க.பாலாசி: பூக்கடை ரவி

Sunday, July 5, 2009

பூக்கடை ரவி

ஏழைக் குடிசையின் ஏற்றப்படாத தீபம் எரிந்துகொண்டிருந்தது.
++++++++

பூக்கடை ரவி. இயற்பெயரோ, தொழிற்பெயரோ, காரணப்ப்பெயரோ தெரியாது. ஆனால் அவன் பெயர் இதுதான்.

சிவனூரின் சிவன் சன்னதியின் வலப்பக்கத்தில் வானம் பார்க்க இருக்கும் ஒரே கடை அவன் பூக்கடை. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, மனைவி, மக்கள் இவர்கள் யாரும், எதுவும் இல்லா ஒரு தனி மனிதன். ஆம் மனிதன்தான், எல்லாம் இருப்பவர்கள் தான் சிலநேரத்தில் அப்படி இருப்பதில்லையே. பூக்கடைகூட அவனுடைய இடம் அல்ல. கோயில் இடம்தான். குடிசை வீடும் உண்டு அதுவும் அதே......

எத்தனையோ வேண்டுதல்களுடன் கோயிலுக்கு வரும் மனிதர்கள், சில மனிதனான விலங்குகள் இவர்கள் அனைவருக்கும் இவன்கடையே பூக்கடை. போட்டியில்லா முதலாளி. முதல்போட்ட தொழிலாளியும் கூட. அப்படி வருபவர்களில் த.ஈ.மு.க (தமிழ்நாடு ஈழ முன்னேற்ற கழகம்) சிவனூர் ஒன்றிய செயலாளர் சோ.ப. ராமசாமியும் ஒருவர். இவனுக்கு ரொம்ப பரிச்சயமானவர். தலைவருக்கு பூ கொடுத்தாலே பூவெல்லாம் சிரிக்கிறது என்று வருபோதெல்லாம் அவரை புல்லரிக்க செய்வான். அவருக்கும் அவனிடத்தில் அது தான் பிடித்ததென்றே சொல்லவேண்டும்.

அன்றைய செவ்வாய்கிழமை வந்த ஒன்றியத்திடம், தலைவரே என்னையும் உங்க கட்சியில சேத்துக்குங்க தலைவரே. நானும் உங்களோட எல்லா போராட்டத்திலையும் கலந்துக்கிறேன் என்றான். அடமடையா, போராட்டங்கள் செய்யறத்துக்கு கட்சி எதுக்குடா, நீ எப்ப வேணாலும் வரலாம் என்றார். அதெல்லாம் இல்லீங்க தலைவரே எனக்கு உறுப்பினர் கார்டு கொடுங்க என்றான். இந்தமுறை அவன் பேச்சில் கொஞ்சம் கெஞ்சல் தெரிந்தது. என்னடா இவன் என்று பக்கத்தில் உள்ள எடுபிடிகளிடம் கோபித்துகொண்டார். நம்ம கட்சியில சேர்வது என்ன அவ்வளவு கஷ்டமா?. டேய் இவனுக்கு ஒரு உறுப்பினர் கார்டு போட்டு குடுத்துடு என்று தன் அடிபொடிகளிடம் சொன்னார். அவர்களும் தலையாட்டிவிட்டு சென்றனர்.

ரவியின் மனது இப்போது முன்பெப்போதும் இல்லாத ஆனந்தத்தில் இருந்தது. மிகவும் மகிழ்ச்சியுடன் பூ வாங்கிய எல்லோருக்கும் அரை முழ பூவை சேர்த்தே அளந்து கொடுத்தான். இன்று அவன் அடிமனதில் இருந்த ஏக்கம் தீர்ந்தது. யாருடனும் அவ்வளவாக பழக்கம் வைத்துக்கொள்ளாதவனுக்கு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினன் ஆனதுகூட நட்சத்திரங்கள் குழுமியிருக்க நடுவில் இருக்கும் நிலவைப்போல உணர்ந்தான். இவ்வளவு சிரமேற்று அக்கட்சியில் உறுப்பினர் ஆவதற்கு காரணமும் இருந்தது.

