா’ இரும்புச் சாரணியில் முறுக்குப் பிழிந்தபடியே அம்மாவின் ஆறுதல். பாவி மனசு கேட்கணுமே. ஏக்கமும், தவிப்பும் நிரம்பி உதடுகள்வழி பிதுங்கி பொங்கிவிட்டது. ஏழு, எட்டு... கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி பொங்கலும் அடங்கியது. எனக்கு அப்போது புஸ்வானம் விட ரொம்பப் பிடிக்கும். ஒரு புள்ளியிலிருந்து விரிகின்ற மலர்போல அழகு.   எல்லோர்வீட்டு பிள்ளைகளும் புஸ்வானம் விட்டுக்கொண்டிருந்தனர். நான் ‘புஸ்’ஸானேன். உண்டேனா இல்லையாவென்று தெரியவில்லை ஆனால் உறங்கிவிட்டேன். பதினொன்றரை மணியிருக்கலாம் அப்பா வந்தார், ஐம்பது ரூபாய் வெடிகளுடன். அம்மா எழுப்பி காட்டினாள். செய்தித்தாளில் சுற்றி சணல் போட்டுக் கட்டியிருந்தார்கள். காத்திருந்த மனதிலிருந்து அத்தனை அடைசல்களும் நீங்கி ஆற்றாமையும், தவிப்பும், பொய்க் கோபங்களும் பெருமூச்சின் வழி காற்றுடன் கலந்தது. ஐப்பசி குளிரில் புஸ்வானங்கள் ஜில்லென்றிருந்தது. ‘இந்தா இந்தா கொளுத்து’ என்று அப்பாவும் துணைக்கு வந்தார். மழையும் வந்தது.



கல்லூரிக் காலம். பவானியின் அண்ணனைப் பார்க்க தனியாக ஆக்கூர் பஸ்டாண்ட் பேக்கரி கடையில் உட்கார்ந்திருந்தேன், இடுப்பில் பைப் கத்தி சகிதம். பவானியை காதலித்தேனென்பது உலகறிந்தது. அந்த ‘ஒரே’ குற்றத்திற்காக என்னை ஆள்வைத்து மிரட்டினான், கிராதகன். வந்ததே கோபம், வச்சனா தகடியா ஒன்று நான், இல்லை அவன். அதற்குதான் அந்தக் காத்திருத்தல். என்னை மிரட்டியவன் பார்த்து விட்டான். ஆனால் கண்டு கொள்ளவில்லை. 2வது சந்திலிருக்கும் பவானி வீட்டிற்கு அவன் சென்றிருக்க வேண்டும். அந்த சந்து முகனையில்தான் பஞ்சாயத்து அலுவலகம். அதுவரை எந்த வம்பு தும்புகளுக்கும் போனவனில்லை. அரசமரம், கோயில்கள் தவிர்த்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பஞ்சாயத்து நடக்குமென்பது என் அறிவீனம். கொஞ்சம் மனதுக்குள் வியர்க்கத் தொடங்கியது. போன பேருந்தைக் காணோம். ஒண்டிக்கட்டை. எவ்வளவு தைரியம்?  இவ்வளவு தூரமென்று உணர்வதற்கும் நேரமில்லை. பொதுவாகவே நான், இணையாகவிழும் இரு மழைத்துளிகளுக்கிடையேப் பிசகாமல் நுழைந்துவரும் புஷ்டியான உடலமைப்பைப் பெற்றவன். சற்றைக்கெல்லாம் அவள் அண்ணன் வந்துவிட்டான். நல்லவேளை வேறு யாரும் வரவில்லை. ‘டேய் வேணான்டா விட்டுடு, அதான் புடிக்கலன்னு சொல்லுதுல்ல, அப்பறம் ஏன்டா?, எப்பாவுக்கு (வாத்தியார்) தெரிஞ்சா பிரச்சன ஆயிடும்.. அவ்ளோதான்’ சொல்லி முடித்தான்.. ப்ப்ப்ரு... இவ்ளோத்தானா? அட சொங்கிப்பயலே.. (மனதிற்குள்) முகத்தை விரைப்பாக வைத்திருந்தேன், கையும் காலும் கடகட, மனது பக்பக். அடுத்த பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினேன். அரைமணி நேரமானது... அந்தக்(கால) காத்திருத்தலொரு இளப் போராட்டம்.



அதே காலம். நண்பனையும் அவன் காதலியையும் பேருந்தில் ஏற்றிவிட்டோம், இன்னொரு நண்பனும் நானும். சம்போ சிவசம்போ பாடல் அப்போதில்லை. இரண்டுநாள் கழித்து நானும் அவனும் காவல் நிலையத்தில், ஆய்வாளர் வருகைக்காக ‘அமர’ வைக்கப்பட்டிருந்தோம். காவல் நிலையமென்பது சிகப்புக் கலர் பெயிண்ட் அடிக்கப்பட்ட கட்டிடமென்பது என் பரம்பரைக்கே அத்துப்படி. அதில் ‘உள்ளாழ்ந்து’ நடப்பவற்றை முதலில் ‘புல’னாய்வு செய்தவன் நான்தான். பெண்ணைப் பெற்றவர் ‘உங்க ரெண்டுபேரையும் என்னப்பண்றேன் பாருங்கடா’  என்று காவல்நிலைய வாசலில் சவால்விட்டுக் கொண்டிருந்தார். (என்) அப்பா கொஞ்சதூரம் தள்ளி மரநிழலில் குருசாமியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் காவலர், தெருக்காரர், மேலும் எங்களிருவருக்கும் வக்காலத்து. வரப்போகும் காவல்துறை ஆய்வாளர் மிகவும் கண்டிப்பானவரென்று அறிந்திருந்தேன். உள்ளே மரப்பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பனும் நானும் உச்சா போகாதக் குறைதான். ‘ஒழுங்கா உண்மையச் சொல்லிடுங்கடா, விட்டுர்றோம், அய்யா வந்தாருன்னா பின்னிருவாரு’ என்னமோ சடைப் பின்னுவதுபோல் அந்த எழுத்தர் சொன்னார். அடிவயிறு முட்டியது. எப்பாடுபட்டாலும் உண்மையைச் சொல்லக்கூடாது என்பது எங்கள் திண்ணம். ஆனால் லத்தியைப் பார்க்கும்போது அது இளகிக்கொண்டிருந்தது. அதுவரைக்கும் அப்பாவின் விளக்கமாத்து அடிகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட எனக்கு லத்திகளை பார்த்தபோதே வலிக்க தொடங்கிவிட்டது. நண்பனுக்காவது கொஞ்சம் என்புசதை போர்த்திய உடம்பு, இங்கே என்புதோல்தான்.. ஒரு மணிநேரம் ஆகும். உதைவாங்க காத்திருந்தோம். அம்மா, அப்பா, அக்கா எல்லா உறவுகளும் கண்முன் நிழலாடியது. வாங்கப்போகும் அடியின் அச்சாரம் எப்படியிருக்குமென்பதை பக்கத்திலிருந்தவன் கன்னம் சொல்லியது. வந்தார். சில கட்டளைகள், சில வசவுகள், எச்சரிக்கைகள்...அவ்வளவுதான். சோம்பல் முறித்துக்கொண்டு வெளியே வந்தேன். காத்திருந்த அப்பா அழுதிருந்தார், பெத்தமனம்...


அழைத்த அண்ணன் மாதவராஜ் அவர்களுக்கும் நன்றி.

