திருப்பதி சென்றிருந்தபோது பாதசாரிகள் பாதையின் படிக்கட்டுகளில் ஒரு 8 வயது மதிக்கத்தக்க சிறுமியொருத்தி யாசகம் கேட்டு தவழ்ந்து வந்துகொண்டிருந்தாள். கால் இரண்டும் ஊனமாக இருக்கவேண்டும். படிகளில் ஏறிச்சென்ற எங்களுக்கும், இறங்கி (தவழ்ந்து) வந்த அவளுக்கும் களைப்பு ஒரே நேரத்தில் ஏற்பட, ஓரங்களில் இருந்த சுவற்றில் நாங்கள் அமர்ந்தோம். அவளுக்கான கொஞ்ச அனுதாபமும் என் வியர்வையினூடே கசிந்துகொண்டுதானிருந்தது. அவளும் எங்களுக்கெதிரிரே அமர்ந்து அதுவரை கிடைத்த காசுகளை எண்ணிக்கொண்டிருந்தாள். எங்கள் களைப்பு அடங்க இன்னும் சிறுது நேரம் தேவைப்பட்டமையால் அமர்ந்த இடம் சூடேறி தணியும் வரை தரிசனம் பெறச்செல்லும் சில நிறங்களை தரிசித்துக்கொண்டிருந்தோம்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து அதுவரை தவழ்ந்து வந்துகொண்டிருந்த பெண் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். இதென்ன? ஏழுமலையான் அதற்குள்ளாக கண்திறந்துவிட்டார் என்று நானும் நண்பரும் திகைத்து நின்ற தருவாயில் கொஞ்ச தூரம் கீழிரங்கி சென்ற அவள், அவளையே நோட்டமிட்டிருந்த ஒருவனிடம் தன்னிடமிருந்த சில்லரை முடிச்சொன்றை கொடுத்துவிட்டு மறுபடியும் தவழ ஆரம்பித்துவிட்டாள். (பால்ய வயது பழக்கம்)
என்னவென்று சொல்வது? ஒருவேளை அது அவளின் தந்தையாக இருக்குமோ? என்ற சந்தேகம் இருந்தது. அவனுக்கேன் இந்த பிழைப்பு? இப்படி சம்பாதிப்பதை வைத்து சோம்பேறியான அவன் என்ன செய்யமுடியும்? அவன் ஒரு குடிகாரனாக இருப்பானோ? சந்தேகம் வலுவாகத்தான் இருந்தது. இதென்ன இந்த சமுதாயத்தின் சாபமா? எது எப்படியோ நமக்கு குழுமியிருக்கும் கூட்டங்களுக்கு நடுவே சுவாமிசி, நெரிசலில்லாமல் காட்சிதந்தால் சரிதான் என்றவாறு ஏறத்தொடங்கின எங்களது கால்கள்.
சரியாக ஆறுமாதங்கள் கழித்து இந்த நினைவு வந்ததற்கு காரணமும் இருக்கிறது. இரண்டு நாட்கள் முன்புதான் நான் கடவுள் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. சில நண்ப புண்ணியகோடிகளின் அருளால். அதில் காட்டப்பட்ட பிச்சைக்காரர்களின் மறுவுலகம் இந்த ஞாபகத்தினை தோண்டி பரிசோதனை செய்திருக்கவேண்டும். இப்போது நினைத்துப்பார்க்கிறேன், ஒருவேளை அவளிடமிருந்து சில்லறை முடிச்சியினை பெற்றவன் இந்த படத்தில் வரும் தாண்டவனின் அடிபொடிகள் போல இருப்பானோ என்று (இருக்கலாம்). எது எப்படியோ நான் கண்ட இந்த காட்சி ‘நான் கடவுள்’ பார்ப்பதற்கு முன்பாக ‘நான்’ கடவுளை பார்க்கப்போனதால். வாழ்க நன் கடவுள்.
அவ்விடத்தே கடந்து சென்ற எத்தனையோ பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள் அவளையோ அவள் சார்ந்த தொழிலையோ, அவளுக்குள்ள பிரச்சனைகளையோ அல்லது வலியையோ ஒரு பொருட்டாக மதித்ததாக தெரியவில்லை. நான் கவனித்த அளவிற்குகூட(????). தம்மால் முடிந்த ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது அதற்கும் குறைவான எடையுள்ளதையோ மட்டுமே புண்ணியம்பெறும் நோக்கில் கொடுத்துவிட்டு கடமையே கருத்தாக சென்றனர். (நான் அதுகூட செய்யவில்லை) நானும் அதே பாதையை கடந்து வந்துவிட்டேன். (குற்றவுணர்ச்சி இந்த இடுகையை எழுதும்வரை எனக்குமில்லை. குற்றமா?)
சிலநேரங்களில் எனது மனவோட்டத்தினை மறுவாய்வு செய்துபார்க்கையில் இதுபோல எத்தனை பாதைகளை கடந்து வந்திருக்கிறேன் என்ற உணர்வு எழத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் இன்னொரு மனிதனின் வலிகளைத்தான் எவ்வளவு சுலபமாக, நம் மனதிற்குள் மருந்து தடவி மறைத்துக்கொள்கிறோம்.

