‘அஞ்சுப்பொண்ணு பெத்த மவராசன்னு’ போறவங்க வரவங்கல்லாம் அந்த பயபுள்ளைக்கு கொடுக்கரபட்டம்போக வேறவொன்னும் மிச்சங்கெடையாது. காலம்புல்லா ஒழச்சி, ஒழச்சி ஓடாதேஞ்சிபோறதுதான் அவனுக்கு மிச்சமா இருக்கும். எனக்குத்தெரிஞ்சி என் வூருல ஒரு கிராமநிர்வாக அதிகாரிக்கு 4 பொண்ணுங்க. அதுங்க நண்டு சிண்டா இருக்குறப்ப அவரோட எம்80 வண்டியில எல்லாத்தையும் அள்ளிப்போட்டுகிட்டு பொண்டாட்டியையும் கூட்டுட்டுப்போற அழகுஇருக்கே....அடடா... குடும்ப கட்டுப்பாட்டுக்கு வௌம்பரம் கொடுத்த கணக்கா சும்மா சூப்பராஇருக்கும்.
இதுமாதிரி அஞ்சுப்பொண்ணுங்கள பெத்த மவராசங்க ரெண்டுபேரு அக்கம் பக்கத்துல இருக்காங்க. இரண்டுபேருமே அஞ்சையும் கட்டிகொடுத்துட்டாங்க (கல்யாணம்). அதுல ஒருத்தரு பழக்கடக்காரு, இன்னொருத்தரு மாட்டு வண்டி ஓட்டுறவரு. இதுல மாட்டு வண்டிக்காரு பாடுதான்திண்ணடாட்டமானுது. கடைசியா குடியிருந்த குச்சியையும் வித்துதான் கடக்குட்டியகட்டிக்கொடுத்தாரு. இதோட முடிஞ்சா போயிடும்?? இந்த ‘கொண்டான் கொடுத்தான்’ ஒறவுஇருக்கே... அப்பப்பா...அயிரத்தெட்டு சிக்கல் உள்ளதுங்க. வாழ்வு, சாவு, நல்லது கெட்டது இப்டி என்னயெழவுன்னாலும் பொண்ணு குடுத்தவன் போயி முன்ன நிக்கனும். இல்லன்னா அந்தவூட்டுக்காரவங்களுக்கு இங்கேயிருந்து போனது அடிமையாயிடும். இதுல எத்தனப்பொண்ணபெத்தாலும் ஆடாம அசையாம குத்துக்கல்லாட்டம் குடும்பம் நடத்துற மவராசனுங்களும்இருக்கத்தான் செய்யுறாங்க. இருந்தாலும் ஆசயப்பாருங்களேன். அது கடக்கட்டும் நமக்கு அந்த வயித்துவலி வரும்போது பாக்கும் எத்தனன்னு.
இப்ப வர்ரவங்கல்லாம் கொஞ்சம் பரவாயில்ல. மொதல்லையே பொண்ணு பொறந்தாலும் மியூஸிக்க ஸ்டாப் பண்ணிட்டு, இதுக்கு பாட்டு எழுதுனா போதும்னுட்டு விட்டுடுறாங்க. இந்த அரசாங்கத்துல முக்கோணமா ஒரு வௌம்பரம் அங்கண, இங்கண எழுதி வச்சிருப்பாங்க... அதையும் இப்ப காணல. படுபாவிங்க அதுமேலத்தான நமிதா போஸ்ட்டர சைஸ் பாத்து ஒட்டிவச்சிடுறாங்களே. அதுசரி...ஞாயிறும் திங்களும் நாளைக்குதான தெரியும்.
Thursday, January 21, 2010
பிஞ்சிற் பழுத்த...