Thursday, June 30, 2011

பம்பரம்



நீலவேணி இறந்து திங்களோடு திங்கள் எட்டு செவ்வாய் ஒன்பது நாட்களாகிறது. கோபுரத்தில் விழுந்த காகத்தின் எச்சம், முளைத்து ஆலமரமும் பின் அதுவே விருட்சமுமானது போல்தான் எங்கள் வாழ்க்கை. பாசி பிடித்த படித்துறையில் கால் வைத்தால் வழுக்கிவிடும், ஆனால் அதையும் மீறி இத்தனைக்காலம் ஓடிவிட்டது. போய் சேர்ந்துவிட்டாள் புண்ணியவதி. புதைத்த கையோடு உடன் பாலும் கையோடு மையோடு கல்லு கருமாதியும் முடிந்தேவிட்டது. ஊதுபத்தி வாடையும், பன்னீரின் வாடையும் கலந்து அவளின் சுவாசம் நிறைந்த இந்த கூடாரத்தை அபகரித்துவிட்டது. கண்ணுக்குத் தெரிந்து இந்த வீடும், தோ அவள் படத்தின் முன்னுள்ள பாக்கு வெட்டியும்தான் அவளுக்கான ஜென்மபலன், எங்களுக்கும். ஒட்டங்காடு போகவேண்டுமென்று தோன்றியது. இத்தனை நாளும் இந்த எண்ணம் இல்லாமலில்லை, இப்போதுபோல் இத்தனை நாளுமில்லை.

‘ரெங்கா? நான் ஒட்டங்காடுவரைக்கும் போவலாம்ணு இருக்கேன்யா...’ ரெங்கா என்னையே பார்த்துகொண்டிருந்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், அவனும் என்ன செய்வான்?

‘ஏம்ப்பா? இப்பபோயி?!!!’

‘இல்லய்யா, எனக்கென்னமோ போலருக்கு, நீலா பொறந்த ஊரு, அவளோட நான் வந்ததுலேர்ந்து இப்பதான் நேரங்கூடி வந்திருக்கு, தடவைக்கு தடவ நாஞ்சொன்னாலும் வேண்டா வேண்டாம்பா.. ஒரு நாலு நாளு இருந்திட்டு வர்ரன்யா’ நிறைய ஆற்றாமையும் கொஞ்சம் இயலாமையும் கலந்த என் பேச்சை அவன் தட்டவில்லை.

‘அதுக்குச்சொல்லல...’ முழுங்கிவிட்டு ‘சரிப்பா, அங்கப்போயி எங்க தங்குவீங்க? யாரிருக்கா? பட்டாமணியாரு இருக்காரா இப்ப? அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு போங்களேன்..’

‘சரிய்யா, பாக்கறேன், ராத்திரி சாப்பாடு முடிச்சிட்டே கெளம்பறேன்’

எல்லாம் தயாராகிவிட்டது. ஒரு கருப்புப் பையும், துணிமணிகளும், பேஸ்ட், பிரஸ் எல்லாமும் சரியாக எடுத்துவைத்திருந்தாள் சரசு, மருமகள். ‘போலாமா?’

‘தோ வந்திட்டேம்பா’ வண்டியில் கொண்டுவந்து பஸ்டாண்டில் விட்டான்.

ஒன்பதே முக்காலுக்கு கோயம்பேட்டில் எடுப்பான் அந்த பொறையார் பஸ். பொறையார் டூ மெட்ராஸ், மெட்ராஸ் டூ பொறையார் பைபாஸ். நெய்வேலி, சீர்காழி, மாயவரம், அப்பறம் நேர்வழியாக பொறையார் செல்லக்கூடியது. மாயவரத்தில் இறங்கி லாட்ஜில் தங்கி, குளித்துவிட்டு லைட்டாக டிபன் முடித்துக்கொண்டு கிளம்பினாலும் போதும். காலையில் ஒன்பதரைக்கோ என்னமோ 23ம் நம்பர் பஸ். செம்பனார்கோவில், ஒட்டங்காடு, திருவிளையாட்டம் வழியாக சங்கரன்பந்தல் போகும் அப்போது. இப்போதும் அந்த பஸ் ஓடுவதாக பட்டாமணியார் சொன்னார். இன்னேரம் அவருக்கும் என்னைப்போலவே வயதாகிருக்கும். தாடி, மீசை, கழுத்தில் ஒற்றை ருத்ராச்சம் இன்னமும் அப்படியே இருப்பாரா?!! வயோதிகம் அவர் உடலையும் வாட்டியிருக்கலாம். அவர் மனைவி செத்தது தெரியும். ஒட்டங்காட்டில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளையும் அவர் மூலமேதான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது ‘வர்ரேன்’ என்று சொன்னேனே ஒழிய எப்போதென்று சொல்லவில்லை. அவர் கண்ணில் படாமல் ஊரில் உலாவ முடியுமா? முடியும், முடியும்.. பாப்போம்..

மஞ்சளாற்றைத் தாண்டி இடதுபுறம் திரும்பியது பேருந்து. எனக்கு மனதெல்லாம் பக்..பக்..கென்று அடித்துக்கொள்ளத் துவங்கியது. கிட்டத்தட்ட 32 வருடங்கள். இங்கிருந்து இதே வழியேதான் நானும் நீலாவும் சைக்கிளில் செம்பனார்கோவில் போய், பின்பு பேருந்தில் மாயவரம், அப்பறம் மெட்ராஸ். அப்போது இந்தச் சாலை சிகப்பு கப்பியில் நிரம்பியிருக்கும். தொலைவில் இடதுபுறத்தில் சட்ரஸ்ஸும், வலதுபுறத்தில் முனியப்பன் கோவிலும் தெரிந்தது. அப்படியேத்தானிருக்கிறது. எந்த மாற்றமும் தெரியவில்லை. அருகருகே இரண்டு மூன்று குடிசைகள். நாங்கள் ஊரைவிட்டுப்போன அந்தக் கடைசிநேர பரபரப்பிலும் நீலா முனியப்பன் உண்டியலில் எதோ காசுபோட்டுவிட்டு சைக்கிளில் வந்து குந்தினாள். விபூதியும் பூசிக்கொண்டாள், நான் கண்டுகொள்ளவில்லை, இருவரையும். பனைமுட்டு, கோனமுட்டி வாய்க்கால், ஒரு சர்ச், உத்திராபதி கோவில் எல்லாம் செருகச்செருக கடந்துகொண்டேயிருந்தது. உடல் வயிறெல்லாம் ஒரு சந்தோஷ திரவம் சில்லென்றாற்போல் ஊறியது. பேருந்து இறக்கத்தில் இறங்கும்போது அடிவயிற்றில் ஒரு இனம்புரியா கிறக்கம் உண்டாகும், அப்படிதான் இதுவும்.

ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் ஸ்டாப்பிங்கில் இறங்கினேன். யாருக்கும் என்னைத்தெரிய வாய்ப்பேயில்லை. ஆனால் என் அப்பனை அறிந்தவர்கள் யாரேனுமிருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். ஆமாம்...என்னிடம் என் அப்பனின் முகம் அப்படியே ஒட்டியுள்ளது. இந்த பத்துநாள் தாடியும், வீசையும் அந்தாள் மூஞ்சை பளிச்சென்று காட்டிக்கொடுத்துவிடும். நெஞ்சின் படபடப்பு அடங்கவில்லை. மாரியம்மன் கோவில் வாசலில் தீக்குழி, கரிகள் அள்ளியபின் தெரியும் கருமை படர்ந்திருந்தது. எத்தனைக் கூட்டம் தீமிதித்திருக்குமோ!!!? ஒட்டங்காடு மாரியம்மன் தீமிதியென்றால் மாமாங்க கூட்டம் கூடும். ஜெ.ஜெ வென்று சுத்துபட்டு 54 கிராம மக்கள் கூடுவார்கள். எதிர் சாரியில் ஒரு பெட்டிக்கடை, வாடகை சைக்கிளும் இரண்டு முன்று கிடந்தது. அருள்ராஜ்தான் முன்பு இந்தக் கடை வைத்திருந்தார். இப்போது யாரென்று தெரியவில்லை. கடையில் யாரோ பொடியன் இருந்தான்.