முந்தய வாரத்தில் அக்கட்சியின் கூட்டம் ஒன்று சிவனூர் திடலில் நடந்தது. மிகவும் விமரிசையாக நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஈழவளவன் கலந்துகொண்டார். ஈழவளவன் என்பது அவரது இயற்பெயரல்ல. கட்சியின் கொள்கைகளுக்காகவும் மக்களின் செல்வாக்கிற்காகவும் வைத்துக்கொண்ட பெயர். கொள்கை என்பது ஈழத்தமிழர்களுக்கு என்றும் குரல் கொடுப்பது. அப்படியே தனது கழகத்திற்கென்று தனி செல்வாக்கையும், வாக்கையும் பெறவது. அன்றையதின கூட்டத்தில் பூக்கடை ரவியும் கலந்துகொண்டான். கலந்துகொண்டான் என்றால் தாரை தப்பட்டைகள் முழங்க, வாழ்க, வாழ்க வாழ்த்துக்கள் ஒலிக்க கலந்துகொள்ள வரும் கட்சித்தலைவர்கள் போல அல்லாமல் ஏதோ ஒரு குப்புசாமிக்கோ, குப்பம்மாவுக்கோ பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான், கேட்டுக்கொண்டிருந்தான். தேர்தல் ஒன்றிரண்டு மாதங்கள் இருந்த நிலையில் அன்று கூட்டம் கலைகட்டியது. கட்சியின் தலைவர் ஈழவளவன் மைக்கைப்பிடித்தார். கரகோஷங்கள், ஆரவாரங்கள், விசில் சத்தங்கள் இன்னும் சில இத்யாதிகள் முழங்க தனதுரையை தொடங்கினார். முடித்தார். எல்லோர் கண்களிலும் நீர் வராத குறை ஒன்றே. ஓருபடிமேலே போய் பூக்கடை ரவி உணர்ச்சி மேலோங்க அழுதேவிட்டான். ஏன்? ஈழத்தமிழர்களின் அவளங்கள் குறித்து அவர் ஆற்றிய உரை அவனை, அவர்களை உரையவைத்தது, உணரவைத்த்து.

கூட்டம் முடிந்து எல்லோரும் ஒரு முடிவுடன் சென்றனர். பூக்கடை ரவியும் ஒரு முடிவுடன் சென்றான். எப்படியாவது கட்சியின் அடுத்த ஈழப்போராட்டத்தில் நாமும் கலந்துகொள்ளவேண்டும் மத்திய அரசை எதிர்க்கவேண்டும் என்பதே. அதுவும் இக்கட்சியில் இணைந்தே நடத்தவேண்டும் என்பதே.

அதன் அடித்தளம்தான் இப்போது கட்சி உறுப்பினர் கார்டு வாங்க முயன்றது. வாங்கியும்விட்டான்.

இரண்டாவது வாரம் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம். எல்லோரும் முந்தைய பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவரின் (இங்கே தலைவர் என்பவர் ஈழவளவன்) உரையை புகழ்ந்து தள்ளினார்கள். தலைவர் மட்டும் மவுனியாகவே இருந்தார். இறுதியில் பேசவந்த தலைவர் எல்லோரையும் ஒருமுறை பார்த்தார். பேசினார்...பேசினார்... நன்றாகவே பேசினார். ஒன்றில் மட்டும் தீர்மானமாக இருந்தார் என்பது அவரது பேச்சில் இருந்தது. அதாவது எப்படியேனும் இந்தமுறை ஆளுங்கட்சியை தோற்கடிக்க வேண்டும். மத்தியில் ஆளும் கட்சியை ஆளா கட்சியாக மாற்றவேண்டும். அதன் உள்நோக்கமாக ஈழத்தில் போர்நிறுத்தம் உண்டாகும் என்றுகூட இருக்கலாம். இருக்கலாம்...