உள்ளத்து ஆளுமைகளை ஆசுவாசப்படுத்தி அமர்த்திவிட்டு, அதனுள் படிந்திருக்கும் கசடுகளை அவ்வப்போது அகற்றவேண்டிய கட்டாயம் எனக்கும் இருக்கிறது. எங்கோ பார்த்தோ பழகியோ நமக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் அவ்விதமான படிமங்களை பறித்தெரிவதற்கான நேரமும் காலமும் சுலபமாய் அமைந்துவிடுவதில்லை. எனக்கான இந்த வாய்ப்புகள்போல் (பகிர்தல்). சாம்பலைத்தின்று, வெளியே வெண்ணைகளை பூசிக்கொள்ளும் சக மனிதர்களையும் நம் கண்கள் அவ்வப்போது உள்ளிடுகைச்செய்யும்போது ஏற்கிறோமோ அல்லது ஏற்றுகிறோமோ ஆயினும் கடந்துவிடுகிறோம் அல்லது கடத்திவிடுகிறோம். வெண்ணையைத்தின்றாலும், சாம்பலைத்தின்றாலும் செல்லுமிடம் எதுவாக இருக்குமோ அதுவே மடியலுக்கு செல்லும்பாதையாகவும் அமையும். சிறிது ஆயுட்காலங்கள் மட்டும் வித்யாசப்படலாம்.
சமீபத்திய எனதூர் பயணத்தில் நான் கண்டறிந்த விடயங்கள் கொஞ்சம் மனதை திகைக்கவும் இளைஞர்களில் நிலையைக்கண்டு திகட்டவும் செய்தது. என் வீட்டுக்கு எதிர்வீட்டுப்பையன் வயது 19-20 இருக்கும். நான் தூக்கிவளர்த்தவன் என்பதை சொல்வதற்கும் மெல்லக் கூசவும் செய்கிறது. இன்றைய நாளில் வாரத்திற்கு இரண்டுநாட்களுக்கு குறையாமல் மது அருந்துகிறான். அவன் மட்டுமல்ல. எங்களது தெருவிலுள்ள மற்றய நாலைந்து இளைஞர்களும் (சிறுவர்கள்) சேர்ந்து. கல்லூரியில் முதலாமாண்டு தொழில்நுட்பம் படிக்கிறார்கள். தொழில்நுட்பத்தைதான் படிக்கிறார்களா? என்ற கேள்வியும் அவர்களின் செயல்கண்டு எழுந்துபார்க்கிறது.
நானும் கல்லூரிப் பயிலும்போது இவ்வாய்ப்பினில் மாட்டி மங்கியிருக்கிறேன். இந்தப்பழச்சாறும் புளிக்குமென்று முதல்நாளே அகற்றியெரிந்திருக்கிறேன். வீட்டுக்கொரு குடிமகனிருந்தாலே நாடு நலம்பெறும் என்ற நோக்கின் அடிப்படை அறிவினால் எனது தந்தைக்கு அவ்விலாக்காவை தாரைவார்த்துவிட்டேன். எனது தந்தைக்கு அப்பழக்கம் உண்டு. இருந்தாலும் அவரின் செய்கை மன்னிக்கத்தக்கது (என்னால் மட்டிலும்கூட இருக்கலாம்). பகற்பொழுதினில் உழைத்து உடல்வலுவை வியர்வைகள் வெளிக்கொணர்வதால் அவருக்கந்த இளைப்பாற்றல் தேவைப்படலாம்...படலாம்... அதனால் என்மனம் அவரின் செய்கையை ஒத்துக்கொள்கிறது தவறுதானென்றாலும்.
ஆனால் இந்த இளைவர்களுக்கு என்னக்கேடு என்றுதான் தெரியவில்லை. அவர்கள் குடிப்பதற்கான காரணமாய் ஏதோவொன்று இருக்கவேண்டும். (நொண்டிச்சாக்காக). சிறிதுநேர மனமகிழ்வுக்காக என்கிறார்கள். மஞ்சள்நிற சிலேடைகளின் சிலுசிலுப்பில், பிஞ்சில் வெதும்பி குறைநேர சிற்றிந்தின்பத்திற்காட்பட்டு விலைமாதுவின் வியர்வைகளை விலைக்குவாங்கி விலங்காகும் என்வயதொத்த ஒரு ஆண்மகனின் மனநிலையும் இதுவும் ஒன்றன்றி வேறெப்படி எண்ணவென்று தெரியவில்லை. இதற்கு வழிகாட்டுதலாக சில பெரியவர்களும் அமைந்துவிடுகிறார்கள். அப்துல்கலாம் காணச்சொன்ன கனவு இவ்வாறு மதிமயங்கி காணும் கனவாகவா இருக்கப்போகிறது??