‘தம்பி, சைக்கிள் வாடகைக்கு வேணும்பா?’

‘சைக்கிளா? நீங்க? எங்க போணூம்?’

‘பெருமாக் கோவிலாண்ட’

‘எப்ப வருவீங்க?’

‘ஒரு மணிநேரத்துக்குள்ள வந்திடுவம்பா’

‘ஐ.டி. கார்ட் வேணும், இருக்கா?’

சட்டையிலிருந்த பழைய லைசன்ஸ் கார்டை நீட்டினேன். வாங்கிக்கொண்டான்.

‘கேரியர் வய்ச்சி வேண்டால்ல’ ஒரு சைக்கிளைக் காட்டினான். எடுத்து ஸ்டேண்ட் தள்ளினேன். ரொம்ப நாளாகிறது, சைக்கிளைத்தொட்டு. மெட்ராஸில் கொஞ்சகாலம் சைக்கிள் ஓட்டியிருந்தாலும் நீண்ட இடைவெளி. ஒரு உந்து உந்தி ஏறினேன். பெடலை மிதிக்கும்போது சுலபமாக என்னையும் தள்ளிக்கொண்டே போவதுமாதிரி தோன்றியது.

நல்லவேளை, பெருமாள் குளத்தங்கரையில் யாருமில்லை. சைக்கிளை நிறுத்திவிட்டு  அரசமரத்தைச் சுற்றி கட்டியிருந்த திண்ணையில் அமர்ந்தேன். கோவிலின் உள்ளே மணிச் சத்தம் கேட்டது. மதியக்கால பூஜையாக இருக்கும்.

இந்த அரச மரத்தடியில் சிறுவனாக இருக்கும்போது சோறு தண்ணியின்றி விளையாடிய காலங்கள் எத்தனை!!! எத்தனை!!! என்னடாயிது வயோதிகத்திலாவது இந்த ஞாபகக் கொடுக்குகள் அற்றுப்போகக்கூடாதா? அதுசரி அப்படியிருந்தால் நாம் ஏன் இங்குவரப்போகிறோம்? கோவிலிலிருந்து யாரோவொருவர் வந்தார். ஆ... அந்த உருவம் பழக்கப்பட்டதுதான். அந்தக்காலத்து ஒற்றைநாடி, இப்போது.. இன்னும் தளர்ந்து... கூன் விழுந்து, அய்யரேதான்!!!!. என்னைப் பார்த்துவிட்டார்.

‘யாருப்பாது? இங்க உட்காந்திண்டிருக்க? புதுசாட்டருக்கு!!’

நெற்றியில் அவர் வைத்திருக்கும் குங்குமக் கீற்றலே போதும் அடையாளங் காண. புருவ மத்தியிலிருந்து உச்சி மண்டை வரை நீளும் அந்தக்கோடு. ‘ஆமாங்க சாமீ, புதுசுதான்.’

‘இஞ்ச யாரப்பாக்கணும்?’

‘சாமீ.. கோதண்டபாணிய ஞாபவமிருக்கா ஒங்களுக்கு?’

‘எந்தப் போதண்டபாணிங்க, தெர்லியே’

காது சரியாக கேட்கவில்லை போலும் ‘போதண்டபாணில்ல, கோதண்டபாணி, கோதண்டபாணி..’ உறக்கச்சொன்னேன். பிறகு ‘கொசவங் குட்டைக்கிட்ட ரெய்லோடு போட்ட வீடு ஞாபவமிருக்கா? 30-35 வருஷத்துக்கு முன்னாடிச் சொல்றேன் நானு. அவரு?’

‘ஆங்... டேய், படவா.. கோதண்டம் மொவங்காரனா??!!.. அதாங் மொவரக்கட்ட காட்டுதே...!!, குண்டுகுண்டுன்னு ஓடியாடிண்டிருந்த அந்தக் கொழந்தைய சைக்கிள்லயே இழுத்துண்டு ஓட்ன பயலாச்சே நீ... தாடி வீசல்லா வச்சிண்டு, கெழவனாட்டங்க கடக்க.. கூம் நாம்பரவால்லடாப்பா...’

‘ஆமாங்க சாமீ’. அவர் இத்தனையும் ஞாபகம் வைத்திருப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நாளில் ஊர் ஜனங்களுக்கே இந்த சேதி பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கும், அந்த விசும்பல்தான் இந்த ஐயரும். இந்த மரத்தடியில் பம்பரம் விளையாடும் பொழுதுகளில்தான் நீலா ரோட்டுக்கு அந்தண்டைப் பக்கம் வீட்டிலிருந்து பார்ப்பாள். சின்னப்பிள்ளையிலேயே அப்படிதான். ஊரிலேயே அவள் வீடுதான் மாடிவீடு. சீமத்தண்ணி குடித்த குடும்பமென்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மாட்டு கொட்டகைக்கூட ஒரு ஒட்டுக் கட்டிடத்தில்தான் இருந்தது. இப்பொழுது அந்த வீடும் கொட்டகையுமிருந்த சுவடுகளேயில்லை.

‘ஏண்டாப்பா நீலா எப்டியிருக்கா?! இன்னும் நீ சாமிச்செலைய ஒடைச்சிண்டுதானிருக்கியா?.... மொகரையே தெரியுதே... தோ பாத்தியா இந்த புள்ளையார? அவரு மூக்க உடைச்சது உன் வேலைதானேடா, இன்னும் ரெண்டு மூணுப் பேரோட தூக்கிப்போட்டியே இந்த கொளத்துல..’

உண்மைதான் இந்தப் பிள்ளையாரின் மூக்கு உடைந்தது என்னால்தான். அப்போதிருந்த வேகம், பகுத்தறிவு சிந்தனைகள், பெரியார், இராவணன் அண்ணன்... இந்த பிள்ளையார்தான் அதற்கு பலி, சாட்சி. அதனால் ஊரில் கெட்டப்பெயர், என்னுடன் சேர்ந்திருந்த மூன்றுபேருக்கும். நீலாவுக்குக்கூட இது பிடிக்கவில்லைதான். ஆனாலும் அதுவொரு பொருட்டில்லாமல் என்னை முழுமனதோடு ஏற்றுக்கொண்டிருந்தாள்.

‘ஆனா ஒண்ணுடாம்பி, எப்ப புள்ளையாரத்தூக்கி கொளத்தண்டைப் போட்டியோ அப்பலேர்ந்து கொளத்துல தண்ணி அத்துப்போச்சு.. என்ன சாபமோப்போ. பூட்டியிருந்ததால இந்தப் பெருமாள் தப்பிச்சிண்டார். இல்லன்னா அப்பருந்ததுக்கு இவரையும் தூக்கிப்போட்டிருப்ப..  ஒண்ணு தெரிஞ்சிக்கோடா, பெருமாளாயிருந்தாயென்ன? பெரியாராயிருந்தாயென்ன? மனுஷாள்மேல மனுஷாளுக்கு நம்பிக்கயத்து போனதாலனேடா இந்த தெய்வங்கள் வந்தது. அதையும் லோகத்லேர்ந்து அழிச்சிண்டா எல்லாஞ் சரியாயிடுமாயென்ன?, சரிவுடு, நீலா எப்டியிருக்கா?’ விட்ட இடத்திற்கே வந்து மீண்டும் அவர் கேட்கும்போது அவர் கண்களில் தெரிந்த ஆச்சர்யம் என்னை நடைமுறைக்கு தள்ளியது.

‘ம்ம்..நல்லாருக்கா சாமீ’ வேறெதையும் சொல்லத்தோன்றாமல் அசட்டையாக பொய் சொன்னேன்.

‘நீ கெடக்கவுடு, அவ நல்லாருக்கணும்டாப்பா, ஓடுபுள்ள ஒடியாருபுள்ளையா நாங் பூஜைக்கு வந்தாப்போதும் ஓடோடி வந்திடுவா, குளத்திலேர்ந்து தண்ணி கொண்டாரன்னே.. லெஷ்மி கடாஷம் அப்டியேருக்கும், இந்தப் பெருமாளுக்கு அவளை புடிக்கலப்போல.. அதான உன்னாண்டை விட்டுட்டான். ம்கூம் சூட்டிக்கலானப் பொண்ணு.., சின்ன வயசிலே பம்பரம் வெளையாண்டே அவள ஜோடி சேத்திண்டியேடா? அடுக்குமா, லோகத்துல எந்த பயலுக்காவது இந்த கொடுப்பினை உண்டா?!!’

நீலாவையே சுற்றி சுற்றி பேசிக்கொண்டிருந்தார், அவள் அம்மா அப்பா செத்தது, போனது, வந்தது, இன்னொரு பட்டாமணியார் கணக்காக ஆகிவிட்டது. அப்பறம் கிளம்பினார். என்னைப் பற்றி பெரிதாக விசாரிக்கக்கூட அவர் விரும்பவில்லை. போய்விட்டார். 

‘இந்த அரச மரத்தடிதான் என் வாழ்க்கை, இங்குதான் என் பொழுதுகள் விடிந்தது, இங்குதான் நீலா கிடைத்தாள், இந்த புனர்ஜென்மம் கிடைத்தது. நாலடி விட்டத்தில் ஒரு வட்டமும் நடுவே முக்கி வெளியேற முடியாத பம்பரங்களுமிருக்கும். வெளியே வந்த பம்பரக்காரர்களின் குறி உள்ளேயிருக்கும் பம்பரங்கள் மீது. அதில் உக்கு வைக்கவே அத்தனைப்பேரின் உக்கிர குணங்களும் ஆசைப்படும். எல்லோருக்கும் பொருந்தும் இந்த நீதி. எல்லாப் பம்பரங்களும் அடிபட்டு வெளியேறினால் பம்பரத்தை இழுப்பு விட்டு கையிறால் இரண்டு சுற்று சுற்றி மேலே தூக்கி இரண்டுகையாலும் பிடிக்கவேண்டும். அப்பீட் என்பார்கள். கடைசியாக எடுப்பவர் பம்பரத்தை உள்ளே வைக்கவேண்டும். இதுதான் பொழுது முச்சூடுமான விளையாட்டு. நான் பம்பரம் விடும் அழகுக்காகவும், அதை குத்துவிடும் ஆக்ரோஷத்திற்காகவும்தான் நீலா என்னை பார்த்துக்கொண்டேயிருப்பாள்.  அவளே பிறிதொரு நாளில் சொன்னாள். எல்லாப்பசங்களும் போனப்பிறகு நான் மட்டுமிருப்பேன். மரத்தடிக்கு வந்து ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ என்பாள். அப்போதெல்லாம் பம்பரக்கயிறு புதுத்தாலிக் கயிறு மொத்தமிருக்கும். பம்பரத்தின் கூர்முனையிலிருந்து படிப்படியாக சுற்றி தலைக்குமேல் ஓங்கி கீழ்நோக்கி ஒரு சொடுக்கு சொடுக்குவேன. தரையில் விழாமல் அதை வலது உள்ளங்கியில் தாங்கி அவள் கையில் விடுவேன். பிஞ்சிக்கைகளில் அந்த ஆணிப் பம்பரம் சுற்றிவர சிவந்துவிடும். ரசித்துக் கொண்டிருப்பாள்.

இந்த பம்பரத்திற்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு ஒற்றுமை, தொடர்பு. சாட்டையால் சுற்றிவிடுவது எவனோ. சுற்றுவது நாம், தெம்பு குறைந்தபின் ஆட்டம் காலி படுதா காலி. முடியாமல் கஷ்ட வட்டத்தில் மாட்டிக்கொண்டால் உக்கு விழுவதுபோல் சில அடிகள், மரண அடிகள். இதை நினைக்க நினைக்க எனக்கு பம்பரம் விடவேண்டும் என்ற ஆசை வந்தது.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வேங்குவேங்கென்று அந்தக் கடைக்குப்போனேன். ‘தம்பி, பம்பரம் இருக்கா?’ மூச்சி இறைத்தது.

‘இருக்குங்க’ முழுக் கொட்டைப்பாக்கு அளவில் ஒன்றைக் கொடுத்தான். ப்ளாஸ்டிக் பம்பரம். தமிழ்நாட்டில் பம்பரத் தட்டுப்பாட்டுக்கு விஜயகாந்தும், வைகோவும் காரணகர்த்தாக்கள் போலிருக்கிறது. ச்ச்சை..

‘கயிறு கொடப்பா?’ சிகப்புக்கலரில் ஒரு தாம்புக் கயிறுப்போல் கொடுத்தான். மொத்தம் 8 ரூபாய்.

மறுபடியும் அரச மரத்தடிக்கு வந்தேன். பெருமாள் கோவில் உள்ளேயிருந்து ஊதுபத்தி மணம் வெளிவரைக்கும் அடித்தது. அரசமர இலைகள் சலசலவென்று அடித்துக் கொண்டிருந்தன. சைக்கிளை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமில்லை. பம்பரத்தில் கயிற்றைச் சுற்றினேன். வழுக்கி வழுக்கி வந்தது. பிறகு பிடித்துகொண்டது. தரையில் ஓங்கி குத்துவிட்டேன், டங்கென்று தரையில் தட்டி குளத்துப் படிக்கட்டில் விழுந்தது. சுற்றவில்லை. மீண்டும் எடுத்து கொஞ்சம் பொறுமையாகக் குத்தினேன். சுற்றியது. ஒரு பின்னிரவு நேரத்தில் மொட்டைமாடியை அலங்கரிக்கும் காற்று மனதைப் பரவசப்படுத்தும், அதுபோலிருந்தது. கீழே குனிந்து புறங்கை தரையில் பட ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் ஒரு விரிசல் உண்டாக்கி பம்பரத்தில் ஆணிக்கு நேராக நீட்டிச் சொருகினேன். பம்பரம் சுற்றியபடியே கையில் ஏறியது.

என்னைக் கேட்டால் பம்பரம் கையில் சுற்றும் அந்த விநாடிகளின் குருகுருப்பையும் கூச்சத்தையும் ஏந்தி ரசிப்பது இந்த வயோதிகத்தின் புண்ணியம் என்பேன். நாற்பது வருடங்கள் இருக்கலாம். இதே மரம், இதே இடம், கலகலவென்று எத்தனைப்பேர் இந்தப் பம்பரம் விளையாட. ஆனால் இப்போது? மல்லாந்துப் படுத்து  மார்பில் துப்பிக்கொள்வதுபோல் நகர வாழ்க்கை, கிராமத்துப் பிள்ளைகளுக்கும் இதேதான் கதி. நெஞ்செங்கும் நிம்மதியால் நிறைந்தது. கொஞ்சநேரம் மரத்தடி திண்ணையில் படுத்து கண்களை மூடினேன். ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ நீலா கை நீட்டினாள்..  


Tuesday, May 31, 2011

மீசை


ரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன்கோவில் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு!! இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு  கொடுக்கவில்லை.

“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க?” எனக்கு முந்திக்கொண்டான்.

அவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு!!!. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.?”

“ம்ம்ம் நல்லாருக்கன்டா” என்றான்.

சிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க? பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்?”

“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன?”

“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா? கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது.

“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச..? மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா? அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான். 

மாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன். 

“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது.? அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார்.

ஆமாம் எனக்கு என்ன குறைச்சல்! என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குகூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தாதான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சிகோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன். 

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!!!  அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது.

இங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகடிலிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார்.  கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார்.

எப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார்.

ரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந்த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன்.

இப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.

இப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன்.

“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.

“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன்.

“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா? நீய் செய்யி” என்றான்.

“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் கொமட்டிலேயே குத்தினான், அந்த முக்காமீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.


••

Friday, May 6, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்

சென்ற வாரம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரின் உறவினருக்கு அவரசமாக இரத்தம் (வெள்ளை அணுக்கள் மட்டும்) தேவைப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் இணையத்தில் பகிரலாம் என்று யோசித்தேன். பிறகு வழக்கம்போல் எங்கள் வேலுஜி இந்த (http://www.friendstosupport.org/index.aspx) (http://www.blooddonors.in/) இணைய தளங்களில் இருந்த இரத்தம் கொடுக்கும் தன்னார்வலர்களின் அலைபேசி எண்களை சேகரித்து, அழைத்து 15 நிமிடங்களில் வேலை முடிந்தது. இதில் கிடைத்த 5 எண்களை தொடர்பு கொண்டதில் 2பேர் முன்வந்தார்கள். வாரம் ஒருமுறையாவது எங்களுக்கு இந்த இணையங்கள் பயன்படுகிறது. உங்களுக்கு எந்தவகையான இரத்தம் தேவைப்படுகிறது, நீங்கள் எந்த மாவட்டம், எந்த ஊர் போன்ற விபரங்களை கொடுத்தவுடன் உடனடியாக அந்தப்  பகுதியிலுள்ள இரத்ததானம்  கொடுப்பவருடைய முகவரி மற்றும் அலைபேசி எண்களை பெறலாம். பயனுள்ள தளம். மேலும் நீங்கள் இரத்த தானம் செய்பவராகவோ, அல்லது செய்யவிரும்புபவராகவோ இருந்தால் இந்த தளத்தில் உங்களது அழைப்பு எண் மற்றும் முகவரியையும் பதிந்து வைத்துவிடுங்கள். இல்லையெனில் என்னைப்போல் 50 கிலோ எடையை தாண்டாமல் இருங்கள்.

•••

30 நாட்களாக வலதுகையில் குடியிருந்த மூன்றங்குல ‘ஆணியை’ மருத்துவர் எடுத்துக்கொண்டார். இப்போதுதான் கை உடைந்ததுபோல் உள்ளது. ஒருமாதமாக நொண்டிக்கையை சாக்காக வைத்து பெற்றுவந்த சலுகைகள் ‘கிளிக்கு ரெக்க முளைத்துடுத்து, ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்து‘ கதையாகிவிட்டது. மொத்த உடலெடையில் 15 கிராம் குறைந்திருக்கிறது. எப்போதும்போல் 50 கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டேன். மருத்துவத்துறை முன்புபோல் இல்லை. புறங்கையில் ஒரு சுள்ளி எலும்பு முறிந்ததற்கு 9 ஆயிரத்து முன்னூத்துச் சொச்சம் செலவு. எதற்கெடுத்தாலும் பிளேட், கம்பி, ஸ்க்ரூ, ஆப்(பு)ரேசன், எதோ டெம்ப்போ லாரிக்கு பாடி கட்டுவதுபோல் செய்கிறார்கள், நல்லவேளை வெல்டிங் மிஷின் மட்டும் இல்லை. இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீடு, க.கா.தி, அல்லது நட்சத்திரம். படுக்கவைத்து இரண்டுநாள் படுத்தியெடுத்து ரவுண்டாக ஒரு தொகை கரந்துவிடுகிறார்கள் மடியில்(இல்)லாவிட்டாலும், நம்மிடம் அல்லது காப்பீடு மூலம் இப்படி இம்சைப்பண்ணும் மருத்துவர்கள் இன்னொசென்ட் என்ற பெயரில்கூட இருக்கிறார்கள். எண்ணெய்க்கட்டு, புத்தூர்கட்டு, மாவுக்கட்டு, அறுவைசிகிச்சை, கம்பிகள்... ; கழனித்தண்ணி, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, SKM மாட்டுத்தீவனம், ஊசிகள்.... 

••••

5 வயதில் ராக்கெட் விடவேண்டும் என்ற ஆசை வந்தது. பள்ளிக்கூடத்தில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன். வீட்டிற்கு வந்து எங்கே பேப்பர், எங்கே பேப்பர் எனத்தேடியதில் சிக்கியது அந்த திருமண பத்திரிக்கை. கூராக மடித்து சொய்ங்..சொய்ங்.... மணியன் தாத்தா வீட்டுக்கொல்லையில் விழுந்தது. வேலியை தாண்டி எடுக்க திரானி இல்லை. மறுநாள் அந்தத் திருமணம். அப்பா பத்திரிக்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்மீதான குற்றச்சாட்டு சகல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது. வழக்கம்போல விளக்கமாறுதான்.  மியாமிக்குஷன் செருப்பை மறைத்து வைத்திருந்தேன். தெருவில் ஓடவிட்டு அடித்தார். யாரோ ஒரு புண்ணியவான் உதவ, அதை எடுத்துகொடுத்துவிட்டேன். விசயம் அதுவல்ல. சமீபத்தில் யப்பாரின் மேஜையை பீராய வேண்டிய கட்டாயம், கரையான். பூராவும் பழைய திருமணப் பத்திரிக்கைகள், தொழில் சம்பந்தப்பட்ட கணக்குநோட்டுகள், 1980 க்கு பிறகு வந்த கடிதங்கள், என்னுடைய 3ம் வகுப்பு பாட குறிப்பேடு, கூடவே அந்த திருமணப்பத்திரிக்கையும். நிறைய பத்திரிக்கைகளையும், கடிதங்களையும் பொறுமையாக அமர்ந்து வாசித்தேன். பின்னோக்கிய பயணம்தான் எவ்வளவு சுவாரசியம். எனது நண்பன் ஒருவனின் பெற்றோருக்கு நடந்த திருமணப்பத்திரிக்கையும் அதில் இருந்தது. அவனிடமே காட்டியும் மகிழ்ந்தேன். இப்பவும் வீட்டின் எதோமூலையில் வருகிற பத்திரிக்கைகளை திருமணம் முடிந்ததும் கொக்கியில் சொருகிவிடுகிறார் அப்பா.  சென்றவாரம் நண்பனொருத்தன் திருமணத்திற்கான அழைப்பை குறுந்தகவலாக அலைபேசிக்கு அனுப்பினான், ‘புடவைடா (sarry) மாப்ள. ட்யூ டூ ஸார்டேஜ் ஆப் இன்விட்டேசன்‘ இன்ன கிழமை, இன்ன தேதி, இன்ன நேரம், இவளுக்கும் எனக்கும் இன்னக்‘கொடுமை’ யென்று.    படித்துவிட்டு உடனடியாக உள்பெட்டியை சுத்தம் செய்தேன். என் புத்தி.

••••

ஒரு நூலை விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு புத்தியில்லையெனக்கு. ஆனாலும் இந்த நூலைப்பற்றி எதாச்சும் சொல்லவேண்டுமென்று மனது அடித்துக்கொள்கிறது. படித்து ஒருமாதமாகிறது. இன்றளவும் அசைபோடுகிறேன். இதைப்பற்றி விமர்சித்தவர்களையெல்லாம் தேடிதேடிச்சென்று படிக்கிறேன். சென்ற மாதம் ஆஸ்பத்திரியில் 2 நாள் படுத்துக்கிடந்தபோதுதான் வாசித்தேன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள். ஒரு அற்புதமான படைப்பு. கேரளத்து மண்ணில் எல்லாவித பசியோடும் ஒடுங்கிய வயிற்றோடுமலைந்த அந்தக் கவிஞனின் வாழ்க்கை சில பக்கங்களில். பெரும்பாலும் வறுமையில் சிதைந்த முகத்துடன், கூடவே சபலம், ஆற்றாமை, குற்றவுணர்வுகள். ஒரு மனிதனின் முகம் வெளிக்காட்டக்கூடிய அனைத்து உணர்ச்சிகளையும் படிக்கும்போது உள்ளத்தால் உணரவைக்கிறார். ஒரு இடத்தில் ‘மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான், நான் சாப்பிட ஆரம்பித்தேன்’ என்றிருப்பார், அந்த கணம் மனதைப் பிசையும். ‘சிதம்பர ஸ்மரண’ என்ற இந்த மலையாளப் புத்தகத்தினை வம்சி பதிப்பகம் வழியாக அதே உணர்வுகளோடு தமிழில் கோர்த்திருக்கிறார் திருமதி.கே.வி. ஷைலஜா. எனக்காக இதை பரிந்துரைத்தவர் திருமதி. பத்மஜா. இருவருக்கும் என்றென்றும் நன்றிகள். 



••

Tuesday, April 26, 2011

யரலவழள

*

அடுப்பினுள் தூங்கும் அந்தப் பூனைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
எதுவுமில்லா வீட்டில்
எலியும் இருக்காதென்று.

•••

யாசித்துக் கிடைக்காத
பிச்சையை வீதியெங்கும்
வீசிச்செல்கிறான் பிச்சைக்காரன்
சாபமாக....

•••

பசியில் இறந்தவன்
உயிர்நாற்றம் குப்பையில் 
சிதறிக்கிடக்கிறது
தலைவாழை இலையுடன்

•••

பகலில் தூங்கி 
இரவில் எழுகிறது
காய்ந்த வயிற்று   
வேசியின் சேலை.


Wednesday, March 30, 2011

தஞ்சாவூர் சிறுக்கி

90, 91 வாக்கில் என்று நினைக்கிறேன், 2 வகுப்பு. ஒரு மூன்று அடி சுவரு. செந்தாமரை டீச்சர் முன்பு பயில்வான் பக்கிரிசாமியாக காட்டிக்கொள்ள துள்ளிக் குதித்து விளையாடியதில் விழுந்து இடது கை முட்டியில் செங்கல் மோதி மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குமார் வாத்தியார்தான் ஒரு அடி ஸ்கேல் மூன்றை இரண்டு இரண்டாக உடைத்து சணல்போட்டு கையில் இறுக கட்டி வீட்டிற்கு அனுப்பினார். அம்மா அழுதாள், ‘க’னா பய மொவன், சும்மாயிருக்கவேமாட்டான்’ அப்பா அடிக்காமல் திட்டினார்.  மாயவரம் சுப்பையா டாக்டர் அப்போது பிரபலம். மனிதர் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சார்மினார் சிகரெட் வீதம் பற்றவைத்தப்படியேதான் வைத்தியம் பார்ப்பார். ஒரு மாதம் கைக்கு வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து சுபமங்களம்.

மீண்டும் 2001-2002 கல்வியாண்டு. ஸ்கிப்பிங் கையிற்றை இருவர் பிடித்துக்கொள்ள உயரம் தாண்டுதலில் கோலோச்சிக்காட்டியதில் அதே இடதுகை முட்டியில் ஒரு எலும்புத்துண்டு விவாகரத்துக்கு விரும்பிவிட்டது. விடமுடியுமா?, மீண்டும் சுப்பையா, சார்மினார் சிகரெட் மருத்துவம், விவாகரத்து தள்ளுபடியாகி எலும்புத்தம்பதிகள் ஒன்றுசேர்ந்தனர். இந்தமுறை வீட்டிற்கு தெரியாமல் கட்டுப்போட்டுவிட்டு கலைமகள் ஸ்கூல் ஸ்டாப்பிங்கில் இறங்கி வீட்டிற்கு செல்லும்போது அம்மா முந்தானையில் மூக்கை சிந்தியபடி எதிரே வந்துவிட்டாள். ‘ஏன் தம்பி ஒனக்கு?’ அழுதாள். நண்பன் தேற்றினான். ஒரு மாதம் கல்லூரிக்கல்விக்கு விடுப்பு கொடுத்துவிட்டு காதல் கல்வியைத் தொடங்கினேன். உமா என்னை முழுதும் அடைத்துக்கொண்டது அந்தக்காலகட்டம்தான். ஸ்கிப்பிங் கயிறை இறுகப்பிடித்து என் கையை உடைத்த அதே நண்பனின் தங்கை, பழிக்குப்பழி.


இவைகள் என் வீரவரலாற்றுக் கல்வெட்டுக்களின் இண்டு இடுக்குகளில் காணப்படும் இரண்டு முத்துக்கள்தான். எப்போதுமே எனக்கு எண்ணிக்கையில் மூன்று பிடிக்கும். ‘பொதுவாழ்விலும்’ முதலில் சுஜா, பிறகு பவானி மூன்றாவதாக காதல் ரசம் கரைத்தூட்டிய உமா, கடைசியாயும்கூட. நெருங்கிய நண்பர்கள்கூட மூன்றுபேர்தான். உருப்படாத கோவிலில் உண்டக்கட்டி வாங்கித்தின்ன கூட்டம் நாங்கள்தான். இன்றும் எவனும் விளங்கவில்லை என்னையும் சேர்த்து. இப்போது 2011, பொதுவாகவே புஜபல பராக்கிரமசாலியான எனக்கு மீண்டும் அந்த எலும்புத்தேவன் கோவில் மணியோசை வலதுகை சுண்டுவிரலில் கேட்டது.


ஒரு பிணத்தின் கால்கட்டைவிரல்களின் கட்டை அவிழ்த்துவிட்டு மூக்கில் உள்ள பஞ்சிகளையும் நீக்கிவிட்டு ஒருநாள் உயிர்க்கொடுத்தால் அந்த பிணம் என்ன செய்யும்? என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகள் அப்படிதான் 6.30க்கு விடிகின்றன. யாருக்கு எப்படியோ, எனக்கு விளையாட்டு புத்திதான் மோகித்திருந்தது. மைதானம், மட்டை, பந்து, எதிரணியில் ஒன்பது ஜாம்பவான்கள். ஆளும் அணியில் ஒன்பது. ஒரு(ரே) பந்து சுண்டுவிரலை நக்கியதில் உள்ளெலும்பில் மணியோசை. உடைந்துவிட்டது.


இந்தமுறை நண்பர்களைத்தவிர வீட்டிற்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை, மூக்கு சிந்தவும், ‘ஏந் தம்பி, ஏந் தம்பி ஒனக்கு?’ என்று ராகங்களை இசைக்கவும் அம்மா, அப்பாவுக்கோ, அக்காளுக்கோகூட தெரியாது. வழக்கம்போல இரவு 8 மணிக்கு அழைத்து ஏம்மா? நல்லாருக்கியா? சாப்டியா? போதும். என் நலத்தையும் அறிந்துகொள்வாள். பத்துநாளில் ஊருக்கு போகவேண்டும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டை எனக்கு. அப்போது இதை எப்படி தாங்கிக்கொள்வாள். ம்ம்ம்.... அது கிடக்கு கழுதை, இந்த அம்மா எப்போதும் இப்படிதான், அப்பாவைப்போல உள்ளுக்குள் பரிந்துகொள்வதில்லை.

ஒரு அறுவை சிகிச்சை. கோணி ஊசி அளவு ஒரு கம்பியை உள்ளே செருகியிருக்கிறார் டாக்டர்.இன்னொசென்ட் (பெயரில் மட்டும்) நல்ல விபரம். ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா? கேட்டுவிட்டுதான் இரண்டுநாள் படுக்கவைத்தார்.  நாலைந்து செவிலிப்பெண்கள். ஒருத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உமாவை அப்படியே உரித்து வைத்திருந்தாள். புருவத்து முடிகளை ட்ரிம் செய்து, நெற்றியில் சிறிய கருப்புநிற ஒட்டுற பொட்டு, அதே அளவு, நிற மூக்குத்தி. உமாவைவிட நல்ல நிறம். நன்றாக சிரித்து பேசவும் பழகவும் செய்தாள், எளிமை காட்டினாள். என் காட்டில் பெய்த இந்த மழையில் சிலீரென்று அந்த இருதய நரம்பு துருத்திக்கொண்டது. கட்டணம், ரசீதுகள் மற்றும் இத்யாதிகளை முடித்துக்கொண்டு எல்லாப்பெண்களிடமும் விடைபெற்றுக்கொண்டேன். ‘அடுத்தமொற ஒங்களுக்கு வாயில அடிபடணும்’ ஒருத்தி விளையாட்டாக சிரித்துக்கொண்டே சொன்னாள். வாயை மூடிக்கொண்டேன்.

‘அண்ணே நாலுநாள் கழிச்சி வாங்க, கட்டுப்போடணும்’,


‘எவடி அவ?’ திரும்பிப்பார்த்தேன், உமாவை உரித்துவைத்த அந்த தஞ்சாவூர் சிறுக்கிதான், பாதகி, கிராதகி. கையிலும் வலித்தது.


Thursday, March 10, 2011

இவளும் பெண்தான்..

அவள் அப்போதுதான் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாள். பள்ளிக்கூடம் திறப்பதற்கு ஒன்றரை மாதகால அவகாசம் இருந்தது. பத்தாம் வகுப்பு செல்வதற்கான கனவுடனிருந்தாள். தெருவில் வரும் கிளி ஜோசியன் அவளுக்கான வாழ்க்கை சீட்டை கையில் வைத்துக்கொண்டு கூவி வருகிறான். அவளின் பெற்றோர்கள் அவனை அழைத்து ஆரூடம் பார்க்கின்றனர். தெருவில் சில்லிக்கோடோ என்னவோ விளையாடிக்கொண்டிருந்தவள் ஆர்வத்துடன் கிளிக்காகவோ, ஜோசியத்துக்காகவோ அந்த இடத்தில் அமர்கிறாள். விளையாட்டுப்போக்கில் அவளுக்கும் 2 ரூபாய் மொய்வைத்தப் பிறகு  ராஜாத்தியென்றோ பாப்பாத்தியென்றோ அழைக்கப்படும் அந்த பச்சைக்கிளி ஒரு சீட்டை எடுத்துப்போடுகிறது. பிரித்துப்பார்த்த ஜோசியக்காரர் பலவிசயங்களை சொல்லிவிட்டு இவளுக்கு இந்நேரம் வரம் பார்த்திருக்கவேண்டும் இல்லையென்றால் இன்னும் சொற்ப நாட்களில் வரம் வந்துவிடும், கிழக்கிலிருந்துதான் வருவான். சொந்தக்காரன், சீமைத்தண்ணி குடிப்பவனாக இருப்பான் போன்றனவும் இன்னும் சிலவும் வாயில் வசம்பு தேய்த்ததுபோல் சொல்கிறார்.

‘இவள் படிப்பில் கெட்டிக்காரி’ என்று அந்த ஜோசியன் சொன்னதை இரவு முழுக்க கனவாக காண்கிறாள். பெற்றவர்கள் வரப்போகும் வரனை அவனோ, இவனோ, எவனோ என்கிற யூகத்தில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சொல்லிவைத்தார்போல ஒரு ராஜன் (வயது 28) அந்த ராணிக்காக துபாயிலிருந்து பொத்துக்கொண்டு திருவெண்காட்டில் குதிக்கிறான். அவன் ராணிக்கு மாமன் முறை, ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட அல்லது கேடுகெட்ட. துபாயில் கதாநாயகன் சித்தாளோ, கொத்தனாரோ என்னயெழவோ. மார்பில் சங்கிலியும் கையில் மோதிரமும், ஒரு மைனர் குஞ்சு போல மூர்த்திக்கடை மிக்ஸரும்,  அல்வாவும் வாங்கிக்கொண்டு அக்கா வீட்டுக்கு வருகிறான். அவனுக்கு நம் ராணி அக்கா மகள் (முறையில்). இவள் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கிறாள். பேச்சிப்போக்கில் தனக்கு பெண் பார்த்துக்கொண்டிருப்பதாக அக்கா, மாமாவிடத்தில் சொல்லிவைக்கிறான். விருந்து கருமங்கள் முடிந்தது. நாயகன் நாயகியை ஓரக்கண்ணால் ஒரு லுக், அவள் அந்த மிக்ஸருக்காக ஒரு லுக், அவ்வளவே.

எங்கோ தட்டிய பொறி அவள் பெற்றோர்களுக்குள் பற்றிக்கொள்கிறது. சரி அவர்களாக கேட்டால் நாமும் பேசலாம் என்று முடிவாகிறது. அந்த சனியனும் அடுத்தவாரமே நடந்துவிட்டது. மூன்றாம் நபர் வழியாக ராணியை பெண் கேட்டு தூது வருகிறது. இவளின் குடும்பத்திற்குள் குதூகளம். அக்கம்பக்கத்திலுள்ள மொத்தம் 10 டூ 15 குடும்பங்களும் இவர்களுக்கு சொந்தம்தான். அனைவருக்கும் இந்த சம்பந்தம் பிடித்தாலும், ‘சின்னவயசுல இவளுக்கு எதுக்கு இப்ப கல்யாணம்?, நாலு வருஷம் தள்ளி பண்ணா ஆவாதா?’ என்று சொல்லிப்பார்க்கிறார்கள். ம்கூம். காதில்லாதவன் காதில் ஊதியென்ன, செவிட்டில் அப்பிதான் என்ன புண்ணியம்?. மறுபடியும் சிங்கானோடை ஜோதிடனிடம் ஜோடிப்பொருத்தம் பார்க்கிறார்கள். ஜோடிப்பொருத்தத்தில் ஒன்பதோ, எட்டோ பொருந்தியிருக்கவேண்டும். முடிவாகிவிட்டது.

நகை, நட்டு, சீர்வரிசை, அப்போதே இருபத்தைந்தாயிரம் செலவு செய்து கட்டில், பீரோ கூடவே ஒரு ஹெர்குலஸ் சைக்கிளோ, டி.வி.எஸ் வண்டியோ எனக்கு மறந்துவிட்டது. ஜாம் ஜாம் திருமணம் திருவெண்காடு அந்த பிரசித்திப்பெற்ற கோவிலில். ராணியின் கூடப்பிறந்தவர்கள் இருவர், ஒரு அண்ணன், ஒரு தம்பி. அந்த தம்பியும் நானும் பால்ய நண்பர்கள். பக்கத்துவீடுதான். ஜாதியில் வேற்றுமையிருந்தாலும், பெரியம்மா, பெரியப்பா உறவுப்பிணைப்புடையது எங்களின் குடும்பங்கள். நானும் திருமணத்திற்கு சென்றிருந்தேன். எனக்கும் ஒன்றுமறியாத வயது. எல்லாம் முடிந்தது. இது நடவாமலிருந்தால் இந்நேரம் அவளுக்கு பத்தாம் வகுப்பு  ஆரம்பித்திருக்கும். ஆனால்..?

6 மாதங்கள் ஓடிவிட்டது. அனைவருக்கும் சந்தோஷம், சென்னை ஏர்போர்டில் மாமனுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு சென்ற காரிலேயே திருவெண்காட்டிற்கு திரும்புகிறார்கள் ராணி. ஆறுமாத சந்தோஷ வாழ்க்கை இந்த பிரிவில் அவளுக்கு ஆற்றமுடியா சங்கடத்தைக்கொடுக்கிறது. பிறந்த வீட்டிற்கு 3 மாதம் வந்து தங்கிக்கொள்கிறாள். அங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இந்த மூன்றுமாத காலமும் அவளின் நடத்தை யை அசிங்கப்படுத்தி இவளின் குடும்ப எதிரிகள், அந்த மாமியாருக்கு வாராவாரம் கடிதம் எழுதுகிறார்கள். அப்படி செய்வது மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்தான், அவளுடன் இன்னும் இரண்டு பெண்டுகள். மாமியார் வீட்டில் புகைச்சல் அதிகமாகிறது. அவர்களும் நம்புகிறார்கள். ‘அவ இங்க இருக்கும்போதே அப்டித்தான் இருந்தா, அப்பன் வீட்லன்னா கேக்கவாவேணும்’ இது மாமியார்.