கூட்டம் முடிந்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம்வேறு நடந்தது. அதிலும் சோ.ப.ரா வும் கலந்துகொண்டார்.

3ன்றாவது வாரம். ஆளுங்கட்சியை எதிர்த்தும், ஈழத்தில் போரினை நிறுத்தகோரியும் ஒருநாள் வேலைநிறுதத்திற்கு த.ஈ.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாநிலம் தழுவிய போராட்டம். உண்ணாவிரத போராட்டம், கடைஅடைப்பு ஆகியவை இதில் அடக்கம். பூக்கடை ரவி இதை தனக்கு தீனி போடும் போராட்டமாகவே கருதினான். உண்மைதான். எல்லா போராட்டங்களும் ஒரு நோக்கத்திற்காகவே செய்யப்படுகின்றன. அதுவும் அரசியல் போராட்டம் என்பது ஒருபடி மேலே. வர்ணிக்கவொன்னா இலக்கு, அது எதுவாகவேண்டுமானாலும்.....

சரியாக மாலை 3.30 மணியளவு. உண்ணாவிரத போராட்டம் உண்ணும் போராட்டமாக மாற 1.30 மணிநேரம் மீதம் இருந்த நேரத்தில் ஒரு வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்து கத்தியவாறே விழுந்தான் பூக்கடை ரவி. அங்கே பூவும் ரவியும் ஒருசேர எரிந்துகொண்டிருந்தனர்....

ஏழைக் குடிசையின் ஏற்றப்படாத தீபம் எரிந்துகொண்டிருந்தது. அனைப்பதற்குள் பூ கருகிவிட்டது்.

இப்போது, இரண்டாம் வாரம் நடந்த உயர்மட்ட தலைவர்கள் கூட்ட சாராம்சம்

எப்படிய்யா எல்லா கட்சியிலயும் ஒவ்வொருத்தன் ஈழத்தமிழனுக்காக தீக்குளிக்கிறான். அட கட்சியில இல்லாதவன்கூட சாகிறான். இத்தனை வருஷமா ஈழத்தமிழன் பேரை சொல்லி கட்சி நடத்திகிட்டு வர நம்ம கட்சியில எவனுமே இல்லையா? எப்படிய்யா நமக்கு மக்கள்ட நமக்கு செல்வாக்கு வரும். எப்படிய்யா வர தேர்தல்ல ஜெயிக்கிறது. இப்படியே போனா ஊசிப்போன வெடியாட்டம் நம்ம கட்சியும் ஆயிடும் பாத்துக்குங்க. அப்பறம் எவனுக்கும் ஒண்ணும் கெடைக்காது. நாக்க தொங்கபோட்டுக்கிட்டு நிக்கவேண்டியதுதான். ஏன்யா ராமசாமி உன் ஊரில கூட ஒருத்தனையும் உன்னால... கூட முடியல. சற்று காட்டமாகவே இந்த தடவை காய்த்துக்கொண்டிருந்தார் ஈழவளவன் எனும் ஈனமில்லாவளவன்.

கூட்டம் முடிந்து வெளியில் வந்த எல்லோரும் அதை பெரிதாக எடுத்துகொண்டார்களோ இல்லையோ சோ.ப.ரா எனும் சோ.ப. ராமசாமிக்கு செ‘னாவை எடுத்து அ‘னா பண்ணினது போல இருந்தது.


3ன்றாவது வாரம் உண்ணாவிரத போராட்ட பந்தலில் அமர்ந்திருந்தார். அருகில் பூக்கடை ரவியும் இருந்தான். எதிர்த்த வீட்டில் இருந்து கூப்பிட்டார் சொ.ப.ரா.வின் தம்பி. உடனே போனான். போனான்.....


..

1 comment:

Anonymous said...

கதையை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO