யாதொரு பிணியுமில்லாத மனிதனுக்கும் சுலபமாய் ஏதோவொன்றை ஏவிவிடும் வேலையை அவ்வப்போது ஒருதின மட்டை விளையாட்டு போட்டிகளே செய்துவிடுகின்றன. அதிலும் குறிப்பாக இந்திய, பாகிஸ்தான் அல்லது ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே ஒருதின போட்டியென்றால் எல்லா வயதினரும் தொலைக்காட்சிப்பெட்டியின் முன் பருவமடைந்த பெண்ணைப்போல் பக்குவமாய் அமர்ந்துவிடுகின்றனர்.
இவ்வாறான தொடர் போட்டிகளில் ஏதோவொன்றில் இறுதியில் இந்திய அணி வெற்றிபெரும் வாய்ப்பை இழக்கும்போது, நம்ப ராஜாவோ, கூஜாவோ சலித்துக்கொள்கின்றனர். காரணம் தான் அந்த போட்டியினை பார்த்ததினால்தான் இந்தியா தோற்றுவிட்டதாக எண்ணி. கிடக்கட்டும் கழுதையென்றால் நம் வீட்டில் பல்போன பாட்டிக்குகூட இரவில் தூக்கம் வருவதில்லையாம், இரண்டு அல்லது மூன்று ஒட்டங்கள் வித்தியாசத்தில் அப்போட்டியின் வெற்றிவாய்ப்பு விலகிப்போனால்.
இதைவிட கொடுமை யாதெனில் கடைசிநேர பதைபதைப்பில், அதாவது ஆறு பந்துக்கு எட்டு ஓட்டங்கள் தேவைப்படும்போது ஏற்படும் மாரடைப்பில் வீரமரணம் எய்துபவர்களும், இரண்டு ஓட்டங்கள் தேவைப்படும் வெற்றியின் விளிம்பில் ஆசிஸ் நெக்ரா வெளியேறினால் விற்பனைக்குள்ள தொ.கா.பெட்டியொன்றை பார்வையாளன் விட்டெரியும் கல்லுக்கு பலிகொடுத்து பரிதாபமாய் கடைமூடும் முதலாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்னதான் நான் யோக்கியனென்று வீரவசனம் பேசினாலும் அந்நேர ஆர்வமிகுதியில் இணையதளத்திலாவது ஓட்டங்களை சரிபார்த்துக்கொள்ள என் மனமும் ஏங்கத்தான் செய்கிறது. என்ன செய்ய...நானும் 2003 வரையில் கல்லூரியின் கணிதத்துறை மட்டைவிளையாட்டு குழுவின் உறுப்பினனாகவே இருந்தேன். 2003ல் உலககோப்பை போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா வெல்லவேண்டுமென எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கடவூர் அமிர்தகடேசுவரருக்கும், அபிராமி அம்மையாருக்கும் ஒரு ரூபாய்க்கு சூடம் வாங்கி ஏற்றி வேண்டுகோள் விடுத்தேன். ஒருரூபாய் சூடம் ஒருநிமிடம்தான் எரிந்திருக்கும்போல, 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாறுகண்ட தோல்வியை தொட்டுப்பார்த்தது. பிறகு மட்டைவிளையாட்டு என்றாலே வெறுப்பூன்றிவிட்டது. ஒரு போதிமரத்தின் கீழில்லாவிட்டாலும், ஒரு புளியமரம் அல்லது வேப்பமரத்தின் அடியிலாவது எனக்கு இந்த ஞானம் பிறந்திருக்கவேண்டும்.
இப்போது இவ்விளையாட்டில் அர்ப்பணிப்புடன் விளையாடும் வீரர்கள் மைதானாத்தில் இருந்தாலும், அதைவிடுத்து மற்றவிடங்களில் இவ்விளையாட்டினை மையப்படுத்தி கதராடையில்லா அரசியல் நடக்கிறது. வருங்காலத்தில் இதுவும் கொடியுடன் கூடிய ஒரு அ.இ.ம.வி.கழகமாக மாறலாம்.
தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...