இந்நிலையில் 9 வது மாதம் வளையல் காப்பு (சீமந்தம்) முடிகிறது. மனதில் குமைச்சலுடன் மாமியாளும் நாயகன் வீட்டு உறவினர்களும் கலந்துகொள்கிறார்கள். பத்தாவது மாதம் அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. மூன்றுமாதம் கழித்து சாஸ்த்திரத்திற்கு திருவெண்காட்டுக்கு அழைத்து செல்கிறார் மாமியார். மீண்டும் ஆறுமாதங்கள் சண்டை சச்சரவு, மாமியார் கொடுமை நடத்தையை குத்திக்காட்டி, பச்சையான, கொச்சையான வார்த்தைகள். பச்ச உடம்புக்காரி ஓரளவிற்கு மேல் தாங்கமுடியாமல் அந்த ஒரு வயதை அடையப்போகும் தன் குழந்தையுடன் பிறந்த வீட்டிற்கு வருகிறாள், கணவனும் சேர்ந்து கைவிட்ட நிலையில். அடுத்த ஒரு வருடங்கள் சமாதானப்பேச்சு, இரண்டு மாதம் அங்கே, இரண்டு மாதம் இங்கே. வேலைக்காகவில்லை. அதே கொடுமை. நிரந்தரமாக பிறந்த வீட்டிலேயே தங்கிவிடுகிறாள்.

எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுது பித்தளை சொம்பில் ஜோடித்த கரகத்தை எந்த துணையுமின்றி தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு அரங்கம் அதிர ஆடிய அவளேதான் இப்போது அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாய். அனாதரவான நிலையில். பெற்றவர்கள் தலையில் போட்ட இந்த பாறாங்கல் அவளை தற்கொலைக்குக்கூட தூண்டியது. காப்பாற்றிவிட்டார்கள். ஊர், தெருமக்களின் இழிச்சொற்கள், வாழாவெட்டி என்ற அந்த பட்டம், எதிரி குடும்பத்தாரின் ஏளனச்சிரிப்பு, எல்லாவற்றிற்கும் மேல் இந்த நிர்கதிக்கு துணைநின்ற கணவன், மாமியார் மயிரை அறுக்கவேண்டும் இவை அனைத்தும் சாத்தியப்பட அவள்முன் எதிர்காலம் கனிந்துகிடக்கிறது. ஆனது ஆயிற்று அடுத்தது விவாகரத்து.

கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. எந்த சட்டப் புடுங்கிகளாலும் அந்த 18 வயது நிரம்பாத அந்த அபலைக்கு நீதி கொடுக்கமுடியாத சூழ்நிலை. சீர்வரிசை நகை நட்டில் பாதிதான் திரும்ப வருகிறது. வேறு இம்மியளவுக்கூட அசைக்கமுடிவில்லை. துபாய் துரை ஃபாரின் கிளம்புவதற்கு முன் இன்னொரு இடத்தில் பெண் பார்த்துகொண்டிருப்பதாக கேள்வி. ராணியின் அண்ணணும் தம்பியும் அவனை அடித்து வெளுக்கிறார்கள். மறுபடியும் வழக்கில் சிக்கல். தீர்ந்தபாடில்லை. அவளின் நிலை பார்க்கும் நல்லுள்ளங்களுக்கு பரிதாபம், எதிராளிக்கு இளக்காரம். கூனிக்குருகி வீட்டின் மூலையில் முடங்கியே கிடக்கிறாள். செய்த தவறை உணர்ந்தும் செய்வதறியாது அப்படியே காலத்தை ஓட்ட முனையும் பெற்றோர்கள். எங்கோ ஒரு வெளிச்சம் தெரிந்தது அவளுக்கு. அது....

3 வயது நிரம்பிய தன் மகளை மெட்ரிக் பள்ளியில் சேர்த்துவிட்டாள். தன் படிப்பையும் தொடர்ந்தாள். பத்தாவது, பனிரெண்டாவது... முடிந்தது. அடுத்து ஒரு டிகிரி படிக்கவேண்டும். அவளின் அனைத்து வழிகளுக்கும் உதவ பெற்றவர்கள் தயாராகவே இருந்தனர். டிகிரியும் முடித்தாயிற்று. பிறகு ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டும். ஏதோவொரு வெறி முளைத்துக்கொண்டேயிருந்தது அவளுள். இடையில் துபாய் துரை வரும்போதெல்லாம் ராணியின்  அண்ணன் தம்பிகளிடம் உதைவாங்கி கொண்டுதானிருந்தான். ஐ.ஏ.எஸ் ரெண்டாம்கட்ட தேர்வில் தோல்வி. ஓரளவிற்கு மேல் அவளாலும் முடியவில்லை. அந்த நேரத்தில் நமது ஊரின் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் பணி ஒருவருடத்தில் காலியாகும்போல் தெரிந்தது. பி.பி.டி.கோர்ஸ் சேர சிதம்பரம் செல்கிறாள். வெற்றிகரமாக முடிந்தது. வேலை கிடைக்கவேண்டிய சூழ்நிலை கைகூடியது. அண்ணணுக்காக அதை விட்டுக்கொடுக்கவேண்டிய நிலையும் வந்தது. அப்படியே செய்துவிட்டாள். வேறு என்ன செய்யலாம்....??

தமிழ்நாடு காவல்துறையின் எஸ்.ஐ. பணி தேர்விற்காக விண்ணப்பித்திருந்தாள். அதற்காக அனைத்துவிதத்திலும் தன்னை தயார்படுத்திக்கொண்டாள். எல்லாம் சுபமாக முடிந்தது. சில லகரங்களில் வேலையும் கிடைத்தது. ஒரு புதியதோர் வாழ்க்கை பிறந்தது. ட்ரெய்னிங் இத்யாதிகள் முடிந்து சீர்காழியில் ட்ரெய்னிங் எஸ்.ஜ. அங்கேயே கொஞ்சகாலம் சகவாசம். பெற்றவர்கள் மறுமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார்கள், அவளும். இப்போது எதிராளியாக இருந்த குடும்பங்களும் நெருங்கிவிட்டார்கள். அனைவரும் ஒற்றுமை.  இந்த நேரத்தில் அந்த செய்தி உச்சந்தலையில் இடியை இறக்குகிறது. அவள் மகள் பருவமெய்திவிட்டாள். அனைவரும் நொடிந்துபோனார்கள்.

கையை பிசைந்துகொண்டிருந்த பெற்றோர்கள் ஒரு வருடம் பொறுத்திருந்துவிட்டு நம் ராணிக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராணியின் விருப்பப்படி அவளே தேர்ந்தெடுத்த அல்லது காதலித்த வரனுக்கு அவளை கட்டிக்கொடுக்கிறார்கள். எல்லாம் சுபம்.

இது லட்சத்து சொச்சம் டெம்ப்ளேட் கதைகளில் துவைத்து காயப்போட்ட  சம்பவமாக இருக்கலாம். ஆனால் இதுவும் உண்மை. இப்போது ராணி நாகை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர். அந்த துபாய் துரை இன்னொரு திருமணம் முடித்துவிட்டு எங்கோயிருக்கிறான். இந்நிலையில் அவனை ஸ்டேஸனில் வைத்து மானியிலேயே உதைக்க அவளால் முடியும். ஆனால் அவள் அப்படியில்லை.


..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO